Tuesday, August 9, 2011

நேர்காணல்: “முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்” - மஹாத்மன்

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

மஹாத்மன் சிறுகதைகள்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் மஹாத்மன். சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு எழுத்துப்பிரதிகளைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இவர் ஒரு நிலைத்தன்மையற்ற வாழ்வினைக் கொண்டிருக்கிறார். அதையே அவர் படைப்பின் மைய சக்தியாகவும் உருமாற்றுகிறார். தன்னைப் பல நேரங்களில் 'பரதேசி' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இவரின் இடமும் இருப்பும் சூட்சுமமானது. ஆனாலும் எல்லாவகை வாழ்வியல் சிக்கல்களோடும் அவர் தன்னை இலக்கியத்தில் பிணைத்தே வருகிறார். 'வல்லினம்' இதழின் நேர்காணலுக்காகச் சுங்கைப்பட்டாணி வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். சில இடை கேள்விகள் தொலைபேசிவழி கேட்டுப்பெற்றது. நேர்காணலை எழுதி முடித்தப்பின் வாசித்தபோது ஒரு வெறுமை இருந்தது. அது அவ்வப்போது மஹாத்மன் ஏற்படுத்தும் வெறுமையா என்று புரியவில்லை.
கேள்வி: எப்பொழுது எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவானது? உங்கள் எழுத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மஹாத்மன்: தைப்பிங் சிறையில் இருக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாயின. சக கைதிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். சிறுகதை தொகுப்பிற்கு பிறகு கூடுமானால் இவ்வாண்டில் ஒரு கவிதை தொகுப்பும் அடுத்தாண்டு ஒரு நாவலும் வெளியிட உத்தேசம். அந்த எழுத்துப் பணிகளில் முழு மூச்சாய் என்னை ஈடுப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்களை ஏன் தொடர்ந்து ‘பரதேசி’ என அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?

மஹாத்மன்: ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். படைத்தவன் மீதான என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை வெளிப்படுத்துவதற்காகச் செயல்படுத்தியதுதான் பரதேசி திரிதல். படைத்தவனிடமிருந்து பேரற்புதம், பேராச்சரியம், பேரதிசயம் ஒன்றும் நிகழ்த்தப்படாததால் என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி வருகிறேன்.

கேள்வி: ஆரம்பக்காலத்தில் தாங்கள் மஹாத்மன் மற்றும் நண்பர்கள் எனும் பெயரில் எழுதி வந்தீர்கள். யார் அந்த நண்பர்கள்? புனை பெயரின் அவசியம் என்னவாக இருந்தது?