நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை
நேர்காணல்: இலங்கை இணைய இதழுக்காக- முதல் பாகம்
2 மே 2010
குறிப்பு: கீழ்காணும்  நேர்காணலில் நான் அளித்த கருத்துகள் என்னைச் சார்ந்தவை. யாரையும்  குறிப்பிட்டு சொல்லப்ப்பட்டவை அல்ல. மாற்றுக் கருத்துகள் இருந்தால்  தாராளமாகத் தொடர்வுக் கொண்டு தெரிவிக்கலாம்.கேள்விகளில் சிலவற்றை இங்குப்  பதிக்கவில்லை. முக்கியமான கேள்விகளும் பதில்களும் மட்டுமே தரப்படுகின்றன.
1. தமிழ் இலக்கியம் என்று  விரிந்த பரப்பை முன்வைத்து பேசும்போது மலேசிய மற்றும் சிங்கப்பூர்  எழுத்துக்கள் பற்றி எவரும் கவனம் கொள்வதில்லை அது ஏன் என்று நீங்கள்  கருதுகிறீர்கள்? ஆனால் இப்போது நவீன எழுத்துக்கள் என்று பேசும்படியாக அங்கு  இலக்கியம் இருக்கிறது அல்லவா?
இந்தக்  கேள்விக்கான பதிலை மலேசிய தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பின்  முரண்களையும் ஆதிக்க அடையாளங்களையும் வைத்துதான் பேச வேண்டியுள்ளது.  தமிழிலக்கிய பரப்பில் மலேசிய இலக்கியத்தை முன்னிறுத்துபவர்கள் மிகக்  குறைவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆரம்பக் காலக்கட்டத்தில் இறக்குமதி  இலக்கியங்களில் வாசிப்பும் மறுவாசிப்பும் கொண்டவர்கள் அதை மையமாக கொண்டு  புனைவதில் ஆர்வமாக இருந்தார்கள். மேலும் ஆரம்பத்தில் இணைய வசதியின்மை  அல்லது இணைய பங்காற்றல் குறித்த கற்றலின்மை மலேசிய இலக்கியத்தை வலுவாக  முன்னிறுத்த முடியாமல் போனது. 
மேலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும்  மலேசிய இலக்கியத்தின் பிரதியாக வேறு நாடுகளுக்குச் சென்று இலக்கியத்தைப்  பற்றி பேசியவர்களும் உரையாடிவர்களும் வணிக எழுத்தை மட்டுமே புரிந்து  கொண்டவர்களாகவும் அல்லது படைப்புணர்வற்றவர்களாகவும்தான்  இருந்திருக்கிரார்கள். தீவிர படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட எல்லையில்  சுருங்கி எழுதிக் கொண்டும் உரையாடிக்கொண்டும் இருந்தார்கள். சில  காலக்கட்டங்களுக்குப் பிறகுத்தான் அவர்கள் வெளிப்பட்டார்கள். மேலும் ஆதிக்க  சக்தி படைத்தவர்களாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களின் அதிகாரம் வணிக  நுகர்வையே மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கையில் எங்கனம் மலேசிய இலக்கியம்  வெளிக்கொணரப்படும்?
நவீன எழுத்தில் அதிக ஆர்வம்  கொண்டு வாசிப்புன் மூலமும் படைப்பின் மூலம் வளர்ந்து வருபவர்களில்  கோ.புண்ணியபான், ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், மஹாத்மன் போன்றவர்கள் அடங்கும்.  இன்னமும் சிலர் அதற்கான களத்தில் தொடர்ந்து முயற்சித்துக்  கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களின் எழுத்தில் நவீன எழுத்திற்கான  வீரியம் மே;லும் வலுவடைய வேண்டியிருக்கிறது. (திருப்தி அடைதல் என்பது  ஒருவேளை போலி ஞானிகளுக்கு ஏற்படலாம், ஆனால் இன்னமும் என் எழுத்தின் மீதும்  மலேசிய நவீன இலக்கிய எழுத்தின் மீதும் எனக்குப் போதாமை உணர்வுத்தான்  எஞ்சியிருக்கின்றன)
படிமத்தைச்  சாராத எழுத்துகள் வெகு சீக்கிரம் உண்மையை அடையும் என்ற கருத்தாக்கம்  பின்நவீனத்தில் இருப்பதாக வாசித்ததுண்டு. அதேபோல இன்று ஒரு படைப்பாளி  தனித்து நிலைக்க வேண்டுமென்றால் இயக்கங்களைச் சாராத அல்லது இலக்கியம்  என்கிற நிறுவனத்தைச் சாராத படைப்பாற்றலின் வழி பயணிப்பதே சிறப்பு என  நினைக்கிறேன்.
குறிப்பு: சை.பீர்முகமதுவின்  மூலம் மலேசியவிற்கும் தமிழக எழுத்தாளர்களுக்கும் நல்ல நட்புரவு  ஏற்பட்டதாகச் சிலர் சொல்லி கேட்டதுண்டு. அங்குச் சென்று மலேசிய இலக்கியம்  குறித்து பேசுவது தொடங்கி அங்குள்ள முக்கியமான எழுத்தாளர்களை  மலேசியாவிற்குள் கொண்டு வருவதுமென மிகத் துடிப்பாகச் செயலாற்றியுள்ளார்  எனவும் சொல்லியிருக்கிறார்கள். எம்.ஏ. நுக்மான் மலேசியா வ்ந்திருந்தபோது,  அவர் மலேசியாவின் இலக்கியத்தை அறிந்துகொண்டதில் சை.பீருக்கும் முக்கிய  பங்குண்டு எனக் கூறினார். 1999 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன், எம்.ஏ  நுக்மானின் மலேசியாவிற்கான முதல் இலக்கியப் பயணத்தை பீர்.முகமதுதான்  அமைத்துக் கொடுத்தார் எனவும் மேலும் பினாங்கு கோலாலம்பூர் போன்ற இடங்களில்  இலக்கிய சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார் எனும் தகவல் உண்டு. எஸ்.பொ,  பிரபஞ்சன், நுக்மான், போன்ற சொற்ப எழுத்தாளர்கள் மலேசிய இலக்கியம் குறித்து  அறிந்து வைத்திருந்தார்கள் என்பதும் உண்மை.
2. மலேசியாவில் நவீன இலக்கியத்தின் ஆரம்பம் எப்போது தொடங்குகிறது ? அதன் வரலாற்றை சற்று விரிவாக பேசலாமா?
மன்னிக்கவும். நான் ஒருபோதும் மலேசிய இலக்கியத்தின் அல்லது மலேசிய நவீன இலக்கியத்தின் வரலாற்று மாணவனாக இருக்க விரும்புவதில்லை.  கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் தொடர்ந்து பல மேடைகளில் இலக்கிய  வரலாறுகளைக் கட்டுரைகளாகப் படைத்து வருகிறார்கள். அவர்களுக்கு வரலாறு  இலக்கிய வெளியில் அவர்களின் இருப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கப்  பங்காற்றுகிறது. அதை ஒரு தகவல் போல வாசித்துவிட்டு மறைந்துவிடுகிறார்கள்  அடுத்த மேடை கட்டுரை வாசிப்பு வரும்வரை. அவர்களின் இலக்கிய செயற்பாடு  மிகவும் சுருங்கியவை. ஆகையால்தான் பெரும்பாலும் வரலாற்றை நினைவுக்கூர்வதில்  எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் நிலவுகிறது. வரலாறு குறித்த புரிதல்  என்பது அதன் தொடர்ச்சியை மேலும் வலுவாக அதனிலிருந்து மாற்றி வேறு புதிய  உணர்வுமுறையில் வரலாற்றிலிருந்து தகர்ந்த ஒரு இலக்கியப் பரப்பை அடைய செய்ய  வேண்டுமே தவிர வரலாற்றையே பேசிக் கொண்டு காலத்தைக் கடத்தக்கூடாது.
இருப்பினும் உங்களுக்கு ஒரு  மாற்றுப் பார்வை வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து மலேசிய நவீன இலக்கியத்தை  அக்கறையுடன் அணுகுவதன் பொருட்டே எனக்குத் தெரிந்த மலேசிய நவீன  இலக்கியத்தின் சில வரலாற்று தகவல்களைச் சொல்கிறேன்.
மலேசிய தமிழ் இலக்கியம் என்பது ஆரம்பக்காலக்கட்டத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தின.  காலனியக் காலக்கட்டத்தின் சமூகக் கட்டமைப்பில் மேல்தட்டு மனிதர்கள்  சிறுமுதலாளிகளாகவும், அதிகாரத்தைப் பகிர்வதில் தரகர்களாகவும் இருந்தவர்கள்  தமிழ்க்கல்வி இல்லாதவர்களாகவும் தமிழ் இலக்கிய நுகர்ச்சி  இல்லாதவர்களாகவும்தான் இருந்தார்கள். ஆகவே அடித்தட்டு மக்களின் அன்றாட  வாழ்வு பிரச்சனையும் முதலாளி சமூகத்தின் விளைவால் ஏற்பட்ட குடும்பச்  சிதைவைகளும்தான் வணிக மொழியில் ஒரு பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டது. ஒரு  புதிய கவித்துவமான மொழியும் புதிய அணுகுமுறைகளும் அப்பொழுது பெறப்படவில்லை.  தமிழக இலக்கியம் என்கிற பெரும்வெளியின் தாக்கத்தினால் உருவான சிறு  பகுதியாகவே அப்பொழுது இலக்கியம் படைக்கப்பட்டது.
மலேசியாவில்  நவீனக் காலக்கடடம் என எடுத்துக் கொண்டால், ஒரு பெரும்வெளியாக மட்டுமே  இருந்த மலேசிய இலக்கியம் ஒரு நிறுவனமாகச் செயல்படத் துவங்கியக்  காலக்கட்டத்தை முன்வைக்கலாம். சிறுகதை துறையை மேலும் வலுப்படுத்த 1950களில் சிறுகதை வகுப்பு தொடங்கப்பட்டது.  இதன் மூலம் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்த பலரை ஒருங்கிணைக்க முடிந்தது.  அந்தக் கதை வகுப்பின் மாணவனாக இருந்து பிறகு நவீன இலக்கியத்தின்  முன்னோடியாக அடையாளப்படுத்தப்பட்டவர்தான் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆவார். பிறகு  சிறுகதை கருத்தரங்குகள், சிறுகதை போட்டிகள் என அந்தக் களம் விரிவடையத்  துவங்கியது. மாதாந்திர சிறுகதைத் தேர்வு, தமிழ் நேசன் பவுன் பரிசுத்  திட்டம், சொக்சோ சிறுகதை போட்டி, பேரவைக் கதைகள், பாரதிதாசன் சிறுகதை  போட்டி, வாசகர் வட்டங்கள், எழுத்தாளர் இயக்கம், தமிழ் நேசன் நாவல்  போட்டிகள், மாதமொரு நாவல் திட்டம் என மலேசிய இலக்கியம் 1946க்குப் பிறகு  சிறுக சிறுக ஒரு நிறுவனமயக்குதலின் மூலம் வளர்தெழுந்தது. 
இது போதுமான வளர்ச்சியா எனக்  கேட்டாலோ அல்லது இதன் மூலம் தீவிரமான படைப்பாளிகள் உருவானர்களா எனக்  கேட்டாலோ அது வேறொரு விவாதத்திற்குள் நம்மை நுழைத்துவிடும். ஆகையால்  இவையனைத்தும் மலேசிய நவீன இலக்கியத்தை மேலும் தீவிரமாக்குவதில் ஏதோ  ஒருவகையில் பங்காற்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
எழுத்தாளர்கள் மலேசிய இலக்கிய ஒரு  இயக்கமாக அல்லது நிறுவனமாக செயல்படுவதற்கு முன்பு தனது படைப்புகளின் மூலம்  தனிமனித உணர்வுகளையே சமூகம் சார்ந்து எதிர்வினைகளாகவும் சீர்திருத்த  கருத்தாக்கங்களாகவும் எழுதி வந்தார்கள். அடையாளங்காணல் அடையாளப்படுத்துதல்  என்கிற இலக்கிய நிறுவனத்தின் முன்னெடுப்புகளுக்குப் பிறகு சமூகக் குறியீடாக  மாறி வெளிப்படையாகப் பிரச்சாரத்தை எழுத்தைப் படைக்கத் துவங்கினார்கள்.  இருப்பினும் தனிமனித கொள்கையில் முழு ஈடுப்பாட்டுடன் சமரசங்களை நாடாமல்  எழுதியவர்களும் இருக்கிறார்கள். இதையும் நவீன இலக்கியத்தின் தொடக்க  மனப்பான்மை எனப் புரிந்துகொள்ளலாம். படைப்பாளி என்பவனே ஒரு இயக்கமாக  தனக்கான அதிகாரங்களைத் தானே உற்பத்தி செய்துகொண்டு திருப்தியுறுவது.
3. பெண் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் தமது எழுத்தின் அரசியலாக அங்கு எதை முன்வைக்கிறார்கள்?
பெண் எழுத்தாளர்களின்  படைப்புலகத்தினுள் இன்னமும் ஆழமான பார்வையும் விமர்சனமும் பரவலாக  ஏற்படவில்லை எனறே தோன்றுகிறது. தீவிர படைப்பாளி என்று அடையாளப்படுத்தும்  வகையில் யாரும் இல்லையென்றாலும் தனது  படைப்பின் மூலம் வளர்ச்சியை எட்டியவர்கள் அல்லது புதிய கதை மொழியை கவிதை  மொழியை அடைந்த பெண் எழுத்தாளர்கள் மலேசியாவில் சொற்பமான எண்ணிக்கையில்  இருப்பதை மறுக்க இயலாது. கோலாம்லம்பூரில் இருந்து எழுதி வரும் பெண்  நவீன படைப்பாளிகளின் படைப்பாற்றல் வாசிப்பின் மூலமும் குழுவாத  பகிர்தல்-கலந்துரையாடல், விவாதித்தல், சிற்றிதழின் பங்காற்றல்- சிற்றிதழ்  வட்டம் சார்ந்த தீவிர மனப்பான்மை போன்ற களங்களின் மூலமும் சிறுக சிறுக  தீவிரமடைந்து வருவதையும் மறுக்க இயலாது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால்  தோழி, தினேசுவரி, யோகி, மணிமொழி, சிதனா, ராஜம் ரஞ்சனி, பூங்குழலி  போன்றவர்களை அடையாளப்படுத்தலாம். 
ஆனாலும்  இவர்களின் எழுத்துக்களம் சமூகவியலின் அறியாமையை, பிற்போக்குத்தனங்களை,  ஒழுக்கநெறியின் ஒடுக்குதல்களை எதிர்க்கொள்வதும் அல்லது பால்ய வாழ்வை  மீட்டுணர்தலும் என்கிற தளத்தில் இயங்கி வருவதால் அத்துனை திவீரமான கலை  எழுச்சியை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மதவியல், அரசியல், உளவியல்,  தர்க்கவியல், தத்துவவியல், மானுடவியல், வரலாற்றியல் எனும் பல்வேறு தளத்தின்  அனுபவங்களைப் பெறுவதும் வாசிப்பதுமென முயற்சிகளை மேற்கொண்டால் தீவிரமாகக்  கவனிக்கப்படுவார்கள். மேலும் சிற்றிதழ் களம் இல்லையென்றால் இவர்களின்  எழுத்திற்கு அறிமுகமும் அடையாளமும் இல்லாமல் போய்விடும் அபாயமும் உண்டு.
மூத்த பெண் படைப்பாளிகளை  அணுகும்போது அவர்கள் எழுதுவதே ஒரு மிகப்பெரிய போராட்டமாக அமைந்திருந்தது.  அவர்கள் அதனை உடைத்துக் கொண்டு புனைந்து கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.  ஆதிக்க ஆண் படைப்பாளிகளின் அடையாளங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு  தர்க்கம் பேசி வந்த ஆண்வழி இலக்கிய பரப்பினுள் க.பாக்கியம், பாவை,  ந.மகேசுவரி, பாமா, போன்றவர்கள் தனது படைப்புகளின் வழி தொடர்ந்து செயல்பட்டு  வந்தார்கள். இந்த எதார்த்தத்தை அதாவது ஆணாதிக்க கட்டமைப்புகளை தொடர்  முயற்சிகளின் மூலம் (அவர்களின் படைப்புகள் தீவிரமாகக்  கவனிக்கப்படவில்லையென்றாலும் பேசப்படவில்லையென்றாலும்) எதிர்கொண்டு  வந்தவர்களின் இலக்கியத்தை தற்கால மதிப்பீட்டைச் சுமத்தி விமர்சிப்பது  அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை. ஆனாலும் மூத்த பெண் படைப்பாளிகளின்  எழுத்தில் இந்துத்துவ அடிமைத்தனமும் அதற்கு எதிரான விடுதலையும், குடும்ப  அமைப்புகளின் இறையியல்த்தன்மை, மேலோட்டமான பெண் ஒழுக்குமுறைகள் குறித்த  எதிர்வினைகள் இருந்திருக்கின்றன. முறையான விமர்சனப் பார்வை கிடைக்காததால்  அது ஆழமாக விவாதிக்கப்படாமலேயே காலத்தைக் கடந்து வந்து சேர்ந்துவிட்டது.  இப்போதைய பிரச்சனை வேறு என்பதால் அதையெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பாகவே  பார்க்கப்படுகின்றன.
-தொடரும்-
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
 



