Wednesday, November 5, 2014

சிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர சினிமா

       
2007-இல் எழுதிய சிறுகதை ,  மறுபிரசுரம்:

வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?”

ஒகே. .  உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு

   
உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு நிறுவனம் என்று சொல்வதைவிட அதிகமான சவர்க்காரம், பல் துலக்கும் பிரஸ், முகக் கண்ணாடி, போன்ற பொருட்களின் விளம்பரத் தயாரிப்புகள்தான் நடந்துள்ளன. அதனால் அந்த இடத்தை குளியலறை விளம்பரக் கம்பெனி என்றுகூட சொல்லலாம். அதன் தயாரிப்பாளர் திறந்த மனப்பான்மையுடையவர். ஒரு தடவை துண்டு விளம்பரத்தை தயாரித்திருந்தார். மோடல்? அவரே நடிக்கத் தயாரானார். விளம்பரம் இப்படித்தான் இருந்தது:

காராவாடை பளபள துண்டு-விளம்பரம்

வெகுநேரம் பின்புறம் மட்டும் காட்டப்படும் ஓர் உருவம் தெரிகிறது. கால்களில் அடர்த்தியான சுருள் முடிகள் குளோசாப்பில் காட்டப்பட்டு, காமிரா மேலே ஏறுகிறது. கலர் துண்டின் முழு வடிவம் தெரிகிறது. துண்டு கட்டியிருப்பவர் இலகுவாக நடந்து குளியலறையிலிருந்து வெளியேறுகிறார். இப்பொழுது முகம் மட்டும் காமிராவில் தெரிகிறது. காமிராவில் நம் தயாரிப்பாளர் காண்டாமணி. சிரித்துக் கொண்டே சொல்கிறார், “ ஆ! ஆ! என்ன குளுமை...கதகதப்பு...  உடலில் இருக்கும் நீரை வழித்து எடுத்துவிடும்...வாங்கிப் பயன்படுத்துங்கள், காராவாடை பளபள துண்டு! துண்டு ! துண்டு!

துண்டு ஒரு வாரத்திலே கலர் மங்கிவிடும் என்பதைப் பற்றி காண்டாமணி தந்திரமாக மறைத்ததுதான் விளம்பரத்தின் வெற்றி.

2

வாங்க! வாங்க! மணியம். எப்படி இருக்கிங்க?”

நல்லாருக்கன் சார்.

நான் சொன்ன மாதிரி 3 படத்துக்கான கதைகளைத் தயார் பண்ணிட்டிங்களா? அவசரம் மணியம். காசு கையிலே இருக்கும் போதே எடுத்தறணும்... 2 படமாவது ஆஸ்காருக்குப் போகணும் மணியம். நம்ப நாட்டுலே தமிழ்ப்படங்கள் பெறும்பாலும் பேய்படங்கள் மட்டும்தான் வருது. நல்ல படங்கள் இல்லை. இந்தியா அளவுக்கு நம்பளும் படம் எடுத்து முன்னேற இதான் வாய்ப்பு

எல்லாம் கதையும் ரெடி சார்! ரெண்டு வாரமா தூக்கம் இல்லாமே கதைங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டேன் சார்

வேரி கூட். இப்படித்தான் இருக்கனும். . சரி ஒன்னு ஒன்னா சொல்லுங்க மணியம்

முதல் படம்: கார் வருது மோட்டார் போகுது

சார் இந்தப் படத்துலே மொத்த நடிகர்களே 4 பேர்தான்...ரெண்டு காதல் ஜோடிகள். படம் முழுக்க ரோட்டுலதான்

ஏன்பா ரோட்டுல?”

கடசியா அங்கத்தானே வரப் போறிங்க


என்னயா?”

இல்ல சார், வித்தியாசம் சார்... ஒரு காதல் ஜோடிகள் கார்ல வராங்க, இன்னொரு காதல் ஜோடிகள் மோட்டார்லே வராங்க சார்... இந்த ரெண்டு ஜோடிகளும் மாறி மாறி மோட்டார்லயும் கார்லயும் எங்கயோ போறாங்க, அதையே காட்டறம், 18 காதல் பாட்டுகளும் கூடவே வருது, 2 டீம் மியூசிக்.

யாருப்பா இசை?”

வெளிநாட்டுலேந்து இறக்குமதி பண்றம் சார், முடிஞ்ச வரைக்கும் 10 இசைக் கலைஞர்கள். ஒரு ஆளுக்கு ஒரு கோடி தரணும்...

ஆ! அற்புதம்யா

“”மோட்டரு, காரு, மோட்டரு, காரு, மோட்டரு, காரு...கடசில ரெண்டு காதல் ஜோடிகளும் அடிப்பட்டு செத்துர்றாங்க...நம்ப படத்தெ முடிக்கறம். .

ஏன்ப்பா சாவறாங்க?”

அப்பத்தான் பரிதாபத்தைச் சம்பாரிக்க முடியும். படம் ஓடனுமா இதான் வழி. . கடசி கட்டத்துலே படம் முடியும்போது, மோட்டார்லெ வந்த ஹீரோ மட்டும் சாவறத்துக்கு முன்ன ஒரு வசனம் பேசறாரு சார்...உலக சினிமாவலே யாரும் சாவறத்துக்கு முன்ன பேசாத வசனம் சார்
என்ன வசனம் மணியம்?”

ரெண்டு நிமிசம் ஹீரோ எச்சில் துப்பறாரு, ரத்தமா கொட்டுது. .  ஆ! ஆ! வாழ்வே மாயம்ப்பா...this was a good accident!” என்று சொல்லிட்டு பட்டுனு இழுத்துகுது, ரெண்டு நிமிசம் துடிச்சிட்டு செத்துறார்ரு

வாவ்...அருமை! அருமை!

இரண்டாவது படம்: அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்க

சார் இந்தப் படம் இதுவரை யாருமே பேசாத கள்ளக் காதல் கதை. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நூற்றாண்டின் சிறந்த கதை சார்...அசத்தலாம்.

நல்ல நல்ல கதையா கொண்டு வரப்பா நீ, ரியலி கூட்

சார் மாற்றுச் சிந்தனை வேணும். அப்பத்தான் தனித்துத் தெரிய முடியும்...ஓகே சார் கதையில ஒரு 200 தடவை அப்பறம் வீட்டுப் பக்கமா வாங்கஎன்ற வசனத்தைப் பயன்படுத்தறம் சார். ஒவ்வொரு தொனியில. நிறைய நடிகர்கள போடுறம் சார்

அவ்வளவு நடிகர்களா? யாரை நடிக்க வைக்கப் போறீங்க?”

சார் நம்ப அசல் சினிமா தரணும். அதான் லேட்டஸ். அதனாலே பேப்பர்ல விளம்பரம் தரலாம், “கள்ளக் காதல் படத்துக்கு நடிகர்கள் தேவை, அசலான சினிமா என்பதால் யாரெல்லாம் உண்மையாக சமீபக் காலமாகக் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்எப்படி சார்?”

யோசனை கிங் நீங்க

அப்பறம் படம் முழுக்க ஒரே கள்ளப் பாட்டு சார். .

கள்ளப் பாட்டா? அது எப்படி?”

கள்ளப் படம் எடுக்கறம்லே, அதனாலே ஏற்கனவே வந்த படத்தோட பாட்டைக் காப்பி பண்ணி கள்ளத்தனமா போடச் சொல்லிரலாம்

என்ன ஒரு மூளைப்பா ஒன்னோட

கள்ளக் காதலெ நியாயப்படுத்திக் காட்டி, வரலாறுலே இடம் பிடிக்கப் போது சார் இந்தப் படம்...கடசி கட்டம்தான் உலக திருப்பம்...எல்லாரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் கடசி கட்டம் இந்தப் படத்துலே இருக்கு சார்

அது எப்படிப்பா?”

கடசி கட்டம், கள்ளக் காதலனோட இருக்கும்போது அவளோட புருஷன் உள்ள வந்து அந்தக் காட்சியெ பார்த்துடறான் சார்

ஐயோ! அப்பறம்?”

உடனே அவன் முகத்து உணர்ச்சிகள கிட்டத்துலே காட்டறம். மிகையான எந்த வெளிபாடும் இல்லாம மார்லன் பிராண்டோ மாதிரி, இலேசான முனகல்...அப்பறம் சடார்னு ஒரு வசனம் பேசறாரு... தம்பி! உலகத்துலே இன்னிக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களோட எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம், அதுலே நல்லா வாழ்றவங்களோட எண்ணிக்கை 18 கோடி 23 லட்சம், புருசன பிரிஞ்சி வாழ்ற மனைவிகளோட எண்ணிக்கை 8 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் ஆண்களோட எண்ணிக்கை 12 கோடியே 13 லட்சம், கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 10 கோடியே 35 லட்சம், அதுல புருஷனுக்குத் தெரிஞ்சே கள்ளக் காதல் வச்சிருக்கும் பெண்கள் 85 லட்சம்...இப்பெ 85 லட்சத்து ஒன்னு... ஆ! ஆ! ஆ!

தம்பி உலக சினிமாவே தோற்றுப் போயிரும்பா

ஆமாம் சார்...இதுலெ வரும் 5 பாட்லயும் மழை பேயுது சார்...குட்டி மழையே சட்டி தலையா, பெட்டி எங்கெ, முட்டிக்கோடா...அப்படினு ஒரு பாட்டு சார்...அப்படியே 45டிகிரலே மழை பேயுது, இந்தக் கிராபிக் இதுவரைக்கும் யாருமே பண்ணிருக்க மாட்டாங்க சார்

மூன்றவது படம்: கிங் மேக்கரும் எருமைமாடும்

சார்! இந்தப் படம் இதுவரைக்கும் வெளிவந்த எல்லாம்வகையான கதாநாயகத்துவ சினிமாக்களையே தோற்கடிச்சிரும் சார்! அந்த அளவுக்கு ஹீரோஷம் சார்

சரிப்பா...கதையே சொல்லு

படத்துலே கதையே இல்ல சார்...அங்கத்தான் வெற்றியே இருக்கு! மாத்தி மாத்தி அதே ஹீரோவெ பல ஏங்கள்ளே காட்டிக்கிட்டே இருக்கோம், படம் முழுக்க அதுதான், 32 இடங்களுக்குப் போய் 8 பாட்டுக்கு சீன் போடறம்... 54 ஹீரோன்யிகளை வரவழைக்கறோம், எல்லாமே செக்ஸி உடைகள், ஒரு சினிமாவுக்கு உடைக்கு மட்டும் உலகத்துலே வேற எங்கயும் செலவு பண்ணிருக்கக்கூடாது சார்...43 கோடி சார். எப்படி?”

தம்பி என்னயே எங்கயோ கொண்டு போறிங்க...  தாங்க முடிலே

சார், இதுக்கே இப்படிச் சொல்றீங்க. இன்னும் இருக்குலே...ஒரு கட்டம் ஹீரோ நடந்து வரும்போது பின்னனி சத்தம் கொடுக்கறம் சார், 4 புல்டோசர், 8 லாரி, 15 இடி இயக்கி இயந்திரம், 32 வகையிலான இயந்திர ஒலி...அப்படியே பாக்கறவங்களோட காது ஜவ்வு கிளிஞ்சி தொங்கணும் சார், உலக சினிமாவுலே இல்லாத சத்தம், அதுவும் ஒரு ஹீரோ நடந்து வரும்போது

தம்பி! இப்பயே எனக்கு கிறங்குது

அப்பறம் சார், ஒரு கட்டத்துலே ஹீரோ கோபமா நடந்து வறாரு, அப்ப காமிராவே மக்களோட பார்வையிலேந்து காட்டறம், அவுங்க கண்ணுக்கு ஹீரோ திடீர்னு புலி மாதிரி தெரியறாரு, அந்த இடத்துலே மிருககாட்சி சாலையில உள்ள எல்லா மிருகம் மாதிரியும் ஹீரோவெ காட்டறம், திடீர்னு காண்டாமிருகம் மாதிரி, திடீர்னு யானை மாதிரி, திடீர்னு வண்ணாத்தெ பாம்பு மாதிரி, திடீர்னு குதிரை மாதிரி, இப்படி எல்லாம் மிருகத்தையும் குளோசாப்லே ஹீரோ வர்ற சீனுக்குப் பயன்படுத்தறம் சார்... எது ஹீரோணு மக்கள் குழம்பி போகணும் சார்

ஆஹா! ஆஹா! அற்புதம்

ஒரு கட்டத்துலே சார், ஹீரோவே காமிராவுலே வச்சி கிராபிக் பண்ணி நாலு பிம்பமா காட்டறம், அப்படியே பிரிச்சி எடுக்கறாரு சார் ஹீரோ, நாலு எதிரிகளை ஒரே நேரத்துல வேற வேற எடத்துலே வச்சி அடிக்கறாரு சார்...உலக அற்புதம் சார்...அப்படியே கழுத்துலே கயிறு கட்டி பறக்க விடலாம் சார்...தொங்கிக்கிட்டே போய் அடிக்கறாரு

தம்பி...இதுலாம் கேட்டுவிட்டு ஒரு பெரிய நம்பிக்கையே வந்துருச்சிப்பா.  இந்திய சினிமாவே காப்பிப் பண்ணாமே ரொம்ப சுயமா யோசிச்சி அசத்தியிருக்கீங்க... இந்த 3 படத்துக்கும் 78 கோடி செலவு பண்ண நான் தயார்ப்பா

சார், அந்த மூணாவது படத்தோட கடசி கட்டத்துலே நீங்க வர்றீங்க சார்

நானா? எதுக்குப்பா?”

சும்மா ஒரு தமாஸ¤க்கு சார்! கடசியா வந்து ஒரு வசனம் பேசிட்டு ஒரு பாட்டுக்கு நம்ப எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடலாம் சார்... படத்துலே வேலை செஞ்ச யூனிட்டே டான்ஸ் ஆடலாம் ஹீரோகூட, இதுதான் படத்தோட கடசி கட்டம் சார்

ஓகேப்பா. என்ன வசனம் எனக்கு?”

அவன் பல்லி அடிக்கிறதுல சில்லி! துள்ளி அடிக்கிறதுல கள்ளி! மொத்தத்துலெ அவன் ஒரு குள்ளின்னு சொல்லிட்டு உலக கில்லிகளே... உலக பல்லிகளே...  அமசோன் காடும் உன்னை அழைக்கும்... சிலுவார ஒழுங்கா போடு...எருமைமாட்டுப் பயலே நீ வா... before you go, I want with you” அப்படினு பாட்டு முடிய படமும் முடியுது சார்

தம்பி படத்தோட பேரு கிங் மேக்கரும் எருமைமாடும்ன்னு சொன்னிங்க, ஆனா படத்துக்குச் சம்பந்தமா வரலியே?”

சார் உங்களுக்காகவே அந்தப் பேரு வச்சேன் சார்... நீங்க கடசி கட்டம் வரும்போது எருமைமாட்டுலே உக்காந்துகிட்டுதான் வர்றீங்க, எப்படி? அப்பக்கூட உங்க தலைலே முகத்துலே சுருள் சுருளா நிறைய முடி தொங்குது... நீங்க மூனு விதமா குரல் மாத்தி மாத்தி பிறழ்வு ஸ்டைல்ல பேசறீங்க... குரல் மாறும் போது உங்க தலைமுடியும் மாறி பிரபஞ்ச அதிசியத்தைக் காட்டப் போறீங்க சார்...  குண்டலகேசி கும்மா மண்டலகேசி கம்மானு அடிக்கடி டைலாக் விடுறீங்க

தயாரிப்பாளர் தலை சுற்றி ஆனந்த பெருவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அடுத்த தலைமுறையின் தமிழ் சினிமா எழுந்து திடமாக நின்றது.

கே.பாலமுருகன்
2007, டிசம்பர்
திண்ணை.காம்



1 comment:

Unknown said...

தமிழ் சினிமாவையும் மலேசிய சினிமாவையும் நல்லா கிண்டலடிச்சிருக்கீங்க. நல்ல இருக்கு பாலா சார்.