Saturday, May 30, 2009

ஷோபா சக்தியுடன் ஒரு நேர்காணல்- விடுதலை புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு காரணம்


ஷோபா சக்தி: ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.
அவரின் கட்டுரைகளை வாசிக்க அவரது வலைத்தளத்தை இங்கே பார்க்கலாம். http://www.satiyakadatasi.com/பலர் என்னிடம் ஷோபா சக்தியைப் பற்றி சொன்னபோது, ஏன் அவர் விடுதலை புலிகளுக்கு எதிராகப் பேசுகிறார் என்று கேட்டார்கள். அதற்கான பதில் இந்தக் கேள்வி – பதிலில் கிடைக்கலாம்.


1) உயிருள்ள தடுப்புச் சுவர்களாக மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.-ஷோபா

கே.பாலமுருகன்: புலிகள் தனி ஈழத்துக்கான போராட்டத்தில் சொந்த மக்களையே கொள்கிறார்கள் என்பது எப்படி உண்மையென புரிந்து கோள்ள முடியும்? அவை வெறும் செய்தியாகக் கூட இருக்கலாமா? அப்படி உண்மையென்றால் ஈழப் போராட்டமே பொய்யாகிவிடுமே?

ஷோபா சக்தி: புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பிப்போகாமல் தடுத்து வைத்திருப்பதையும் அய்.நா. அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களோடு நிரூபித்திருகின்றன. ஈழத்தின் உண்மையான செய்திகளை அறிவதற்கு புலிகளின் ஊடகங்களையும் குமுதம், விகடன் போன்ற வணிக இதழ்களையும் மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச ஊடகங்களையும் தயவு செய்து கவனியுங்கள். நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்.

விடுதலைப் புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு முதன்மைக்காரணம். அவர்கள் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திநின்ற சகோதர விடுதலை இயக்கங்களை அழித்ததிலிருந்து இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியது, வடபகுதியில்

பரம்பரை பரம்பரையாக வாழந்த இஸ்லாமியர்களைக் கொள்ளையிட்டு விரட்டியது, ராஜிவ்காந்தி கொலை, அப்பாவிச் சிங்கள, தமிழ் மக்கள் மீதான
கொலைகள் போன்ற எண்ணற்ற தவறுகளால் ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக ஒரு அரசியல் போராட்டத்தை வெறும் இராணுவத் தந்திரங்களாகச் சீரழித்தார்கள். புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ்மக்கள் வட்டி செலுத்துகிறார்கள். நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.


2) மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு.-ஷோபா

கே.பாலமுருகன்: வரலாற்றில் அதிகாரங்களுக்கு எப்பொழுதும் இரு தலைகள் இருந்தன என்று நினைக்கிறீர்களா? அதிகாரத்தின் உக்கிர கொலை பசியினை வளர்த்துவிட்டது எதுவாக இருக்ககூடும்?

ஷோபா சக்தி:இருதலைகளல்ல அதிகாத்திற்குப் பல தலைகளும் அவற்றிற்கு எண்ணற்ற முகமூடிகளுமுள்ளன. ஒவ்வொரு அரசியல் அதிகாரப் போராட்டங்களுக்குப் பின்னும் வர்க்கம் பண்பாடு பொருளியல் இனவாதம் சாதியம் என எண்ணற்ற ஊடும்பாவுமான சிக்கலான கண்ணிகள் மறைந்துள்ளன. எனவே அதிகாரம் கொலைப் பசி என்ற எளிமையான உச்சரிப்புகளால் நாம் இந்த வரலாற்றுச் சிக்கலகளை அடையாளப்படுத்தவோ கடந்துவிடவோ முடியாது.

3) யுத்தமுனையில் எவ்வளவு மக்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற சரியான தகவல் கூட நம்மிடமில்லை. -ஷோபா

கே.பாலமுருகன்: ஊடகங்களின் பசப்பலா? அல்லது போலியான அரசு சார்புடைய இருடடிப்பா? அப்படியென்றால் உண்மையான யுத்த தகவலைத் தெரிந்து கொள்ள மக்கள் எதை நாட வேண்டும்?

ஷோபா சக்தி: அங்கே களத்திலேயிரக்கும் முதன்மைச் சக்திகளான இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத அயோக்கியர்கள், பொய்யர்கள். எத்தனைப் பொதுமக்களைக் கொன்றாவது விடுதலைப் புலிகளைத் துடைத்தெறிய வேண்டுமென்பது அரசின் நோக்கம். அரசின் இந்த நோக்கத்திற்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற சர்வதேசக் கொள்ளைக்கார அரசுகளும் உடந்தை. மறுபுறத்தில் மக்களின் பிணங்களை வைத்தே இந்த சர்வதேசக் கொள்ளைக்காரர்களிடம் அனுதாபத்தைப் பெற்றுவிடலாம் என்பது புலிகளின் ஊடகங்களின் நோக்கம். எனவே இருதரப்புகளுமே உண்மையான களநிலவரங்களைச் சொல்வதில்லை. பிபிஸி போன்ற சர்வதேச ஊடகங்களின் தகவல்கள் ஓரளவு சரியாயிருப்பினும் ஒவ்வொரு சர்வதேச ஊடகமும் தான் சார்ந்த அரசின் நலன்களில் நின்றே செய்திகளை வெளியிடுகின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மக்களைப் பற்றி எவன் கவலைப்பட்டான்!


4) நான் இப்பொழுது எதாவது ஒரு இயக்கம் சார்ந்தவனோ கட்சி சார்ந்தவனோ கிடையாது.-ஷோபா

கே.பாலமுருகன்
: இயக்கம் அவசியமே கிடையாது படைப்பாளனுக்கு இயக்கம் அவனது ஆளுமையை குறைக்கும் என நினைக்கிறீர்களா?

ஷோபா சக்தி: அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லைங்க. ஒரு படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு பிரசைக்கும் அரசியல் ஓர்மையும் இயக்கம் சார்ந்த செயற்பாடுகளும் தேவை என எப்போதும் சொல்லி வருபவன் நான்.
ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன. வாய்ப்புள்ள சூழல் வரும்போது நான் என்னை இயக்கச் செயற்பாடுகளில் முழுமையாக இணைத்துக்கொள்வேன். இப்போது கூட அய்ரோப்பாவில் சிறு அளவில் குழுக்களாக அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறோம். மார்க்ஸிம் கார்க்கி தொடக்கம் ஜெயகாந்தனிலிருந்து இன்றைய குட்டி ரேவதி ஆதவன் தீட்சண்யாவரை இயக்கச் செயற்பாட்டாளர்கள்தான். இயக்கம் படைப்பாளியின் ஆளுமையைக் குறைக்கும் என்பதெல்லாம் சமூக உணர்வற்ற கோழைகளின் கருத்து.

நன்றி: அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மே 2009

3 comments:

சோமி said...

//ஆனால் இன்றைய சூழலில் என்னைப் போன்றவர்கள் ஈழத்துக்குப் போய் அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதவாறு புலிகளின் துப்பாக்கிகளும் அரசின் சிறைகளும் எம்மைத் தடுத்து வைத்துள்ளன.//

இப்போது புலிகளின் துப்பாகிகள் இல்லை..ஓ அரச அடக்கு முறை இருக்கோ.. அட போக்கெட்ட பயலுகளா அப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு என்ன மயிருக்கடா அங்க போகப் போறிங்க..உங்க அரசியல் இயக்க மண்ணாங்கட்டிகள அமைக்கப் போறீங்க? நல்லாத்தான் விடுறாங்கய்யா...

Tamilvanan said...

இவனது கருத்து''ஒரு தாய் தன் வீட்டு குழந்தயை கொன்று விருந்துக்கு சமைத்தால்'' என்று சொல்வது போல் இருக்கிறது. சொந்த மக்களை கொன்று ஈழத்தை அமைத்திட வேண்டிய அவசியமி்ல்லை என்பது ஒரு முட்டாளுக்கு கூட புரியுமே. உயிருக்கு பயந்து அன்னிய நாட்டில் குடியேறி இப்பொழுது கருத்து கதை கதைக்கிறார்கள்.

//நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்//
ரொம்ப நம்பிட்டோம். எங்கள் நாட்டிலும் ஈழத்திலிருந்து வந்த மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கூட புலிகள் மீது இதுவரை ஒரு குற்றசாட்டை கூட சுமத்தவில்லை. ஏன் ? தன்மான உணர்வு உள்ள மக்கள் பொய் பேசுவதில்லை

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

எரிகிற வீட்டில் எல்லோரும் பிடுங்கிப்போகிறர்கள். ஷோபாசக்தி
என்ன விதிவிலக்கா? ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் புலியெதிர்ப்பை மட்டுமே படம்
காட்டி முக்கியமானவர்களுக்கு இன்று காலும் ஓடவில்லை கையும் ஓடவில்லை.ஏனென்றால் அடுத்தநாவலின் கருவிற்குத்தான் புலியில்லையே?? தமிழர்களின் எதிர்காலத்திற்கும்,அவர்களின் நம்பகமான வாழ்விற்கும் இவர்கள் எந்தவொரு தீர்வையும், வேலைத்திட்டங்களையும் கொண்டவர்களாயிருக்கவில்லை.இவர் சொல்கிற புலிகள் எப்படி மக்களைச் சிதைத்தார்களோ அவர்களைவிட ஒருபடி மேலே போய் அவர்களை விமர்சித்தே இவர்கள் பணம் பண்ணியவர்கள். சமூக அந்தஸ்த்தை உயர்த்தியவர்கள்.
//அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்றவற்றைச் சர்வதேசக் கொள்ளைக்கார அரசுகள்//
என்று வர்ணித்து வர்ணமும், வார்த்தைஜாலமும் விடுகின்றஷோபாக்கள் எல்லோருமே
தங்கள், தங்கள் பெண்டுபிள்ளைகளுடனும், சுற்றம் பரிவாரங்களுடனும் இந்தச் சர்வதேசகொள்ளைக்கார அரசுகளிடம் சுகபோகம் அனுபவிப்பவர்கள்.இவர்கள் உபதேசம் எல்லாமே ஊருக்குத்தான். இவர்களுக்கல்ல. வன்னியில் அடுத்த வேளை வாழ்வறியாது திகைத்து நிற்கும் மனிதரை நோக்கியதல்ல இவர்கள் பார்வை. புலியில்லாமல் பெரிதும் வருந்தப்போவது புலியைச் சாட்டியே படம் காட்டி வயிறு வளர்த்த இவர்களைப் போன்றவர்கள் தான்.//மார்க்ஸிம் கார்க்கி தொடக்கம் ஜெயகாந்தனிலிருந்து இன்றைய குட்டி ரேவதி ஆதவன் தீட்சண்யாவரை இயக்கச் செயற்பாட்டாளர்கள்தான்.// இதில் சொல்லப்பட்டோருடன் எனக்கு கருத்து வேறுபாடில்லை. இப்படிப்பார்த்தால் கார்ல்மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின்,என்று உங்கள் இயக்கச் செயற்பாட்டாளர்களின் பட்டியல் நீள வேண்டுமே???