Monday, November 7, 2011

கவிதை: வீட்டில் இருப்பதைப் பற்றி

நான் எங்கேயும்  போவதற்கில்லை
ஆகையால் வீட்டில்தான் இருக்கிறேன்.
ஒவ்வொரு இரவுகளையும்
மௌனமாகக்  கவனித்தபடி இருக்கும்
நான் வழக்கமாக
வீட்டில்தான்  இருக்கிறேன்.
உறங்கி எழும்போது
நான் வீட்டில் இருப்பதை
மறப்பதில்லை.
எல்லாப் பொழுதுகளையும்
பாதுகாப்புடன் கடக்க
எனக்குத்  தேவை
நான் வீட்டில் இருப்பது.
நானும்
வீட்டில்  இருப்பதும்
ஒன்றாகிவிடுகின்றன.
பெரும் நிகழ்வாகத் தொடங்கி
கத்தரிப்புகள் இல்லாத
தொடர்க் காட்சிகளாகின்றன.
எவ்வித சலிப்புமில்லாமல்
நான் வீட்டில் இருப்பது
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வீட்டின்
எல்லாம் சிறு அங்குலங்களிலும்
நுனி முடுக்குகளிலும்
நான் இருப்பதற்காகத்
தொடர்ந்து
வீட்டில்  இருக்க வேண்டியிருக்கிறது.
இப்பொழுது
வீட்டை அகற்றிவிட்டு என்னைப் பார்ப்பதும்
என்னை நீக்கிவிட்டு வீட்டைப் பார்ப்பதும்
மயக்கமும் திகைப்பும் குழப்பமும்
நிரம்பியதாக மாறிவிடுகின்றன.
ஒரு
அகண்ட தீராத
எல்லாக் காலங்களிலும்
விரிந்தபடியே  இருக்கும்
காவியத்திலிருந்து
ஒரு துரும்பைக்கூட  அசைக்கமுடிவதில்லை
என உறுதியாகும்போது
நான் வீட்டில் இருப்பதைத்
தவிர்க்கமுடிவதில்லை.
நான் வீட்டில் இருப்பதற்கும்
நான் வீடாக  இருப்பதற்கும்
வித்தியாசமறியாமலேயே
இந்த மகா  இரகசியத்தை
உடைக்கிறேன். 


கே.பாலமுருகன்

No comments: