Monday, March 28, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் -3 (யாங்சே நதிக்கரையின் சோகமும் ஒரு தெரு விட்டுச் செல்லும் குழந்தைகளும் (ஹங்காங் சினிமா: மே மற்றும் ஆகஸ்ட்)

“ஜப்பானிய இராணுவத்தால் எரிக்கப்பட்ட
எங்களின் பெற்றோர்கள்
பின்னர் சாம்பலாகி மேகத்தோடு சேர்ந்து
மழையாகிப் பொழிந்து
இன்று யங்சே நதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்”

சீன இசை பின்னணி பெருகி ஒலிக்க சோகம் ததும்ப இரண்டாம் சீன ஜப்பானிய போரில் பெற்றோர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான சீன சிறுவர்கள் யங்சே நதிகரைக்கு வந்து சேர்கிறார்கள். நதியில் சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்து “அப்பா... அம்மா... நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என எல்லோரும் கதறுகிறார்கள். அவர்களின் குரல்களைச் சேமித்துக் கொண்டு மீண்டும் எந்தச் சலனமுமின்றி யங்சே நதி தூரமாகத் தெரியும் வானத்தின் பரந்த விரிப்பின் அடியில் மறைந்து ஓட மே மற்றும் ஆகஸ்ட் என்கிற இந்த ஹங்காங் திரைப்படம் நிறைவடைகிறது.