Tuesday, November 3, 2009

50 50 சென்களாக பறிக்கப்படுகிறது – ஒரு வணிக வாக்குகளின் நாக்கு

முதல் குறிப்பு:

தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் பெரும்பான்மையான போட்டிகளின் இறுதி சுற்றை நினைத்தாலே வெகுஜன இரசிகர்களின் மீதும் பார்வையாளர்களின் மீதும் பரிதாபமாக இருக்கும். காரணம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைந்தபட்சமாக அவர்களிடமிருந்து 50 50 சென்களாக பறிக்கப்படும் என்பது மிக சாத்தியம்.  ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தனது விளம்பரத்தின் மூலம் கலையை ஒரு கவர்ச்சி நடிகையின் தொப்புளை சினிமாக்காரர்கள் ஆபாசமாகக் காட்டி பணம் சம்பாரிப்பது போல, உறிஞ்சி எடுக்கிறார்கள்.



“உங்களுக்குப் பிடித்த பாடகர் இவரா? இவரை நீங்கள் தேர்வு செய்ய B <  >  Vote  < >  என இடம் விட்டு தட்டி, இந்த எண்களுக்கு அனுப்பிவிடுங்கள், ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் 50 சென் வசூலிக்கப்படும்” என அந்தப் போட்டியின் இறுதி சுற்று போட்டியாளர்களுக்கு ஒரு எழுத்தோ எண்ணோ கொடுத்து நம் முன் உலாவ விடுவதுண்டு. ஒரு சில நேர்மையான இரசிகர்கள் குறுந்தகவலைத் தாராளமாக அனுப்பித் தள்ளுவார்கள். சிறுக சிறுக இந்தக் குறுந்தகவல் ஓட்டு முறை ஒரு பரவலான வழிமுறையாக வியாபாரமாக எல்லாம் போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு மக்களிடமிருந்து பல 50 சென்கள் பறிக்கப்படுகிறது எனத் தோன்றுகிறது.


இரண்டாவது குறிப்பு:

இந்த மாதிரி ஓட்டு மூலம்தான் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னனியை நினைத்தால் மிகப் பலவீனமாக உள்ளது. இரசிகர்களின் குறுந்தகவல் என்பதை மையமாக வைத்து ஒரு கலைஞன் வெற்றியாளனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, இது என்ன சந்தையில் சிறந்த விலை போகும் கோழி இறைச்சையை வாடிக்கையாளர்கள் கொத்திக் கொண்டு போவது போல இருக்கிறது.

அடுத்ததாக குறுந்தகவலின் வழி மட்டுமே அதிக பெரும்பான்மை பெறுபவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுப்படுகிறார். எடுத்துக்காடாக போட்டியில் கலந்துகொண்டு இறுதி வெற்றியாளர்களில் ஒருவருக்கு, அதிக நண்பர்களும் உறவுக்காரர்களும் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவருக்கு 50 சென் செலவழித்து பலமுறை ஓட்டுப் போட குவியும் கூட்டத்திற்குக் கணக்கே இல்லாமல் போக, அந்த மாதிரியான வசதி இல்லாத நடுத்தர கலைஞர்களின் நிலை? அப்படியென்றால் இந்த வெகுஜன இரசிகர்களின் 50 சென் குறுந்தகவல் தேர்வு உண்மையை நோக்கியதாக மட்டுமா இருக்கும்? சுயநலம் இல்லாத மிக நேர்மையான தேர்வு முறையா நிகழும்? குறைந்தபட்சம் தன் உறவுக்காரனை, அல்லது தன் மகனை, தன் அண்ணனை, தன் மச்சானை, தன் நண்பனை வெற்றிக் கொள்ளச் செய்ய ஒருவர் 5 முறை குறுந்தகவல் அனுப்பத் தொடங்கினால், அவரது உறவுக்காரகள் மட்டும் 60 பேர் என வைத்துக் கொண்டால், அவரது பெற்றோர்களின் நண்பர்கள், அந்த நண்பர்களின் நண்பர்கள் என மிகப் பெரிய பிரச்சார வேட்டையில் பெறப் போவது பெறும்பான்மை வாக்குகளாக இருந்தாலும், அதில் சுரண்டப்படப் போவது இந்த மாதிரியான வாய்ப்புகள் குறைந்த சக கலைஞன் தான் என்பது இந்தத் தொலைகாட்சி நிறுவனங்களுக்குத் தெரியப் போவதில்லையா?

மேலும் இந்த இறுதி சுற்று தொடங்கிய நாள் முழுவதும் தொலைக்காட்சியில் இதே விளம்பரம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு, அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பது இந்த 50 சென் ஓட்டுத் தேர்வுகள்தான். இதைச் சார்ந்துதான் அதாவது எல்லாம்வகையான மோசடிகளும் சுயநல ஏமாற்றங்களும் நடப்பதற்குச் சாத்தியமான இந்த ஓட்டுமுறையை வைத்து வெற்றியாளர்களை நிர்ணயம் செய்வது நியாயமா? போதாதற்கு அவ்வப்போது வெற்றியாளர்களைத் திரையில் தோன்ற வைத்து, “ஓட்டுப் போடுங்கள். . என் எண்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்” என போலி அரசியல்வாதிகள் போல வியாபாரம் செய்யும் அளவிற்குக் காட்டிவிடுகிறார்கள். இதுதான் கலையை வளர்க்கும் முறையா? தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார்கள் என சினிமாவில் பார்த்ததுண்டு, அதே பாணியைத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களையும் செய்ய வைப்பது கலைக்கு விரோதமானது அல்லவா?

உங்கள் உறவினருக்காகவும், உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் நண்பருக்காகவும் 1 முறை, 5 முறை, 10 முறை என கைத்தொலைபேசியிலிருந்து நீங்கள் அனுப்பும் வாக்கு / ஓட்டுகள், இந்த வாய்ப்பில்லாத போட்டியில் வெற்றிப் பெற துடிப்புடன் வந்திருக்கும் இன்னொரு கலைஞனின்/ போட்டியாளனின் உரிமையை முயற்சியை நம்பிக்கைகளை 50 சென் கொடுத்து சுரண்டுகிறீர்கள் என்பதை உணருங்கள்.

தேர்ச்சிப் பெற்ற நீதிபதிகளைக் கொண்டு வந்து அல்லது ஆர்வம் உள்ள ஆளுமைகளுக்கு நீதிபதிக்கான பயிற்சிகளைக் கொடுத்து, அதைச் சார்ந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதே முறையாகும். அப்படியே பார்வையாளர்களின் இரசிகர்களின் பங்களிப்பை உங்கள் போட்டியில் கொண்டு வரவேண்டுமென்றால், இந்தப் போட்டி குறித்த கருத்துகளை இலவசமான குறுந்தகவலின் வழி அனுப்பி வைக்க வகைச் செய்யுங்கள். யாருடைய காசையும் பெறத் தேவையும் இல்லை மேலும் ஆதரவும் பரவலாகக் கிடைக்கும். இதை நான் எல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பரிந்துரைச் செய்கிறேன். மாற்றத்திற்கு வித்திடுவோம்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா