Sunday, January 18, 2015

சிறுகதை: முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு - 2014


குழு உருவாக்கம்: மே 2014

நேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு முன்

உறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்

குழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய நாற்காலியும்


குழு உறுப்பினர்களின் சுயசரிதை

பிரபா

வகுப்பிலேயே இவன் தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.

சிவா
கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால் அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.

குமார்
இவன் ஒரு அனுபவமிக்க தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும் சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால் எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என யாருக்குமே தெரியாது.

முகுந்தனின் நாற்காலி கதையும்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்செயல்திட்டமும்


இந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான்முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்மையக்கொள்கையாகும்.

சிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி உதைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.

Friday, January 9, 2015

சிறுகதை: தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது


வெகுநேரம் முனியாண்டி வழியிலேயே விழுந்து கிடந்தார். வழக்கமாக அவர் மெதுநடை போகும் பாதைத்தான். எல்லாம் காலைகளிலும் அவர் உற்சாகமாக உலா வருவார். அநேகமாக அங்கு வரும் அனைத்துச் சீனர்களுக்கும் முனியாண்டியை நன்றாகத் தெரியும். இன்று எல்லோரையும்விட சீக்கிரமே வந்து மயங்கி விழுந்துவிட்டார்.

இலேசாக விடியத் துவங்கிய நேரம். வானம் இருட்டிக் கொண்டிருந்ததால் ஆட்கள் சிலர் வந்து வானத்தையும் திடலையும் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். சிலர் குடையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மழைக்காற்று அவர்களுக்கு அசௌகரிகத்தை வழங்கியிருக்கலாம். யாரும் நடைப்பாதைக்கு வரவில்லை.

50 வயது நிரம்பிய முனியாண்டி அந்தப் பழகிப்போன வழியிலேயே மூர்ச்சையாகிக் கிடந்தார். சட்டென பார்ப்பவர்களுக்கு அவர் அங்கு விழுந்து கிடப்பது தெரிய வாய்ப்பில்லை. மிகப்பெரிய மரங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பூச்செடி தொட்டிகளும் பாதைக்கு அருகில் அடர்த்தியாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் மழைப் பெய்யத் துவங்கியதும் இருந்த கொஞ்ச ஆட்களும் களைந்து வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

நாகா லீலீட் கம்பத்தில் முனியாண்டியை லோரிக்காரர் என்றால் பலருக்கும் தெரியும். 1970களிலேயே கோலாலம்பூருக்கு நடை போய் அனுபவம் உடைய ஒரே ஆளாக அறியப்பட்டவர். தெம்பான ஆனால் எப்பொழுதும் வியர்த்த நெடி வீசும் உடல். வாரத்திற்கு மூன்றுமுறையாவது கோலாலம்பூர் நடைக்குப் போய்விடுவார். முதலில் வாடகைக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சொந்தமாகச் சிறிய லாரி வாங்கி ஓட்டத் துவங்கினர். அதன் பிறகுத்தான் முனியாண்டிக்குக் கலை கட்டியது.

இருந்த ஒரு பையனும் கல்யாணம் செய்து சிங்கப்பூருக்குப் போய்விட்டான். இங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைக்கும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திருந்துவிட்டு மனைவியுடன் சிங்கப்பூருக்குப் போனவன், பல வருடங்களுக்கு முனியாண்டியைத் திரும்பிப் பார்க்க வரவில்லை.

பிறகென்ன? மனைவி செத்தவன் தனிக்கட்டைதான். முனியாண்டியே சமைப்பார் ; முனியாண்டியே சாப்பிடுவார்;முனியாண்டியே சிரிப்பார்; முனியாண்டியே அழுவார். நாகாலீலீட் சாலையோரக் கடைகளுக்கு எப்பொழுதாவது போய் தனியாக அமர்ந்துவிட்டு ஆட்கள் குறைந்ததும்ரொட்டி சானாய் ஒன்னுஎன்பார். அக்கடையில் அவர் பேசும் முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் அதுதான். அதற்கடுத்து அவர் எதையும் பேசியதில்லை. மீண்டும் வீட்டுக்குப் போய்விடுவார்.

Monday, January 5, 2015

மர்மத் தொடர் Part 1 : மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்


பதிவுப் புத்தகத்தை எடுத்து நீட்டிய பர்மா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணின் கண்கள் உறக்கமில்லாமல் கறுத்துப் போயிருந்தன. கண்மணி குமாரை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பதிவு புத்தகத்தைத் திறந்தாள்.

‘குமரேசன் – 21.11.2013
மாலா     - 21.11.2013
முருகன் & சுகுமாறி 17.09.2013
சியோங் லீங் – 09.08.2013….

என இங்கு வந்து தங்கியவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. கண்மணிக்குச் சட்டென சந்தேகம் தட்டியது. அந்தப் பர்மா பணிப்பெண்ணைக் கவனித்தாள். ஒரு பழைய தகறக் குவளையில் குட்டையான ஒரு பெண்சில், அதனுடன் கட்டி வைக்கப்பட்ட ஒரு நீலப் பேனா. சுவரில் இந்த மலையின் பழைய படம் தொங்கவிடப்பட்டிருந்தது.

“குமார்…”
“என்னம்மா?”
“ஒரு வருசம் இங்க யாரும் வந்து தங்கல…இதைப் பாருங்க”

குமார் அந்தப் பதிவு புத்தகத்தை வாங்கிக் கவனித்தான். கடைசியாக வந்து தங்கியவனின் பெயர் குமரேசன், அதுவும் ஒரு வருடம் ஆகிறது. குமார் அந்தப் பர்மா பெண்ணிடம் மலாய் மொழியில் விசாரித்தான். அவளும் தட்டுத்தடுமாறியே பேசினாள்.

“சரிமா…விடு. அவங்க ஆட்கள் மொத்தமா குழுவா வந்து தங்குவாங்க அதனாலே குறிப்புப் புத்தகத்துலே எழுதறது இல்லையாம்”
“உண்மையாவா?”
“இது ரொம்ப பிரசித்திப் பெற்ற மலை…என்ன கவலை?”
“மனசுக்குச் சரியா படல…அதான் ரொம்ப யோசிக்கறன்…”
“ரொம்ப நாள் பிரிவுக்குப் பிறகு இப்பத்தான் சேர்ந்துருக்கோம் கண்மணி. இந்த்த் தனிமை வேறு எங்கயும் கிடைக்காது. மலையிலெ அடிக்கற குளிர், இதமான காற்று, ஆளே இல்லாத அமைதி. இதெல்லாம் எனக்கு வேணும் கண்மணி”

Wednesday, December 31, 2014

எனது 2014ஆம் ஆண்டு : ஒரு மீள்பார்வை

எப்பொழுதும் போல அல்லாமல் இந்த 2014ஆம் ஆண்டு எனக்கு மிக முக்கியமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது. சிலரைப் புதிதாகப் பெற்றேன்; சிலரை இழந்தேன். சில இனிமையான அனுபவங்கள்; சில கசப்பான அனுபவங்கள். 

தேவைப்படும்போது பாராட்டிக்கொண்டும் தேவைப்படாதபோது தூற்றிக்கொண்டும் திரியும் உலகத்திடம் நன்றியுணர்ச்சியோடு இல்லாமல் போனதை நினைத்து மகிழ்ச்சியே கொள்கிறேன். இப்பொழுது ஒரு புத்துணர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி விரைகிறேன். எந்த அழுத்தமும் இல்லை, எந்த நெருக்குதலும் இல்லை. எனக்காக நான் சிந்திக்கிறேன், சொந்த கால் மண்ணில் ஆழ வேரூன்றி நிற்பதன் மூலம் தரும் கதகதப்பிற்கு நிகராக வேறென்ன சுதந்திரம் இருக்கிறது என்பதைப் போன்று தோன்றுகிறது.

எப்பொழுதுமே ஒவ்வொரு வருடமும் பல மன வருத்தங்களையும் சண்டைகளையும் சந்தித்து சந்தித்து மனம் அடைந்த பக்குவம் எனக்குக் கிடைத்த கொடை என்றே சொல்ல வேண்டும். மனிதர்களைப் புரிந்துகொள்ளும் தருணம் மகத்தானது. குறிப்பாக அடுத்தவன் முதுகில் தெரியும் வடுக்களைக் கண்டு அங்கலாய்க்கும் உலகம் கொடூரமானதுதான். எனக்கு உலகின் பொதுபுத்தி பற்றி கவலையில்லை. என் எழுத்தின் ஊடாக அந்தப் பொதுபுத்தியைக் கொஞ்சம் கீறிப்பார்க்கவே முயல்கிறேன்.
நான் ஒழுக்கமாக வாழ்ந்தேன்; வாழ்கிறேன் என்ற எந்தப் போலித்தனமும் அறிவிப்பும் என்னிடம் இல்லை. நான் நானாக எனது குறைகளுடன் என் பலவீனங்களுடன் எனது இயல்புடன், சிலருக்குப் பிடித்ததைப் போலவும் பலருக்குப் பிடிக்காததைப் போலவும் வாழவே செய்கிறேன். உங்களுக்கு நடக்க, சிரிக்க, செயல்பட இந்த உலகில் இடம் இருப்பதைப் போல எனக்கும் உண்டு.

எல்லோரும் புகழும்படி வாழ வேண்டும் அல்லது எல்லோரும் இகழும்படி வாழ வேண்டும் என்கிற எந்தக் கொள்கையும் இல்லாமல் வாழ்ந்தோம், செம்மையாக வாழ்ந்தோம் என்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நம் வாழ்வு கலைக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்திற்கும் ஏதாவது ஒரு துரும்பை அசைத்த வகையிலான ஒரு மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என உணர்கிறேன்.

 ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் கடந்த பாதையை நினைவுக்கூரும்போது மனம் சட்டென ஒரு கணமான மூட்டையைக் கீழே இறக்கி வைப்பது போன்றே தோன்றுகிறது.

இந்த மீள்பார்வையை, கடந்து வந்த பாதையைச் சடங்கிற்காக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 
  1. அப்பாவின் மரணம்

என்னை அதிகம் பாதித்த சம்பவம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்பாவின் திடீர் மரணம் ஆகும். 3 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியிருந்துவிட்டு இறந்துவிட்டார். அப்பா இறக்கும்வரை சுமார் 2 மணி நேரம் உடன் இருந்தேன். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொன்னதும் உள்ளே சென்று பார்த்தேன். கண்களில் நீர் ஒழுகியிருந்தது. எத்தனையோ மணி நேரம் சுய நினைவில்லாமல் இருந்தவர் கடைசியாக மரணிக்கும் முன் ஒரு கணம் நினைவு வந்து வலியால் போராடியிருக்கக்கூடும். விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் அழுதிருக்கிறார். அந்த மரணத்தைவிட அவர் கடைசியாக விட்ட கண்ணீர் மனத்தை உலுக்கியது. அப்பா எல்லாமுமான மனிதர். அந்த இழப்பிற்கு நிகரான வேறு எந்த இழப்பையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரே போய்விட்ட பிறகு வேறு யார் என்னை நீங்கிப் போனால் என்ன என்பதைப் போல இருந்தது.

2. செந்தமிழ் பயிற்றி உருவாக்கம்

கடந்த வருடம் கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட தருணம் எனக்கு உவப்பாக இருந்தது. தமிழ் மொழி சார்ந்து தீவிரமாக இயங்கும் பல இளைஞர்களுடன் ஒன்றிணைந்தேன். ஒரு குடும்பமாக அனைவரும் நெருக்கமாயினர். ஐயா திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எங்கள் அனைவரைரின் உழைப்பையும் கோரும் வகையில் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ‘செந்தமிழ் பயிற்றி’ எனும் யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டி நூல் ஒன்றினை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்தார். ஏறக்குறைய இரண்டு மாதங்களில் பலமுறை சந்தித்து அந்த நூல் தொடர்பான படைப்புகளைத் தயாரித்தோம். இனிமையான நினைவுகளுடன் கூடிய உழைப்பு அது.

3. சிறுவர் நாவல்

மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் எனது மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் (தமிழ் தொடர்நாவல் என்பதன் மூலம் முதல் முறை என்கிற கவனத்தைப் பெறுகிறது) இவ்வருடத்தின் மிகப்பெரிய முயற்சியாகக் கருதுகிறேன். பல மாணவர்கள் படித்துவிட்டுத் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்தையும் ஆர்வத்தையும் தெரிவித்துக் கொண்டனர். சிலர் அடுத்த பாகம் இரண்டு நாவலுக்காக்க் காத்திருக்கிறோம் எனக் கூறினர். இந்தச் சிறுவர் நாவலை விற்க எனக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விற்பனையாளர் இல்லாமல் இந்தச் சிறுவர் மர்ம நாவலைச் சொந்த முயற்சியிலேயே நாடேங்கிலும் விற்பனை செய்தேன். அதற்கு உறுத்துணையாக இருந்தவர்கள் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிப் பாடக்குழு உறுப்பினர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு என் அன்பு. மேலும் இந்தச் சிறுவர் நாவல் வெளியீட்டுக்கு வந்த 300க்கும் மேற்பட்டோருக்கும் என் அன்பும் நன்றியும். மண்டமபே நிறைந்து உட்கார இடமில்லாமல் நின்றிருந்தவர்களும் உண்டு. என் மனமும் நிறைந்தே இருந்தது.