Sunday, February 2, 2014

விடியும் முன் : தீமையின் ருசி

கடந்த வருடம் வெளியானதில் மிகச் சிறந்த திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை, நடிப்பு எனத் தாராளமாகக் குறிப்பிடலாம். காட்சியமைப்பு - திரைக்கதையில் 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தையும் 'விடியும் முன்' படத்தையும் முக்கியமான படமாகச் சொல்லலாம். ஆனால், விடியும் முன் 'London to Brigton' எனும் 2006ஆம் ஆண்டில் வெளிவந்த பிரிட்டிஸ் படத்தின் தழுவல் என்றும் சொல்லப்படுகிறது. அப்படித் தழுவலாக இருந்தால் ஒரிஜினால்ட்டி இல்லாததால் படத்தின் கதையையும் திரைக்கதையையும் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் இப்படத்தில் பூஜாவின் நடிப்பும் கதாபாத்திரமும் தமிழ் சினிமா பொருட்படுத்த வேண்டிய விமர்சிக்க வேண்டிய 2013ஆம் ஆண்டின் வெளிப்பாடாகும். சமூகத்திடமிருந்து எந்தக் கழிவிரக்கத்தையும் எதிர்ப்பார்க்காத ஒரு பாலியல் தொழிலாளி கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தின் பற்பல கிளைகள்தான் இப்படம். மற்றபடி அவர்களின் வாழ்வை நோக்கிக் கதறி அழுது சோகப்படும் எந்தத் தருணமும் காட்சியும் படத்தில் இல்லை. எல்லாமும் இன்னொரு காட்சிகளாக எந்த அலட்டலும் மிகையும் இல்லாமல் நகர்கின்றன. இப்படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரமும் புரட்சியோ, இலட்சியவாதம் கொண்டவர்களோ அல்ல.

படத்தின் கடைசி கட்டம்வரை நமக்குள் இருக்கும் தீமையின் ருசி எத்தனை வன்மமானது என நமையே உணரச் செய்கின்றது. ஒரு 12 வயது சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாகுவது பொதுப்புத்தியில் நாம் யாரும் விரும்பாத ஒரு விசயமே. ஆனாலும் ஒரு பெரிய பணக்காரனால் அந்தச் சிறுமி பாலியல் ரீதியில் என்னவோ செய்யப்படுகிறாள்; அதைப் படத்தின் இறுதிவரை சொல்லப்படவில்லை; இருப்பினும் அது என்னவாக இருக்கும் எனும் நுகர்வு வெறிக்கு ஆளாகி படம் முழுக்க அலைந்து கொண்டிருக்கும் மனப்பாண்மைக்கு ஆளாகியிருப்போம். அதைத் தெரிந்துகொண்ட அடுத்த கணமே 'இவனுக்கெல்லாம் இந்தத் தண்டனைக்கூட பத்தாது' எனச் சட்டென நியாயம் தீர்ப்பு வழங்கும் பொதுப்புத்திற்குத் திரும்பிவிடுவோம். நாம் எப்படிப்பட்ட வேடந்தாரிகள்?



காட்சி அமைப்பு/ கலை: பாலியல் தொழில் நடக்கும் பட்ஜட் ஹோட்டல்கள் பெருகிய வெளிச்சத்திற்குள் இருக்காது. எப்பொழுதும் ஒரு மங்கிய நிலையில் மஞ்சளும் பச்சையும் கலந்திருக்கும் வர்ணத்தில் இருக்கும். எல்லாம் இடங்களிலும் ஒரு வெறுமை ஒட்டியிருக்கும். அங்குள்ள எல்லாரின் முகங்களிம் ஒளிக்கப்பட்ட ஒரு பயம் திமிறிக்கொண்டே இருக்கும். படத்தில் சில காட்சிகள் வந்தாலும் மிகக் கச்சிதமாக அந்த இடங்களைப் படமாகியிருக்கிறார்கள். பூஜாவின் கனவொன்றில் வரும் அந்த நீள் கட்டிட சந்து என்னவோ சமூகத்தின் கற்பனை மிகுந்த அறத்திற்கு எதிராக ஒளிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளின் ஆழ்மனம் என்றே தோன்றச் செய்யும் அற்புதமான காட்சி. சிரி ரங்கத்திற்குள் பூஜாவையும் அந்தச் சிறுமியையும் தேடிப்போகும் ஜான் விஜயின் கார் அதற்குள் நுழையும் காட்சியையும் slow motion-லில் அழகான பின்னணி இசையுடன் காட்டியிருப்பார்கள்.

ஒளிப்பதிவு: இந்தக் கதையைக் காட்டுவதற்கான மிக பொருத்தமான ஒளிப்பதிவைக் கையாண்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவிற்குள் எப்பொழுதும் ஒரு மௌனமும் சிக்கனமும் அமைதியும் இருக்கிறது. திரில்லர் படத்திற்குரிய காட்சி நகர்வுகளைச் சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளது ஒளிப்பதிவு. படம் முழுக்க பெரும்பாலும் இரவிலேயே நடப்பதால் மஞ்சல் பச்சை, வர்ணத்தை அப்பியிருக்கிறார்கள். இது கதைக்கான மனிதர்களைப் பிரதிபலிக்கும் வர்ணங்களாகும்.

இயக்குனர்: இப்படம் ஒருவேளை ஒரிஜினால்டி இல்லை என்பது உறுதியென்றால், எந்தப் படத்திலிருந்து இக்கதையை எடுத்தார் என மூலப்படத்திற்கு நன்றி தெரிவிக்காத படைப்பு நேர்மையற்றவர் என்றே சொல்ல வேண்டும். ஏன் இதுபோன்ற கதைகளை நம் வாழ்க்கைப்பரப்பிலிருந்து சிந்தித்து அதற்கான கதைகளை உருவாக்க முடியவில்லை? வாழ்க்கை எத்தனை நேர்மையற்றது என்கிற அதன் யதார்த்தங்களைச் சொல்லும் கதைகள் தமிழ்ச்சூழலில் இல்லையா? இப்படத்தைப் பாராட்டமலும் இருக்க முடியவில்லை, ஆனால் அதே சமயம் அந்தக் கதை அசலானது அல்ல என நினைக்கும்போதும் இயக்குனரை விமர்சிக்காமல் இருக்க முடிவதில்லை. எப்படியிருப்பினும் கிக்கிஜிரோ படத்தின் தழுவலான நந்தலாலா திருட்டுக் கதையாக இருந்தாலும் எந்த அளவிற்கு தமிழ் வாழ்க்கைச் சூழலைப் பேசியுள்ளது என்றே விமர்சகர்ளின் சமரசத்திற்குட்பட்ட பார்வையாக அடுத்தக்கட்டம் அமைந்திருந்தது. அதே போல இப்படத்தையும் தமிழ் வாழ்க்கைச் சூழலோடு வைத்து விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

விருதுகள்: பின்னணி இசைக்காகவும், ஒளிப்பதிவிற்காகவும், வசனத்திற்காகவும், கலை/ ஒப்பனைக்காகவும் இப்படம் பல விருதுகளை வெல்ல சாத்தியம் உண்டு. நடிப்பிற்காக பூஜாவிற்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை என்றால் விருதுகள் முற்றிலுமாகத் தன் நேர்மையை இழந்து வெறும் அரசியலை மட்டுமே நம்பியிருக்கின்றது எனச் சொல்லலாம்.

படவாய்ப்பே இல்லாமல் ரொம்ப காலம் நடிக்காமல் இடைவேளிவிட்டு மீண்டும் நடிக்கும்போது பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் துணிச்சலில் அனுஷ்காவிற்கு அடுத்ததாக பூஜா கவனம் பெறுகிறார். வானம் படத்திலாவது அனுஷ்காவின் வேடம் பரிதாபப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டது. அந்தச் சிறுமிக்கு ஒரு வழியை உருவாக்கிவிட்டு மீண்டும் தன் பழைய தொழிலுக்கே எந்தக் குற்ற உணர்வும் இன்றி திரும்ப நினைக்கும் இப்படத்திலுள்ள பூஜாவின் வேடம் சராசரியான பாலியல் தொழிலாளியின் வேடத்தை மிஞ்சியது. பாலாஜி சக்திவேல்கூட தன்னுடைய வழக்கு எண் படத்தில் பாலியல் தொழிலாளியின் வீழ்ச்சியைக் காட்டி அவர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாகவே காட்டியிருப்பார்(அப்படிக் காட்டுவதிலும் அவருக்கு நேர்மை இருக்கும் என்பதும் உண்மை), ஆனால் இப்படம் முழுக்க பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கை எந்த நியாயத்தையும் கோருவதாக அழுத்தமாகக் காட்டப்படவில்லை. அவர்களை முன்வைத்து இந்தச் சமூகமும் அதற்குள் இருக்கும் உதிரி மனிதர்களும் எவ்வளவு குரூருமாக சக உதிரி மனிதர்களை வைத்துப் பிழைக்கிறார்கள் என்பதையும் தீமையின் ருசியை உணர்ந்த மனிதர்களின் மனம் எத்தனை வக்கிரமாக இயங்குகிறது என்பதையும் படம் சொல்லாமல் சொல்லியபடி நகர்கின்றது.

வசனம்: படத்தில் வரும் எல்லோருமே உதிரி மனிதர்கள்தான். யாருமே கதாநாயகர்கள் கிடையாது. இப்படத்திற்குப் கதையே கதாநாயகத்தன்மை உள்ளதாக இருக்கின்றது. அவர்களும் பேசும் வசனமும் யதார்த்தமாகவே அமைந்துள்ளது.

"ஆனா இந்த உலகத்துலே இரண்டே பேருத்தான் ரேகா..ஒன்னு ராஜா, இன்னொனு நாய்...நீ அந்த ராஜாவா வாழப்போறியா இல்லை அந்த நாயா சாகப் போறீயா?"- இந்த வசனத்திற்கு முன் அந்த பெண்கள் தரகர் சொல்லும் ஒரு ராஜா கதை முக்கியமானது. நடக்கும் அதர்மங்களுக்கு எதிராக ஒரு நீதிநெறிக் கதையைச் சொல்லி அறத்தை நிலைநாட்டுவது வழக்கமான கதைச் சொல்லல். ஆனால், அக்கதை, நடக்கும் அதர்மங்களின் யதார்த்தத்தைச் சொல்லித் தீமையை நியாயப்படுத்தி குற்றவாளிகளை அழுத்தமாக நிறுவுகிறது. நன்மையை எதிர்க்கொள்வதைவிட தீமையைப் புரிந்து கொள்ளும் இன்னொரு உளவியலுக்கு நம்மி இட்டுச் செல்கிறது படம். தீமைகளை விட்டு ஓடுவது சாத்தியமற்றது என்கிற உண்மையை, அதன் பக்கங்களைக் காட்டுகிறது படம்.

முடிவு: மிகவும் நாடகத்தனமாக ஏற்பாடு செய்யப்பட்ட விதமாக வந்து நிற்கிறது. படத்தின் பல முடிச்சுகள் அங்கு வைத்து அவிழ்க்கப்பட்டதால் அதன் நாடகத்தனத்தை உணர முடியாமல் போகின்றது. ஆனாலும் பல கேள்விகளும் உருவாகிவிடுகின்றன. தர்க்கம் செய்ய வேண்டிய ஒரு நல்ல சினிமா' விடியும் முன்' அதன் ஒரிஜினால்டி அற்றத்தன்மையால் பல பாராட்டுகளை இழந்து நிற்கின்றது.

-கே.பாலமுருகன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆழ்ந்த விமர்சனம்...

வாழ்த்துக்கள்...