ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ரெங்கநாயகி
பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டிருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்த போது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நேநா டாகொண்ட்டே உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்தபடி இருக்க பிரனீஸிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களை திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ்போர்ட்டுகளை பரிசோதித்தார் அந்த சிவில் பாதுகாவல் அதிகாரி. அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப் படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நேநா டாகொண்டே கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள், மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென் தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளை போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்த்தை சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த அந்த வெள்ளி நிறக் கார் வளம் குறைந்த எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது. அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும், மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நேநா டாகொண்டேவின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.
முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக்கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ‘ஹென்டே’யில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கையில்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக் கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னை பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்த காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிக சீற்றத்துடன் அலறினான்
“Merde! Allez-vouz-en!”
காதுகள் வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டிருந்த நேநா டாகொண்டே பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதலளித்தான் பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்க தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான் அந்த பயங்கர இரவில் காயம் பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும் காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் ‘பியாரிட்ஸ்’ என்றும், ஆனால் அந்த மத்திய குளிர்காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள ‘பேயோன்’ பிரதேசம் செல்லும்வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டு பிடிக்க இயலாது என்று விளக்கினான்.
‘‘மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.
‘‘அது ஒன்றுமில்லை,” நேநா டாகொண்டே புன்னகைத்துக் கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள். ‘‘அது வெறும் முள்”.
அவர்கள் ‘பேயோனை’ அடையும் முன்னரே பனிமழை பெய்யத் தொடங்கியது மறுபடியும். ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றி காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்கு பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தையெல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.
ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே ‘போர்டோ’வை அடைந்து விட விரும்பினான். ‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப் பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில்–குறிப்பாக ஆலங்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற செங்குத்தான பாறையின் விளிம்புப் பகுதியில்– நேநா டாகொண்டே உற்சாகம் தீர்ந்து விட்டிருந்தாள். எனவே பேயோனுக்குப் பிறகு அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக் கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட. பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடு இரவு நெருங்கும் வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்று விட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. ‘போர்டோ’வின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்து விட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரீஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான் அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸடெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்–அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள்–இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்க–அந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.
மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர், பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்த, ‘கார்த்தஜீனா த இன்டியாஸ்’ இல்–அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கியிருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடையணியும் அறைகளை புயல் போல தாக்கிய தருணத்தின் போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ‘செயின்ட்-பிளேய்ஸ்’ என்னுமிடத்தில் ‘ஷேட்டல் லெனி’ பள்ளியிலிருந்து வந்திருந்தாள் நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக் கொண்டும், உயர்ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை. சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்து விட்டிருந்தாள் அவள் பக்கத்து உடைமாற்றும் அறைகளிலிருந்து கடற் கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப் போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை–அவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும் வரை கற்பனைக்கெட்டக்கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும் வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்க தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான் அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்த புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது –அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப்பள்ளிக்கு சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல ‘பினாட்டாக்களை’(லத்தீன் அமெரிக்க திருவிழாக்களில் சிறு பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் –அவற்றை கோலால் உடைத்து பரிசுகளைப் பெற வேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர் அந்த இருவருமே. ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக் கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நேநா டெகொண்டே அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாது, நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான் தன் சிறுத்தைப்புலித்தோல் உள்ளாடையை கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்மையைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.
‘‘இன்னும் பெரிய, விரைப்பானவை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக் கொண்டு. ‘‘ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும்”.
உண்மையாய் நேநா டாகொண்டே ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம் வரை நிர்வாணமாக ஒரு ஆண்மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று பில்லி சான்ஷெஸால் எண்ணமுடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியை சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதும்தான். மருத்துவமனைக்கு தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்கு காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் காதல் செய்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக் கொண்டனர். கடினமான ஜ÷ன் மாத பகல் நேரங்களை நேநா டாகொண்டேவின் புகழ் பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகியிருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸபோனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்த தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் ‘லா மாங்கா’ மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நேநா டாகொண்டே இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல் மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்த சாக்ஸபோன் கால முரண்மிக்கது என்றே நினைத்தார்கள். ‘‘அது ஒரு கப்பல் போல சத்தமிடுகிறது”, முதன் முறையாக அதை கேட்ட போது நேநா டாகொண்டேவின் பாட்டி கூறினாள். சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நேநா டாகொண்டேவின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள். ‘‘நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, ‘‘உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும் வரை.”
ஆனால் நேநா டாகொண்டேவின் அந்தக் கப்பல் பிரிவுபசாரப் பாடல்களும் மற்றும் அந்த காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸை சுற்றியிருந்த அந்தக் கோபம் மிகுந்த வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில்–இரண்டு புகழ் பெற்ற குடும்பங்களின் பெயர்களின் சங்கமத்தில் –பயந்து போன மென்மையான ஒரு அனாதையைக் கண்டு பிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான்ஷெஸும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்கு தடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்கால பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப்படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்து விட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர்வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர்– உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், சாக்ஸபோன் கேட்டுக் கொண்டு, வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என, காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.
அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நேநா டாகொண்டேவும் பில்லி சான்ஷெஸும் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்பு செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள் பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன் முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின் போது, மாறு வேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமை தாதிகளின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனைப்போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாக புரிந்து கொள்ளும் வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறிமிகுந்த ஈடுபாடு போலவே, நேநா டாகொண்டே தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும்போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமான பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமான கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக் கொண்டு, களிப்பை விட சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அப்பொழுதுôன் அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து நேநா டாகொண்டே இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.
ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப் போன காதலர்களாயிருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்க் கோட்டை நேநா டாகொண்டேவிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக் கொண்டிருந்த காரின், அடையாளம் குறிக்கப்படாத சாவிகளை பில்லி சான்ஷெஸுக்கு தந்தார். மேலும் அந்தக் குளிர் காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ‘ஷெர்லிங்’(மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.
நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நேநா டாகொண்டேவுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நேநா டாகொண்டே பிறந்தபோது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்–அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூட செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்த்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்ட போது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகர சாதுர்யத்துடன் கையாண்டாள்.
‘‘நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், ‘‘அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள்.”
மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்தது–அது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக் கொண்டிருக்க வேண்டும்–அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்த புதிய காரின் மேல் தங்கள் கவனத்தை திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதை செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனை கவனிக்கவே இல்லை. அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புரம் மாற்றி அமைத்துக் கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய பென்ட்லி கன்வெர்ட்டிபிள் கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போல காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் இருப்பதை அறியாமல், அந்தக் காரின் மிகச் சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை. பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.
அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞானஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப் படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத்தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாக திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் பயிற்சி பெற்றான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள்–நடுப்பகல் பொழுதில் எரிய விடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்து சமுத்திரம் –இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறத்தலின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு தீடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தை தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் கெட்டிப் பனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியை தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன் உருண்டான்.
அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற் பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நேநா டாகொண்டே தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவுகளின் போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும் போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப் பாதைகளை கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்த போதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் ‘பிர்ரனீஸ்’ பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக்கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப் படியாய் தங்கிப்போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் கனவுப்பீதியின் மனப்பதிவில் கண்விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக்குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகியிருந்தது. காரின் டேஷ்போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள் பார்த்த போது மணி மூன்று ஆகியிருந்தது. மனக்கணக்குப் போட்டவள் பிறகுதான் ‘போர்டோ’வையும் அது போல, ‘லாய்யர்’ நதியின் நீண்ட வெள்ளப் பெருக்கு தடுப்பு மதிலை ஒட்டி சென்று கொண்டிருந்ததையும், ‘அங்கோலேம்’þஐயும் ‘பாய்ட்டியர்ஸ்’ ஐயும் கடந்து விட்டிருந்ததை உணர்ந்தாள்–மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலா ஒளி, அந்த கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக்கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நேநா டாகொண்டே பாரீசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்துவிடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.
‘‘நீ ஒரு முரட்டு ஆசாமி” அவள் கூறினாள். ‘‘நீ பதினோரு மணி நேரமாக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”
அந்தப் புதுக்காரின் போதை அவனை செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கியிருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரீஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். ‘‘அந்த தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றி தெளிவாகக் கூறினான், ‘‘அத்தனைக்கும் மேலே, கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். பத்து மணிக்குப் பக்கமாகத்தான் இருக்கும்.”
என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கிவிடுவானோ என்று நேநா டாகொண்டேவுக்கு பயமாயிருந்தது. மாட்டிரிடில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப் பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள். ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.
‘‘உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.
ஆர்லியன்ஸுக்கு சற்று முன்னதாகவே அந்த மூடு பனி விலகியது. பனிபடர்ந்த வயல் வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்கு வரத்து மிகவும் சிக்கலாக ஆகியது–காரணம் பாரீஸுக்கு சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லா பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச்செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நேநா டா கொண்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதை குறிப்பால் உணர்த்தி விடக் கூட தைரியமின்றி இருந்தாள் முதல் முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்த குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். ‘‘இதைப் போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது” அவள் கூறினாள் ‘‘ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய் கொடுக்கும் ஒருவரைக்கூட காண முடியாது தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப் பட்டிருக்கும். அந்த கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.
‘‘நான் இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக் கக்கூடும் என்று.” அவன் கூறினான் ‘‘இதே இடத்தில், நீ விரும்பினால்.”
நேநா டாகொண்டே அதுபற்றி தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரீஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக் கொத்தான தொழிற்சாலைகளும், மிதி வண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும்–குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.
‘‘பாரீஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நேநா டாகொண்டே. ‘‘மணமான ஜோடிகள் போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”
‘‘இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது,” என்றான் அவன்.
‘‘அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், ‘‘நாம் முதல்முறையாக திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”
விடியலுக்கு சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களை கழுவிக் கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக் கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நேநா டாகொண்டே குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கிவிட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையை குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடது கைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்பு கொண்டு நீரில் காயம் பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நேநா டாகொண்டே தன் கையைத் தொங்க விட்டாள்–வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்த சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். ‘‘யாராவது நம்மை கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், ‘‘அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்தப் பனியின் மேல் படிந்த என் ரத்த சுவடை பின் தொடர வேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.
‘‘கற்பனை செய்”, அவள் கூறினாள். ‘‘மாட்ரிட்டிலிருந்து பாரீஸ் வரையிலான வழியெங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”
மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரீஸின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்திருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் –ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றை சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்குட்பட்ட விஷயம் அல்லவென்று.
‘‘நாம் கிட்டத்தட்ட ‘போர்ட் த ஆர்லியன்ஸ்’ இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், ‘‘நேரே மேலே போகவேண்டும், ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ’ வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்த பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்.”
அந்தப் பயணத்தின் மிக சிரமமான பகுதி இதுதான். மத்திய சந்தைகளை அடைய முற்பட்டுக் கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ‘ஜெனரல் லெக்லெர் அவென்யூ’ நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களை சங்கிலிþதாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனை தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நேநா டாகொண்டே அவனை நம்ப செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நேநா டாகொண்டே சுய நினைவு இழக்காமலிருக்க போராடிக் கொண்டிருந்தாள்.
‘லியோன் த பெல்ஃபோர்ட்’டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போல சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை –மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரீஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் ‘டென்ஃபெர் ரோஷரூ அவென்யூ’ வில் போக்குவரத்து குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நேநா டாகொண்டே அவள் கணவனிடம் வலது புறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவ மனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.
காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்சர் வண்டியில் படுத்தபடி, பணி நேர மருத்துவருக்காக காத்துக் கொண்டிருந்த போது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையை சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான் அது தளர்ச்சிடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையை பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதுக்காரராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோக நிறத் தோலுடனும். நேநா டாகொண்டே அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையை தன் கணவன் மேல் திருப்பினாள், ‘‘பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், ‘‘நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்றுவிடுவதுதான்”
அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
‘‘இல்லை குழந்தைகளே,” அவர் கூறினார். ‘‘இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விட பசியால் இறந்து போவான்.”
அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்த கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின் தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக் கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.
‘‘நீ கூடாது,” அவர் சொன்னார். ‘‘அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.”
நேநா டாகொண்டே அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைகூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கையசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் கிளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளை படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.
‘‘டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.
‘‘எவ்வளவு நாளாய்?”
‘‘இரண்டு மாதங்கள்”
இந்த தகவலுக்கு பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. ‘‘நீ என்னிடம் சொல்வது சரிதான்,” அவர் கூறினார். பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நேநா டாகொண்டேவை அழைத்துச் சென்றிருந்த அந்த கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைகூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மர பெஞ்சில் உட்கார்ந்தான். அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, அவன் தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அறியாதிருந்தான்.
பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்டபடி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நேநா டாகொண்டே 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல் நாள் இரவில், பில்லி சான்ஷெஸ் அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நேநா டாகொண்டே மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்து கொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்–அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்த பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்ட்டூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடனான ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.
அந்தப் பதிவேட்டில் நேநா டாகொண்டே இருப்பதை மறு உறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசைக் கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ‘ஹோட்டல் நிக்கோல்’ என்ற வாசகத்துடன்–அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்பு பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக் கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ அட்டாளி அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவ படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்கு தவிர. இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதியுடைய நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ‘பிடெட்’ (பிறப்புறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர்இணைப்பு கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.
அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்த கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த உலகின் புதிர்களை புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒரு போதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளி விடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப் பகுதி தேவையாயிருந்தது மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்திருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டு பிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்து கொண்டான். அதற்கென தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலக கட்டுப்பாட்டில் இருந்த அந்த சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நேநா டாகொண்டேவின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்தபோது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, ஆனால் அவனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. காலைப்பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நேநா டாகொண்டேவை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழைவாயிலின் வெளியே இருந்த அந்த செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான். எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நேநா டாகொண்டேவை சேர்த்த அந்த ஆசிய டாக்டரை காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்தால் அவனது கண் காணித்தலை முடித்துக் கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு லைட் காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான்–இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்ற போது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப் பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப் படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்த சுமை தூக்கும் கூலிக்கு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் டி அவிலாவுக்கு புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்த துணிகரமிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க, மேயரின் அலுவலகக் காரை ஏறக்குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழுநாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப்பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும்–காரணம் அவன் அதை மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும்–இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது, முதன் முறையாக நேநா டாகொண்டே பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் ‘கார்த்தஜீனா’வில் பொதுச் சந்தையில் இருந்த உற்சாக மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். ‘அரூபா’விலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்த கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் தேங்காய் சாதம் மற்றும் வறுக்கப்பட்ட மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச் செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்த சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும்–அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டு பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.
அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் –எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும்–அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்த சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றக் கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனுக்கு ஏழு வயதாகியிருக்கும் போது, ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பை விட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரீஸ் நகர அட்டாளி அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதை கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானமாக இருந்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் –ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டு பிடித்திருக்கலாம்þசாவிகள் எல்லாம் நேநா டாகொண்டேவின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடைமாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாக சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் ‘ஹலோ’ சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டிருந்தான். இதை உணர்ந்து கொண்டவன், வெண்ணெயோ அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்கவில்லை ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளை கேட்க வேண்டிய அவசியம் இன்றி தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்து கொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனை சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சியுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நேநா டாகொண்டேவை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம் நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நேநா டாகொண்டே விடை பெற கை அசைத்துச் சென்ற அந்த நடைகூடத்தை தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறைபடிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன், அவன் நடந்து சென்ற போது ஏதோ கேட்டதை பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனை பின் தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்த காவலர் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட ‘சுத்தியல் பிடியில்’ இவன் கையை தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்க தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக் கொண்டிருக்க, உருளை கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போல தூக்கி வீசினான் அந்தத் தெருவின் நடுவில்.
அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதாக இருக்கத் தொடங்கினான். அரசு தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நேநா டாகொண்டே அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்த தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றை தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ‘ஆன்டஸ்’ சொற்களை உடனேயே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப் பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணி கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாறவில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததை கேட்டான் அவன் மாண்புமிகு அரசு தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரை எதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன் அனுமதியின்றி அவரைக் காண இயலாது , அதுவும் அசாதாரணமான-அவசர சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதை கேட்டான். இந்த வழியிலும் நேநா டாகொண்டேவை பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்த செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.
பாரீஸின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான ‘22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ்’ இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே ‘கார்த்தஜீன டி இன்டியாஸ்’ இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன் முறையாக சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மற்றும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது. அரசு தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார்–அவரது கறுப்பு காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் டையும் மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி ‘அமெரிக்காக்களுக்கு’ முரணாக –அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றே–இங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். ‘‘இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.
‘‘போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். ‘‘அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”
வெளியே வந்தவன், ‘பிளேஸ் த லா கன்கார்ட்’ இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற் கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல்துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவை விட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நேநா டாகொண்டேவை பற்றி நினைத்தபடி அந்த ‘சியென்’ சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போல காட்சியளித்த அந்த சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளம் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனை பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்த களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரீஸின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.
பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்கு சென்று உயர்ரக ‘கான்யாக்’ பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக் கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன் முறையாக இறப்பின் நிதர்சனத்தை பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்த தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையை பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறு புறத்திற்கு காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனை தற்காத்துக் கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, செவ்வாய்க் கிழமைக்காக காத்திருந்தான், சுவர்க் காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றி சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நேநா டாகொண்டே பற்றி எண்ணிக்கொண்டும். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த இரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.
செவ்வாய் விடிந்தது மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும், ஆனால் மழையின்றி. ஆறுமணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்கு பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்க் கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நேநா டாகொண்டே எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரை சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புறமுற்றத்தின் ஊடாக– பூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன்– அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின் தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவ சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான் மற்றும் வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததை விட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைகூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நேநா டாகொண்டே இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக் கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாக தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின் ஜன்னல்கள் ஊடே நோக்கியபடி.
நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் நர்சுகளுடனும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். பில்லி அந்த பகுதிக்குள் சென்றான், அந்த கூட்டத் தினின்று நர்சுகளில் ஒருத்தியை விலக்கிவிட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
‘‘ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ?” அவர் கேட்டார்.
பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.
‘‘அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். ‘‘இதோ இங்கேதான், அந்த திருப்பத்தில்.”
பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நேநா டாகொண்டே ரத்தம் வருவது நிற்காமல் இறந்து விட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான்ஷெஸும் முன்பதிவு செய்து கொண்டிருந்த ‘ஏதென்னே பிளாசாவில்’ அவள் கணவனை தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரை தொடர்பு கொள்ள தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும். ஏற்கனவே நேநா டாகொண்டேவின் பெற்றோர் பாரீஸுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக் கிழமை அந்த அயல் நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசு தூதுவர் தாமே, பிணத்தை நறுமண மூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரீசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடி நிலை அதிகார அறிக்கை வெள்ளிக் கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது மேலும் அந்த நாற்பது மணி நேரமும் பிரான்ஸில் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக இருந்தான் அவன். நேநா டா கொண்டேவின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி பெற்ற ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.
சனிக்கிழமை மதியம் நேநா டாகொண்டேவின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாரீஸுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நேநா டா கொண்டேவின் காதலுக்கான தனிமை தந்த மன வேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்த தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ‘ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்’ வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற் பிரதேசத்து பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரீஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படி தகுதிக்கு ஒவ்வாத ‘ஷெர்லிங்’ கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்க பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.
ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நேநா டாகொண்டேவின் பெற்றோர் அந்த தேடுதலை நிறுத்திவிட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக்கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒரு போதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துமனைக்குள் நுழைந்த போது, அந்த சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்த துக்கமான ‘லா மாங்கா’ கல்லறையில்–எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவு கோல்களைக் கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி என கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தை பழிவாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி, மென்மையான பளீரென்று சிறு துணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரீஸ் நகர தெருக்களில் விழாக்கால தோற்றமிருந்ததையும் கூட.
Saturday, April 18, 2009
Tuesday, April 7, 2009
நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலும் ஒரு கோப்பை தேநீரும்

நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலும் ஒரு கோப்பை தேநீரும்
அநங்கம் இலக்கிய வட்டம் மிக விரைவில் இயங்கவுள்ளது. அநங்கம் இதழின் ஆசிரியர் குழுவும் அதன் சார்ந்த இளைய எழுத்தாளர்களும் ஒன்றாக இணைந்து இலக்கிய வட்டத்தை வளர்க்க முடிவெடுத்துள்ளோம்.
முதல் கட்டமாக “ஒரு கோப்பை தேநீர்” என்கிற இலக்கிய கலந்துரையாடல் திட்டம் வெகுவிரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் வழி பல இளம் எழுத்தாளர்களை அடையாளம்காணவும், நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த அநங்கம் இலக்கிய வட்டம் துணைப்புரியும்.
ஒரு கோப்பைத் தேநீர்
நாட்டின் மூத்த எழுத்தாளர்களுடன் ஒரு நாள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களுடன் அன்றைய பொழுதை ஒரு கலந்துரையாடலின் வழியாக வழிநடத்திச் செல்ல வகைப்படுத்தியுள்ளோம். அவர்களுடன் இருக்க போகும் அந்த ஒரு நாளில் குறிபிட்ட அந்த மூத்த எழுத்தாளரின் அனுபவங்களையும் அவரின் வாசிப்பு அனுபவங்களையும், நவீன இலக்கியம் குறித்த அவரின் புரிதல்களையும் மேலும் அவரின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல்களையும் இருவழி தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். ஆர்வமுள்ள இளம் வாசகர்கள், எழுத்தாளர்கள் இதில் ஈனைந்து கொண்டால் இந்தத்திட்டத்தை மலேசிய முழுவதும் கொண்டு செல்லலாம். இப்போதைக்கு 10 பேர் அடங்கிய ஒரு குழு தயாராக உள்ளது. விரைவிலேயே ஒரு கோப்பை தேநீர் தொடங்கப்படும். நவீன இலக்கியத்தை நோக்கிய வாசகக் குரலாக வாசிப்பின் தனித்துவத்தை உணர்ந்து கொள்ள இந்தக் கலந்துரைடாடலின் வழி பல மூத்த எழுத்தாளர்களை நேருக்கு நேர் சந்தித்து உரையாட இதுவே வாய்ப்பு.
ஜூன் மாதத்தில் 8ஆம் திகதி தொடங்கி 12ஆம் திகதிவரை எங்கள் ஒரு கோப்பைத் தேநீர் கலந்துரையாடல் வட்டம் கலந்துரையாடலைச் சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது. மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் இந்தக் கலந்துரையாடலில், பிரபல தமிழக எழுத்தாளர்கள் கோணங்கி, அய்யப்பன் மாதவன், நவநீதன், மைஅறை இதழாசிரியர் என்று பெரிய வட்டத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்த்தப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர் இந்தில் கலந்து கொள்ளலாம். இலக்கிய பகிர்வாக மட்டுமே எளிமையான முறையில் இந்தச் சந்திப்பு நடைபெருவதோடு வாசிப்பைப் பெருக்கிக் கொள்ள தரமான இலக்கிய புத்தகங்களையும் சென்னையில் வாங்கிக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: அநங்கம் இதழாசிரியர்
கே.பாலமுருகன்
016-4806241 (bala_barathi@hotmail.com)
Monday, April 6, 2009
மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கமும் 2008க்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழாவும்
இரண்டு நாள் நிகழ்வாக இந்தக் கருத்தரங்கம் கோலாலம்பூர் பசிபிக் விடுதியில் பல மூத்த - இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் பங்கெடுக்க, கொஞ்சம் நகைச்சுவையும் கொஞ்சம் சிறப்பும் கொஞ்சம் மனநிறைவுடனும் நடந்து முடிந்தது. தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியரும் சகாத்ய அகடெமி விருதின் தேர்வு குழுவில் நீதிபதியுமான இரா.மோகன் அவர்களும் வடக்கோரியா பல்கலைக்கழகத்தின் பேராசியரும் மின் இதழ் வலைப்பதிவின் ஒருங்கிணைப்பாளருமான ந.கண்ணன் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
முதல்நாள் அரங்கில் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் சிறுகதை ஒரு உலகியல் பார்வை எனும் தலைப்பில் அன்மைய சிறுகதை வளர்ச்சி குறித்து பேசினார். அவருடைய இறுதி அலசல்வரை, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ அல்லது அதற்கு பிற்பாடான இளம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்வரை யாரையும் அவர் குறிப்பிடாதது அதிர்ச்சியளித்தது.
மாற்றுக் கருத்து தெரிவிக்க மேடையேறிய உள்ளூர் எழுத்தாளர் சைபீர்முகமது “பேராசிரியர்கள் எப்பவும் தமது படிப்புக்காக மட்டுமே இலக்கியத்தையும் படைப்பையும் அணுகுகிறார்கள், சிறுகதை என்று வரும்போது ஜெயமோகனையோ எஸ்.ரா அவர்களையோ தவிர்த்துவிட்டு, சுஜாதாவரை மட்டும் குறிப்பிடுவது வருத்தமளிக்கிறது, மேலும் அது சரியான ஆய்வாகவும் அமையாது” என்று தமது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.
முதல்நாள் அரங்கில் பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் சிறுகதை ஒரு உலகியல் பார்வை எனும் தலைப்பில் அன்மைய சிறுகதை வளர்ச்சி குறித்து பேசினார். அவருடைய இறுதி அலசல்வரை, ஜெயமோகனோ, எஸ்.ராமகிருஷ்ணனோ அல்லது அதற்கு பிற்பாடான இளம் தலைமுறை சிறுகதை எழுத்தாளர்கள்வரை யாரையும் அவர் குறிப்பிடாதது அதிர்ச்சியளித்தது.
மாற்றுக் கருத்து தெரிவிக்க மேடையேறிய உள்ளூர் எழுத்தாளர் சைபீர்முகமது “பேராசிரியர்கள் எப்பவும் தமது படிப்புக்காக மட்டுமே இலக்கியத்தையும் படைப்பையும் அணுகுகிறார்கள், சிறுகதை என்று வரும்போது ஜெயமோகனையோ எஸ்.ரா அவர்களையோ தவிர்த்துவிட்டு, சுஜாதாவரை மட்டும் குறிப்பிடுவது வருத்தமளிக்கிறது, மேலும் அது சரியான ஆய்வாகவும் அமையாது” என்று தமது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.
மேலும் இரா.மோகன் அவர்கள் மலேசிய எழுத்தாளர்களின் 12 சிறந்த சிறுகதைகள் குறித்து தமது விமர்சனப் பார்வையைப் பதிவு செய்தார். ஒவ்வொரு கதைகளையும் நன்றாக அவர் சார்ந்த புரிதலில் உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பாத்திர படைப்பு தொடங்கி கதைப் பின்னல்வரை மிகவும் துல்லியமாகச் சொல்லியது பாராட்டுதலுக்குரியது. அங்கு வந்த சிலர், அவரது விமர்சனத்தில் கொஞ்சம் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தார்கள், கதைகளின் பலவீனங்களை ஆழமாக வெளிப்படுத்தாமல், வெறும் நிறைகளை மட்டும் மிகைப்படுத்திச் சொல்லிவிட்டார் என்றும் கூறப்பட்டது. நமது உள்ளூர் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், அவர்கள் எடுத்துக் காட்டிய சில நெருடல்களையும் பலவீனங்களையும்கூட அவர் குறிப்பிடாமல் ஒரு பாடத்தை ஒப்புவிப்பது போல் படைத்துவிட்டு கைத்தட்டலும் பாராட்டும் வாங்கிக் கொண்டது அதிர்ச்சியளிப்பதாக நண்பர்கள் சிலர் வருத்தப்பட்டுக் கொண்டனர்.
பிறகு , பரிசு கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமது கதை உருவான கதையைப் பற்றியும் தமது அனுபனங்களையும் பகிர்ந்து கொண்டனர். என்னுடைய அலமாரி கதையைப் பற்றி நான் குறிப்பிடுகையில் அந்தக் கதையைக் குறித்து உள்ளூர் ஆய்வாளரும் இரா.மோகன் அவர்களும் சொல்லாத சில விஷயங்களை எடுத்துக் காட்டினேன். ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் ஏற்படும்.
என்னுடைய அலமாரி கதையில் அலமாரியை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருப்பதாக பேராசியரியர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறியீட்டின் இருத்தன்மைகள் பற்றி நான் என் உரையில் குறிப்பிட்டிருந்தேன். நமது பெரியவர்களின் நினைவாக எப்பொழுதும் ஒரு பொருள் நமது வீட்டில் இருக்கும். அவர்கள் நம்முடன் வாழ்ந்த வாழ்வை நினைவுப்படுத்தும் பொருளாக அது இருக்கும். அந்தப் பொருளை அப்புறப்படுத்துவதென்பது அவர்களின் நினைவுகளைத் தொலைப்பதற்குச் சமம் என்கிற ஒரு பின்னனியை வைத்து எழுதப்பட்ட கதைதான் “அலமாரி”.
மேலும் உயிர் எழுத்து ஆசிரியரும் நவீன கவிஞருமான எழுத்தாளர் சுதீர் செந்தில் மலேசியாவிற்கு வருகைப் புரிந்திருப்பதையொட்டி அவருக்கும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் தமது உரையில் உயிர் எழுத்து இதழின் பங்களிப்பைக் குறித்தும் அது முன்னெடுத்துச் செல்லும் நவீன சிறுகதை இலக்கியத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினார். வா.மு.மோமு தொடங்கி வளரும் இளம் எழுத்தாளரகள் வரை எல்லோரும் நவீன படைப்பாளிகளாக உயிர் எழுத்தின் மூலம் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் மார்ச் மாதம் உயிர் எழுத்தில் பிரசுரமான கே.பாலமுருகனின் சிறுகதையான “தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்” கதையைப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தக் கதையை வாசித்துவிட்டு ஜெயமோகன் அளித்த விமர்சனம் பற்றியும் கூறினார்.
தமிழகத்திற்கு எழுத்தாளர்களைச் சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட புதிய திட்டத்திற்கு “பிளான்” பண்ணிக் கொண்டிருக்கிறார்.)
பிறகு பேராசிரியர் ந.கண்ணன் அவர்கள் இணையத்தில் தமிழ் இலக்கியம் என்கிற தலைப்பில் இணையத்தள பயன்பாடுகள் குறித்து மிகவும் சிறப்பாகப் பேசினார். இணைய அறிமுகம் இல்லாத பலருக்கு இது சிறந்த வழிகாட்டுதலாக அமைந்திருந்தது. மேலும் இளம் படைப்பாளிகள் உருவாவதன் மூலம் நல்ல இலக்கியத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு போக முடியும் என்றும் கூறினார்.
கருத்தரங்கில் பல நம்பிக்கை தரும் வளரும் இளம் எழுத்தாளர்கள்-வாசகர்கள் பங்கெடுத்தனர். சல்மா(தினேஷ்வரி), முனிஸ்வரன், காமினி, கஸ்தூரி, ரவிந்தீரன், விக்னேஸ் மேலும் பலர். மூத்த எழுத்தாளர்களான சீ.வடிவேல், ப.சந்திரகாந்தம், ரெ.கார்த்திகேசு, சண்முகசிவா, எஸ்.பி.பாமா, மு.அன்பு செல்வன், ராஜகுமாரன் மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பைச் செய்தனர்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
Friday, April 3, 2009
அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது "சிறந்த ஆகஸ்ட் மாதத்திற்கான கதையாகத் தேர்வுப் பெற்றது

இருள் வீட்டின் கூரையில் படியத் துவங்கும் நேரம் பார்த்து சொக்கப்பன் செட்டியார் வந்தார். அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது. பலகையால் செய்யப்பட்ட இருக்கையில் அமரும்போது அவரின் நாக்கு நுனியில் செய்தி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டின் மூலையில் படுத்திருந்த என்னை ஆயாசமாகப் பார்த்துக் கொண்டே அய்யப்பன் நாதரின் அறையைப் பார்த்தார்.
“என்னா சொக்கு தாத்தா. என்னா இந்த நேரத்துலெ?”
அப்பொழுதுதான் வீடே இருண்டிருப்பதைக் கவனித்தேன். வெளியிலிருந்து கிடைத்த கொஞ்ச வெளிச்சத்தில் சொக்கப்ப செட்டியைப் பார்க்க முடிந்தது. அசையாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். இரண்டு சுவருக்கு மத்தியில் முதுகு கொடுத்து அமர்ந்திருந்த சுகத்திலிருந்து எழுந்திருக்க மனமில்லை.
“எங்கடா ஒங்க தாத்தா? ஏஞ்சிருக்கலயா?”
சொக்கப்பன் செட்டியார் இருக்கையிலிருந்து எழுந்து அய்யப்பன் நாதர் தாத்தாவின் அறையை நெருங்கினார். அவர் உடல் மட்டும் வெளிச்சத்திலிருந்து அகன்று இருளுக்குள் நகர்ந்தது.
“தாத்தா இன்னும் ஏஞ்சிருக்கல போல. . ஏன் என்னா விசயம்?”
“ஒங்க தாத்தன் இன்னிக்கு செத்துருவான்டா. . ஒரு மணி நேரத்துலெ”

சிலிர்த்துக் கொண்டே அவர் சொன்னதைக் கேட்டு பேயறைந்தது போல எழுந்து நின்றேன். ஒரு பைத்தியக்காரக்குரிய அனைத்து சுபாவங்கள் மொத்தமாக வந்துவிட்டது போல தெரிந்தார் சொக்கப்பர். அவர் நின்றிருந்த காட்சியே வேறுமாதிரியாகத்தான் இருந்தது.
“என்னாடா ஏதோ நான் பொய் சொல்ற மாதிரி பாக்கறெ?”
“என்னா நக்கல் பண்றிங்களா தாத்தா?”
“நான் யேண்டா நக்கல் பண்ணனும்? நீ வேணும்னா போய் பாரு. . அவருக்கு மூச்சி இழுத்துக்கிட்டு இருக்கும்”
அய்யப்பன் நாதரின் கதவைத் திறந்தேன். அய்யப்பன் நாதர் எனக்குச் சொந்த தாத்தா இல்லை. எங்கள் வீட்டில் முன்பு அவரும் அவருடைய மனைவியும் வாடகைக்குத் தங்கியிருந்தார்கள்.அவர் மனைவி இறந்த பிறகு எங்களுடனே இருந்துவிட்டார். தாத்தாவுடன் கழிந்த நாட்கள் வீட்டிற்கு வெளியிலேயும் உள்ளேயும் எனக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. என்னால் தினமும் அதை நுகர முடிந்தது. தாத்தாவுடன் கடந்த ஒவ்வொரு சம்பவங்களும் கதைக்கான அனைத்து அம்சங்களுடன் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

உள்ளே நுழைந்ததும் அய்யப்பன் நாதர் தாத்தா மல்லாந்து படுத்திருந்தார். அவரது உடலைப் போர்வை பாதிவரை மூடியிருந்தது. பக்கத்தில் சென்று அவருடைய முகத்தைப் பார்த்தேன். என் திடீர் நுழைவு குறித்து அவரிடத்திலிருந்து எந்தச் சலனமும் வராததை உணர்ந்தபோது வெளியில் நின்று கொண்டிருக்கும் சொக்கப்ப செட்டியார் கடவுளாகக் காட்சித் தருவதாகப் பட்டது. சுதாரித்துக் கொண்டு அய்யப்பன் நாதர் தாத்தாவைத் தட்டி எழுப்பினேன். பெரும் மூச்சிரைப்பு பூதமாகக் கிளம்பி அவரின் வாயிலிருந்து வெளிப்பட்டது. சடாரென கைகள் கீழே விழுந்தன.
“தாத்தா! தாத்தா! என்னாச்சி?”
அம்மாவும் அண்ணனும் வெளியில் போயிருந்தார்கள். தடுமாற்றம் ஏற்பட்டதும் கைகள் செய்வதறியாமல் தாத்தாவின் உடலை நேர்ப்படுத்த முயன்றேன். வாய் பிளந்து உள்காற்று வீச்சத்துடன் வெளியில் வந்து சிதறியது. அய்யப்பன் தாத்தா வேறு எங்கோ தவறிக் கொண்டிருந்தார். சொக்கப்பன் செட்டியாரைப் பார்த்தேன். அவர் அங்கு இல்லை. வெளியில் வந்து எட்டிப் பார்த்தேன். முன்வாசல் கதவு அகல திறந்து கிடக்க மகா வெளிச்சம் உள்ளே கோடுப் போட்டிருந்தது.
மீண்டும் அய்யப்பன் தாத்தாவிடம் போனேன். அவருக்குப் பலமான மூச்சிரைத்தது. நெஞ்சு பகுதி விம்மி தனிந்தது. ஒவ்வொருமுறையும் சுவாசத்தின் பெருக்கம் எழும்பி மடியும்போது அசூரத்தனமான சப்தம் கேட்டது. அதிர்ந்து போனேன்.
“ஒங்க தாத்தன் இன்னும் ஒரு மணி நேரத்துலே செத்துருவான்”
சொக்கப்பன் செட்டியார் அந்த வார்த்தையைச் சொல்லும்போது அவருக்குப் பின்புறத்தில் நான் எதையும் கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். சொக்கப்பன் செட்டியார் நின்ற காட்சிகள் மங்கலாகவே நினைவில் தப்பி தப்பி பாய்ந்தன.

வீட்டைவிட்டு வெளியில் ஓடி வந்தேன். 15 நிமிடங்கள் கடந்திருந்தன. பக்கத்திலுள்ள கேசவன் மாமாவை அழைத்துக் கொண்டு வருவதற்குள் 20நிமிடங்கள் கடந்திருக்கும். அய்யப்பன் தாத்தாவின் வாய் பிளந்தபடியேதான் இருந்தது.
“முடியாதுடா. . உயிரு கடசி நேரத்துலெ இருக்கு! ஆம்புலன்ஸ் போன் போடுங்க”
10 நிமிடத்தில் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து வண்டி வந்தது. அய்யப்பன் தாத்தா மருத்துவனையில் போய் சேரும் போது சொக்கப்பன் செட்டியார் சொன்னதுபோல அவர் இறப்பதற்கு இன்னும் 10 நிமிடங்களே இருந்தது. தாத்தா சொக்கப்பன் செட்டியை வென்றுவிடுவாரா? அப்படி நடந்துவிட்டால் முதலில் செட்டியைத் துரத்தி துரத்தி அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எவ்வளவு திமீர்? ஆனால் அவர் சொன்னது உண்மைதானே? அப்படித்தானே நடந்து கொண்டிருக்கிறது.
அம்மாவும் அண்ணனும் வீட்டிற்குப் போய் சேய்தியறிந்து பதறியடித்துக் கொண்டு ஓடி வரும்போது அய்யப்பன் நாதர் தாத்தா இறந்திருந்தார். அப்பொழுதுதான் மருத்துவர் சொல்லிவிட்டுச் சென்றார்.
“ஐயோ! தாத்தா!. . அய்யப்பா!”
யார் யாரோ கதறிக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். வழக்கமான சம்பிரதாய சோக ஓலங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் எங்கேயோ சொக்கப்பன் செட்டியாரைப் பார்த்ததாகத் தோன்றியது. சிவநேச அண்ணன் சட்டை போடாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார். நன்றாகத் தேடினேன். அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை சொக்கப்பர் வந்திருக்கலாம். முதலில் அவருடைய கால்களில் விழ வேண்டும் போல தோன்றியது.
சிறிது நேரம் செயலற்ற அய்யப்பன் நாதரின் உடலையே வெறித்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒரு கிழவி அவளுடைய ஒப்பாரியில் அதையும் சேர்த்தே ஒப்புவித்தபோதுதான் நான் எனது இருப்பிலிருந்து தடுமாறி எங்கேயோ விழுந்துக் கொண்டிருந்தேன்.
“சொக்கப்பன் செட்டியாரு செத்து போய் ரெண்டு மணி நேரம்கூட ஆகலெ. . அதுக்குள்ள இந்த மனுசனும் போய்ட்டாரே”
ஆக்கம்: கே.பாலமுருகன்
"அலமாரி" 2008 மாதாந்திர கதை தேர்வில் ஜனவரிக்கான சிறந்த கதை

1
அன்று பக்கத்து வீட்டில் இரண்டு பருமனான உடல் கொண்ட மனிதர்கள் வந்து வெகுநேரம் நின்றிருந்தார்கள். அவர்களின் தோற்றம் பயில்வான்களைப் போல இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தேன். மருதாணி அக்காள் அவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள். பிறகு மூவரும் வீட்டினுள்ளே சென்றுவிட்டார்கள்.
“ஐயா. . கணேசா! எழுந்துருயா”
அம்மா அறைகதவோரம் நின்று கொண்டு கதவைத் தட்டினார். கட்டிலிலிருந்து எழுந்து போய் கதவைத் திறந்தேன்.
“ஏஞ்சிட்டியாடா? பக்கத்து வீட்டுலெ அந்த அலமாரியெ தூக்கி வீச போறாங்களா, போய் கொஞ்சம் ஒதவி செஞ்சிருயா, பாவம்”
“அதான் யாரோ வந்துருக்காங்களேமா, நான் எதுக்கு?”
“போய்ட்டு வாடா, எதுக்கும் ஒதவியா இருக்கும், அந்த அலமாரி என்னா கொஞ்ச நெஞ்ச பாரமா?”
உடலில் பயங்கர சோம்பல். அதையும் பொருட்படுத்தாது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். அந்த அலமாரி இந்த இடத்திலிருந்து போய்தான் ஆக வேண்டும் என்ற கடைசிகட்ட நிலைக்கு வந்தாயிற்று. வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்து வீட்டுக்குப் போய் கொண்டிருந்த போது அந்த அலமாரியை அசைத்துப் பார்க்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. புரதான அறையிலிருக்கும் புரதான அலமாரி. ஒரு 40 வருடத்திற்கு முன்பிருந்த மனிதர் பயன்படுத்திய அலமாரி.
“வாங்கயா! கொஞ்ச ஒதவி பண்ணிருங்கயா, அண்ணனோடெ கூட்டாளிங்க ரெண்டு பேரு வந்துருக்காங்க நீங்களும் போங்கயா”
வீட்டினுள்ளே செல்வதற்கு முன்பதாக தூரத்திலிருந்து ஒரு லோரி அந்த வீட்டை நோக்கி வருவதைப் பார்க்க முடிந்தது. நீளமான லோரிதான். அந்த அக்காள் நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில்தான் இருந்தார்.
“யேன்கா, வெறும் அலமாரி மட்டும்தானெ?”
“ஆமாம்யா, அதெ இங்கேந்து எடுத்து போட்டாதான் நிம்மதியா, ஒரெடியா இன்னிக்கோட அதெ ஒளிச்சி கட்டிருனும்யா”
அந்த அக்காள் மிகவும் ஆவேசமாகப் படப்படத்த சூழ்நிலையில் பேசிவிட்டு லோரியை நோக்கிச் சென்றாள்.
“வாங்க தம்பி, தோ இப்பெ எடுத்துருவோம் அலமாரியெ, தூக்க போறாங்க கொஞ்சம் நில்லுங்கெ”
அந்தப் பழைய அறைக்குள் நுழைந்த போதே அறை முழுவதும் சீதிலமடைந்து கிடப்பதை உணர முடிந்தது. ஒரு 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்து சென்றிருந்தேன். பிறகு இப்பொழுதுதான் வருகிறேன். அறையின் ஒரு மூலையில் அலமாரி சாய்வாக நின்று கொண்டிருந்தது. அந்த அலமாரியை எட்டிய தூரத்தில் ஒரு பழைய கட்டிலும் கிடந்தது. மெத்தையில் வலுவான கரைகள் படிந்து போய் தூசு மண்டி போயிருக்க வேண்டும். அதன் வர்ணம் யூகிக்க முடியாததாகத் தெரிந்தது.
“இழுத்துருலாமா?”
“காலு ஒடைஞ்சிருக்கு, வேகமா இழுத்தா பேந்துகிட்டு வந்துரும் போல, எப்படி?”
அந்த அலமாரியின் முன் நின்று கொண்டு இரு பயில்வான்களும் அலமாரியை நகர்த்துவதற்கான முயற்சியில் பலவீனமான சிந்தனைகளுக்கு உட்பட்டுப் போயிருக்க வேண்டும் போலும். அலமாரியின் உடைந்த கால்கள் அல்லது மாரியாயி பாட்டியின் தளர்வான அந்த கால்கள் அதற்கு இடமளிக்கவில்லை போல. அந்த அலமாரியை நெருங்குவதற்கு எனக்கு தைரியம் இல்லாமல்தான் போயிருந்தது. வெகு நேரம் தயங்கிக் கொண்டே அறையின் விளிம்பில் காத்திருந்தேன்.

“தம்பி, யேன்யா இன்னும் நவுத்தலெ? . . . டேய் நவுத்திராதிங்கடா படுபாவிங்களா. . . இது இங்க இருக்க கூடாதுயா, சட்டுனு நவுத்திருங்கெ. . . டேய் என் பொழப்புலெ மண்ணெ அள்ளிப் போட்டறாதிங்கடா. . . ”
காதுக்குப் பக்கத்தில் வந்து அக்காள் அப்படிக் கூறும் போது அவளுடைய குரலினூடே ஒரு வயதான கிழவியின் ஓய்ந்து போன குரலையும் கேட்பது போன்ற ஒரு திடிர் பிரமை. இரண்டு வகையான குரல் தொனி. சிறிது நேரம் அசந்து போய் அந்த அலமாரியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அலமாரியின் கதவுகள் திறந்து கிடந்தன. உண்மையின் புரதான தோற்றம்தான்.
2
1970களின் தொடக்கத்தில்தான் இந்த இடத்தில் பழகை வீடுகள் கட்டப்பட்டன. கம்போங் ராஜா என்ற பெயரில் அதிகளவில் சீனர்கள்தான் குடி புகுந்திருந்தார்கள். நான்கைந்து இந்தியக் குடும்பங்களும் இருந்தன. எங்கள் குடும்பமும் பக்கத்து வீட்டில் மாரியாயி கிழவியின் குடும்பமும்தான் கம்பத்து பாதையின் முதல் சந்திப்பில் இருந்தோம். மற்ற குடும்பமெல்லாம் பாலத்தையொட்டிய வரிசைகளில்தான் இருந்தார்கள்.
மாரியாயி கிழவி சுறுசுறுப்பானவர். கம்பத்திலேயே இடியாப்பம் விற்பனை செய்துக் கொண்டிருந்தாள். காலையிலேயே இடியாப்பம் தயார் செய்வதற்காகச் சுப்ரபாத ஓசையுடன் எழுந்து கொள்வாள். பிறகு 10மணியைப் போல இந்தக் கம்பத்திலும் பக்கத்துக் கம்பங்களிலும் இடியாப்பம் விற்பதற்காகச் சென்று விடுவாள். அப்பொழுது எனக்கு 8வயதிருக்கும். பாட்டியுடன் நல்ல சினேகம் இருந்தது. எப்பொழுதும் எனக்கு இலவசமாகவே இடியாப்பத்தைக் கொடுத்து வைப்பாள்.
பாட்டிக்கு கால்யாணமாகிய இரண்டு மகன்களும் மருமகள்களும் இருந்தார்கள். அதில் ஒன்றுதான் மருதாணி அக்காள். மிகவும் நல்லவர். அம்மாவுடன் அணுக்கமான சினேகம் இருந்தது அவளுக்கு. எப்பொழுதாவது பாட்டியின் வீட்டில் பயங்கரமான குடும்பச் சண்ட உருவாகி கம்பத்தையே உலுக்கிவிடும் அளவிற்குப் பரவிவிடும். யார் யாரோ பாட்டியின் வீட்டிற்கு நியாயம் கற்பிக்கவும் அறிவுரைகள் கூறிச் செல்லவும் குவிந்துவிடுவார்கள். பாட்டிதான் பாவம். தனியான அறையில் எப்பொழுதும் அவளுக்கென்றே ஒரு உலகம் இருந்தது.

பாட்டியின் அறைக்கு நான் பலதடவை சென்றிருக்கிறேன். வாசல் கதவிலேயே வினாயகரின் படம் இருக்கும். உள்ளே சென்ற மறுகணத்திலேயே கண்களை உறுத்திக் கொண்டு நிற்பது பாட்டியின் அந்தப் பலகை அலமாரிதான். என்னைப் போல 6 சிறுவர்கள் ஒரே நேரத்திலேயே அந்த அலமாரியில் நுழைந்து வசதியாகப் படுத்துக் கொள்ளூம் அளவிற்கு அந்த அலமாரியின் உள்பகுதி காட்சியளிக்கும். பாட்டியின் துணிகள் ஒரு பக்கம் குவிந்திருக்க, அலமாரியின் கீழ் டுரோவரில் ஒரு சிறிய பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.
“பாட்டி இதெ மட்டும் யேன் பூட்டி வச்சிருக்கிங்க?”
“அங்கதான் பாட்டி காசுலாம் வெச்சிருக்கென்யா. நானே சேத்து வச்ச காசு. யாரும் தொடக் கூடாது”
அந்த அலமாரிக்கு மூன்று கதவுகள். ஒரு கதவு மட்டும் சாத்தி வைத்தாலும் திறந்து கொள்ளூம். நாதாங்கி பலவீனமாக இருந்தது போல, திறக்கும் போது பயங்கர முனகலை ஏற்படுத்திவிடும். அலமாரியின் முகத்தில் ஒரு மாரியம்மன் படம் ஒட்டப்பட்டிருந்து பின்னாளில் அது வெளுத்துப் போய் சிதைந்து போயிருக்கு வேண்டும். அதன் வடுவும் மாரியம்மனின் தெளிவற்ற தோற்றமும் தெரிந்து கொண்டிருக்கும்.
எங்கள் வீட்டின் முதல் அறையும் பாட்டியின் அறையும் 2 ஆள் இடைவெளியில்தான் பிரிந்திருக்கும். இரவு நேரங்களில் அந்த அலமாரி திறந்து மூடும் சத்தமும், டுரோவரைத் திறந்து நிதானித்துவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் டுரோவரை மூடி பூட்டுப் போடும் சத்தமும் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கும். தூரத்தில் கேட்பது போல தெரிந்தாலும் நாளடைவில் அந்த ஓசைகள் பழகிப் போயிருந்தது.
சிறிது காலங்களுக்குப் பிறகு ஒரு நாள் மருதாணி அக்காள் பதறியடிட்துக் கொண்டு எங்கள் வீட்டை நோக்கிக் கதறுவது கேட்டதும் எல்லோருமே அவள் வீட்டிற்கு ஓடினோம். மாரியாயி பாட்டி அவளுடைய கட்டிலில் சாய்ந்து இறந்து கிடந்தாள். இரவோடு இரவாக மாரடைப்பில் செத்துவிட்டாள் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பாட்டியின் அலமாரியின் ஒரு கதவு மட்டும் வழக்கம்போல திறந்தே கிடந்தது எந்த சலனமுமின்றி. கீழ் டுரோவின் பூட்டுத் திறந்து கிடந்தது. வீட்டிற்கு வந்ததும் அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது நன்றாகவே கேட்டது.

“நேத்து ராத்திரிலெ பாட்டி ரூம்புலெ எந்த சத்தமும் கேக்கலெ, எப்பவும் கேக்கும் அந்த அலமாரி சத்தம்கூட கேக்கலடி, அப்பயெ சந்தேகமா இருந்துச்சு”
அப்பா கூறியது என்னமோ இறப்பிற்குப் பிறகு சொல்லப்படும் சடங்கு அடையாளங்களைப் போலவே தெரிந்தது. இருந்தாலும் நேற்று இரவு பாட்டி அறையில் எந்தச் சத்தமும் கேட்கவில்லைதான்.
3
காலங்கள் கடந்தோடின. மாரியாயி பாட்டி இல்லாத வீடு அடிகடி வழக்கமான சண்டைகள் தோன்றி மறையும் தடமாக மட்டுமே இருந்தது. அந்த வீட்டு மனிதர்கள்கூட யாருடனும் நெருங்கி பழகும் குணமில்லாதவர்களாக இருந்தார்கள். மருதாணி அக்காள் மட்டும் அவ்வப்போது அம்மாவிடன் வந்து பேசிவிட்டுப் போவாள்.
அன்று அப்பா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார். அம்மா வீட்டு ஹாலில் படுத்துக் கொண்டார். அன்றென்னமோ பெளவர்ணமி வெளிச்சத்தை உணர வேண்டும் என்பதற்காக அப்பா அறையில் போய் படுத்துக் கொண்டேன். மணி 12க்கு மேல் ஆகியும் தூக்கம் எட்டவில்லை. வெறுமனே கட்டிலில் சரிந்திருந்தேன்.
“காசு காசுனு பொணம் தின்னுறானுங்கடா, திருட்டுப் பையலுங்கெ”
அந்த நிசப்தத்தில் திடீரென்று யாரோ முரட்டுத்தனமாகக் கத்துவது கேட்டதும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் நடுங்கிப் போயிருந்தது. ஜன்னல் வழியாக மிக நெருக்கத்தில் பாட்டியின் இருண்ட அறைதான் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளாமல் ஜன்னலை இலேசாகத் திறந்து பார்த்தேன். வெளி நிலா வெளிச்சத்தில் விரட்டியடிக்க இயலாத கொஞ்சம் இருளுடன் அமைதியில் சுருண்டிருந்தது. பாட்டியின் அறை ஜன்னல் இலேசாகத் திறந்து கிடந்தும் வெளிச்சம் உள்ளே நகரவில்லைதான்.
பிரமையாக இருக்கலாம் என்று மீண்டும் கந்த கஷ்டி உச்சரிப்புடன் படுத்துக் கொண்டேன். இப்பொழுது என் உடல் பாரமாகிப் போய்க் கொண்டிருந்தது. எந்தப் பக்கமும் திரும்பவியலாத உறுதியான பிடிப்பு எங்கிருந்தோ என் மீது கவிழ்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பல வருடங்களுக்கு முன் நான் கேட்டுப் பழகிப் போன அதே சத்தம் எனக்கு சமீபத்தில் வெகு இயல்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது. மாரியாயி பாட்டியின் அலமாரி திறக்கும் சத்தம்தான்.

“மா நேத்து நான் கேட்டன்மா, இவ்வள நாள் ஒங்களுக்கு ஏதும் கேக்கலையா?”
“இல்லெடா, அப்படி ஏதும் இருக்காது. சும்மா பயந்துகிட்டெ படுத்திருப்பெ, அதான்”
“இல்லெமா நான் நிதானத்துலெதான் இருந்தேன். நல்லா கேக்க முடிஞ்சது, பாட்டியோட அலமாரியெ யாரோ தொறந்தாங்கம்மா”
அப்பாவும் அந்தச் சத்தத்தைப் பல தடவை கேட்டுருக்கிறார் என்ற உண்மையும் அப்பொழுதுதான் வெளிப்பட்டது. இவ்வளவு நாள் அதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பதுகூட அப்பொழுதுதான் தெரிந்தது. அப்பாவின் தைரியத்தையும் அதே சமயம் அந்த ஓசைகளின் பீதியையும் நினைத்துக் குழம்பிப் போயிருந்தேன்.
மறுநாள் இரவிலும் என் அறையிலிருந்து கொண்டே அதே ஓசைகளைக் கேட்க முடிந்தது. பாட்டியின் அலமாரி கதவுகள் திறக்கும் சத்தமும் அதே போல கீழ் டுரோவரைத் திறந்து மூடும் சத்தமும்.
விடிந்ததும் மருதாணி அக்காள் வீட்டிற்கு வெளியில் வெளுத்துப் போன முகத்துடன் நின்றிருந்தாள். சில வருடங்களாக அவளுடைய தோற்றம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது நோயாக இருக்கலாம் அல்லது மூப்பு காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டதுண்டு. அக்காவிடம் பேசியும் பல மாதங்கள் ஆகியிருக்கும்தான்.
“கா. . ஒங்ககிட்டெ ஒன்னு சொல்லனும்கா”
அவள் பதிலேதும் சொல்லாமல்தான் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கா முந்தா நேத்துலேந்து பாட்டி ரூம்புலேந்து ஏதோ சத்தம்கா, முன்ன மாதிரியெ பாட்டி எப்பவும் அலமாரியெ மூடற சத்தம். நல்லா கேட்டென் கா”
அக்காவின் முகத்தில் அப்பொழுது ஏதோ வினோதமான கலவரத்தைப் பார்க்க முடிந்தது. அவளுடைய கண்கள் சிவந்திருந்தன.
“ஒனக்கும் கேட்டுச்சா? நான் அன்னாடம் செத்துக்கிட்டு இருக்கெண்டா. . அந்த மாரியாயி கெழவியோட தொல்லெ தாங்கலடா. . சத்தம் காதுலெ கேட்டுக்கிட்டெ இருக்கு. . அந்த அலமாரியோட சத்தம். யாருமெ நம்ப மாட்டுறாங்க. . நான் செத்துக்கிட்டு இருக்கென்”
தூக்கிவாறிப் போட்டது எனக்கு. சிறிது நேரத்தில் சுயமிழந்து போய் அக்காவுடன் பல வருடங்களுக்கு முன் சென்றுவிட்டு வந்தது போல இருந்தது. சுதாரித்துக் கொண்டு பார்க்கும் போது அக்காள் வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தாள்.
சில நாட்களுக்குப் பிறகு அக்காவிற்குப் பயங்கர காய்ச்சள் ஏற்பட்டு, பல மருத்துவர்களைச் சந்தித்தும் குணமாகாமல் பல சாமியார்களையும் பார்த்து விட்டார்கள். அந்தச் சமயங்களிலெல்லாம் பாட்டி அறையில் கேட்கும் அந்தச் சத்தம் குறைந்ததில்லைதான். எனக்கு, அப்பாவிற்கு மேலும் அக்காவிற்கு மட்டும் கேட்கும் அந்தச் சத்தத்தின் அடையாளத்தை நிரூபிக்கவும் முடியாமல் தெளிவடையவும் முடியாமல் தவித்துப் போயிருந்தோம்.
பிறகு ஏதோ மலாய்க்காரச் சாமியாரின் வார்த்தைகளில்தான் நம்பிக்கை ஏற்பட்டு, பாட்டியின் ஆவி இன்னமும் இந்த வீட்டில் அலைந்து கொண்டிருக்கிறது, அவர் இந்த அலமாரிக்காகத்தான் இந்த வீட்டையே சுற்றி வருகிறார் என்றும் சொல்லி, சில சாங்கியங்களும் செய்து கொடுத்தார்.
4
அலமாரியை மெதுவாக தூக்கியும் நகர்த்தியும் வீட்டின் வாசல்வரை கொண்டு வந்து சேர்த்து விட்டோம். இவ்வளவு கனமான ஒரு பொருளை இதுவரை நான் உணர்ந்ததே இல்லைதான்.அவ்வப்போது கதவுகள் திறந்து கொண்டு தடங்கலாக இருந்தன. கதவுகளை ஒரு கயிற்றால் கட்டிவிட்டோம். அலமாரியை நான்கு பேர் தூக்கியும் லோரியில் ஏற்ற முடியவில்லைதான். வெறும் அலமாரி இவ்வளவு கனமாக இருக்காது என்பது மட்டும் எனக்குத் தெளிவாக மனதில் பட்டது.
“பக்கத்து வீட்டுலெ அந்தச் சீனனெ கூப்டுங்கெகா கொஞ்ச நேரம் தூக்கி வச்சிரலாம்”
மேலும் இரண்டு பேர் வந்தது கொஞ்சம் சுலபமாக இருந்தது. சிரமப்பட்டு அலமாரியைத் தூக்கி லோரியில் ஏற்றிவிட்டோம். அலமாரி சாய்வாக நின்று கொண்டிருந்தது. கயிறு அறுந்து போய் கதவுகள் மீண்டும் திறந்து கொண்டன.
“சரிங்கங்கெ, காசெ அவரு வந்தோனெ செட்டல் பண்ணிட சொல்லிடுறென்”
லோரி கிளம்புவதற்குத் தயாரானது. எல்லோரும் போய் விட்டனர். நான் மட்டும் லோரி கிளம்பிச் செல்லும்வரையில் வீட்டு முன்கதவைப் பிடித்துக் கொண்டு வெறித்துக் கொண்டிருந்தேன். அலமாரியின் கனம் தாள முடியாமல் லோரி ஒரு சிரமத்துடன் அங்கிருந்து கிளம்பி பெரிய சாலைக்குச் சென்று கொண்டிருந்தது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
--------------------------------------------------------------------------------
bala_barathi@hotmail.com
Saturday, March 28, 2009
ஜெயமோகனிடமிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள பாலமுருகன் தாமதத்துக்கு மன்னிக்கவும். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் எழுதிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருக்கிறேன். மலேசியாவில் நீங்களும் சிங்கப்பூரில் இந்திரஜித்தும் சமீபத்தில் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக உருப்பெற்று வருகிறீர்கள். மிக மகிழ்ச்சியான விஷயம் இது. உங்கள் கதைகள் சிலவற்றை இணையத்திலும் இதழ்களிலும் வாசித்தேன். பொதுவாக ஒருவரை அவரது கதைகளை நூல்வடிவில் வந்தபின்னர்தான் ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். உதாரணமாக இந்திரஜித்தின் கதைகளை நான் உயிர்மை வெளியீடாக அவ்ந்த தொகுப்பில் முழுமையாக வாசித்தபோது ஒரு கணிப்பு உருவானது. ஆனால் முதல் சிறுகதைத்தொகுதியைக் கவனமாகவே கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தது ஐந்து வேறுபட்ட நல்ல கதைகள் இல்லாமல் வந்தால் சிறுகதைத்தொகுதி கவனிப்பற்றுப் போய்விட வாய்ப்புண்டு. ஒருமுறை பிடிக்காமல் போன எழுத்தாளரை தமிழ் வாசகர்கள் மறுபடியும் வாசிக்க பல வருடங்கள் ஆகும். முதல் சிறுகதைத்தொகுதியே பேசப்படுவது அவசியம் இப்போதைக்கு உங்கள் கதைகளின் பலம் பலவீனம் இரண்டைப்பற்றிய முதல் மதிப்பீட்டைச் சொல்லிவிடுகிறேன். பலம், வித்தியாசமான கருக்கள். வெறுமே கூறுமுறைகளில் விளையாட்டுகளைச் செய்யாமல் கூறும் விஷயங்கள் சார்ந்து முன்னகர நினைக்கிறீர்கள். இத்தகைய அம்சம் கொண்ட எழுத்தாளர்கள் விரைவிலேயே தங்கள் தனித்த கூறுமுறையையும் கண்டுகொள்வார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருக்கள் உங்களை தத்துவம், அரசியல், சமூகவியல்,அறிவியல் என பல தளங்களுக்குக் கொண்டு சென்று அலைக்கழிக்கும். அதன் மூலம் நீங்கள் புதிதாக எழுத வேண்டிய நிலை உருவாகும். இன்று உங்கள் கதைகளின் முக்கியமான குறைபாடு சித்தரிப்பு , உரையாடல் இரண்டிலும் உள்ள பயிற்சிக் குறைவுதான். பயிற்சிக்குறைவு இருக்கும்போது நிகழும் முதல் பிரச்சினை , வழக்கமான சொற்றொடர்கள் வந்து விழுவது. ஒரு கதையை எழுதியபின் ஆரம்பநாட்களில் அதில் உள்ள பழகிப்போன அம்சங்கள் என்னென்ன என்பதை கூர்ந்து நோக்கி பொறுக்கி வீசுவதுதான். ஒருமுறை அப்படி பொறுக்கி வீசியவை திரும்ப நிகழ்வதில்லை என்பது இலக்கிய ஆக்கத்தின் ரகசியங்களில் முக்கியமானது. “டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள். [மனித நகர்வும் இரண்டாவது பிளவும்] எத்தனை சர்வ சாதாரணமான சொற்றொடர். அத்தகைய சொற்றொடர்கள் வணிகக்கதைகளுக்கே உரியவை. அது இல்லாமல் அந்த இடத்தைச் சொல்லிவிட முடியாதா என்ன? அப்படி சொல்வதற்கான வழிகளையே உங்கள் மனம் நாடவேண்டும். அதேபோல வடிவ அமைப்பில் எப்போதும் புதிய சாத்தியங்களுக்கான கவனம் தேவை. அது எழுதுவதன் ஆரம்பகால பயிற்சிகளில் முக்கியமானது. இதை 'அழுத்துதல்' என்று சொல்வேன். கதையை ஓர் அழுத்து அழுத்தி எத்தனை குறைவான இடத்துக்குள் அது இருக்க முடியுமோ அபப்டி இருக்கச் செய்வது. செறிவாக்கம். அதை தமிழில் சுஜாதாவில் இருந்து கற்றுக்கொள்ளலாம். நான் மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கதையை எழுதியிருந்தால் ‘எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்’ என்ற வரியில் கதையை ஆரம்பித்திருப்பேன். அதில் உள்ள கவன ஈர்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவன் போகும்வழியிலேயே அவன் உளநிலையைச் சொல்லி மனதத்துவ நிபுணர் அறைக்குள் கதையை கொண்டுசென்றிருப்பேன். கடைசியாக கதையை ஒரு ஒற்றைப்பரப்பாக -மொசைக் என்று சொல்லலாமா?-- ஆக்கும் பயிற்சி. கதையின் ஓட்டத்தில் பொம்மலாட்டத்தில் ஆட்டக்காரன் கை தெரிவதுபோல ஆசிரியன் தெரியக்கூடாது. உங்கள் இக்கதையில் கதை 'நான்' இல் இருந்து மருத்துவருக்குத் தாவும் இடம் அப்படிப்பட்டது. புனைவின் ஏதேனும் உத்தியைக் கொண்டு அதை இணைத்திருக்கலாம். இதெல்லாமே எழுதி எழுதி வரும் தேர்ச்சிகள் மட்டுமே. நம்கதையை நாமே வாசித்து வாசித்து குறைகண்டுபிடிப்பதன் வழியாக விவாதங்கள் வழியாக தாண்டிச்செல்லக் கூடியவை. தொடர்ச்சியாக எழுதுங்கள். அன்புடன் ஜெ |
Tuesday, March 24, 2009
மனித நகர்வும் இரண்டாவது பிளவும்- அமரர் சுஜாதா அறிவியல் புனைக்கதை போட்டி 2009-ல் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்பு பரிசு பெற்ற கதை

“ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
இரண்டு இயக்கங்கள், ஒரே சூழலில், ஒரே நேரத்தில்.
1. அவன் என்னைப் பார்த்துக் கையசைக்கிறான்
2. அவனேதான் அவனுக்கு அருகிலேயே இரண்டாவது பிளவாக நின்று கொண்டு மற்றொருவன் தொலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறான்
1
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியிருந்தது. பிரமை, வெறும் பிரமை என்று அலட்சியமாக இருக்க முயற்சித்தேன். இருள் சூழ்ந்து கொள்ளும் தருணங்களில் மனம் உள்ளார்ந்த பதற்றத்திற்கும் குழப்பத்திற்கும் பலியாகிக் கொண்டிருப்பதால், எதையாவது செய்தாக வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தேன். நான்கு கைகள், நான்கு கால்கள் இரு உடல் பிசகலான காட்சி படிமங்கள்.
எங்கே செல்வது? யாரைச் சந்திப்பது? நகரம் சார்ந்த வாழ்வு பலரின் நெருக்கத்தையும் பழக்கங்களையும் கானல் நீர் போல வெறும் மதிய வெக்கையாக மட்டுமே ஆக்கிவிட்டிருந்தது. யாரையும் தெரியவில்லை.
நகருக்குள் நுழைந்து வெறுமனே என்னைக் கடக்கும் மனித முகங்களை ஆழமாகப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் சூழலைப் பற்றிய அலட்சியமும் சக மனிதனைப் பற்றிய நுகர்வும் கரைந்து போயிருந்தது. எனக்கான பிரச்சனையைப் பகிர்ந்து கொள்ள ஒர் ஆள்கூட எஞ்சவில்லை. பேருந்து நிறுத்தத்தினோரமாக வந்தபோதுதான் பட்டணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குடியிருப்பில் தனபாலன் என்கிற மனோத்துவ மருத்துவரும் அறிவியல் ஆய்வுனருமான இருப்பது குறித்து நினைவுக்கு வந்தது. அவர்தான் சரியான ஆள் என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் அந்தக் குடியிருப்பிற்குச் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு யாரைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறார்கள். எல்லோரையும் வினோதமாகப் பார்க்கப் பழகியிருந்தேன். என் கண்களில் அச்சமும் ஆச்சர்யமும் அப்பட்டமாகத் தெரிய துவங்கியிருந்தன. மருத்துவர் இருக்கும் குடியிருப்பு நெருங்கும்வரை எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பேருந்தைவிட்டு இறங்கியதும் சாலை வெயிலில் கொதித்துக் கொண்டிருந்தது.
“யேங்க. . இங்க தனபாலன் சார் வீடு எந்தப் பக்கம்?”
எனக்கு முன் நின்றிருந்த அந்த வழிபோக்கன் ஒரே சமயங்களில் இரு வேறு செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒன்று: என்னிடம் அவர் வீட்டைக் காட்டிக் கொண்டிருந்தான், மற்றொன்று அவனேதான் வேறு எங்கோ நடக்கத் தொடங்கினான். இரண்டு பிளவுகளாக அவனின் முகம் சிதைந்திருந்தது. கடவுளை நினைத்துக் கொண்டு, நேராக அவர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்.

தனபாலன் மருத்துவரின் வீடு இருண்டிருந்தது. முன் பக்கக்கதவில் மூளையின் இரு பாகங்களின் உள் புகைப்படங்களும், அதற்கும் மேலாக ஏதோ ஸ்பானிய தத்துவ பழமொழியும் இடம் பெற்றிருந்தன. “உனக்கு முன்னே எல்லாமும் விந்தைதான், உன்னையும் உட்பட” என்றவாறு தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.
“டாக்டரெ பாக்கனும். . உடனே. . பிளிஸ்”
“இருங்க. . பாக்கலாம். . டாக்டர் ஓய்வாதான் இருக்காரு”
அறைக்குள் நுழைந்ததும் மருத்துவர் தனபாலன் மனோத்துவ புத்தகம் ஒன்றைக் கையில் வைத்திருந்தார். சடங்கிற்காக இருக்கலாம். அமைதியாக அவருக்கு முன் அமர்ந்தேன். அவர் சிறிது நேரம் என் கண்களின் அசைவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்கள் கரு விழி அசாதரண அசைவுலெ இருக்கு. . யாரை இப்படித் தேடறீங்க?”
“யாரையும் இல்லெ டாக்டர். . எனக்கு மனக் கோளாறா இல்லெ அது உண்மையானு தெரிஞ்சிகிட்டு போலாம்னு வந்தேன் டாக்டர். . என்னாலெ முடிலெ. . பெரிய ஆபத்தான கண்டத்துலே இருக்கேன். . நான் இருக்கறது என்ன மாதிரியான உலகம்னு சுதாரிச்சிக்க முடிலெ டாக்டர்”

“பதறாம சொல்லுங்கெ. . ஒருத்தரோட முகத்தெ பார்த்தே என்னால சொல்ல முடியும். . உங்களுக்குள்ள பெரிய பிரளயம் தொடர்பான மாற்றம் இருக்கு, உங்க உடம்புலே ஏதோ நடக்குது. .”
“டாக்டர். . என் முன்னுக்கு இப்பெ ரெண்டு உலகம் நிகழ்ந்துகிட்டு இருக்குனு சொன்னா நம்புவீங்களா? எனக்கு முன்ன நீங்க ரெண்டா இருக்கீங்க. . டாக்டர் அடுத்து நீங்க என்னா செய்யப் போறீங்கனு என்னாலே சொல்ல முடியும் டாக்டர். . அதோ உங்க பக்கத்துலே நீங்கதான் மேசைலேந்து கீழே விழுந்த பேனாவெ எடுத்து வச்சிக்கிட்டு இருக்கீங்க”
நான் சொல்லி முடிக்கவும் அவருடைய பேனா கீழே விழவும் சரியாக இருந்தது. அவர் அதை எடுத்து வைத்துவிட்டு என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“டாக்டர் எது நிஜம்னே தெரிலெ டாக்டர். . ஏற்கனவே நடந்துவிடுகிற இதெல்லாம் உண்மையா இல்ல இப்பெ நடக்கறது உண்மையா. . எல்லாமே ரெண்டு ரெண்டான இயக்கத்துலே. . அளவுக்கு அதிகமான ஆட்கள், மத்தவங்க பாக்கறதெ விட ரெண்டு மடங்கா நான் பாக்கறெ இயக்கங்கள். . ஐயோ டாக்டர் பைத்தியம் பிடிக்கறெ மாதிரி இருக்கு”
2
“டாக்டர் அந்த ஆளுக்கு என்ன ஆச்சி டாக்டர்?”
“அவர இப்போதைக்கு மருத்துவமனைலே பாதுகாப்பா வச்சிருக்காங்கெ. . ரொம்ப நாளைக்கு அவராலே நிலைக்க முடியுமானு எனக்கே தெரிலே. . யாரும் சந்திக்க முடியாத, யாரும் அனுபவிக்க முடியாத ஒரு சக்தியை, அவர் உணர்ந்துகிட்டு இருக்காரு. . அது மாபெரும் பிரபஞ்ச இயக்கத்தின் இரகசியம். . அவர் நம்மிடமிருந்து விலகி மூனாவதான ஒரு வட்டத்துக்குள்ள இருக்காரு. . அதுலெ அவராலெ எப்படி நுழைய முடிஞ்சதுனே தெரில. . நம்பளோட கட்டுப்பட்ட புலன்களைக் கொண்டு அதைத் தீர்மானிக்க முடியலே. . நான் என் நிலைப்பாட்டை ஆராஞ்சி சொல்லிட்டேன். . ஆனா யாரும் நம்ப மாட்டறாங்கெ.. அவருக்குப் பைத்தியம் என்ற நிலைபாடு அவங்களுக்கு”

“அப்படி என்னாச்சி டாக்டர் அவருக்கு?”
“நான் சொன்னா அது யாருக்கும் புரிய போறதில்லெ. . இது நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட சூட்சமத்தின் பாதிப்பு. . 4 மணி நேரம் அவரோட பேசனதுலே அவரோட நிலைமையே என்னால அனுமானிக்க முடிஞ்சது. . ஆய்வு செஞ்சேன். . திடுகிடும் ஓர் அபாய சக்தியெ அவரு உணர ஆரம்பிச்சிட்டாரு. பிரபஞ்சத்தின் இயக்க சக்தியில் மனுசன் தமது இரண்டாவது பிம்பத்தெ பார்க்க ஆரம்பிச்சிட்டான்”
“இரண்டாவது பிம்பமா? அப்படினா?”
“இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லாம் உயிருள்ள பொருள்களின் இயல்பான நகர்வின் மீது புறச்சூழலின் வற்புறுத்தல் இல்லாதவரை அது நேர்க்கோட்டில் தன்னுடைய அசலான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். தம்மீது பயன்படுத்தக்கூடிய புறச்சக்தியின் பாதிப்பை எதிர்க்கும் இயல்புநிலை, இதுதான் நியூட்டனின் முதல் விதி. அதைத்தான் ஆங்கிலத்துலே இப்படிச் சொல்லுவாங்கெ:
Newton's First law of motion states that: Inertia is
"An object at rest tends to stay at rest and an object in motion tends to stay in motion with the same speed and in the same direction unless acted upon by an external force."
“அதுக்கும் அவரோட நிலைக்கும் என்ன தொடர்பு டாக்டர்?”
“மனிதனைச் சுற்றி எப்பொழுதும் அவனுடைய இயல்புநிலையைப் பாதிக்கக்கூடிய புறச்சக்தி இருந்து கொண்டே இருக்க பல வாய்ப்புகள் இருக்கு. . காரணம் நம் கண்களுக்குப் புலப்படாத ஆயிரக்கணக்கான அணுக்கள் காற்றில் கலந்துள்ளன. அது ஒவ்வொன்றும் தனியொரு சக்தியைக் கொண்டிருக்கிறது. ஆக்ஷிஜன், ஹைட்ரோஜன் என்று நிறையவே இருக்கு, அதுக்கு ஒவ்வொன்னுக்கும் அசைவும் வேகமும் இருக்கு, எப்போதும் நம் கண்ணுக்குப் புலப்படாத லட்சக்கணக்கான அணுக்களின் அசைவுகள் ஒவ்வொரு மனிதனின் செயலைச் சுற்றியும் அதுவும் நிகழ்ந்துகிட்டு இருக்கு, இந்த இரு நிகழ்வுகளும் வெவ்வேறு தன்மையும் காலமும் அளவும் கொண்டவை,”
“அப்படிப் பார்த்தாலும். . அவரு சொல்றெ மாதிரி அவருக்கு எல்லாமே ரெண்டு ரெண்டுதானே தெரியுது, ஒரெ மனுசன் எப்படி ஒரே நேரத்துலெ ரெண்டா இயங்க முடியும்?”

“அதுதான் நான் சொன்ன இரண்டாவது பிம்பம். . நியூட்டனின் முதல் விதியின் பால் உருவாகும் பிம்பம் அது”
“கொஞ்சம்கூட அந்தச் சூட்சமம் புலப்படல டாக்டர்”
“கொஞ்சம் நிதானமாக யோசிச்சி பாருங்க. . அணுக்களின் பிளவினால்தான் பிரபஞ்சமே உருவாகியது என்று ஒரு தியோரி இருக்கு, பிக் பெங் தியோரி, அதன்படி மனுசனோட இயக்கத்தில் Inertia என்கிற சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது, அதுதான் மனுசனோட ஒவ்வொரு இயக்கத்தையும் நடுநிலமை தவறாமல் பாதுகாத்து புறச்சக்தியால் ஏற்படும் மாறுதல்களை எதிர்த்து மனித செயலின் இயல்புநிலையை தற்காத்து வருது, இது இயல்பான இயக்கம், ஆனா காத்துலே பரவிக்கிட்டு இருக்கற லட்சக்கணக்கான அணுக்களின் அசைவால் நகர்வால் மனிதனின் செயலில் Inertia சக்தியில் பயங்கரமான பிளவு ஏற்படுகிறது, தன் செயலின் அசலான நிலையை தற்காக்கும் மனிதனுடைய அந்தச் சக்தியும், கண்களுக்குப் புலப்படாத அபார நகர்வைக் கொண்டிருக்கும் அணுக்களும் மோதிக் கொள்ளும்போது அங்கு மாபெரும் எதிர்ப்பு சக்தியும் பிம்ப உடைப்பும் நடைபெருது. . அந்தப் பிளவுலெதான் மனிதனுடைய செயல் இரண்டாக உடைகிறது, அணுக்களுக்குள் ஏற்படும் அதிர்வின்மை காரணத்தால் அது மனிதனின் செயலில் பாதியைத் தனக்குள் நிரப்பிக் கொள்கிறது. . எதிரொளிக்கிறது . . உறிஞ்சி கொள்கிறது என்றே சொல்லலாம். .”
“டாக்டர். . மனித குளத்திற்கு புலப்படாத ஏதோ ஒன்றை நீங்க கண்டுபிடிக்க முயற்சி செய்றீங்க. . பைத்தியக்கார நிலைமை ஏற்பட்டுரும் டாக்டர். . அறிவுக்கு எட்டவே மாட்டுது. . பிளிஸ். . குழப்பம் வேண்டாம்”

“இதுலே குழம்ப ஒன்னும் இல்ல. . நமக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு. . அதுலெ இதுவும் ஒன்னு”
“எப்படி டாக்டர்? அணுக்கள் பிளவு சரி. . அதெப்படி என் உடல் செய்யப் போகும் அடுத்த நொடியை அணுக்கள் உறிஞ்சிக் கொள்ள முடியும்? இது எப்படிச் சாத்தியம்?”
“நிதானமா யோசிங்க. உங்க மண்டைலெ படார்னு கட்டையிலெ அடிச்சா. . எப்படி இருக்கும்? அந்தக் கணத்துலே நீங்க மயங்கி விழும் முன் நீங்க பார்க்கக்கூடிய பொருள்கள் இரண்டாகவோ நான்காகவோ பிளந்து பற்பல சில்லுகளாக விரிவது போல் காட்சியளிக்கும் அல்லவா? அது மாதிரிதான். கண்ணாடிலே உங்க பிம்பத்தெ எப்படிப் பார்க்க முடியுது? நீங்க செய்யற எல்லாத்தையும் அப்படியே கொஞ்சம்கூட பிசகலில்லாமல் உங்களோட பிம்பம் செய்யும். . இது ஆரம்பத்தில் சாத்தியமாயிருக்குமா? ஆனால் நிஜத்தில் இருக்கிறதே. . அது மாதிரிதான், அணுக்கள் உங்களின் அடுத்த நகர்வை எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது. . அந்த அணுக்களின் பிளவால் நமது பிம்பம் இரண்டாக உடைந்து ஒன்று நிஜ உலகத்திலும் மற்றொன்று அணுக்களின் உலகத்திலும் அதாவது அணுக்கள் நகரும் நுண்ணிய தளத்தில் இயங்கத் தொடங்குகின்றன, அந்த இரண்டாவது தளத்தின் நுண்ணிய இயக்கங்களைத்தான் அந்த மனுசன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். . இது எப்படி ஆனது என்று என்னாலயும் கண்டுபிடிக்க முடிலெ. . அது அதிசயம்!”
3
இருள் சூழ்ந்திருந்த அறை. வெளி உலகத்தின் வெளிச்சம் என்னிடமிருந்து அபக்கறிக்கப்பட்டிருந்தது. யாரையும் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. என்னையும் யாரும் பார்க்க மறுக்கிறார்கள். யார் பேசினாலும் எனக்கு விளங்கிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. குரல்கள் இரண்டாக உடைந்து எனக்குள் சரிந்து கொள்கின்றன. எல்லோரும் உளறுவது போல கேட்கிறது.
“உங்களுக்கு மனப்பிறழ்வு! மனச்சிதைவு! பைத்தியம்! உங்க மூளை செத்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறோம்” இப்படிப் பல தீர்மானங்களை எடுத்துக் கொண்டு என்னை ஆய்வு செய்யப் போவதாகக் கூறினார்கள். குழறுபடியான அவர்களின் உடைந்த சொற்களின் வழி நான் புரிந்து கொண்டவை இவ்வளவுதான். நானும், என்னைப் போலவே எனக்கு முன் 10 வினாடி கால அவகாசத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மற்றொரு நானும் தனித்த அறையில் விடப்பட்டிருந்தோம். அவன் என்கிற நான் சென்ற இடமெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய இயக்கத்தையே 10 வினாடிக்கு முன்னால் நான் பார்க்கத் தொடங்கினேன். அது என் உடலா அல்லது என்னுடைய ஸ்தூல உடலா? தெரியவில்லை. மூளை குழம்பு இறுக்கமாகியது. எல்லாமும் பிரமையாக மிதப்பது போல் காட்சியளிக்கத் துவங்கின.
அந்த அறையிலுள்ள தடித்த கம்பிகளில் கொஞ்சம் கொஞ்சமாக என் தலையைக் கொண்டு மோதி கொள்வதையும் என் தலையின் ஓடு உடைந்து பிளப்பதையும் 10 வினாடிகளுக்கு முன்பு இரண்டாவது பிம்பமாக உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
4
“டாக்டர் அந்த மனசனோட இறப்புக்கு என்ன சொல்லப் போறீங்க? அவரோட உடம்புகிட்ட உக்காந்து ஏதோ யோசிச்சிக்கிட்டு இருந்தீங்களே?”
“இது இனி நடக்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டா. . என்ன ஆகும்னு நெனைச்சேன். .. . நடக்கலாம் நடக்காமலும் போகலாம். . தெரிலெ! நடக்கத் தொடங்கனுச்சினா. . மனுசனோட மூளை இயங்காம போவவும் வாய்ப்பு இருக்கு!”
மனோத்துவ மருத்துவராகவும் அறிவியல் ஆய்வுனராகவும் இவ்வளவு காலம் பணியாற்றிய எனக்கு இது பிரபஞ்ச விந்தையாகவே தோன்றுகிறது. என் அறைக்குள் நுழைந்து சிறிது நேரம் அமைதியில் உறைந்திருந்தேன். 10 நிமிடத்திற்குப் பிறகு யாரோ என் அறைக் கதவை உள்ளேயிருந்தபடியே திறக்க முயற்ச்சிப்பது போன்ற சப்தம் கேட்டது. மெல்ல எழுந்து பார்த்தேன். அங்கு கதவுக்கருகில் நின்று கொண்டிருந்தது நான்தான்.
. . . . . .
ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா
Subscribe to:
Posts (Atom)