Wednesday, February 29, 2012

"சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்" - கே.பாலமுருகன்



கேள்வி : சினிமா மீதான ஆர்வம் எப்படி வந்தது?

பதில் : நான் சிறுவயது முதல் சினிமா பார்த்துப் பழகியவன். வீட்டில் தனிமையில் இருந்த பெரும்பாலான காலங்களில் சினிமா மட்டுமே பார்த்து என் பொழுதுகளை நிரப்பியிருக்கிறேன். வெறும் பழக்கமாக இருந்த சினிமா என் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாகியிருந்தது. எல்லோருக்கும் அது பொழுதுபோக்காக இருக்கையில் எனக்கு மிக உயர்ந்த ஒரு கலை வடிவமாகத் தெரிய ஆரம்பித்தது. (இப்படிச் சொல்வதே கொஞ்சம் வருத்தமாகவும் நகைப்பாகவும் இருக்கிறது) சினிமா என்பதே கலைத்தானே? சமூகம் மறந்துவிட்ட ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயம்.

கேள்வி : சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்பட என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

பதில் : சினிமாவின் தேவை என்ன என்பதைத்தான் ‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’ எனும் என்னுடைய சினிமா நூலில் விரிவாக உரையாடியுள்ளேன். கட்டாயம் இந்த நூலைப் படித்து முடிப்பவர்களுக்கு சினிமா என்பது எத்தனை ஆழமான கலை வடிவம் என்பதை உணர முடியும்.


கேள்வி : உங்கள் சினிமா நூலைப் பற்றி சொல்லுங்கள்.

பதில் : ‘ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்’ எனும் தலைப்பில் சினிமா தொடராக 10 மாதங்கள் நான் வல்லினத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 10 கட்டுரைகளுமே 9 தேசத்தின் சினிமாவைப் பற்றி விரிவாக ஆராய்கின்றன. இதுவரை உலக சினிமாவில் குழந்தைகளை மையப்படுத்தும் வாழ்க்கை சூழலையும் அதன் பின்னணியில் இயங்கும் அரசியல், சமூக அமைப்பு, பொருளாதார வேறுபாடு, கல்வி என அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தி சினிமா விமர்சனங்கள் வெளியானது கிடையாது. தமிழ் சூழலில் இது என்னுடைய முதல் முயற்சி.

கேள்வி : எந்தெந்த நாடுகளின் திரைப்படங்களை இப்புதகத்தில் பதிவு செய்துள்ளீர்கள்?

பதில் : தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா, ஹங்காங், இந்தியா, பிரேசில், இந்தி, ஜப்பான், ஆஸ்திரேலியா என மொத்தம் 9 தேசத்தின் வரைப்படங்களாகக் குழந்தைகளின் உலகைத் தரிசிக்கலாம். ஒவ்வொன்றும் தனித்துவமான குழந்தைகளைப் பதிவு செய்கின்றன.

கேள்வி : ஏன் மலேசியா சினிமா ஏதும் பதிவாகவில்லை?

பதில் : மலேசியாவில் குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தும் சினிமா முயற்சிகள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றே சொல்ல வேண்டும். யஸ்மின் அமாட் மட்டும் ஒரு சில நல்ல சினிமாவுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவருடைய முஷ்கின் படம் பால்யக் காலத்துக் கிராமத்துக் காதலைத்தான் முதன்மையாகப் பேசுகிறது. மலேசியாவில் நல்ல சினிமா இரசனை இருப்பதோடு சினிமா சார்ந்து தீவிரமான சிந்தனைகளும் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள சினிமாவுக்கான வணிக சந்தையைக் கடப்பது ஒரு சவாலாக இருக்க, சினிமா கலைஞர்கள் யஸ்மின் அமாட், அமிர் முகமாட் போன்றவர்களின் படைப்புகளை மறுபார்வை செய்து புதிய மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும். இதுவே எதிர்காலத்தில் மலேசியா சினிமா என்ற ஒரு அடையாளம் சர்வதேச அளவில் கவனப்படுத்தப்படும்.

கேள்வி : உங்களின் சினிமா நூல், குழந்தைகளின் வாழ்க்கை முறையைத் தவிர வேறெந்த விசயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது?

பதில் : இந்தப் புத்தகத்தில் நான் குறிப்பிட்டு எழுதியுள்ள எல்லாம் குழந்தைகள் சினிமாவிலும் எப்படிக் கல்வி, பொருளாதாரம், சமூக அமைப்பு, அரசியல் போன்றவை அந்தத் தேசத்தின் சிறார்களின் மனதையும் நடத்தையையும் கட்டமைக்கிறது என்பது பற்றியதாக இருக்கின்றன. தாய்லாந்திலுள்ள முழுநேர விடுதி சிறுவர்களின் உளவியலை எப்படிப் பாதிக்கிறது, இந்தோனேசியாவின் கிராமப்பள்ளிகள் எப்படி மாணவர்களை இழக்கின்றன, பிரேசிலின் சமூக அமைப்பு எம்மாதிரியான அடுத்த தலைமுறையை வளர்த்துவிடுகின்றன என இந்த ஆய்வு வெவ்வேறு தளங்களைத் தொட்டு விரிவாகப் பேசுகின்றன. ஒவ்வொரு சினிமாவைச் சேர்ந்த தேசத்தின் அரசியல், கல்வி அமைப்பு, சமூகம் என முடிந்தவரை பரவலாகத் தேடி வாசித்து இக்கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

கேள்வி : இந்த நூல் சமூகத்திற்கு எந்தவகையில் பயனாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில் : ஒவ்வொரு காலக்கட்டத்தில் இலக்கிய நகர்ச்சிக்கும் சரி வேறெந்த துறையைச் சேர்ந்த வளர்ச்சிக்கும் சரி, அக்காலக்கட்டத்தில் வாழக்கூடிய மக்களின் சிந்தனையும் மதிப்பீடுகளும் இரசனைகளும் மாறுப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கலைக்கான நுகர்வோர் பரப்பு சிந்தனை ரீதியில் ஒரு பெரும் மாற்றத்தை அடைந்திருக்க வேண்டும். இங்குக் கலைக்காக மனிதர்கள் என்பது மறைந்து மனிதர்களுக்காகக் கலை என்ற ஒரு நிலைப்பாடு உருவாகிவிட்டது. இதற்கு முன்பான சமூகம் சினிமா எனும் கலையைக் கொன்று புதைத்துவிட்டிருந்தது. சினிமா வெறும் வணிகமாக மட்டுமே நிலைக்கவும் இதுவே காரணம். ஆகையால் சமூகத்திற்குச் சினிமா சார்ந்து ஒரு மாற்றுப்பார்வை முதலில் உருவாக வேண்டும். அப்பொழுதுதான் இரசனையும் நுகர்வோர் பார்வையும் மாறுப்படும். சினிமாவும் கலைக்கான அந்தஸ்த்தை மீண்டும் அடையக்கூடும். அப்படியோரு மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக, ஆரம்பக்கட்ட கிளர்ச்சியாக என் புத்தகம் இருக்கும் என நம்புகிறேன். சமூகத்தின் நுகர்வுத்தன்மையை இது மாற்றியமைக்கும் என்றும் தீர்க்கமாக நம்புகிறேன்.

கேள்வி : உங்கள் நூல் அதிகமான பேரால் வாசிக்கப்படும் என நம்புகிறீர்களா?

பதில் : சினிமாவுக்கு எப்பொழுதும் ஒரு பெரிய கூட்டம் உண்டு. சினிமா சார்ந்த தேடல்கள் எப்பொழுதும் இருக்கும். அந்தத் தேடல்களைக் கூர்மைப்படுத்தும் வேலையைத்தான் நான் செய்ய முயல்கிறேன். மலேசியாவில் வெளிவரக்கூடும் எல்லாம் சினிமா இதழ்களிலும் மற்ற எல்லாம் பத்திரிக்கைகளிம் சினிமா கிசுகிசு, சினிமா தகவல்கள், சினிமா செய்திகள் மட்டுமே பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அது சினிமா வாசகர் தளத்தை உயர்த்த முடியாத ஒரு தீர்மானிக்கப்பட்டப் பலவீனத்துடன்தான் பொதுமக்களைச் சென்றடைகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சினிமா என்பது மிகப்பெரிய மக்கள் பரப்பைச் சென்றடையும் ஒரே கலை வடிவம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நான் எழுதிய இந்த நூல் இந்தச் சமூகத்தில் ஒரு மாற்றுக்குரலாகப் பதிவாகும். அதன் மூலம் தனக்கான வாசகர்களை அது தேடிக் கண்டைவதும் உறுதியே.

கேள்வி : பள்ளி மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனளிக்கக்கூடுமா?

பதில் : கெடாவிலுள்ள ஒரு சில பள்ளிகள் இந்தப் புத்தகத்தை நூல் நிலையத்திற்காகக் கேட்டிருக்கிறார்கள். பேராக் கல்வி இலாகாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் Taree Zameen Paar எனும் இந்திப் படத்தைப் பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கும் Dyslexia நோய் தொடர்பான ஆய்வைப் படித்துவிட்டு, கல்வி உலகத்தில் இதுவரை யாரும் முன்வைக்காத மாற்றுப்பார்வை எனப் பாராட்டினார். ஆகையால், தாராளமாக பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். இவை முழுக்கக் குழந்தைகளின் வாழ்வைப் பற்றி ஆராய்வதால் நான் சினிமாவின் மூலம் என்னுடைய மலேசிய சிறுவர் வாழ்க்கையை மீட்டெடுத்ததைப் போல, இவர்களும் புத்தகத்தின் ஏதோ ஒரு பகுதியின் மூலம் தனக்கான பிரக்ஞையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். நாம் குழந்தைகளையும் சிறுவர்களையும் அவர்களாக வாழவிடுவதில்லை, மாறாக நாம் பெருமைப்படக்கூடிய அறிவாளிகளாக மட்டுமே உருவாக்க நினைக்கிறோம். இந்த நூல் இதையும் விவாதித்தே தீரும்.

கேள்வி : அப்படியென்றால், பள்ளி ஆசிரியர்களும் இந்த நூலை வாசிக்க வேண்டும் அல்லவா?

பதில் : இந்த நூலை முதலில் வாசிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே என ஆரம்பத்திலேயே நான் உணர்ந்தேன். சினிமா மட்டுமல்ல எல்லாம் கலைகளின் மீதும் ஆர்வத்தையும் ஆழமான அறிவையும் மாணவர்களிடையே உருவாக்கக்கூடிய ஒரு நிலையில் ஆசிரியர்களே இருக்கிறார்கள். சினிமா என்பதை வன்முறை, ஆபாசம் என்பதோடு மட்டும் ஒப்பீட்டு சினிமாவைப் பார்க்காதீர்கள் எனப் புத்திமதியைச் சொல்லும் ஆசிரியர்களின் பார்வையை மாற்றியமைத்து எது நல்ல சினிமா, எந்தச் சினிமா மாணவர்களின் சிந்தனையை மேலெடுத்துச்செல்லும் என்பதைப் புரிந்துகொண்டு கருத்துரைக்கும் ஒரு மனநிலையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதுவரை சினிமா சார்ந்து ஆசிரியர்களுக்கு இருந்த எல்லாம்விதமான தேக்கநிலைகளையும் மதிப்பீடுகளையும் இந்த நூல் களைத்துப்போடும்.

கேள்வி : இறுதியாக, இந்த நூல் உருவாக்கத்தில் உங்களுடன் துணை இருந்தவர்கள் பற்றி சொல்லுங்கள்.

பதில் : நண்பர் ம. நவீன் அவர்கள்தான் குழந்தைகள் சினிமாவைப் பற்றி எழுதுவதற்கு ஆர்வத்தைக் கொடுத்தார், வல்லினத்தில் அதற்கான ஒரு களத்தையும் கொடுத்து தொடர்ந்து 10 மாதங்கள் இக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஆதரவாகவும் இருந்தார். மேலும் இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுப்பாகச் சேர்த்து, சிரமப்பட்டு மிகுந்த அக்கறை உணர்வுடன் நூலாக்கியவரும் அவரே. அதைத் தவிர, எனக்கு எப்பொழுதும் ஆதரவாக இருந்து என்னைச் சகித்துக்கொண்ட என் குடும்பாத்தாருக்கும் நன்றியைச் சொல்லியாக வேண்டும். மேலும் கல்லூரி காலக்கட்டத்திலேயே தீவிர சினிமா சார்ந்த உரையாடலின் மூலம் என்னுடைய இரசனையையும் தேடலையும் மாற்றியமைத்த நண்பர்கள் காளிதாஷ், சுந்தரேஷ்வரன், விநோத் குமார், நவீன் செல்வங்கலை, ஜெப்ரி போன்றவர்களையும் இந்தவேளையில் நினைவுக்கூர்கிறேன்.

வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்

No comments: