Thursday, August 18, 2011

கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை


1
சுவரோடு ஒரு தூசியைப் போல
படிந்து கிடப்பவர்களும்
படுக்கைக்குள் குழி விழுந்து
மூழ்கிப் போனவர்களும்
சன்னல்களின் இடுக்குகளில்
தன் மூச்சுக் காற்றை
ஒளித்து வைத்தவர்களும்
ஒளி இழந்த கண்களுக்குள்
ஆயிரமாயிரம் இரவுகளின்
தனிமையைப் பத்திரப்படுத்தியவர்களும்

Friday, August 12, 2011

அழகர்சாமியின் குதிரை : நாட்டார் தெய்வமும் ஒரு சாமன்யனும்

இந்தியாவின் ஒரு கிராமத்தில்(மல்லையாபுரம்) நடக்கும் கதை இது. வழக்கம்போல திருவிழா நடத்துவதில் சிக்கல். பங்காளி பிரச்சனைகளால் பலமுறை திருவிழா தடைப்பட்டுப் போகிறது. ஆகையால் கிராமத்தில் மழை இல்லை எங்கும் வரட்சி பரவிக் கிடக்கிறது. சாமியாடியின் மூலம் அழகர்சாமி தன் மனக்குமுறல்களை முன்வைப்பதாக அந்தக் கிராமத்தின் கோடாங்கி நாடகமாடி திருவிழாவை நடத்த வேண்டும் என எல்லோரின் மனதிலும் எண்ணத்தை விதைக்கிறான். கிராமங்களில் திருவிழாவும் நாட்டார் தெய்வங்களும் எல்லை காவல் தெய்வங்களும் மிக முக்கிய தொன்ம குறியீடுகளாகும். அவர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சில நம்பிக்கைகள் சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்றன.

Tuesday, August 9, 2011

நேர்காணல்: “முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்” - மஹாத்மன்

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

மஹாத்மன் சிறுகதைகள்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் மஹாத்மன். சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு எழுத்துப்பிரதிகளைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இவர் ஒரு நிலைத்தன்மையற்ற வாழ்வினைக் கொண்டிருக்கிறார். அதையே அவர் படைப்பின் மைய சக்தியாகவும் உருமாற்றுகிறார். தன்னைப் பல நேரங்களில் 'பரதேசி' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இவரின் இடமும் இருப்பும் சூட்சுமமானது. ஆனாலும் எல்லாவகை வாழ்வியல் சிக்கல்களோடும் அவர் தன்னை இலக்கியத்தில் பிணைத்தே வருகிறார். 'வல்லினம்' இதழின் நேர்காணலுக்காகச் சுங்கைப்பட்டாணி வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். சில இடை கேள்விகள் தொலைபேசிவழி கேட்டுப்பெற்றது. நேர்காணலை எழுதி முடித்தப்பின் வாசித்தபோது ஒரு வெறுமை இருந்தது. அது அவ்வப்போது மஹாத்மன் ஏற்படுத்தும் வெறுமையா என்று புரியவில்லை.
கேள்வி: எப்பொழுது எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவானது? உங்கள் எழுத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மஹாத்மன்: தைப்பிங் சிறையில் இருக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாயின. சக கைதிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். சிறுகதை தொகுப்பிற்கு பிறகு கூடுமானால் இவ்வாண்டில் ஒரு கவிதை தொகுப்பும் அடுத்தாண்டு ஒரு நாவலும் வெளியிட உத்தேசம். அந்த எழுத்துப் பணிகளில் முழு மூச்சாய் என்னை ஈடுப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்களை ஏன் தொடர்ந்து ‘பரதேசி’ என அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?

மஹாத்மன்: ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். படைத்தவன் மீதான என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை வெளிப்படுத்துவதற்காகச் செயல்படுத்தியதுதான் பரதேசி திரிதல். படைத்தவனிடமிருந்து பேரற்புதம், பேராச்சரியம், பேரதிசயம் ஒன்றும் நிகழ்த்தப்படாததால் என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி வருகிறேன்.

கேள்வி: ஆரம்பக்காலத்தில் தாங்கள் மஹாத்மன் மற்றும் நண்பர்கள் எனும் பெயரில் எழுதி வந்தீர்கள். யார் அந்த நண்பர்கள்? புனை பெயரின் அவசியம் என்னவாக இருந்தது?

Monday, July 25, 2011

புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்

வல்லினம் கலை, இலக்கிய விழா 3-ல் நிகழ்த்தப்பட்ட உரை
நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும்

உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரான்ஸ் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை.

Friday, July 15, 2011

சினிமா விமர்சனம்: 127 hours : பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்த பாறை


நேற்று Donny Boyle இயக்கி .ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த '127 hours' படத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. இதற்கு முன்பாக 'buried' படம் பார்த்து இலேசான மன உளைச்சலுக்கு ஆளான மனம் நேற்று மீண்டும் அதை உணர்ந்தது. இப்படத்தின் கதை நகர்ச்சியின் மூலம்  மெல்ல மெல்ல மனநெருக்கடிக்கு ஆளாகிய நான் படத்தின் கடைசி 15 நிமிடக் காட்சிகளில் இறுகி உறைந்து போனேன். இயற்கை மனிதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவன் ஆளுமையை வேரறுக்கும் ஒரு கொலை முயற்சிதான் இப்படம்.

படத்தில் அதிகமான கதைமாந்தர்கள் கிடையாது. படத்தின் மையமாக ஒரு மாபெரும் மலைப்பிரதேசமும் 

Wednesday, July 13, 2011

நாவலும் விமர்சனமும்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி-2 இல் முதல் பரிசை வென்ற என் நாவலுக்கு மலாயாப்பலகலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசரியர் வெ.சபாபதி எழுதிய "மலேசிய நாவல்கள் ஒரு பார்வை" கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

விமர்சனம்: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்)

      பட்டணப்பிரவேசம் செய்யும் தோட்டப்புறக் குடும்பமொன்றின் சீர்கெட்ட கதையைக் காட்டும் படைப்பு இது.  இந்நாவலின் கதை வழக்கமாகத் தோட்டப்புறக் குடும்பங்களில் காணப்படும் சாதாரண நடைமுறைச் சித்திரமாக இருப்பினும், கதாசிரியரின் கதைகூறும் திறானல் நாவலின் கதை சிறப்படைந்துள்ளது.  கதைகூறுவதில் நனவோடை உத்தியின் கூறுகளும் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் இப்படைப்பு சிறப்பிற்குரியதாகக் காணப்படுகின்றது.  கதாசிரியர் கதை கூறுவதற்குத் தற்கூற்றுமுறையைப் (அகநோக்குநிலை) பயன்படுத்தியுள்ளார்.  இப்படைப்பு இக்கதாசிரியரின் முதல் நாவல் படைப்பு முயற்சியாகும்.  எனினும், முதல் முயற்சி என்று தெரியாத அளவிற்குப் பண்பட்ட தன்மையும் முதிர்ச்சியும் எழுத்தில் காணப்படுகின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள் தங்களின் கதையைக் கூறிச் செல்கின்றனர்.

Sunday, July 10, 2011

Part 3: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி: சமீபத்தில் நான் பார்த்த ஒரு இலங்கை சினிமாவில், இலங்கை குடும்ப ஆண்களை இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதால் இலங்கையில் வசிக்கும் கீழ்த்தட்டு சமூகத்தின் குடும்ப அமைப்பு உடைந்து போவதைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. போர்ச்சூழலில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவவீரர்கள் இலங்கை அரசின் தூண்டுதலால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிலை தமிழர்களைத் தவிர்த்து இலங்கையின் சிங்கள மக்களை எப்படிப் பாதிக்கிறது? இராணுவ வீரர்களின் மன அமைப்பு எப்படிப்பட்டது?

பதில் : இராணுவத்திற்கு ஆட்சேர்க்க மிகவும் வறுமைப்பட்ட பின்தங்கிய சூழலில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். அதனால் பல சிங்களப் பெண்கள் கணவன்மார்களை பிரிந்து தவிக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கிறார்கள். சகோதரர்கள் ஒத்தாசையின்றி தவிக்கிறார்கள். முப்பதாயிரத்திற்கு மேல் இப்பொழுது இராணுவத்தினருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இராணுவத்தினரின் குடும்பங்கள் அந்தச் சம்பளத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குள் இப்படிப்பிரிவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் உள்ளன.

தங்கள் ஊதியத்தை அனுப்பி தொலைபேசியில் பேசி உருகிக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் பலரை நான் தினமும் இங்குள்ள வங்கிகளில் பார்க்கிறேன். தவிர நாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் சீருடையணியாத இராணுவத்தினர் தெற்கில் உள்ள வீடுகளுக்கு விடுமுறையில் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் போகும் பொழுது உள்ள மகிழ்ச்சியும் வரும் பொழுதுள்ள சோகமும்கூட தினம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு தனது அதிகார வெறித்தனமான யுத்தத்திற்காகப் பலியாக்குகிறது என்றும் அது அவர்களில் தவறில்லை என்றும்கூட நமது சூழலில் சிலர் வாதிடுகிறார்கள். விடுதலைப் புலிகள்கூட குடும்பங்களைப் பிரியும் இராணுவத்தினரின் மனநிலை பற்றியும் யுத்தகள இராணுவத்திரின் மனநிலை பற்றியும் சில குறும்படங்கள் எடுத்திருந்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேன கூட தனது படங்களில் இந்த விடயத்தை சித்திரித்திருக்கிறார்.

Tuesday, July 5, 2011

Part 2 - நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி : போர்சூழலில் வாழும் குழந்தைகளின் உலகை இன்றைய உலக சினிமாக்கள் தீவிரமான கலைத்தன்மையுடன் காட்டி வருகிறார்கள். இது போன்ற இலங்கை போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வைப் பற்றி ஆவணப்படமோ அல்லது குறும்படமோ செய்யப்பட்டுள்ளதா? உங்களின் ஆவணப்படங்கள் எதைப் பற்றியது?

பதில் : ஈழத்துச் சூழலில் குழந்தைகளின் ஏக்கங்களை பதிவாக்கிற ஒரு புகைப்படமும்கூட சிறந்த ஆவணம்தான். உலக சினிமா அளவுக்கு தொழிநுட்பங்கள் சார்ந்த படங்கள் எங்களிடம் இல்லாத பொழுதும் விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்' என்கிற திரைப்படப் படைப்பாக்க பிரிவு முக்கிமான பல குறும்படங்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் படங்கள் குழந்தைகளின் போர்க்கால ஏக்கங்களை நெருக்கடிகளை மிக இயல்பாக யதார்த்தமாக பதிவாக்கியுள்ளன.

தினமும் விமானத்தாக்குதலை கண்டு அஞ்சி ஒழியும் ஒரு குழந்தை ஒரு முறை விமானம் தாக்குதல் நடத்த வந்த பொழுது விமானத்தை நோக்கி தடியால் சுடுகிறது. சமநேரத்தில் போராளிகள் அந்த விமானத்தை தாக்க விமானம் வீழ்ந்து போகிறது. அதைப் பார்த்த குழந்தை தானே விமானத்தைத் தாக்கியதாக ஆறுதல் படுகிறது. இது மறைந்த இயக்குனர் பொ.தாசனின் படம். இன்னொரு குறும்படத்தில் பழங்களைப் பொறுக்கிற இடத்தில் விமானம் தாக்கியதால் தங்கையை இழந்த அண்ணனான சிறுவன் ஒருவன் விமானங்களை நோக்கி கல்லை எறிகிறான். ‘1996’ என்ற இந்தப் படத்திலும் இடம்பெயர்ந்த சூழலில் குழந்தை பாத்திரத்தின் உணர்வலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்குனர் மகேந்திரனும் முல்லை யேசுதாசனும் எடுத்திருந்தார்கள்.

Friday, July 1, 2011

Part 1: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப்போம். அப்பொழுது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பெண் ஒருவர் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்த குழந்தையைக் கொண்டு வந்து எங்களுடன் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருப்பார். அந்தத் தருணத்தில்தான் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற அந்தக் கவிதையை எழுதியிருந்தேன்.

Saturday, June 25, 2011

சீன சினிமா - Not One Less - 'தீர்ந்துபோகாத வெண்கட்டிகள்'

வெயிலொழுகும் நகரம்
தூரத்துப் பயணிகள்
ஆட்களைக் கொன்று தீர்க்கும் பரப்பரப்பு
சீனாவின் மிக விசாலமான வாழ்வு.
நகரத்தின் வாழ்வைப் பற்றி எப்பொழுதும் பிரக்ஞையில்லாமல் அல்லது அரை பிரக்ஞையுடன் வெளிப்படுத்தும் திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒரு சில படங்களின் இயக்குனர்கள் தனது நேர்காணலில் படத்தைப் பற்றி சொல்லுபோது ஓர் இடத்தில்கூட அப்படம் காட்டிய நகர வாழ்வு குறித்தான தகவல்கள்/பகிர்வுகள் இடம் பெற்றிருக்காது. எடுத்துக்காட்டாக அண்மையில் தமிழில் வெளிவந்து அதன் கதாநாயகன் மலேசியாவிற்கு வந்து பேட்டியெல்லாம் கொடுத்து அசத்திய, ‘வா குவாட்டர் கட்டிங்” படத்தைச் சொல்லலாம். அதிகாலையில் ஒரு நகரத்தின் இருண்ட பகுதிகள் எப்படியெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறது என்பதை மிக அழகாகக் காட்டியிருந்தார்கள். ஆனால் அதைப் பற்றிய விவாதமோ அடையாளப்படுத்துதலோ, விமர்சனமோ திரைப்படத்துறை சார்ந்தவர்களிடமிருந்தும் வரவில்லை பிற முக்கியமான விமர்சகர்களிமிருந்தும் வெளிப்படவில்லை. மலேசியாவுக்கு வந்து பேட்டியளித்த நடிகர் சிவாவுக்கும் தெரியவில்லை.