Friday, January 9, 2015

சிறுகதை: தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது


வெகுநேரம் முனியாண்டி வழியிலேயே விழுந்து கிடந்தார். வழக்கமாக அவர் மெதுநடை போகும் பாதைத்தான். எல்லாம் காலைகளிலும் அவர் உற்சாகமாக உலா வருவார். அநேகமாக அங்கு வரும் அனைத்துச் சீனர்களுக்கும் முனியாண்டியை நன்றாகத் தெரியும். இன்று எல்லோரையும்விட சீக்கிரமே வந்து மயங்கி விழுந்துவிட்டார்.

இலேசாக விடியத் துவங்கிய நேரம். வானம் இருட்டிக் கொண்டிருந்ததால் ஆட்கள் சிலர் வந்து வானத்தையும் திடலையும் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். சிலர் குடையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மழைக்காற்று அவர்களுக்கு அசௌகரிகத்தை வழங்கியிருக்கலாம். யாரும் நடைப்பாதைக்கு வரவில்லை.

50 வயது நிரம்பிய முனியாண்டி அந்தப் பழகிப்போன வழியிலேயே மூர்ச்சையாகிக் கிடந்தார். சட்டென பார்ப்பவர்களுக்கு அவர் அங்கு விழுந்து கிடப்பது தெரிய வாய்ப்பில்லை. மிகப்பெரிய மரங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பூச்செடி தொட்டிகளும் பாதைக்கு அருகில் அடர்த்தியாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் மழைப் பெய்யத் துவங்கியதும் இருந்த கொஞ்ச ஆட்களும் களைந்து வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

நாகா லீலீட் கம்பத்தில் முனியாண்டியை லோரிக்காரர் என்றால் பலருக்கும் தெரியும். 1970களிலேயே கோலாலம்பூருக்கு நடை போய் அனுபவம் உடைய ஒரே ஆளாக அறியப்பட்டவர். தெம்பான ஆனால் எப்பொழுதும் வியர்த்த நெடி வீசும் உடல். வாரத்திற்கு மூன்றுமுறையாவது கோலாலம்பூர் நடைக்குப் போய்விடுவார். முதலில் வாடகைக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சொந்தமாகச் சிறிய லாரி வாங்கி ஓட்டத் துவங்கினர். அதன் பிறகுத்தான் முனியாண்டிக்குக் கலை கட்டியது.

இருந்த ஒரு பையனும் கல்யாணம் செய்து சிங்கப்பூருக்குப் போய்விட்டான். இங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைக்கும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திருந்துவிட்டு மனைவியுடன் சிங்கப்பூருக்குப் போனவன், பல வருடங்களுக்கு முனியாண்டியைத் திரும்பிப் பார்க்க வரவில்லை.

பிறகென்ன? மனைவி செத்தவன் தனிக்கட்டைதான். முனியாண்டியே சமைப்பார் ; முனியாண்டியே சாப்பிடுவார்;முனியாண்டியே சிரிப்பார்; முனியாண்டியே அழுவார். நாகாலீலீட் சாலையோரக் கடைகளுக்கு எப்பொழுதாவது போய் தனியாக அமர்ந்துவிட்டு ஆட்கள் குறைந்ததும்ரொட்டி சானாய் ஒன்னுஎன்பார். அக்கடையில் அவர் பேசும் முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் அதுதான். அதற்கடுத்து அவர் எதையும் பேசியதில்லை. மீண்டும் வீட்டுக்குப் போய்விடுவார்.