Friday, February 13, 2015

சிறுகதை: வண்ணத்துப்பூச்சியின் மரணத்தில் நடந்த கலவரம்


கீர்த்திகா வெகுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து அவள் அழப்போகிறாள் என அவள் முகம் முன்னெச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. கீர்த்திகாவைச் சுற்றி காஞ்சனா, துர்கா, ஏஞ்சலின், முகமாட் நின்றிருந்தார்கள்.

சரியாக 10 மணிக்குத்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுது ஓய்வு நேரம். வழக்கமாக மாணவர்கள் ஓடியாடி விளையாடும் நேரம் அது. வகுப்பில் எப்பொழுதும் பார்த்துக்கொள்ளும் அதே நண்பர்களைத்தான், ஓய்வு நேரத்தில் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். வகுப்பறை ஒரு திட்டவட்டமான சட்டங்களால் நிரம்பியவை. ஆகவே, ஓய்வு நேரம் தற்காலிகமான ஒரு விடுதலையைக் கொடுப்பதால் மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் எல்லையே இல்லை.

அப்படிப்பட்ட சமயத்தில்தான் முருகேசன் துரத்த கீர்த்திகா தரையில் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியைக் கவனிக்காமல் அதனை மிதித்தாள். எங்கு அடிப்பட்டது எனச் சரியாக ஊகிக்க முடியாமல் அவர்கள் எல்லோரும் தடுமாறிப் போய்விட்டார்கள். மஞ்சள் வர்ண வண்ணத்துப்பூச்சி சிறிது நேரம் தரையில் துடித்துக் கொண்டிருந்தது. கீர்த்திகா அதனைக் கையில் பிடித்து மேலே தூக்கி அருகாமையில் பார்த்தாள். மிக அழகான ஒரு சிற்றுயிர் அது. முதன் முதலாக ஒரு வண்ணத்துப் பூச்சியை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.

வண்ணத்துப்பூச்சியை வெறும் வர்ணம் என்றுத்தான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அதன் அழகான வர்ணத்தை மட்டுமே அதிகப்படி எல்லோரும் இரசிப்பார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒட்டுமொத்த அழகை அதன் சிறகுகளிலும் அதன் வர்ணத்திலும் கொண்டு போய் சேர்ப்பிப்பதே பொதுவான இரசனையாக இருக்கிறது. ஆனால், அதனையும் தாண்டி அதற்கொரு உடல் இருக்கிறது; மெல்லிய கை கால்கள் இருக்கின்றன; கண்கள் இருக்கின்றன என்பதை அன்றே அவள் ஆச்சர்யமாகக் கவனித்தாள்.

Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- திரைவிமர்சனம்

அஜித் சமீபமாக சினிமா கொண்டாட்டங்களை, சினிமா சார்ந்து கிடைக்கும் புகழ்களை, ஆர்ப்பாட்டங்களை விரும்பாத நடிகராகவே உலா வருகிறார். தன்னுடைய அனைத்து இரசிகர் மன்றங்களையும் களைக்கும்படி தைரியமாகச் சொன்னவர். சினிமா உலகம் அதுவும் கதாநாயகர்களின் கொண்டாட்டங்களை முன்னிறுத்தும் தமிழ்ச்சினிமாவில் இத்தகையதொரு முடிவை எடுப்பதற்கு ஓர் எளிமையான மனம் வேண்டும்.

அஜித் அவர்களை விஜய் இரசிகர்களின் மனநிலையிலிருந்து பார்ப்பதோ அல்லது விஜய்க்கு எதிரான மனநிலையிலிருந்து பார்ப்பதோ தவறாகும். நடிகர்கள் என்ன சினிமாவின் கடவுள்களா? அவர்கள் சினிமா தொழிலாளிகளே.

அதற்காக, அஜித் நடிக்கும் படங்களை அப்படியே போற்றிப்பாடவும் முடியாது. விமர்சனம் ஒட்டுமொத்த சினிமாவைக் குறித்து இல்லாவிட்டாலும் ‘என்னை அறிந்தால்’ கதையை விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. கௌதம் மேனனின் முந்தைய படங்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்றவற்றின் தாக்கம் இப்படத்திலும் இருக்கின்றன.

வேட்டையாடு விளையாடு படத்திலும் கதாநாயகி ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருப்பவராக அறிமுகமாகிறார். கமல் அவரை மறுமணம் செய்து கொள்கிறார். அதே போல என்னை அறிந்தால் படத்திலும் கதாநாயகி த்ரிஷாவும் ஓர் அம்மாவாகத் தோன்றுகிறார். ஆனால், இதில் அஜித் த்ரிஷாவைத் திருமணம் செய்வதற்குள் கொலை செய்யப்படுகிறார். வேட்டையாடு விளையாடு படத்திலும் கமல் தன் மனைவியை இழப்பதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது. இப்படத்திலும் அதே போல பின்னோக்கு உத்தியில் மனைவியாக ஆகவிருந்த த்ரிஷாவின் மரணம் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஒன்று,  அஜித் த்ரிஷாவின் மகள் மீது காட்டும் அன்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. மாற்றனின் மகள் மீது காட்டும் அன்பைப் பெருந்தன்மை போன்ற அடையாளத்துடன் காட்டாமல் கதையோடு இயல்பாகப் பயணிக்க வைத்திருக்கிறார்கள். நான் வாழ்க்கை கொடுத்து தியாகம் செய்கிறேன் என்ற பாவனையெல்லாம் இப்படத்தில் வழிந்து காட்டப்படவில்லை. அடுத்து அஜித்துக்கும் அவரின் அப்பாவாக வரும் நாசருக்குமான புரிதல். நீ யாரென்று தெரிந்துகொள்ள பயணம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். இது வாழ்க்கை குறித்த ஒரு மகத்தான புரிதல். உன்னை நீ அறிய நீதான் முற்பட வேண்டும். வேறு யாரும் உன்னை யாரென்று உன்னைவிட ஆழமாகச் சொல்லமாட்டார்கள். நாசர் வந்து போகும் காட்சிகள் அசலானவை.

திரைக்கதை

ஒரு திரைக்கதையின் வேலை என்ன? இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கதையின் மீது பற்பல சம்பவங்களையும் உட்சம்பவங்களையும் ஏற்றி கதையைப் படம் முழுக்க நகர்த்திச் செல்வதுதான் திரைக்கதை என சுஜாதா தன் திரைக்கதை நூலில் சொல்கிறார். அதனை விறுவிறுப்பாகக் கொண்டு போக வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பம் சார்ந்தவை. ஒரு நல்ல கதை மக்களை அடைய அதன் திரைக்கதை அமைப்பு வேகமும் ஆழமும் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். சில சமயங்களில் தொய்வான திரைக்கதை நல்ல கதையைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவதுண்டு. கதையில் எவ்வித சமரசமும் இல்லையென்றாலும் காலம் முழுவதும் பல இயக்குநர்கள் திரைக்கதையில் நிறைய சமரசம் செய்தே வருகிறார்கள். ஆனால், கௌதம் மேனன் அப்படிச் சமரசம் செய்பவராகத் தெரியவில்லை. கதையை நகர்த்த திரைக்கதையை மிகவும் இறுக்கமாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்;

வெகுஜன இரசிகர்களின் இரசனைக்குள் அடங்காமல் ‘என்னை அறிந்தால்’ படம் திணறுகிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித் போன்ற மாஸ் கதாநாயகர் இப்படத்தில் கௌதம் மேனனுக்குரிய திரைக்கதையோடு பொருந்தி போவது அவருடைய உழைப்பைக் காட்டுவதோடு அவருக்கு வித்தியாசமான தோற்றத்தையும் இருப்பையும் கொடுக்கிறது. ஆனால், அஜித்தின் வழக்கமான இரசிகர்கள் ஏமாந்து போகிறார்கள். ஒரு நடிகனைத் தன் தொழிலைத் தன் விருப்பத்திற்கேற்ப செய்யவிடுவதே அஜித் இரசிகர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியவை ஆகும். தங்களின் மாஸ் விருப்பங்களை அஜித் மீது திணிப்பதால் அவரும் வேறு வழியில்லாமல் குண்டு சட்டியிலேயே குதிரையோட்டி குதிரையோட்டி இரஜினியைப் போல ஆக வேண்டிய நிலை உருவாகிவிடும். இன்றும் இரஜினி போன்ற நல்ல நடிகர் ஏன் சிறு வயது பெண்ணைக் காதலிப்பதைப் போல நடிக்கிறார்? வெகுஜன இரசனை அவர் மீது செய்த வன்முறையின் உச்சப்பட்சம் அது. காலம் முழுவதும் நான் என் இரசனையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால் சினிமா எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளாது.

Thursday, February 5, 2015

சிறுகதை: அவசரம்

“அவசரம் ஒன்னும் இல்லையே?” எனக் கேட்டுக்கொண்டே சொற்களால் இரம்பம் போடும் இவனிடம் மாட்டி 2 நிமிடங்கள் ஆகின்றன. சிறுநீர் முட்டிக்கொண்டிருந்த கணம். அலுவலகத்திலேயே சிறுநீரை அடக்குவதில் எனக்குத்தான் திறமை அதிகம். ஆனால், இப்பொழுது அந்த எல்லையைத் தாண்டி 5 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.

சிறுநீரை அடக்குவதற்குத் தனியாக அறிவெல்லாம் தேவையில்லை. தம் கட்டுவதில் வல்லுனராக இருக்க வேண்டும். அவசரத்தை முகத்தில் பளிச்சென்று காட்டக்கூடாது. வழிந்து வரவழைத்துக் கொள்ள எப்பொழுதும் ஒரு பொய்யான நிதானம் தேவை. முட்டிக்கொண்டு வந்தாலும் கழிப்பறைக்குச் செல்ல முடிவெடுத்த பிறகு ஓடக்கூடாது. ஏதோ சாதாரணமாக எழுந்து நிதானமாக நடக்க வேண்டும். நீர் அருந்துவதில் கூடுதலான கஞ்சத்தனம் செய்தாக வேண்டும். அடுத்ததாகக் கழிப்பறைக்குப் பலமுறை எழுந்து சென்றுவிட்டு வருபவரைப் பார்த்துச் சிரிக்கவே கூடாது. அடுத்து நமக்கு அது நேரிடலாம்.

 “நீங்களே சொல்லுங்களேன் ப்ரோ…”

எனக்கு முன் நின்று கொண்டிருந்த அவன் தொடர்ந்து புகார்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஏற்பாடு மட்டுமே. நான் கேட்கிறேனா என்பதில்கூட அவனுக்கு அக்கறை இல்லை. என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்ற திட்டமும் அவனிடம் இல்லை. இதே நேரத்தில் வேறு யார் அவன் கண்ணில் பட்டிருந்தாலும் அவன் இதே போலத்தான் பேசியிருப்பான். டைக் கட்டிக்கொண்டு ஒரு கண்ணாடி போட்டிருந்தால் உலகத்திலேயே அவன் மட்டும்தான் புகார்களைப் பெறத் தகுதியானவனைப் போல எல்லாம் பொதுபுத்திகளும் நம்புகின்றன.

“ரெண்டாவது கல்யாணம் தப்பா? சொல்லுங்க ப்ரோ? நான் என்னா வச்சிக்கிட்டேவா இன்னொன்னு தேடிக்கிட்டேன்? யேன் இவுங்களாம் இப்படி இருக்காங்க?”

“ஐயோ! எதுமே தப்பில்லை. போதுமா? அப்பறம் பேசுறேன்”

“என்னா ப்ரோ? இப்படிப் பேசுறீங்க? நான் என்னா தப்பு பண்ணேன் சொல்லுங்க?”

“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை ப்ரோ. இப்ப நான் உடனே போகலைனா, அப்புறம் உண்மைலே இங்கத் தப்பாயிடும்”

அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு விட்டால் போதுமென அவனிடமிருந்து விடைப்பெற்றேன். அவன் முன்னே கொஞ்சம் நேரம் யாராவது நிற்க வேண்டும். அதற்கு நான் ஆளில்லை என்று தப்பித்தேன். இன்னுமொரு 30 அடியில் கழிப்பறை. உடனே அடக்கிக் கொண்டிருந்த சிறுநீரை வெளியேற்ற வேண்டும். வழக்கமாக குளிரூட்டி அறையில் 10 மணி நேரம் வேலை செய்பவர்களின் அவதியும் அவசரமும் வெளியில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அதுவும் மழைக்காலம் என்றால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லும் அவதியும் அலுப்பும் சொல்ல முடியாதவை. வெய்யில் படாத வாழ்க்கை. எப்பொழுதும் சில்லென்ற உடல். ஏறக்குறைய தோல் மறுத்துப் போய்விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ 'சூடு சுரணை இல்லாமல் தோல் தடிச்சிப் போச்சி' என எங்களைப் போன்றவர்கள் சிலர் திட்டித் தீர்க்கின்றனர்.

Sunday, January 18, 2015

சிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014


குழு உருவாக்கம்: மே 2014

நேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்

உறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்

குழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய நாற்காலியும்


குழு உறுப்பினர்களின் சுயசரிதை

பிரபா

வகுப்பிலேயே இவன் தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.

சிவா
கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால் அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.

குமார்
இவன் ஒரு அனுபவமிக்க தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும் சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால் எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என யாருக்குமே தெரியாது.

முகுந்தனின் நாற்காலி கதையும்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்செயல்திட்டமும்


இந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்மையக்கொள்கையாகும்.

சிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி உதைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.

Friday, January 9, 2015

சிறுகதை: தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது


வெகுநேரம் முனியாண்டி வழியிலேயே விழுந்து கிடந்தார். வழக்கமாக அவர் மெதுநடை போகும் பாதைத்தான். எல்லாம் காலைகளிலும் அவர் உற்சாகமாக உலா வருவார். அநேகமாக அங்கு வரும் அனைத்துச் சீனர்களுக்கும் முனியாண்டியை நன்றாகத் தெரியும். இன்று எல்லோரையும்விட சீக்கிரமே வந்து மயங்கி விழுந்துவிட்டார்.

இலேசாக விடியத் துவங்கிய நேரம். வானம் இருட்டிக் கொண்டிருந்ததால் ஆட்கள் சிலர் வந்து வானத்தையும் திடலையும் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். சிலர் குடையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மழைக்காற்று அவர்களுக்கு அசௌகரிகத்தை வழங்கியிருக்கலாம். யாரும் நடைப்பாதைக்கு வரவில்லை.

50 வயது நிரம்பிய முனியாண்டி அந்தப் பழகிப்போன வழியிலேயே மூர்ச்சையாகிக் கிடந்தார். சட்டென பார்ப்பவர்களுக்கு அவர் அங்கு விழுந்து கிடப்பது தெரிய வாய்ப்பில்லை. மிகப்பெரிய மரங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பூச்செடி தொட்டிகளும் பாதைக்கு அருகில் அடர்த்தியாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் மழைப் பெய்யத் துவங்கியதும் இருந்த கொஞ்ச ஆட்களும் களைந்து வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

நாகா லீலீட் கம்பத்தில் முனியாண்டியை லோரிக்காரர் என்றால் பலருக்கும் தெரியும். 1970களிலேயே கோலாலம்பூருக்கு நடை போய் அனுபவம் உடைய ஒரே ஆளாக அறியப்பட்டவர். தெம்பான ஆனால் எப்பொழுதும் வியர்த்த நெடி வீசும் உடல். வாரத்திற்கு மூன்றுமுறையாவது கோலாலம்பூர் நடைக்குப் போய்விடுவார். முதலில் வாடகைக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சொந்தமாகச் சிறிய லாரி வாங்கி ஓட்டத் துவங்கினர். அதன் பிறகுத்தான் முனியாண்டிக்குக் கலை கட்டியது.

இருந்த ஒரு பையனும் கல்யாணம் செய்து சிங்கப்பூருக்குப் போய்விட்டான். இங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைக்கும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திருந்துவிட்டு மனைவியுடன் சிங்கப்பூருக்குப் போனவன், பல வருடங்களுக்கு முனியாண்டியைத் திரும்பிப் பார்க்க வரவில்லை.

பிறகென்ன? மனைவி செத்தவன் தனிக்கட்டைதான். முனியாண்டியே சமைப்பார் ; முனியாண்டியே சாப்பிடுவார்;முனியாண்டியே சிரிப்பார்; முனியாண்டியே அழுவார். நாகாலீலீட் சாலையோரக் கடைகளுக்கு எப்பொழுதாவது போய் தனியாக அமர்ந்துவிட்டு ஆட்கள் குறைந்ததும்ரொட்டி சானாய் ஒன்னுஎன்பார். அக்கடையில் அவர் பேசும் முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் அதுதான். அதற்கடுத்து அவர் எதையும் பேசியதில்லை. மீண்டும் வீட்டுக்குப் போய்விடுவார்.