விரைவில் ஏப்ரல் மாத வெளியீடாக அநங்கம் ஏழாவது இலக்கிய இதழ் வெளியீடப்படவிருக்கிறது. படைப்புகளை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 31ஆம் திகதி மார்ச் மாதத்திற்குள் அனுப்பி வைக்கவும்.
ஏப்ரல் மாத அநங்கத்தில் இதுவரை வெளியீடத் திட்டமிட்டுள்ள படைப்புகள் பின்வருமாறு:
சிறுகதைகள்:
1. உதிரம் உறைந்து போனது
கங்காதுரை - தலைநகர்
2. நண்டு - கமலாதேவி சிங்கப்பூர்
3. மனுசன் - சித்ரா ரமேஸ்
கட்டுரை/பத்தி:
1. அது ஒரு பெரிய கதைப்பா- ஏ.தேவராஜன்
2. அநங்கம் இதழ் 6-இல் வெளிவந்த சிறுகதைகளின் வாசக எதிர்வினை
ப.மணிஜெகதீசன்
3. வரண்ட கதைக்களமும் மாதிரி இலக்கியமும் - கே.பாலமுருகன்
4. பாண்டித்துரை- சிங்கப்பூர்
சிறப்பு நேர்காணல்: எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா
சிங்கப்பூரில் செழியுடன் சந்திப்பு - கே.பாலமுருகன்
கேள்வி பதில்: இவர்களுடன் சில நிமிடங்கள்:
மா.சண்முகசிவா - சை.பீர்முகமது
மலேசிய இலக்கிய கலை எழுச்சியற்றவையா?- ஒரு விவாதம்
கவிதைகள்:
பா.அ.சிவம்
ரமேஸ்.டே
தினேசுவரி
வாணிஜெயம்
ந.பச்சைபாலன்
பிரமாஸ்திரன்
செல்வராஜ் ஜெகதீசன்
மேலும் சில படைப்புகளுடன் தீவிர இலக்கியத்திற்கான வலுவான பதிவை நோக்கி முன்னெடுக்கும் இலக்கிய இதழைப் பெற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளுங்கள்.
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com
Saturday, March 20, 2010
Friday, March 19, 2010
சிறுகதை: நடுநிசியில் தொடரும் உரையாடல்
“எத்தனை நாளா மாமா. . . வீட்டுக்கு வர்றது இல்லெ?”
மௌனம். பொருள்களின் மீதான அசைவுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
“ஏண்டா. . மாமா வர்றது இல்லெதானே?”
கீழேயுள்ள மேசையின் மேற்பரப்பு கண்ணாடியிலானது. ஆகையால் அதிலிருந்து எதை நகர்த்தினாலும் அதன் ஓசை பெருக்கக்கூடியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மேசையிலிருந்து ஒரு பேனாவை நகர்த்திப் பார்ப்பது போன்ற ஒலி எழும்பியது. சிவா எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தால் அப்படிச் செய்வான்.
“உன்னத்தாண்டா, கேக்கறேன். . மாமா யேன் வர்றது இல்லெ?”
“அதை யேன் கேக்கறெ. . உன் வேலையெ பாரு”
அவனது குரலில் திடீர் தடுமாற்றம் அல்லது கோபம் தெரிந்தது. எங்கள் வீட்டில் படிக்கட்டின் ஓரத்தில் ஓர் அறை இருக்கிறது. எதற்காக இந்த வீட்டின் அமைப்பு மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என நாங்கள் தீவிரமாகச் சிந்தித்தது கிடையாது. இருப்பதை வெறுமனே ஏற்றுக் கொள்வதில் இருக்கும் சோம்பேறித்தனம் மிகவும் விருப்பமானதாக அமைந்துவிட்டது. அந்த அறைக்காக மட்டுமே தனியாகப் பலகை படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். இடை இடையே பெரிய சந்து. தவறுதலாக கால் இடறினாலும் முழு உடலும் அந்தச் சந்தில் விழுந்து கீழே சரிந்துவிடக்கூடும். எப்பொழுதும் என்னுடைய அறையில் இருந்துகொண்டுத்தான் சிவாவும் நானும் பேசிக் கொள்வோம். சிவாவின் அறை கீழ்மாடியில் வலது புறத்தின் மூலையில் அமைந்துள்ளது. பெரும்பாலான வேளைகளில் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு வானொலி கேட்டுக் கொண்டிருப்பது அவனது பழக்கம்.
“ஏண்டா. . இவ்ள கோவம்? சும்மா கேட்டாகூட ஏசுறே?”
படிக்கட்டு முடிவடையும் இடத்திற்கு மேலாக எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கு காற்றில் இலேசாக ஆடியது. ஒளி படிக்கட்டின் சரிவிலிருந்து விலகி தரைக்கு ஓடி மீண்டும் திரும்பும். சிவா கையை மேசையிலிருந்து எடுக்கவில்லை. மேலும் ஒரு பொருளை நகர்த்திப் பார்த்திருக்கக்கூடும். கீச்ச்ச்ச் என கண்ணாடி தரையிலிருந்து எழுந்த ஒலி பற்களைக் கூசியது. மணி 12க்கு மேல் ஆகியிருந்தது. வெளியில் இருளுடன் யார் யாரோ உரையாடிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. பக்கத்து வீட்டிலிருக்கும் சீனக் கிழவன் வெளிவரந்தாவில் நாற்காலியைப் போட்டு இருளில் அமர்ந்திருப்பான். அவனாகவே பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்படியே உறங்கிவிடுவான். அவனது பொழுதுகள் எப்பொழுதும் வரட்சிமிக்கவை. அவனைத் தவிர அவனது உலகில் வேறு யாரும் இருப்பதில்லை. எதிரில் இருப்பவர்களைத் தொலைத்துவிடுவதன் அலட்சியத்திலிருந்து அவனது நாட்களைத் துவங்கி, சுயமாக அவனுக்குள் நிகழும் உரையாடல் பற்றி அக்கறை இல்லாதவரை அர்த்தமற்ற இருப்பு வாடிக்கையாகத் தொடரும். சில சமயங்களில் அதுவும் இருளில் என் அறையின் சன்னலைத் திறந்து அவன் இருப்பதைப் பார்க்க நேரும்போது ஏதோ ஒருவகை அச்சமும் நடுக்கமும் பற்றிக் கொள்கின்றன.
“ஏண்டா சிவா. . இந்தக் கிழவனுக்கு என்ன வந்துச்சி? உனக்கு தெரியுமா?”
“அவனைப் பத்தி ஏன் இப்பெ? ஊருல உள்ளவனுங்க பத்தி கவலைப்பட்டுத்தான் நான் இப்டி இருக்கேன்”
சிவா வேறுவகையான தொனியைக் கொண்டிருந்தான். எப்பொழுதும் சிரிப்பூட்டும் வசனங்களும் சொற்களும் மட்டும்தான் அவனிடம் கைவசம் இருக்கும். இப்பொழுது ஆச்சர்யமாக விரக்தியும் பதற்றமும் கலந்த தொனியில் பேசுகிறான். கீழே இறங்கி அவனைப் பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. ஆனாலும் இப்படி அறையில் மங்கிய வெளிச்சத்தில் சுவர்களில் நெளியும் வெறுமைக்கு நடுவே புத்தகம் படித்துக் கொண்டிருப்பதன் மூலம் எனக்குக் கிடைக்கும் ஆயாசத்தை இழக்க மனமில்லாததால் அப்படியே கிடந்தேன். கைகளிலும் கால்களிலும் சோர்வு படிந்திருந்தது.
“வீட்டுப் பக்கத்துலெ இருக்கும் ஒரு மனுசாளு பத்தி பேசாமெ என்னடா வாழ்க்கெ? சும்மா. . ஏன் இப்பெ கோபமா பேசறே?”
இந்த வீட்டின் அமைப்பு குறித்து எனக்குத் திடீர் சந்தேகமும் பிரமிப்பும் எழுந்தன. மேல்மாடி பெரியதாக உருவாக்க வேண்டும் என்று தொடங்கிய வேலைப்பாடுகள் வெற்றிப்பெறாததால் பாதியில் தேங்கிவிட்டதன் மிச்சம்தான் இந்த அறை எனத் தோன்றியது. கீழ்த்தரைக்கும் மேல்மாடிக்கும் 8 அடிவரைத்தான் இருக்கும். மேலிருந்து எங்கிருந்து பேசினாலும் சொற்கள் மிக நேர்த்தியாகத் தரை இறங்கி கீழுள்ள எல்லா இடங்களுக்கும் சென்றடைந்துவிடும். சிலசமயங்களில் எனக்குள்ளாக நான் முனகிக் கொள்ளும் சிலவார்த்தைகள்கூட கீழுள்ள சிவாவிற்குக் கேட்டுவிடுவதுண்டு. சொற்கள் என்ன ஆச்சர்யமாய் தன் மீதான இரகசியங்களைப் பகிங்கரமாகத் தெரிவிக்கன்றன.
“என்னடா சத்தமெ காணம்? எங்காவது போய்ட்டு வரலாமா? கடுப்பா இருக்கு”
“இல்ல வேணாம். .யேண்டா கமலன். . என்கூட உண்மையா பழகுறியா இல்லெ அவுஸ்மேட்னு வெறும் உறவா?”
அவனுக்கு எப்பொழுதும் பிறர் மீது நம்பிக்கை இருந்தது கிடையாது. தனது கேள்விகளின் மூலம் அவனை நெருங்க நினைக்கும் நமது பிம்பங்களை உடைத்து ஊனமாக்கிவிடுவான். வெறும் முனகலோடு அவனிடமிருந்து திரும்ப நேரிடும். அவனது வேலையிடத்தில்கூட நெருங்கிய நண்பர்கள் கிடையாது. எப்பொழுதும் அவர்களைப் பற்றி இரவு முழுக்க குறைப்பட்டுக் கொண்டே இருப்பான். சிலவேளைகளில் அவனது நாவு நீண்டு ஒரு பெரும் இரவாக மாறி எல்லோரையும் விழுங்கத் துவங்கிவிடும். அப்படி இன்னமும் அவனது பொழுதுகளிலிருந்து தொலையாமல் எதையோ கெட்டியாகப் பிடித்துத் தப்பித்துக் கொண்டது நான் மட்டுமே.
“உனக்கு எப்பவும் சந்தேகம்தானெ. உன் மேல முதல்ல உனக்கு ஏதாவது பிடிமானம் இருக்கா? சும்மா உளறாதெ. உன் மேல எனக்கு நட்பும் பாசமும் இருக்கு. பொய் இல்லெ. போதுமா?”
மீண்டும் மௌனத்திற்குத் திரும்பியிருந்தான். சிவா ஈப்போவில் ஏதோ ஒரு சீனக் குக்கிராமத்திகிருந்து வந்தவன். அவனது பின்புலத்தைப் பற்றி அவன் அவ்வளவாகக் கூறியது கிடையாது. கேட்கும்போதெல்லாம் அதனைக் கடப்பதற்கு ஏதாவது காரணம் வைத்திருந்தான். அவனிடம் மிகப் பாதுகாப்பாய் மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது யானை உண்டியல் மட்டுமே. பெரியதாக உப்பிக் கொண்டு எப்பொழுதும் அவனுடைய சில்லறைகளை உறிஞ்சி தனது வயிற்றில் சேமித்துக் கொள்ளும். “ஏண்டா உண்டியல்னு? கேட்டால், ஒருவேளை அவனது பணம் தீர்ந்து பற்றாகுறை ஏற்பட்டால் என்னிடம் கை ஏந்தும் நிலைமை வந்தால் அதைத் தவிர்ப்பதற்காக என வேடிக்கையாகச் சொல்வான்.
“டேய் சிவா. . உங்க மாமா என்ன குடிக்காரரா? கோவிச்சிக்காதெ. அன்னிக்கு சொன்ன அவருனாலெ வீட்டுலெ ஏதோ பிரச்சனைன்னு?”
“அப்படில்லாம் ஒன்னுமில்லெ. இப்பெ எல்லாம் சரியாச்சி”
“ம்ம்ம்ம். . நல்லது”
எனக்கும் சிவாவிற்கும் இருக்கும் மிக உன்னதமான இடைவேளியே இப்படி இருவரும் முகத்திற்கு முகம் சந்தித்துக் கொள்ளாமல் உரையாடிக் கொள்வதுதான். ஒருவேளை உறக்கம் தட்டி அவன் அறைக்குள் சென்றுவிட்டாலும் அல்லது நான் பேசிக் கொண்டே உறங்கிவிட்டாலும், மறுநாள் எப்பொழுது எந்த இடத்தில் எங்களது உரையாடல் துண்டிக்கப்பட்டிருக்கும் என அதிசயமாய் தோன்றும். யார் உதிர்த்த சொல் கடைசியாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்துவிட்டு சன்னல் வழியாகப் பறந்து போயிருக்கக்கூடும் என விந்தையாக இருக்கும்.
“நீ எப்பெ தூங்கனே” எனக் கேட்டால் இருவரிடமும் பதில் இருக்காது. தூரத்து உரையாடலில் எங்களுக்கு விருப்பம் இருந்ததற்குக் காரணமும் இதுவாகத்தான் இருக்கும். சடங்கு முறையிலான எந்த ஒத்திகையும் இல்லாமல் விருப்பத்திற்கு எப்பொழுதும் துண்டித்துக் கொள்ளவும் திடீரென எங்கிருந்தோ இணைத்துக் கொள்ளவும் இந்த உரையாடல் வசதியாக அமைந்துவிட்டிருந்தது.
“டே. . சிவா! தூங்கிட்டியா?”
“இல்லெ. . யேன்”
“ஒன்னுமில்ல. .”
உறக்கம் தட்டுவது போல இருந்தது. சோம்பலான உடலை மேலும் தளர்த்தி கையிலிருந்த புத்தகத்தை தலைமாட்டிலுள்ள மேசையில் வைத்தேன். 30 நிமிடத்திற்கு முன் இலேசாக நான் உறங்கியது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது முன்வாசல் கதவைச் சாத்திவிட்டு யாரோ ஏதோ பேசியவாறு வெளியேறியதும் நினைவில் இருந்தது.
“சிவா. . மொத வீட்டுக்கு யார் வந்தா?”
மௌனம். கைத்தொலைப்பேசி சத்தமில்லாமல் வெறும் ஒளியை மட்டும் காட்டி அலறியது.
“ஹலோ!”
“டே. . சிவா பேசறன். .எங்கயும் தலை வலி மாத்திரை கிடைக்கலடா. . அதான் பெரிய டவுனுக்கு வந்திருக்கென், எங்காவது 24 மணிநேர கடை இருக்கும், பாத்துட்டு வரேன், இன்னும் கொஞ்சம் லேட்டா ஆகும்டா மச்சான். நீ தூங்கறதுன்னா தூங்கு”
கைத்தொலைப்பேசியை வைத்ததும் கீழேயிருந்து மீண்டும் அதே குரல்.
“யாருடா போன்லெ?”
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா
Tuesday, March 16, 2010
திரை விமர்சனம்: கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் : பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)
சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில் நல்ல தரமான முறையில் கலை சார்ந்த வாழ்வை முன்வைப்பதில், இத்தாலிய சினிமா, ஈரானிய சினிமா மற்றும் பிரசில் சினிமா முக்கியத்துவம் நிரம்பியதாகும். ஆனால் இம்முறை ஓர் உருகுவே சினிமா தனது கலாச்சார வெளியின் அடையாளத்தை வலுவாக இந்தப் படத்தின் மூலம் பதித்திருக்கிறது என்றே கூறலாம்.
கடவுள் என்கிற சொல் ஒவ்வொரு மதத்திலும் அதிகாரத்துவம் நிரம்பியதாகவும் வலிமை மிகுந்ததாகவும் கருணை மிகுந்ததாகவும் கற்பிக்கப்பட்டிருப்பது யதார்த்தமான செயல்பாடாகும். கடவுளின் பிரதிநிதியாகப் போற்றப்படும் உலக கிறித்துவத்தின் மதக் குருவான இரண்டாம் பாப் ஆண்டவர் (பாவ்ல்) அவர்கள் உருகுவேயில் இருக்கும் மிலோ என்கிற நகருக்கு வருவதையொட்டி மிலோவிலுள்ள கீழ்த்தட்டு மக்கள் ஒரு கடவுளின் வருகைக்கு நிகராக அவரைப் பல நம்பிக்கைகளுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் வரவேற்பதற்காகத் தயாராகும் விதத்தைப் படத்தின் இறுதி காட்சிகளில் மிகவும் உன்னதமாகப் படமாக்கியிருக்கிரார் இயக்குனர். இது உண்மையில் உருகுவேயில் பாப் ஆண்டவரின் வருகையின்போது அந்த மிலோ என்கிற பிரசிலின் எல்லையையொட்டி இருக்கும் சிறுநகரில் 1988-இல் நிகழ்ந்த உண்மை சம்பத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மிலோ நகரத்தின் எளிமையான மக்கள் பாப் ஆண்டவர் வருகையின் மூலம் தமது நகரமே புனிதமடையப் போகிறது என்கிற புரிதலில், எல்லோரும் தனித்தனியாக அவரின் வருகை தினத்தன்று வியாபாரம் செய்து தங்களின் நிலைமையை உயர்த்திக் கொள்ள திட்டமிடுகிறார்கள். அதன்படி எல்லோரும் சிறுவியாபாரிகளாக முற்படுவது படத்தில் காட்டப்படும் அற்புதமான முயற்சிகள். ஒர் ஒடுக்கப்பட்ட சமூகம் மதம் சார்ந்து தன்னை எப்படி வழக்கத்திற்கு எதிராக வடிவமைத்து கொள்கிறது என்பதன் யதார்த்தம்தான் அத்தகையை காட்சிகள். ஆனால் பாப் ஆண்டவர் வருகை தினத்தில் மிலோ நகரத்தின் அனைத்து சிறுவியாபாரிகளும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்படுகிறார்கள். புறக்கணிப்பின் எல்லையில் மிகவும் மோசமாக நஷ்டம் அடையும் அவர்கள் பாப் ஆண்டவரையும் அவரின் வருகையையும் அந்தச் சமூகத்தின் துயரை மேலும் அடர்த்தியாக்கும் ஒரு விளைவாகவே பார்க்கிறார்கள்.
பேத்தோ (இப்படத்தின் மையக் கதைப்பாத்திரம்) தனது குடும்பத்தின் வறுமையைச் சரிக்கட்டுவதில் எப்பொழுதும் ஒரு போராட்டமான வாழ்வின் முன் தன்னை ஒப்படைக்கக்கூடியவன். பாப் ஆண்டவர் வருகையை முன்னிட்டு “பாப் ஆண்டவரின் கழிப்பறை” எனும் பெயரிட்ட ஒரு கழிப்பறையைத் தன் வீட்டின் அருகில் கட்டுவதற்குத் திட்டமிடுகிறான். அன்றைய தினத்தில் மிலோ நகருக்குள் வரும் பிரசியலியன்ஸ் தனது பாப் ஆண்டவரின் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள், அதன் மூலம் பணம் சம்பாதித்து முன்னேறிவிடலாம் என்கிற ஒரு மிலோ சமூகத்தின் ஏழையின் மாபெரும் கனவின் முன் அவன் அடையும் தோல்வி மிகவும் வலி நிரம்பியது. ஒடுக்கப்பட்டவர்களின் தோல்வி என்பது ஒரு வரம் போல அல்லது கடவுளைப் போல அவர்களின் வாழ்விற்குள் திணிக்கப்படுகிறது என்பதன் உண்மையை மிகவும் துணிச்சலாகப் பதியும் முக்கியமான கதைக்களம் இப்படம்.
இப்படத்தில் இன்னொரு ஆளுமை, பிரசில் நாட்டின் எல்லையில் இருக்கும் மிலோ நகர மக்களின் வாழ்க்கை முறையும் அன்றாட போராட்டமும் ஒரு கலையாகச் சொல்லப்படிருப்பதாகும். மிலோ நகரத்திலுள்ள செலவு கடைகளுக்கு குறைந்த விலையில் பொருள்களைப் பிரசில் நாட்டின் எல்லை பகுதியிலிருந்து திருட்டுத்தனமாகச் சைக்கிளில் கொண்டு வரும் பல குடும்பத் தலைவர்களுள் பேத்தோவும் ஒருவன். தினமும் மிலோ கடை வியாபரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பலர் சைக்கிளிலும் மோட்டாரிலும் பிரசிலுக்குச் சென்று பொருள்களைக் கடத்தி உள்ளே கொண்டு வந்து பிழைப்பு நடத்துவதை ஓர் அழகான சைக்கிள் பயணமாக இயக்குனர் காட்டியிருப்பது கலை அம்சம் மிகுந்த மதிப்பீடுகளாகும்.
படத்தின் தொடக்கக் காட்சியே பேத்தோ பிரசிலிலிருந்து பொருள்களைச் சைக்கிளில் வைத்துக் கொண்டு வேகமாக எல்லையைக்(பிரசில் – உருகுவே) கடப்பதைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். சிறுபான்மை மக்களின் போராட்டமான வாழ்வை இந்தக் கொடுமையான சைக்கிள் பயணத்தின் மூலம் ஒரு குறியீடாகப் பாவித்துக் காட்டியிருக்கிறார்கள். மிலோ நகரத்தைச் சேர்ந்த பல குடும்பத் தலைவர்கள் நெருக்கடியான வாழ்வின் முன், அறம் ஒழுக்கம் போன்ற சமூக மீறல்களையும் கடந்து போதை பொருள், மது பானங்கள் போன்றவற்றையும் கடத்த வேண்டிய சூழலில் நிர்பந்திக்கப்பட்டிருப்பதையும் கதையின் ஓட்டத்தில் புரிந்துகொள்ளலாம்.
ஒடுக்கப்பட்டவர்களின் மீதான அதிகாரக் கட்டமைப்பையும் இப்படத்தில் பல இடங்களில் இயக்குனர் காட்டியிருக்கிறார். குறிப்பாக பொருள்களை எல்லையிலிருந்து திருட்டுத்தனமாகக் கொண்டு வருபவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் எல்லை போலிஸ் அதிகாரி. அவனுக்கு வேண்டியதை அவர்களிடமிருந்து தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பறித்துக் கொள்கிறான். வரலாற்றில் தொடங்கி இன்றும் நடைமுறையில் அதிகாரத்தின் இருப்பு எளிமையானவர்களை ஒடுக்குவதன் மூலமே வளமடைந்து வருவதையும், அவர்களைச் சுரண்டுவதன் மூலமே பிழைப்பு நடத்தி வருவதையும் இந்தப் படத்தில் ஒரு மாபெரும் துரத்தலுக்கு நடுவே உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அதிகாரி எல்லையின் பரிசோதனை பகுதியின் கவனத்திலிருந்து தப்பித்து ஓடும் சைக்கிள்காரர்களை தனது காரில் துரத்துவதும், அவர்கள் அவனுக்கு மிரண்டு ஓடுவதையும் ஒரு நீளமான அகன்ற திறந்த புல்வெளியில் படமாக்கியிருப்பார்கள். அதிகாரமும் அதிராகத்திற்குக் கட்டுப்படுதலின் கொடுமையும் அந்தத் திறந்தவெளிப் போல எங்கும் பரவலாக வெளிப்படையாக எந்தப் பாதுகாப்புமின்றி நிகழக்கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பிரசில் எல்லையிலிருந்து மீண்டும் உருகுவேவிற்கு சைக்கிளில் பயணிப்பது என்பது வெகு சிரமமாக இருப்பதை உணரும் பேத்தோ ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிவிட எண்ணம் கொள்கிறான். அவர்களைப் போல எல்லையை வெகு இயல்பாகவும் வேகமாகவும் கடக்கும் மோட்டாரோட்டிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனது இலட்சியம் குறித்த எண்ணங்கள் உச்சத்தை அடைகின்றன. மோட்டாரோட்டிகள் வசதியும் வேகமும் இருப்பதால் சைக்கிளோட்டிகளைவிட அதிகமாகச் சம்பாரிக்கிறார்கள், அதனால் தானும் ஒரு மோட்டார் வாங்கி அதிகம் சம்பாரிக்க வேண்டும் நிறைய பயணங்கள் கிடைத்தால் மேலும் புகழுக்குரியவனாக வாழலாம் என்கிற ஆசையும் அவனை ஆக்கிரமிக்கிறது. மோட்டாரை வாங்குவதற்குரிய பணத்தைப் பெறுவதற்காக மேலும் கூடுதலான சைக்கிள் பயணங்களுக்காக ஒப்புக் கொள்கிறான் பேத்தோ.
அந்தச் சமயத்தில்தான் மிலோ நகருக்கு பாப் ஆண்டவர் வரவிருப்பதாகத் தகவல்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள பொதுமக்களின் கவனம் இப்பொழுது உருகுவேயின் மிலோ நகரத்தின் மீது குவிக்கப்படுகிறது எனற எண்ணத்தில் பாப் ஆண்டவர் கழிப்பறைக் கட்டுவதற்கு முடிவெடுத்து அதற்காகத் தினம் அல்லல்படுகிறான் பேத்தோ. கடைசியில் அன்று பாப் ஆண்டவர் வரும் தினமும் நெருங்குகிறது. காலை 10 மணிக்கெல்லாம் கழிப்பறையை இயங்க வைக்க வேண்டும் என்கிற திட்டம். மக்கள் கூட்டம் திரள் திரளாக அதிகரிக்கத் துவங்குகிறது. ஆனால் பேத்தோ பெருநகரத்திலிருந்து கழிப்பறை தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறான். வழியில் அவனது சைக்கிளில் சங்கிலி அறுந்துவிடவே, அதைச் சரி செய்துவிட்டு மீண்டும் உற்சாகத்துடன் பயணிக்கிறான். பாப் ஆண்டவர் பொதுமக்களிடம் பேசுவது தொலைக்காட்சியில் நேரடியாகக் காட்டிக் கொண்டிருக்க, இயங்காமல் இருக்கும் கழிப்பறையின் அருகில் பேத்தோவின் மனைவியும் ஒரு மகளும் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் அந்த அதிகாரி பேத்தோவின் சைக்கிளை வழிமறித்து அவனுக்கு மேலும் பிரச்சனையை எழுப்புகிறான். அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு போய்விடுகிறான். பாப் ஆண்டவர் மேலும் பேசிக் கொண்டிருக்கிறார், பேத்தோ கழிவுத் தொட்டியைத் தூக்கிக் கொண்டு தன் இல்லத்தை நோக்கி வேகமாக ஓடத் துவங்குகிறான். இது ஒரு முரணான புனைவு என்றே சொல்லலாம். பாப் ஆண்டவரைப் பார்க்க வந்த கூட்டத்தின் நடுவே கழிவுத் தொட்டியை உயரமாகப் பிடித்து தூக்கிக் கொண்டு பேத்தோ ஓடி வருவதைத் தொலைக்காட்சியின் வழியாக அவனது மகளும் மனைவியும் பார்க்கும் காட்சி நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
பேத்தோ வந்தடைந்ததும் கழிப்பறையில் தொட்டியைப் பொறுத்திவிட்டு அதைத் திறந்து வைக்கிறார்கள். பிறகு பேத்தோ ஒவ்வொருவருவரிடமாகச் சென்று தனது “பாப் ஆண்டவரின் கழிப்பறையை” பயன்படுத்துங்கள் எனக் கெஞ்சுகிறான். எல்லோரும் கடந்து செல்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். ஆகக் கடைசியில் பாப் ஆண்டவரும் பொதுமக்களும் அங்கிருந்து சென்றுவிட்ட பிறகு பேத்தோ சிரமப்பட்டு அவனது கனவுகளால் உருவாக்கிய கழிப்பறை அப்படியே கிடக்கிறது. இதுவரை அப்பாவிடமிருந்து எப்பொழுதும் முரண்பட்டே இருந்த அவளது மகள், அன்றைய போராட்டத்தின் மூலம் அப்பாவின் நிசமான இருப்பையும் உழைப்பையும் முழுமையாக உணர்ந்துவிடுவது அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகளுக்கிடையான அன்பையும் புரிதலையும் காட்டுகிறது.
இந்தப் படத்தின் கழிவுத் தொட்டி கடைசி காட்சியில் ஒரு பகிங்கரமான குறியீடாகப் பாவிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அங்குக் கூடியிருக்கும் அனைவரும் மதத்தையும் மதப் போதனைகளையும் உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் பேத்தோ தனது அன்றாட வாழ்வின் நெருக்கடியிலிருந்து விடுதலை பெறும் இலட்சியத்துடன் ஒரு கழிவுத் தொட்டியை உயரமாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாமல் ஓடுகிறான். கழிவுத் தொட்டி என்பது ஒரு அசிங்கத்திற்குரிய பொருளாகப் பாவிக்கப்படுபது வழக்கமானது ஆனால் இந்தப் படத்தில் அதை ஒரு மனிதனின் உழைப்பின் முன் புனித பிம்பமாக மாற்றியிருப்பது கலை உணர்வு எத்துனை முரணுக்குள்ளும் ஒரு கலையைச் சென்றடையும் எனப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
Sunday, March 14, 2010
சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்
கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.
உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.
நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.
உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.
உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.
நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.
உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.
எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.
சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.
உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.
நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.
உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.
உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.
நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.
உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.
எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.
சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
Saturday, March 13, 2010
மலேசிய- கடாரம் மாநிலத்தின் ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடமும் பூமி பூசையும்
இதற்கு முன் பல வருடங்களாக குரூண் சைம் டேர்பியின்(sime derby) நிலத்தில் இயங்கி வந்த ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளி அடுத்த வருடம் முதல் குரூணிலுள்ள கம்போங் பஞ்சாங் நிலப்பகுதியில் பில்லியன் செலவில் புதிய கட்டத்துடன் செயல்படவிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் இப்பள்ளி அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளியாக அங்கீகரிக்கப்படுவதோடு மேலும் பாலர் பள்ளி வகுப்பும் பள்ளியின் கீழான அங்கமாகச் செயல்படும்.
பீடோங் பட்டணத்திலிருந்து 10 நிமிடத்திற்குள் இந்தப் புதிய பள்ளி இருக்கும் இடத்திற்கு வந்தடைந்துவிடுவதோடு குரூண் பட்டணத்தின் வரவேற்பறையாக இந்த இடம் என அடையாளப்படுத்தலாம். இன்று காலை மணி 10 முதல் 12.00 வரை புதிய பள்ளி கட்டப்படவிருக்கும் நிலத்தில் பூமி பூசை நடத்தப்பட்டது. குரூண் பொதுமக்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களும், பத்திரிக்கை நிறுபர்களும், ம.இ.கா கிளைத்தலைவர்களும், சமூக அமைப்பின் செயலவை உறுப்பினர்களும் வந்து கலந்து கொண்டனர்.
இந்த ஆர்வார்ட் புதிய பள்ளிக்கான கட்டடம் விவகாரம் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தையில் இருந்தது. கல்வி அமைச்சைச் சார்ந்தவர்கள், ம.இ.கா, பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடலின் விளைவாக இந்தத் திட்டம் இப்பொழுது வெற்றியை அடைந்துள்ளது என ஆர்வார்ட் பிரிவு 3 தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் திரு.மா.முனியாண்டி அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
இந்த மாதம் தொடங்கி எதிர்வரும் நவம்பர் மாதம்வரை கட்டுமான பணிகள் தொடரும் என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டனர். அடுத்த வருடம் முதல் முழுமையான வசதிகளுடன் ஒரு தோட்டத்தமிழ்ப்பள்ளி திகழப்போவதை முன்வைத்து, ஆர்வார்ட் பள்ளிக்கான நிலத்தை வழங்கிய சைம் டேர்பி நிறுவனத்திற்கும், இந்த நிலப்பிரச்சனை குறித்து பலவகைகளில் உதவி கரங்கள் நீட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பள்ளியின் ஆசிரியர் என்ற வகையிலும் ஆர்வார்ட் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் என்கிற வகையிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
Monday, March 1, 2010
மலேசியக் குட்டிக் கதைகளும் கதைச் சுருக்கங்களும்
கடந்த வருடம் அநங்கம் ஆகஸ்ட் இதழில் பிரசுரமான எனது, “ மலேசிய இலக்கியப் போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்” என்கிற கட்டுரையை வாசித்துவிட்டு மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு பேராசிரியர் சபாவதி அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்து கோபத்துடன் அந்தக் கட்டுரையில் நான் வைத்திருந்த எளிமையான சில கருத்துகளை மறுத்து விளக்கம் கொடுக்கத் துவங்கினார். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய முயற்சிகளைக் கேலி செய்யாதீர்கள் எனவும் மலேசியத் தமிழ்ப்பத்திரிக்கைகள் இந்த நாட்டின் இலக்கிய முன்னேற்றத்திற்குப் பலவகைகளில் பங்காற்றியிருப்பதாகவும் அழுத்தமாகக் கூறினார். ஆனால் ஒரு நல்ல தரமான கதையை மலேசிய இலக்கியக் களத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ அவருடைய திறனாய்வு தவறிவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது எனது பார்வை.
பேராசிரியர் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்துகள் உண்டு. முக்கியமாக தங்களின் எந்தவொரு கருத்திற்கும் எல்லோரும் உடன்பட்டு செவி சாய்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது எந்தவொரு இயக்கம் அல்லது அமைப்பு குறித்து அல்லது அவர்களின் நடவடிக்கை குறித்து யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கக்கூடாது எனச் சொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஓர் அபத்தமான உள்முரண். கருத்து சுதந்திரத்தை அதன் நுனியிலே வேறறுக்க முயல்வது அல்லது தனது கல்வி சார்ந்த தகுதியின் அடிப்படையிலான சொல்லாடல்களின் மூலம் மறுப்புத் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றி பலவீனத்தை ஏற்றுக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நழுவது ஆரோக்கியம் கிடையாது.
அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் இலக்கியத்திற்காகவும் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவும் இலக்கிய களம் அமைத்துக் கொடுத்தது உண்மையான வரலாறு. அதை நான் மறுக்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக பவுன் பரிசுத் திட்டம், கதை வகுப்புகள், புதுக்கவிதை கருத்தரங்குகள். ஆனால் தற்போதைய சூழலில் இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளில் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் எப்படி இயங்குகிறது என்பதுதான் எனது கண்ணோட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் மலேசிய இலக்கிய உலகில் சிறுகதை குறித்து தீவிரமான(மிதமாகவும்) விமர்சன மொழியைக் கொண்டவர் மூத்த எழுத்தாளர்களில் ரெ.கார்த்திகேசு அவர்களைச் சொல்லலாம். அடுத்ததாக? கதைச் சுருக்கங்களை வரிசைக்கிரமமாகத் தந்துவிட்டு அதை விமர்சனம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? குறைந்தது ஒரு கதையை வெறுமனே கொண்டாடுவதையும் பாராட்டுவதையும் நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு இன்றைய சிறுகதை மொழி அடைந்திருக்கும் மாற்றுத் தலம் குறித்தும் கதைத் தேர்வில் கருத் தேர்வில் எழுத்தாளர் தவறவிட்டிருக்கும் கவனம், அல்லது இந்தக் கருவை வேறு எப்படியெல்லாம் புதிய மதிப்பீடுகளுடன் ஆக்கக்கரமான உத்திகளில் கையாண்டுள்ளார்கள் என்கிற விரிவான பார்வையாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளில் விமர்சனம் என்கிற பெயரில் வெறும் கதைச் சுருக்கங்களை எழுதிவிட்டு (அதுவும் ஒரு கதைக்கு ஒரு பத்தி) நானும் ஒரு விமர்சகன் எனத் தப்பித்துக் கொள்கிறார்கள்.
மேலும் இப்பொழுதெல்லாம் “குட்டிக் கதைகள்” என்கிற வடிவமும் பரவலாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகின்றன. ஆனந்த விகடனின் வரும் ஒரு பக்கக் கதை இங்கேயும் மிகவும் நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தெளிவாகுகிறது. சிறுகதை ஒரு பக்கங்களிளும் முடிவடையலாம் அல்லது 20 பக்கங்களைத் தாண்டியும் நீளலாம் என ஒரு சுதந்திரமான இறக்குமதி வரையறை சிறுகதைக்கு உண்டு. முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் “நறுக்குக் கதை” வந்துவிடவும் வாய்ப்புண்டு. அல்லது கடி ஜோக்குகளை, சின்ன கதை என்று மாற்றி பிரயோகிக்கும் அபாயமும் இருக்க வாய்ப்புண்டு.
விமர்சனங்கள் நிகழவில்லை என்பதற்கும் ஏன் விமர்சனங்கள் தீவிரமாக புதுப்பிக்கப்பட்ட பார்வையுடனும் கண்ணோட்டங்களுடனும் அக்கறை சார்ந்ததாக இல்லை எனக் கேட்பதற்குமிடையே உள்ள வித்தியாத்தை வெறும் முரணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது ஆயிரத்தில் இதுவும் ஒரு வெறும் குற்றச்சாட்டு எனப் புரிந்துகொள்ளப்படுமா என்பதே சந்தேகம்.
குறிப்பு: மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய இந்தாண்டு பேரவைக் கதைகளில் என்ன நடந்தது? அதன் விமர்சனம் எப்படி இருந்தது குறித்து அடுத்த கட்டுரையில் பதிவாகும். மேலும் எழுத்தாளர் நா.கல்யாணி மணியம் கதையில் நிகழ்ந்திருக்கும் திருட்டுக் குறித்தும் பதிவாகும்)
(இனி எப்பொழுதும் பேரவைச் சிறுகதை போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என கடந்தாண்டே எடுக்கப்பட்ட முடிவினால் - இதில் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய சிறுகதை கவிதை போட்டி- 2009/10 மட்டும் விதிவிலக்காக ஆகிவிட்டது காரணம் மலேசிய இலக்கியப் போட்டிகளின் தரம் குறித்து எனக்கு ஏற்பட்ட சலிப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்யும் போது, தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் போட்டிக்குக் கதையையும் கவிதைகளையும் அனுப்பி இரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தக் குற்றத்திற்காக மேடையேறி அரசியல் "தலை"களிடமெல்லாம் கைக்குழுக்கும் மிகப்பெரிய தர்ம சங்கடம் இனி நிகழாது. இத்துடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு- தேசிய பல்கலைக்கழக ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து இந்தாண்டு பெற்ற பண முடிப்புகளில் பாதியை கெடா செமெலிங் அன்பு இல்லத்தில் நடத்தப்பட்ட போட்டி விளையாட்டிற்கும், மீதி பாதியைப் பள்ளியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி வாரம் இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் செலவழித்துவிட்டதில் சிறு மகிழ்ச்சி. குறிப்பாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதிய மாணவர்களுக்கான சீனமொழி சிறுகதை மொழிப்பெயர்ப்பு புத்தகமான “மீன்குளம்” சிலவற்றையும் அன்பாளிப்பாக அவர்களைச் சென்றடைந்ததில், இனி நமது பாரம்பரிய நீதி இலக்கிய கதைக்களத்திலிருந்து விடுபட்டு புதிய வாசிப்பனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.)
ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா
Saturday, February 27, 2010
இசையின் விரல்கள் - பண்டிதர் ரவி சங்கர்
பாரத ரத்னா பண்டிதர் ரவி சங்கர் (Ravi Shankar) (பிறப்பு-ஏப்ரல் 7,1920), உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இவருக்கு 1999ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.கிழக்கு- மேற்கு நாடுகளில் இந்திய இசையின் மரபான ஆளுமையாகப் போற்றப்படுபவர் பண்டிதர் ரவி சங்கர்.
தனது "Shankar Family & Friends" and "Festival of India" எனப்படும் ஆல்பங்களின் மூலம் தனது இசை மகத்துவத்தை உலகம் முழுவதும் அதீதமாகத் தெரியப்படுத்தினார்.
60களின் இடைக்காலக்கட்டத்தில் "Monterey Pop Festival, Concert for Bangla Desh, and The Woodstock Festival" எனப்படும் இசை நிகழ்வுகளின் மூலம் மறக்க முடியாத இளைஞர்களின் எழுச்சியை மையமாகக் கொண்டு தனது குரலை எழுப்பியவர்.
உலகலாவிய நிலையில் அவர் பெற்ற விருதுகள்:
the Bharat Ratna, the Padma Vibhushan, Desikottam,Padma Bhushan of 1967, the Music Council UNESCO award 1975, the Magsaysay Award from Manila, two Grammy's, the Fukuoka grand Prize from Japan, the Polar Music Prize of 1998, the Crystal award from Davos, with the title 'Global Ambassador' to name some.
"உணர்வுகளை தனிதனியான
உன்னதமாக அறுக்கும்
இசைக் கோர்வையென
எழும்பும்
அதிசயத்தின் வரிகள். . .
நதியின் சலசலப்பை
இசைக் கம்பிகளில்
வழியவிடும் நுட்பமும்
பறவைகள் போடும் தாளம் போலவும்
இயற்கைக்கும் உயிருக்கும் மத்தியிலான
சித்தாரின் துடிப்புகள். . .
உமது மீட்டுதல்
முடிவுறும் தருணங்களில்
சித்தார் கம்பிகளோடு
எமது இசை இரசனையும்
அடர்த்தியாகி எனக்குள்
நிரம்புகிறது. . .
இடைவிடாமல் உமது
இசை ஒலியில்
எத்துனை மனங்கள்
சேர்ந்து ஒலிக்கக்கூடும்?
மாபெரும் ஒரு காவியத்தின்
மிக நீண்ட வரலாற்றின்
ஒலியை எழுப்பும்
உமது கரங்கள்
கடவுள் என்கிற வலிமையால்
புனையப்பட்டதாகவும்
இருக்கலாம். .
ஒரு வேண்டுதலையும்
வழிப்பாட்டையும்
சுமந்து தீர்கின்றன
மானுட நதியில். .
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
Tuesday, February 23, 2010
ரேனிகுண்டா- சினிமா விமர்சனம்- துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்
சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய முடியாத ஒரு பெருஞ்சுவரிலிருந்து வழியும் பாவத்திற்குரிய குறியீடுகளின் பரிதவிப்புக் குரல்கள். இந்தக் குரலைக் கேட்கும் நீங்கள் நிச்சயம் சேரப்போகும் இறுதிக்கட்டம் குற்றம் என்கிற வெளிக்குள் பதியப்பட்டிருக்கும் அவர்களின் சிதைந்த வாழ்வின் அடையாளங்களைத்தான்.
ரேனிகுண்டா தெருவில் இருளின் மஞ்சள் விளக்குகள் திட்டு திட்டாக எரிந்து பரவ, ஜானி ஓடிக் கொண்டிருக்கிறான். காவல்துறையினர் துரத்த மழையிலிருந்து தன்னை அகற்றி ஓடிக் கொண்டிருக்க, கீழே விழும் அவன் மீது மீண்டும் மழைத் தூரலைப் போடுகிறது. அங்கிருந்து ஜானி என்கிற இளைஞன் பேசத் துவங்குகிறான். இந்த முதல் காட்சி பதிவுகளுக்கே ஒளிப்பதிவாளர் சக்தியைக் கண்டிப்பாக தமிழ் இரசிகர்கள் பாராட்டியாக வேண்டும். அத்துனை அற்புதமான பரபரப்பு என்கிற எல்லையை இலாவகமாக மீறும் வசீகரம் ஏற்படுகிறது.
“மழை. . இந்த மழைக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்கு.
நான் பிறந்ததுகூட ஒரு மழை நாள்லன்னு என் அம்மா சொல்லிருக்காங்க.. என் வாழ்க்கைல நடக்கற நல்லது கெட்டது எல்லாத்துலையும் இந்த மழை இருக்கும்.
இன்னிக்கு பேயறெ இந்த மழை நல்லதா கெட்டாதான்னு எனக்குத் தெரியலை. கண்டிப்பா நல்லதாதான் இருக்கும். ஏன்னா எனக்காக அங்க ஒரு பொண்ணு காத்திருக்கா. இந்தச் சின்ன வயசுலெ எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்கனும்? எவ்வளவு சாவு, எவ்வளவு இரத்தம். . எவ்வளவு அடி. . நான் என்ன செஞ்சேன்?”
இளம் குற்றவாளிகளின் உலகை அவர்களின் வாழ்வின் கொடூரங்களையும் வாழ்வியல் பரப்பையும் ஒரு வெறுமையான வர்ணங்களைக் கொண்டு ரேனிகுண்டாவில் பூசப்பட்டிருப்பது, கதையின் களத்தில் வெகுஜன இரசிகர்கள் வெறுனமே கடக்க முடியாத ஒரு பெருஞ்சுவராக எழும்பி நிற்கிறது. கதைச் சொல்லியான குற்றத்தின் அடிவேரிலிருந்து எழும் ஜானியின் குரல் படம் முழுக்க இளம் குற்றவாளிகளுடன் அவர்களின் தெருக்களில் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.
“ஜெயில். . இந்த 19 வயசுலெ பார்க்கக்கூடாத இடம், பழகக்கூடாத மனிதர்கள். .இன்னிக்குத் தேதி 15, காற்பந்து போட்டிலெ ஜெயித்ததுக்காக என் பேரை காலேஜ்ல அறிவிப்பு செஞ்சிகிட்டு இருந்தாலும் இருப்பாங்க... ஆனா என் வாழ்க்கை என்னெ இங்க கொண்டு வந்து சேர்த்திருச்சி”
ஜானியின் குரல், காட்சிகளுடன் அவனின் இறந்த காலத்தின் நிலப்பரப்பிற்குக் கொண்டு வருகிறது. மதுரையில் இருக்கும் ஒரு ரௌளடி அவனின் அப்பாவையும் அம்மாவையும் நடுசாலையில் காரில் மோதி சாகடிக்கப்படுவதைக் கண்டு துடிக்கிறான். அப்பா என்கிற இருப்பு அவனது வாழ்வில் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. தன் அப்பாவின் கொடூரமான ஒரு கொலையை நேரில் பார்ப்பதிலிருந்து அவனது வாழ்வும் அகமும் சிதையத் துவங்குகிறது. அப்பொழுது மழையும் பெய்கிறது.
சிறை என்கிற குற்றத்தின் வலிகளை மேலும் உக்கிரமாக்கும் கொடூரமான தண்டனை களத்திற்கு பக்குவப்படாத வயதில் வந்து சேர்கிறான். அங்கு அவனுக்கு அறிமுகம் ஆகும் இளம் குற்றவாளிகளான நால்வர் படத்தில் மிக முக்கியமான அசல்கள். இவர்கள் யாவரும் கதாநாயகர்கள் கிடையாது. தோற்றத்திலும் உடல்மொழியிலும் படைப்பாற்றலிலும் ஒரு இளம் குற்றவாளிகளாகவே இயல்பாகவே வந்து போகிறார்கள். இந்தச்சமூகமும் சக மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்காத அன்பையும் ஆதரவையும் அடைய இயலாத விரக்தியின் சாயல் அவர்களின் முகங்களில் ஒட்டிக் கிடக்கிறது. கொஞ்சமும் நேர்மையற்ற அவர்களின் வாழ்வின் பின்புலம் அவர்களின் அசைவுகளிலும் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் உள்ளார்ந்து ஒளிந்து கிடக்கின்றன.
பெயர்: டப்பா அல்லது பிரேம்குமார்
வயது : 19
குற்றம்: 4 கொலைகள் மற்றும் வழிப்பறி
பெயர்: மாரி
வயது: 20
குற்றம்: 3 கொலை மற்றும் 3 கொலை முயற்சி
பெயர்: பாண்டுரங்கன்
வயது: 24
குற்றம்: 8 கொலை மற்றும் பல வழக்குகள்
பெயர்: மைக்கேல்
வயது: 21
குற்றம்: 4 கொலை மற்றும் 2 ஆள் கடத்தல்
அந்த நால்வரும் அறிமுகம் ஆகும் காட்சிகளில் திரையில் உருவாகும் எழுத்துகள் இப்படித்தான் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குற்றம் அவர்களின் மூன்றாவது கையைப் போல எப்பொழுதும் எந்தவித முரண்பாட்டையும் வெளிப்படுத்தாமல் இயல்பான ஓர் உறுப்பாக பதிந்து கிடக்கிறது. சிறையில் அவர்களின் அரவனைப்பில் ஜானியும் 5 ஆம் நண்பனாக அவர்களுடன் இணைந்து சிறையிலிருந்து தப்பித்து, நண்பர்களின் துணையுடனும் உந்துதலுடன் அவனது அம்மாவையும் அப்பாவையும் கொன்ற ரௌளடியைக் கொள்வதற்குத் திட்டமிடுகின்றான்.
படத்தில் இந்தக் கொலைத்திட்டம் மிக ஆபத்தானது. உங்களை(பார்வையாளர்களை) உளவியல் ரீதியில் பாதிக்கக்கூடிய வலிமை அந்தக் காட்சிக்கு உண்டு. உங்கள் மன அடுக்குகளில் எங்கோ சிறு புள்ளியாகப் பதுங்கிக் கிடக்கும் வன்முறை உணர்வு திடீர் உக்கிரத்தை அடையக்கூடிய வகையில் நடைப்பெறும் அந்தக் கொலை, பக்குவம் பெறாத பார்வையாளர்களுக்கு ஒருவித சலசலப்பை ஏற்படுத்தக்கூடும். நம்மையறியாமல் பெருகத் துவங்கியிருக்கும் நமது வன்முறை உணர்வால் அந்த ஐந்து இளைஞர்களுடன் இணைந்து அந்தக் கொடியவனை நாமும் கொலை செய்து கொண்டிருப்போம். ஜானியின் கத்தி பிடித்திருக்கும் கை, நமதுடையதாக மாறி, அது அந்தக் கெட்டவனின் மார்பைத் துளைக்க வேண்டும் என்கிற அவசரத்தை ஜானியின் மீது பாய்ச்சுவதற்கு முன்னகர்ந்து வந்திருப்போம். கொலை முடிந்தவுடன் நம் மனம் நிம்மதியடையும். ஜானியின் அம்மா அப்பா மரணம் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய சலனம் நம்மை ஒரு கொலை முயற்சிக்குக் கொண்டு வந்திருக்கும். அந்த ஐவருடன் இணைந்து அந்தக் கொலையை நாமும் செய்திருப்போம். அதை உணராத நம் மனம் அந்தக் கொலைக்கான நியாயங்களை அவதானிக்கத் துவங்கியிருக்கும். இப்படியொரு கொலை சம்பவத்தைத் துணிவான உளவியல் சாத்தியபாடுகளையும் புரிதலையும் விளைவையும் முன்வைத்து எடுக்கப்பட்டு, பார்வையாளனைச் சலனப்படுத்திய விதத்தை எந்த வகையில் சேர்ப்பது என மனம் பதற்றம் அடைகிறது.
அந்தக் கொலைக்குப் பிறகு அங்கிருந்து மும்பைக்குச் சென்று பெரிய கொலையாளியாக வேண்டும் என்கிற கற்பனைகளுடன் புறப்படுகிறார்கள். இடையில் இரயிலிருந்து இறங்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் ஆந்திராவிற்குள் நுழைகிறார்கள். அங்கே பழைய சிறை நண்பன் ஒருவனைச் சந்தித்து ரேனிகுண்டாவிற்கு வருவதோடு படம் மேலும் பரப்பரப்பின் எல்லையை அடைகிறது. ரேனிகுண்டாவின் தெரு அங்குள்ள ஒட்டு மொத்த சமூகத்தின் வாழ்வியலையும் வாழ்க்கைமுறையையும் பிரதிபலிப்பதாகவே அமைக்கப்பட்டிருப்பது படத்தில் ஏற்படும் மேலுமொரு தற்செயலான அபூர்வம்.
ஜானியின் நகர்வில் தொற்றியிருக்கும் நீண்ட வெறுமையின் ஒரு பகுதியில் புதிய மலர்ச்சியாக, ரேனிகுண்டா தெரு மக்களின் துணிகளைத் துவைத்து உலர்த்தும் பெண் வருகிறாள். இவர்களின் முதல் சந்திப்பு ஒரு மழை நாளில் நிகழ்கிறது. சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டும் ஓர் அழகான காதலை ரேனிகுண்டா தெருவில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தக் காதலில் சொற்கள் இல்லை, வெறும் மௌளனம் மட்டுமே அவர்களின் மழைநாட்களை நிரப்புகிறது. இருவரின் காதலும் எந்தவிதமான அதீத பகிர்வும் இல்லாமல் மிக அடர்த்தியான ஓர் உறவாக மாறுவதுதான் ஏதோ அதிசயம் போல ரேனிகுண்டா தெருவில் நிகழ்கிறது. அவ்வப்போது ஏற்படும் இருவருக்கிடையிலான சந்திப்பில் அவர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ளப்படும் அன்பும் சொற்களற்ற பாவனையும் பார்வையாளனுக்குள் நெருக்கமாகுகிறது.
மாற்று சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் தமிழ் சினிமாவில், பெரும்பாலும் உடல் ஊனமற்ற கதைப்பாத்திரத்தை கதைக்குள் நுழைப்பது வழக்கமாகப் பின்பற்றப்படுவது கவனிக்கத்தக்கது. ரேனிகுண்டா படத்தில் வரும் டப்பா கதைப்பாத்திரத்திற்கு இரு கால்களும் ஊனமானவை. கோணலான வடிவமைப்பில் அவன் நடக்கும்போது அவனது இயலாமையைக் காட்டும். இது அந்தக் கதைப்பாத்திரத்தின் மூலம் பரிதாபத்தைச் சேகரிக்கும் முயற்சியாகவும் ஒரு தேர்ந்த பார்வையாளனால் நிர்ணயம் செய்ய இயலும் என நினைக்கிறேன். ஆனால் கதையோட்டத்தில் அவனையே ஆங்காங்கே ஒரு நகைச்சுவையாளனாகவும் கொலை உணர்வு ஏற்படும் போது வெறிப்பிடித்தவனாகவும் காட்டியிருப்பது, அந்தக் கதைப்பாத்திரத்தின் மீது குவிக்கப்படும் பார்வையாளர்களின் கவனம் கதையின் மையப்புள்ளிக்கு மிக அவசியமானதாகக் கருதப்பட்டிருக்கலாம். டப்பா என்கிற அந்த இளைஞனுக்கும் அதே தெருவில் வசிக்கும் மணிமேகலைக்கும் இடையே படத்தின் சிறு பாகமாகத் துளிர்க்கும் காதலும் வலி நிரம்பியதாகப் பேசப்பட்டிருக்கிறது.
“2 ஆம் வகுப்பு படிக்கும்போது சரோஜா டீச்சர் மகளைக் காதலிச்சேன், அது பேய்லியராச்சி. அதுக்கப்பறம் இப்பெத்தான் தெரியுமா திரும்பவும் வந்திருக்கு” எனும் டப்பா சொல்லும்போது அவனது வாழ்வு தொலைக்கப்பட்ட ஒரு பொருள் போல, மீண்டும் எங்கோ திடீரென்று ஒரு காதல் மூலம் தட்டுப்படுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி டப்பா என்கிற கதைப்பாத்திரம் ஒரு முழுமைப் பெறாத வடிவமாக கதையின் முன் கொண்டு வந்து நிறுத்தும்போது, பல இளைஞர்களின் வாழ்வு நேர்மையற்ற இந்தச் சமூகத்தின் மூலம் எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை குறியீட்டின் புரிதலின் மூலம் உணரக்கூடும். இந்தச் சமூகத்தின் அலட்சியமும், புறக்கணிப்பும் சேர்ந்த மீதங்களான பாத்திரத்திலிருந்து வழியக்கூடிய ஒரு கொடூரமான குறியீடுதான் டப்பா என்கிற கதைப்பாத்திரம்.
படத்தின் கடைசி காட்சியில் ரேனிகுண்டா தெருவில் வைத்து அந்த 5 இளம் குற்றவாளிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுவதுதான் இந்தச் சமூகம் குற்றவாளிகளின் மீது காட்டும் எதிர் வன்முறையின் உச்சத்தைக் காட்டுகிறது. பெரும் புள்ளி ஒருவன் இன்னொரு முக்கிய நபரைக் கொலை செய்யச் சொல்லி அந்த இளைஞர்களை ஏவிவிடுகிறான். இதுதான் கடைசி கொலை முயற்சி எனவும் அதன் பிறகு ஜானியைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மும்பாய்க்குச் சென்று அங்கே அடைக்கலம் ஆகலாம் என்கிற கற்பனையுடன் இந்தக் கொலைக்கு ஒத்துக் கொள்கிறார்கள். வாய்ப் பேச முடியாத அந்த ரேனிகுண்டா தெருவில் சந்திக்கும் அந்தப் பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஜானி அன்று தீர்மாகிக்கிறான். அவள் ரேனிகுண்டாவிலிருந்து 3 இரயில் நிலையம் தள்ளி இன்னொரு நிலையத்தில் காத்திருக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால் அந்த நால்வரும் கொலை முயற்சியில் தோல்வியடைய பாண்டுரங்கனையும் மாரியையும் மிகவும் பரிதாபமாக அங்கேயே அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். மீதம் இருக்கும் மூவரில் இருவர் ஏற்கனவே அவர்களைக் கொலை வெறியுடன் தேடி வரும் காவல் அதிகாரியால் ரேனிகுண்டா தெருவில் வைத்து சாகடிக்கப்படுகிறார்கள். அதில் நம்மால் பார்த்துச் சகிக்க முடியாத அளவில் சாகடிக்கப்படுவது டப்பா என்கிற ப்ரேம்குமார்தான். நீண்ட சுவர் கொண்ட ஒரு காலி இடத்தில் சிக்கிக் கொண்டு அந்தச் சுவரை ஏறுவதற்கு அவன் செய்யும் போராட்டமும், வெளியே அந்தக் காவல் அதிகாரி கையில் துப்பாக்கியுடன் தயாராகிக் கொண்டிருப்பதை ஓடி வந்து பார்த்துவிட்டு மீண்டும் சுவரை ஏற முயற்சிப்பதும், என உயிர் வாழ்வதற்காக டப்பா செய்யும் முயற்சிகளுக்கு முன் குற்றவாளிகள் மீதான காரணமற்ற நமது வெறுப்பு உடைந்து சிதறக்கூடும். டப்பா தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எந்த விதத்திலும் உதவாத அந்த உயரமான சுவர்தான் இந்தச் சமூகமும் அவனுக்குக் கிடைத்த வாழ்க்கையும். அவனது வாழ்வின் முன் அவன் ஓர் இயலாமையைக் கண்டடைகிறான். இறுதியில் அங்கேயே சுடப்பட்டு மரணமும் அடைகிறான். குற்றவாளிகளுக்கு சட்டமும் அதிகாரமும் கொடுப்பது வெறும் தண்டனையை மட்டும்தான் என்பதைக் காட்சிப்படுத்தி உணர வைக்கும் இந்த உத்தி மிக அபாரமானது.
மூன்றாவது இரயில் நிலையத்தில் தனக்காகக் காத்திருக்கும் அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்காகக் கடைசியான ஒரு நம்பிக்கையுடன் ஜானி தப்பி ஓடி இரயிலையும் அடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தனது உயிரையாவது காப்பாற்றிக் கொண்டோம் என்கிற ஆறுதலில் அங்கிருந்து வெளியேறி இரயிலின் கதவிலிருந்து தலையை வெளியே நீட்டி நம்முடன் மீண்டும் ஒரு கதைச் சொல்லியாகப் பேசத் துவங்குகிறான். அவனது வார்த்தைகளில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீதான பிடிப்பும் வெளிப்படுகிறது. மறு கணத்தில் பின்னாலிருந்து அதே காவல் அதிகாரியால் சுடப்பட்டு இரண்டாவது நிலையத்தின் பிளாட்பாரத்தை நோக்கி விழும்போது மீண்டும் அவனது குரல் ஒலிக்கிறது.
“எல்லாம் முடுஞ்சி போச்சி. . நான் என்னா தப்பு செஞ்சேன். . நடுரோட்டுல எங்க அம்மா அப்பாவெ ஒருத்தன் அடிச்சி கொன்னப்பெ அதைச் சுத்தி நிண்டு வேடிக்கைப் பாத்த ஜனங்க மேல கோபப்பட்டு கத்தியெ எடுத்துட்டுப் போய் நிண்டனெ அது தப்பா? ஜெயில்லெ என்னெ கொடூரமா அடிச்சப்பெ ஆதரவு கொடுத்த இந்தப் பசங்கக்கூட சேர்ந்தென அது தப்பா? யார் தப்பு எது தப்புன்னே தெரியாமெ இங்க நடக்குது என்னோட மரணம். என் மரணத்தைவிடக் கொடுமை, நான் வருவேன்னு அங்க காத்திருக்கற அந்தப் பொண்ணு. பாவம். . எங்கப் போகும். . என்ன பண்ணும். . எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? யாராவது அந்தப் பொண்ணெ பாத்தா சொல்லிடுங்க, நான் வரமாட்டேன்னு, என்னெ இவுங்க கொன்னுட்டாங்கன்னு.” என்கிற கடைசி வரியுடன் ஜானி இறக்க, அந்தப் பெண்ணின் காத்திருப்பைக் காட்டியபடி படம் நிறைவடையும் போது பார்வையாளன் என்கிற முறையில் அந்த மரணத்திற்கான குற்றவுணர்ச்சியும் பரிதாபமும் நமது உடலில் நெளிந்து கொண்டிருக்கும். இது உறுதி.
ஜானி நம்மை நோக்கி சொல்லும் அந்த வரியில் படத்தின் ஒட்டு மொத்த பயணத்துடன் நாம் இணைந்து அவர்களுடன் ஒரு குற்றவாளிகளாக நின்றுகொண்டிருப்போம். இதென்ன இப்படியொரு படம்? எந்தப் போலித்தனமும் அற்ற அந்த ஜானியின் குரலில் நாம் வெறும் பரிதாபத்தையும் கேள்விகளையும் மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. அதையும் மீறி அந்தக் குரலின் கொடூரம், பரிதவிப்பு, வாழத்துடிக்கும் எதிர்பார்ப்பு, இழப்புகளின் புலம்பல் என உங்களைச் சிறு சிறு துண்டுகளாக உடைத்து எறிந்திருக்கும். ரேனிகுண்டா தெருவிலிருந்து நீங்க முடியாமல் தோல்வியுற்று எங்காவது விழுந்து கிடக்கும் உங்களைத் தேடிப் பாருங்கள். அது ஜானியின் முகமாகவோ, பாண்டுரங்கனின் முகமாகவோ, மாரியின் முகமாகவோ, டப்பாவின் முகமாகவோ அல்லது மைக்கலின் முகமாகவோ இருக்கக்கூடும்.
குறிப்பு: படத்தின் இயக்குனர் பண்ணிர் செல்வம் அவர்கள் ஒருவேளை மனச் சிதைவுக்கு உட்பட்ட ஒருவராக இருக்க வாய்ப்புண்டு. காரணம் படத்தைப் பார்ப்பவனையும் படத்தில் ஒரு கதாபாத்திரமாக இணைக்க வைக்கும் காட்சிகளில் துல்லியமான உளவியல் விளைவுகளை உக்கிரமான சிதைவுகளாகக் உபயோகித்திருப்பதைக் காணும்போது சந்தேகம் ஏற்படுகிறது. ஒரு தமிழ் திரைப்படம் இத்துனை ஆழமாகச் சென்று குற்றங்களின் வேரைப் பிடித்துக் கொண்டு சிறுக சிறுக ஒரு படிமமாக மாறக்கூடுமா என்பதில் தமிழ் சூழலில் அதிசயமே. வாழ்த்துக்கள்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Friday, February 19, 2010
சிறுகதை: ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுபடும் ஆற்றல்
“என்ன வரையப் போறேனு தெரியுமா?”
“தெரியலையே. இன்னும் வரையவே இல்லெ, அதுக்குள்ள எப்படித் தெரியும்?”
“இதோ என்னா ஒரு குச்சி மனுசன் நடந்துகிட்டு இருக்கான், என்னா கண்ணு உங்களுக்கு?”
ஒரே ஒரு சிறு கோடு. இன்னும் கைகள்கூட முளைக்கவில்லை. ஆனால் அந்தக் கோடு அதன் நேர்கோட்டிலிருந்து தற்செயலான ஒரு நேர்த்தியின்மையைக் கொண்டிருந்தததால், அது நடக்கத் துவங்கியிருக்கலாம்.
“இப்பவாச்சம் என்னானு தெரியுதா?”
“இல்லையே!”
“இதுக்கூடத் தெரியலே?”
பவித்திரா ஓவியம் தீட்டத் துவங்கினாள். அவளுக்கு ஓவியப் பயிற்சி கிடையாது. வர்ணங்கள் விரல்களிலிருந்து உதிரக்கூடியவை எனும் நம்பிக்கை அவளிடமிருந்திருக்கக்கூடும். முதலில் ஒரு வர்ணம், பிறகு அதன் மீது மாற்று வர்ணம். பிறகு அதனருகில் முந்தைய வர்ணத்திற்கு சிறிதும் ஒவ்வாத மற்றொரு வர்ணம். பென்சிலைச் சட்டென்று கையில் எடுத்தவள் தாளின் நான்கு முனையிலிருந்தும் வெறுமனே கிறுக்கத் துவங்கினாள். அது பரவிக் கிடந்த ஒழுங்கற்ற வர்ணங்களின் மையத்தை அடைந்தது.
“இதுதான் புள்ளி” என்றாள்.
கூர்ந்து கவனித்தேன். அங்கொரு மையம் உருவாகியிருந்தது. ஒன்றுக்கு ஒன்று சிதறியிருந்த முரண்பாட்டு வர்ணங்களுக்குக்கூட ஒரு மையம் ஒரு மாயையைப் போல இருப்பதை ஒழுங்குகளின் நகலில் பயிற்சிப்பெற்ற ஜடக் கண்கள் அறியவில்லை. மீண்டும் இரு வர்ணங்களை எடுத்து அவசர அவசரமாகத் தாளின் மேற்பரப்பில் தூவினாள். அது ஏற்கனவே அங்கிருந்த வர்ணக் கலவையில் தெறித்து மேலும் ஒழுங்கற்று சிதைந்தது.
“இது என்னானு தெரியுமா?”
“பாபுஜி அங்கிள் தலை மாதிரி இருக்கு, இதெல்லாம் ஓவியமா?”
“உங்களுக்கு எதுமே தெரியமாட்டுது. இப்பெல்லாம் இப்படித்தான் வரையறாங்க”
அவள் ஏதோ மந்திரத்தைச் செய்து முன்பிருந்த மையத்தை ஓவியத்திலிருந்து தொலைத்துவிட்டிருந்தாள். எவ்வளவோ முயன்று தேடினேன். கலவைக்கு பிடிப்புக் கொடுத்திருந்த மையம் அகன்று மீண்டும் அது ஒரு கலவையாகியிருந்தது.
“இங்கிருந்த புள்ளி எங்க பிள்ளெ? அது கொஞ்சம் நல்லாருந்துச்சே”
“நீங்க பாக்கலயா? அது இப்பத்தான் பறந்து போனுச்சி”
“ஆங்ங்ங் பறக்கும். . உங்க ஊருல பறக்கும்”
“பாப்பாத்தில்லாம் கலர் கலரா பறக்குது, ஏன் இங்க உள்ள ஒரு கலரு பாப்பாத்தியா ஆயிருக்காதா? உங்களுக்கு ஒன்னுமே தெரியில. இப்படி ஓவியத்துலேந்து பறந்து பறந்துதான் பாப்பாத்தியே வந்துச்சாம்”
“உங்க ஊருல சொன்னாங்களா?”
மீண்டும் வெள்ளை வர்ணத்தை எடுத்து ஆங்காங்கே பூசினாள். திட்டு திட்டாக ஓவியத்தில் ஒரு ஒளி உருவாகியிருந்தது. பிரமிப்பும் ஆச்சரியமும் அவளது ஒழுங்கற்ற முயற்சிகளை நோக்கி படர்ந்தன.
“இப்பெ எப்படி இருக்கு? கொக்குங்க வந்துருச்சி”
“இது கொக்கா?”
“ஆமாம், இது எலிஸ் அண்ட் வண்டர்லைன்ல வரும் கொக்கு, நீங்க கார்ட்டூன் பார்த்துருக்க மாட்டிங்க”
அவள் பயன்படுத்தும் பிரஸ் வாய் பிளந்து கசங்கியிருந்தது. அதைக் கொண்டு அவள் உருவாக்கும் ஒரு ஒழுங்கற்ற ஓவியம் மேலும் வலுவடைந்திருந்தது. ஓவியம் எப்பொழுது முழுமைப்பெறும், அது முடிவுறும்போது, அவளது ஓவியம் என்னவாக இருக்கும் என்கிற பதற்றம் பரவியிருந்தது. ஒருவேளை அது வெறும் அர்த்தங்களற்ற கலவையாகத் தேங்கிவிட்டால், இனி அந்தச் சிறுமி ஓவியம் வரைய முயற்சிப்பாளா என்கிற சந்தேகமும் தோன்றியது. அவளின் அடுத்தக்கட்ட முயற்சிகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்குவதன் மூலம் அவளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த நினைத்தேன்.
“என்னா பாக்கறீங்க? அடுத்து என்ன வரையப் போறேனா? இப்பெ ஒரு மானம் இங்கெ முளைக்கப் போது, தெரியுமா?”
“மானம் இல்லெ வானம். யேன் வானம்?”
“இங்கப் பாத்திங்களா மழை பேஞ்சிருக்கு, அப்ப மானம் இருக்கனுமெ”
அவளுக்கருகில் இருந்த பிரசை நிற்க வைப்பதற்காக அவள் பயன்படுத்திய குவளையிலிருந்து தண்ணீர் தாளின் ஒரு முனையில் ஒழுகியிருந்தது. நீல வர்ணத்தின் குப்பியிலிருந்து வர்ணத்தை அள்ளிய பவித்திரா அதை ஓவியத்தின் மேல்பரப்பில் அகலமாக உதறினாள். குட்டி குட்டி வானங்கள் அங்குத் தோன்றியிருக்கக்கூடும். இதற்கு மேல் பொறுமையில்லாதவனாக அங்கிருந்து எழுந்துவிட்டேன்.
“எங்க ஓடறீங்க? பயமா இருக்கா?”
முன்கதவைத் திறந்துவிட்டு வெளிச்சம் உள்நுழைவதற்குள் வேகமாக வெளியேறினேன். எனக்கான வெளி எப்பொழுது வேண்டுமானாலும் சிதையும் அபாயம் அந்தச் சிறுமியின் கைவசம் இருந்ததை உணரும் ஒரு மையத்தை அடைய எவ்வளவோ சிரமப்பட வாய்த்திருந்தது. அநேகமாக பவித்திராவின் நீர்க்குவளையிருந்து மேலும் ஒரு புயல் காற்றோ அல்லது இலையுதிர் காலமோ வழியக்கூடும்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
Monday, February 15, 2010
கவிதை: திரும்பவும் ஒரு பறவை
சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்
நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது
மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்
(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)
கே.பாலமுருகன்
மலேசியா
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்
நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது
மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்
தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்
(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)
கே.பாலமுருகன்
மலேசியா
Subscribe to:
Posts (Atom)





























