Wednesday, November 26, 2014

Camp x- ray – ஓர் அல்கைடா தீவிரவாதியின் அறை


Peter sattaler இயக்கி இவ்வருடம் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான படம் ஆகும். அநேகமாக அடுத்த ஆண்டில் பல விருதுகளைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படமாகும். தன்னுடைய சிறுநகரத்தைவிட்டு இராணுவத்தில் சேரும் ப்லோண்டி எனும் ஓர் இளம் பெண்ணுக்கும் Guantanamo சிறையில் 8 வருடமாக அடைப்பட்டிருக்கும் அல்கைடா தீவிரவாதி என நம்பப்படும் அலி என்பவருக்கும் இடையில் உருவாகும் ஒரு மெல்லிய நட்புதான் படத்தின் கதை. குவாண்டனமோ 1990களில் நிறுவப்பட்ட உலகின் மிகவும் கொடூரமான மனித வதைகள் நடந்த சிறைச்சாலையாகும்.

11 செப்டம்பர் சம்பவத்திற்குப் பிறகு  பல இஸ்லாமியர்கள் அல்கைடாவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லி  அங்கு அடைக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெர்மனிய விரிவுரையாளர் அலி. ஆனால், திவீரவாதி என்றே அங்கு 8 வருடங்களைத் தனிமையில் கழிக்கிறார். அன்பான உரையாடல்கள் இல்லாத, கவனிப்புகள் இல்லாத பெண் வாடையே இல்லாத ஒரு பயங்கர நரகமாக மாறியிருக்கிறது அவரின் அறை. ஆனால், படத்தின் முதன்மை கதைப்பாத்திரமான ப்லோண்டி எனும் இளம் பெண் அவர்களின் வருகை, அலி என்பவனின் வாழ்க்கைக்குள் ஒரு கிளர்ச்சியை உருவாக்குகிறது. அது நெடுங்கால இறுக்கத்தின் உடைவாக மாறி அலி மீண்டும் ஒரு மனிதனாக மாறும் தருணம். படத்தில் மனித வதைகள் காட்டப்படவில்லை. அப்படியென்றால் குவாண்டனமோ மிகவும் அமைதியில்தான் இருந்தது போன்ற ஒரு தவறான எண்ணம் எழுகிறது.

கதையில் வரும் அலி, தான் குற்றவாளி அல்ல என்றே அந்த எட்டு வருடங்களும் கத்தி கதறி சொல்லி உச்சமான மன எழுச்சிக்குப் பலமுறை ஆளாகி தன்னை வருத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமாக வருகின்றான். கடைசிவரை அவன் உண்மையில் அல்கைடா தீவிரவாதியா அல்லது இல்லையா என்பது படத்தில் முதன்மையாக விவாதிக்கப்ப்டவில்லை. சில நேரங்களில் தன் மீதான குற்றத்தைச் சாடும் வகையில் அமெரிக்கா இராணுவத்தைப் பழிக்கின்றான். சில சமயங்களில் தான் குற்றவாளி அல்ல என முனகுகின்றான்.

ப்லோண்டி அங்கு வந்த நாட்களில் முதலில் அவளை அவமானப்படுத்துகிறான். தன் மலத்தை அள்ளி அவள் மீது வீசுகிறான். அவனுடைய அந்தச் செயல் முதலில் அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், பிறகு மெல்ல அவனை அவனது 8 வருடத் தனிமைக்குள் வைத்துப் புரிந்து கொள்கிறாள். அலி அவளிடம் சதா தனக்கு ஹாரி போட்டர் நாவல் வேண்டும் எனக் கேட்கிறான். குவாண்டனாமோவில் அந்த நாவல் முன்பு இருந்ததாக வாதிடுகிறான். ஆனால், அவளுக்கு அந்த நாவல் தட்டுப்படவில்லை. அதுவே அலிக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.


மிகவும் யதார்த்தமான சினிமாக இருக்கின்றது. அலியும் ப்லோண்டியும் பட்த்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அலியின் கதைப்பாத்திரம் அழுத்தமான நடிப்பு. ஆர்பாட்டம் இல்லாத கதையோடு பொருந்தி போகிற நடிப்பை வெளிக்கொணர்வதில் இயக்குநர் முக்கியத்துவம் பெறுகிறார்.

இறுதியில் அதுவரை ஓர் இராணுவ அதிகாரியாகவே இருக்க வேண்டும் என்கிற ப்லோண்டியின் உறுதி அலியின் முன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போகிறது. அவள் ஓர் அன்பானவளாக மாறுகிறாள். அலியை நேசிக்கிறாள். அவனது தனிமைக்குள்ளிருந்து அவனை வெளியே கொண்டு வர அவனுடன் விதிமுறைகளையும் மீறி உரையாடுகிறாள். பிறகு வழக்கம்போல ஆகஸ்ட் மாத்ததில் சில இராணுவத்தினர் இடம் மாற்றப்படுவார்கள். புதியவர்கள் அங்கு வருவார்கள். அவள் மாற்றலாகி வேறு இடம் போக வேண்டிய நிலை. இறுதி சந்திப்பில் அலி அவளிடம் சொல்கிறான் உனக்குப் பிறகு இங்கு வரப்போகும் அந்தப் புதியவர் இது போல என்னிடம் உரையாடுவார்களா எனத் தெரியவில்லை, இந்தத் தனிமை இனி பல வருடங்களுக்கு என்னை விட்டு நீங்காது என வருத்தத்துடன் கூறுகிறான்.

மறுநாள் அவள் பேருந்து ஏறி குவாண்டானமோவை விட்டுச் சென்று கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பதிலாகப் புதியதாக வந்த இராணுவ இளைஞன் புத்தகங்களை ஒரு தள்ளு வண்டியை வைத்து எடுத்து வருகிறான். அந்தப் புத்தக அடுக்கில் அலி தான் தேடிக்கொண்டிருந்த ஹாரி போட்டர் நாவலைப் பார்க்கிறான். அதனை வாங்கித் திறக்கின்றான். ப்லோண்டி அங்கிருந்து செல்வதற்கு முன்பாக அந்த நாவலைத் தேடி எப்படியோ கண்டடைந்து அதில் ‘அன்பான அலிக்கு – ப்லோண்டி’ என எழுதியிருக்கிறாள். எந்தப் பதற்றமும் இல்லாமல் தன் அறையில் அமர்ந்து அலி அந்த நாவலை வாசிக்கத் துவங்குகிறான். படம் நிறைவடைகிறது. என் கண்களில் வெகுநாட்களுக்குப் பின் கண்ணீர். அழ வைக்க வேண்டும் என்கிற எந்த முன்னேற்பாடுகளும் பரப்ப்பரப்பும் இன்றி படம் முடிகிற இடத்தில் நாம் அழுவோம். பட்த்தின் ஆழம் நம் மனத்தைத் தொட்டிருக்கும்.

மனித கூட்டம் எதிர்க்கொள்ளும் சிறை தனிமை என்பது எத்தனை ஈவிரக்கமற்றது என்கிற வலி மனத்தை அழுத்தும். நிச்சயம் பார்க்க வேண்டும் ஒரு படம். Camp- x-ray.


கே.பாலமுருகன்

No comments: