Monday, March 1, 2010

மலேசியக் குட்டிக் கதைகளும் கதைச் சுருக்கங்களும்

கடந்த வருடம் அநங்கம் ஆகஸ்ட் இதழில் பிரசுரமான எனது, “ மலேசிய இலக்கியப் போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்” என்கிற கட்டுரையை வாசித்துவிட்டு மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு பேராசிரியர் சபாவதி அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்து கோபத்துடன் அந்தக் கட்டுரையில் நான் வைத்திருந்த எளிமையான சில கருத்துகளை மறுத்து விளக்கம் கொடுக்கத் துவங்கினார். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய முயற்சிகளைக் கேலி செய்யாதீர்கள் எனவும் மலேசியத் தமிழ்ப்பத்திரிக்கைகள் இந்த நாட்டின் இலக்கிய முன்னேற்றத்திற்குப் பலவகைகளில் பங்காற்றியிருப்பதாகவும் அழுத்தமாகக் கூறினார். ஆனால் ஒரு நல்ல தரமான கதையை மலேசிய இலக்கியக் களத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ அவருடைய திறனாய்வு தவறிவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது எனது பார்வை.

பேராசிரியர் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்துகள் உண்டு. முக்கியமாக தங்களின் எந்தவொரு கருத்திற்கும் எல்லோரும் உடன்பட்டு செவி சாய்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது எந்தவொரு இயக்கம் அல்லது அமைப்பு குறித்து அல்லது அவர்களின் நடவடிக்கை குறித்து யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கக்கூடாது எனச் சொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஓர் அபத்தமான உள்முரண். கருத்து சுதந்திரத்தை அதன் நுனியிலே வேறறுக்க முயல்வது அல்லது தனது கல்வி சார்ந்த தகுதியின் அடிப்படையிலான சொல்லாடல்களின் மூலம் மறுப்புத் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றி பலவீனத்தை ஏற்றுக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நழுவது ஆரோக்கியம் கிடையாது.

அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் இலக்கியத்திற்காகவும் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவும் இலக்கிய களம் அமைத்துக் கொடுத்தது உண்மையான வரலாறு. அதை நான் மறுக்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக பவுன் பரிசுத் திட்டம், கதை வகுப்புகள், புதுக்கவிதை கருத்தரங்குகள். ஆனால் தற்போதைய சூழலில் இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளில் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் எப்படி இயங்குகிறது என்பதுதான் எனது கண்ணோட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் மலேசிய இலக்கிய உலகில் சிறுகதை குறித்து தீவிரமான(மிதமாகவும்) விமர்சன மொழியைக் கொண்டவர் மூத்த எழுத்தாளர்களில் ரெ.கார்த்திகேசு அவர்களைச் சொல்லலாம். அடுத்ததாக? கதைச் சுருக்கங்களை வரிசைக்கிரமமாகத் தந்துவிட்டு அதை விமர்சனம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? குறைந்தது ஒரு கதையை வெறுமனே கொண்டாடுவதையும் பாராட்டுவதையும் நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு இன்றைய சிறுகதை மொழி அடைந்திருக்கும் மாற்றுத் தலம் குறித்தும் கதைத் தேர்வில் கருத் தேர்வில் எழுத்தாளர் தவறவிட்டிருக்கும் கவனம், அல்லது இந்தக் கருவை வேறு எப்படியெல்லாம் புதிய மதிப்பீடுகளுடன் ஆக்கக்கரமான உத்திகளில் கையாண்டுள்ளார்கள் என்கிற விரிவான பார்வையாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளில் விமர்சனம் என்கிற பெயரில் வெறும் கதைச் சுருக்கங்களை எழுதிவிட்டு (அதுவும் ஒரு கதைக்கு ஒரு பத்தி) நானும் ஒரு விமர்சகன் எனத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மேலும் இப்பொழுதெல்லாம் “குட்டிக் கதைகள்” என்கிற வடிவமும் பரவலாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகின்றன. ஆனந்த விகடனின் வரும் ஒரு பக்கக் கதை இங்கேயும் மிகவும் நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தெளிவாகுகிறது. சிறுகதை ஒரு பக்கங்களிளும் முடிவடையலாம் அல்லது 20 பக்கங்களைத் தாண்டியும் நீளலாம் என ஒரு சுதந்திரமான இறக்குமதி வரையறை சிறுகதைக்கு உண்டு. முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் “நறுக்குக் கதை” வந்துவிடவும் வாய்ப்புண்டு. அல்லது கடி ஜோக்குகளை, சின்ன கதை என்று மாற்றி பிரயோகிக்கும் அபாயமும் இருக்க வாய்ப்புண்டு.

விமர்சனங்கள் நிகழவில்லை என்பதற்கும் ஏன் விமர்சனங்கள் தீவிரமாக புதுப்பிக்கப்பட்ட பார்வையுடனும் கண்ணோட்டங்களுடனும் அக்கறை சார்ந்ததாக இல்லை எனக் கேட்பதற்குமிடையே உள்ள வித்தியாத்தை வெறும் முரணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது ஆயிரத்தில் இதுவும் ஒரு வெறும் குற்றச்சாட்டு எனப் புரிந்துகொள்ளப்படுமா என்பதே சந்தேகம்.

குறிப்பு: மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய இந்தாண்டு பேரவைக் கதைகளில் என்ன நடந்தது? அதன் விமர்சனம் எப்படி இருந்தது குறித்து அடுத்த கட்டுரையில் பதிவாகும். மேலும் எழுத்தாளர் நா.கல்யாணி மணியம் கதையில் நிகழ்ந்திருக்கும் திருட்டுக் குறித்தும் பதிவாகும்)

(இனி எப்பொழுதும் பேரவைச் சிறுகதை போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என கடந்தாண்டே எடுக்கப்பட்ட முடிவினால் - இதில் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய சிறுகதை கவிதை போட்டி- 2009/10 மட்டும் விதிவிலக்காக ஆகிவிட்டது காரணம் மலேசிய இலக்கியப் போட்டிகளின் தரம் குறித்து எனக்கு ஏற்பட்ட சலிப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்யும் போது, தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் போட்டிக்குக் கதையையும் கவிதைகளையும் அனுப்பி இரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தக் குற்றத்திற்காக மேடையேறி அரசியல் "தலை"களிடமெல்லாம் கைக்குழுக்கும் மிகப்பெரிய தர்ம சங்கடம் இனி நிகழாது. இத்துடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு- தேசிய பல்கலைக்கழக ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து இந்தாண்டு பெற்ற பண முடிப்புகளில் பாதியை கெடா செமெலிங் அன்பு இல்லத்தில் நடத்தப்பட்ட போட்டி விளையாட்டிற்கும், மீதி பாதியைப் பள்ளியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி வாரம் இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் செலவழித்துவிட்டதில் சிறு மகிழ்ச்சி. குறிப்பாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதிய மாணவர்களுக்கான சீனமொழி சிறுகதை மொழிப்பெயர்ப்பு புத்தகமான “மீன்குளம்” சிலவற்றையும் அன்பாளிப்பாக அவர்களைச் சென்றடைந்ததில், இனி நமது பாரம்பரிய நீதி இலக்கிய கதைக்களத்திலிருந்து விடுபட்டு புதிய வாசிப்பனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா

3 comments:

Tamilvanan said...

த‌ங்க‌ளுடைய‌ இந்த‌ ப‌திவின் எல்லா க‌ருத்துக்க‌ள‌யும் வ‌ழிமொழியும் நான் ஒரு விச‌ய‌த்தில் நீங்க‌ள் ஒரு த‌வ‌றான‌ க‌ண்ணோட்ட‌த்தை அல்ல‌து க‌ருத்தை கொண்டிருப்ப‌தாக‌ எண்ணுகிறேன்.

//முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. //

முத‌லில் எதை வைத்து குட்டிக் க‌தைக‌ள் சிறுக‌தைக‌ளின் மாற்று வ‌டிவ‌ம் என‌ கூறுகிறீர்க‌ள்?

அதி அசுர‌ வாழ்க்கை வ‌ள‌ர்ச்சிக் கால‌ க‌ட்ட‌த்தில் இருக்கின்ற‌ நாம் மொழி ம‌ற்றும் இல‌க்கிய‌த்தின் ப‌ரிமணா வ‌ள‌ர்ச்சியை அத‌ன் போக்கிலேதான் காண‌ வேண்டுமே ஓழிய‌ இருந்த அல்ல‌து இற‌ந்த‌ கால‌த்தின் அள‌வு கோலோடு காண‌க் கூடாது.

குட்டிக் க‌தைக‌ள் என்ப‌து ஒரு த‌னிக் க‌ள‌ம்.அத‌ற்கென‌ வாச‌க‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர்.ஒரு க‌ருவை எளிமையாக‌ சுருக்க‌மாக‌ க‌தை வ‌டிவில் கூறுவ‌தை குட்டிக் க‌தை ப‌டைப்பாளிக‌ளின் ஆற்ற‌லாக‌வே க‌ருத‌ வேண்டும். மாறாக‌ அவ‌ர்க‌ளை சோம்பேறிக‌ள் என‌ அடையாள‌ப் ப‌டுத்த‌க் கூடாது.

கே.பாலமுருகன் said...

@தமிழ்வானன்

வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே. முரண்படுவது தங்களின் வாசக சுதந்திரம், ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள "தவறான கண்ணோட்டம்" என்பதை உடனடி மறுப்பு என்கிற வகையில் நீங்கள் பாவிக்கும் ஒரு மதிப்பீடு.

சிந்த்தனைத்திறன் கற்பித்தலில், ஆய்வுச் சிந்தனைக்குக் கீழ் பரிந்துரைக்கப்படும், ஒரு கருத்தாக்கத்தை/ கருத்துருவாக்கத்தை நோக்கிய "கருதுகோல் உருவாக்குதல், ஆறுடம் கூறுதல்" போன்றவற்றை சேர்த்துக்கொள்ளப்படக்கூடிய முக்கியமான அம்சமாகும். நாம் எங்கே மாணவர்களைச் சுயமாகச் சிந்திக்கவும் தைரியமாகக் கருத்தைத் தெரிவிக்கவும் அனுமதித்திருக்கிறோம்? அவனுக்கும் சேர்த்து நாம்தானே எல்லாம் முடிவுகளையும் எடுக்கிறோம். பிறகெப்படி அவன் சுயச் சிந்தனையுடன் இயங்குவான்?

ஒரு நல்ல சிறுகதையை வாசகர்களுக்கு பரவலாக அறிமுகப்படுத்தும் பணியில் விரிசலை எதிர்நோக்கும் தமிழ்ப்பத்திரிக்கைகள், அந்த வடிவத்திலிருந்து நழுவி குட்டிக் கதைகள் எனும் அடைமொழியில் கதைகளைப் பிரசுரிக்கின்றன. ஓர் உண்மையைச் சொல்லி எனது கருதுகோளை விளக்குகிறேன். கடந்த வருடம் சுங்கைப்பட்டாணியிலிருந்து ஒரு பெண்மணி எழுதிய கதையொன்று ஒரு தமிழ்ப்பத்திர்க்கையில் பிரசுரமாகியிருந்தது. “குட்டிக் கதை” எனப் பெரிய எழுத்திலும் போட்டிருந்தார்கள்.

அந்தப் பெண்மணியைப் பிறகொரு நாள் ஒரு விழாவில் சந்தித்தபோது, “நல்ல குட்டிக் கதைகள் எழுதுறீங்க” எனக் கொஞ்சம் கிண்டலாகவே கேட்டு வைத்தேன். அவர் திடீர் ஆவேசத்துடன், நான் சிறுகதைத்தான் எழுதி அனுப்பினேன், அது ஒரு 2 பக்கம் இருந்ததால் அவர்களே அதைக் குட்டிக் கதை எனத் திணித்து வெளியீட்டுள்ளார்கள். இது என்னங்க நியாயம்? சிறுகதைன்னா எத்தனை பக்கங்களிலும் இருக்கலாமே? அதென்ன குட்டிக் கதைன்னு அவர்களே சொந்த விருப்பத்திற்குப் போடுவது எனக் கடிந்து கொண்டார்.

முருங்கை மரம் கிடைக்காததால் வேதாளம் கத்திரிக்கைச் செடியிலே தொங்கிக் கொண்டிருக்கிறதாம். நல்ல வழிக்காட்டுதலை வழங்க முடியாத பத்திர்க்கையைச் சார்ந்தவர்கள் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு சமரசம் என்கிற இயலாமையைக் காட்டி வசதியான ஒரு அடையாளத்தை நிறுவ முயல்வதை ஆரோக்கியம் என நினைக்கிறீர்களா? இனி ஒருவேளை இரு பக்கங்களில் சிறுகதை அமைந்துவிட்டால் இது குட்டிக் கதை என்கிற புரிதல் எல்லோருக்கும் வந்துவிடும் ஒரு அபாயத்தை நாமெல்லாம் ஆதரிக்க வேண்டுமா? முதலில் நீதி கதையின் பிடிப்பிலிருந்து விடுபட்டு யதார்த்தக் கதைகளைப் புனைவதில் எழுத்தாளர்களுக்கு ஆலோசித்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் யார் எழுத்தாளர்களின் சுதந்திரத்தில் கை வைக்க?

manathu.com said...

வணக்கம். கம்யாணி மாணியம் கதையைப் பற்றி கதைப்பது, இருக்கட்டும், முதலில் கோ.புண்ணியவானின் கதையைப் பற்றி கூறுங்கள். ஜனவரி மாதம் வந்த மக்கள் ஓசையில் வந்த கதையைத் திரும்ப போட்டிக்கு அனுப்பியது எப்படி?
அதே கதையை போட்டி முடடிவுகள் வெளிவருமுன்னே தமது புலோக்கில் இணைத்துக் கொண்டது எப்படி?

என்ன தண்டனை கொடுக்கலாம்?
இவ்வளவு காலம் வென்ற எல்லா பரிகளையும் திருப்பி ஒப்பபைக்க வேண்டும். சரிதானா தீர்ப்பு......