Monday, November 9, 2009

செழியன் - சாரு - எஸ்.ரா - விச்சுவாமித்திரன் அவர்களின் சினிமா பார்வை

அய்யப்பன் மாதவன் இயக்கிய “தனி” குறும்பட வெளியீட்டிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனரும் ஆனந்த விகடன் “உலக சினிமா” கட்டுரையாளருமான செழியன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும் நேர்காணல் செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

இயக்குனர் பேரரசுவின் சகோதரரான அறிவுநிதி அவர்களின் இல்லத்தில்தான் செழியனைச் சந்தித்துப் பேசினேன். தெளிவான முகத்துடன் மிகவும் நிதானமாகக் காட்சியளித்தார். கருத்துகளை மிக எளிமையாக எவ்வித சிக்கலும் தடுமாற்றங்களும் இன்றி முன் வைக்கக்கூடியவராக இருந்தார். ஏற்கனவே செழியனின் சினிமா பார்வையை ஆனந்த விகடன் தொடர் சினிமா கட்டுரையின் மூலம் பலர் அறிந்திருக்கக்கூடும்.

இன்றைய தழிச் சூழலில், சினிமா குறித்த ஆழ்ந்த பிரக்ஞையையும் மாற்றுப் பார்வையையும் தனது கட்டுரை மூலம் வெளிப்படுத்துபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ஆகும். குறிப்பிட்டு சொல்வதென்றால் சாரு நிவேதிதா, விசுவாமித்திரன், செழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களே ஆகும். மேலும் இணையத்தில் பலர் சினிமா குறித்த (முக்கியமாக தமிழ் சினிமா) விமர்சனங்களை எழுதி வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த நால்வரின் சினிமா கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் சில நேர்த்தியான இடங்களில் வித்தியாசப்படுவதை அறிய முடியும்.

சாரு தனது சினிமா கட்டுரைகளில் திரைக்குப் பின்னாலுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி மிகவும் விரிவாக அவர்களின் ஆளுமை சார்ந்து பேசக்கூடியவர். சினிமாவில் உள்ள மற்ற பல அம்சங்களையும் குறிப்பாக இசையைப் பற்றி அதன் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை ஒப்பீடுகளைத் தரக்கூடியவர் ஆகும். ஒரு சில ஒப்பீடுகளுக்காக அவர் தனது விமர்சனங்களுக்குள் கொண்டு வரும் திரைப்பட கலைஞர்கள் தமிழில் அறியப்படாதவர்களும் அதே சமயம் கவனிக்கத்தக்க ஆளுமைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒளிப்பதிவுகள் பற்றி பேசும்போது மிகவும் தட்டையான மொழிகளுக்குள் தகவல் வரட்சியின்றி, உலக சினிமாக்களை மேற்கோள்காட்டி விரிவாகப் பேசக்கூடியவர் சாரு. ( சில சமயங்களில் நமது செல்வராகவனையும் அகிரா குரோசாவையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அபாயமான ஒப்பீடுகளையும் காட்டி மிரளவும் செய்வார்)

அடுத்தபடியாக எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமா கட்டுரைகள் மிக முக்கியமானவையாகும். எளிதில் வாசகனை ஈர்க்கக்கூடிய வகையிலான சினிமா பார்வையை கவர்ச்சியான மொழியுடன் சொல்லக்கூடியவர். நண்பன் சினிமா பற்றி கூறுவது போல அவரது சினிமா கட்டுரைகள் நம்மை நெருங்கி வந்துவிடும். அவரது பெரும்பாலான சினிமா பார்வை மனித வாழ்வோடு ஒப்பிட்டு அதன் அழகியலை அடையக்கூடியதாக விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் எல்லாம் சினிமாக்களின் முகத்தையும் அதன் அடையாளத்தையும் வாழ்வியலின் பின்புலத்தோடு அவதானிக்கக்கூடியவர் எஸ்.ரா. (சினிமாவிற்கான உண்மையான படிமங்களுக்குள் அதிகபடியான இவரது வழக்கமான சொல்லாடல்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது, சினிமாவின் சில காட்சிகள் புனைவுகளாக மாறிவிடுகிறது- “போல போல” என்ற தனது கற்பனைவாத ஒப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் அசலைத் தவறவிடுவதாகத் தோன்றும்)

அடுத்ததாக செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது. (தனது மனோத்துவ/உளவியல் மதிப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் வாசகனின் அல்லது பார்வையாளனின் சாதாரண கிரகித்தலையும் சிக்கலாக்கிவிடும் ஆக்கிரமிப்பு செழியனின் விமர்சனங்களில் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு சில கட்டுரைகளில் ஒரே விதமான அணுகுமுறைகளே நுட்பமாகப் பாவித்திருப்பது போல தோன்றக்கூடும்.)

அடுத்ததாக தீராநதி இதழில் சினிமா பற்றி எழுதிவரும் விச்சுவாமித்திரன் ஆவார். இவருடைய சினிமா கட்டுரையின் மொழி மிகவும் சிக்கலானது. அதே சமயம் இவரது சினிமா மீதான சொல்லாடல்கள் தத்துவம் சார்ந்து அதன் கட்டமைப்பைத் தரமான களத்தில் விவரிக்கக்கூடியது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. மேலும் ஆரம்பக்கால சினிமா வாசகனுக்கு முற்றிலும் ஏதுவான வடிவமும் அல்ல. இவரது சினிமா கட்டுரைகள் பெரும்பாலும் பிராந்திய அடையாளத்துடன் எழுதப்படக்கூடியது. ரஷ்ய சினிமா, கொரியா சினிமா எனப் பெயரிடப்பட்ட, நிலப்பரப்பின் பின்னனியில் அதன் தத்துவம் - பண்பாடு - கலாச்சாரம் - அரசியல் - போன்ற அம்சங்களின் உள்ளீடுகளை அளவுகோளாக்கி படத்தை விவரித்து எழுதுவார். ( இவரது சினிமா கட்டுரையைப் படித்து முடித்த பிறகு, சினிமா பார்க்கும் ஆவலைவிட வரலாறு அரசியல் படிக்க வேண்டும் என்ற ஆவலே மேலிடும் என்றே கருதுகிறேன். அளவுக்கு அதீதமான தகவல்களும் சான்றுகளும் சில சமயங்களில் அசல் சினிமா என்கிற வடிவத்தின் எளிமையைக் குறைத்துவிடுவதாகப்படுகிறது)

தமிழில் சினிமா குறித்தும் உலக சினிமா குறித்தும் இனி அதிகம் எழுதவும் விவாதிக்கவும் பட வேண்டும். தமிழிலேயே பல மாற்றுச் சினிமா எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது உள்நாட்டில்கூட பல இளைஞர்கள் தரமான குறும்படங்களை எடுப்பதில் ஆர்வமும் காட்டி வருகிறார்கள் என்பதால் சினிமா குறித்தான வாசிப்பும் மீள்வாசிப்பும் அவசியமானதாகும். நமது வாழ்வைப் பதிவு செய்து வைப்பதில் இலக்கியமும் சினிமாவும் மிக முக்கியமான வடிவங்களாகும். போலித்தனமான, அசலுக்கு எதிரான இலக்கியமும் சரி, சினிமாவும் சரி, வெறும் மசாலா கலவைகளாகத்தான் பணம் சம்பாரித்துவிட்டு காணாமல் போய்விடும். யதார்த்தங்களை சினிமா புனைவுகளுடனும் அசலான மனிதர்களையும் வாழ்வையும் கலை நுட்பம் சார்ந்து வெளிப்படுத்தும் சினிமாவும் இலக்கியமும் மட்டுமே ஆரம்பத்தில் சர்ச்சைகளைச் சந்தித்தாலும் வரலாற்றில் பேசப்படும் முக்கியமான பதிவாக இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


Tuesday, November 3, 2009

50 50 சென்களாக பறிக்கப்படுகிறது – ஒரு வணிக வாக்குகளின் நாக்கு

முதல் குறிப்பு:

தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் பெரும்பான்மையான போட்டிகளின் இறுதி சுற்றை நினைத்தாலே வெகுஜன இரசிகர்களின் மீதும் பார்வையாளர்களின் மீதும் பரிதாபமாக இருக்கும். காரணம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைந்தபட்சமாக அவர்களிடமிருந்து 50 50 சென்களாக பறிக்கப்படும் என்பது மிக சாத்தியம்.  ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தனது விளம்பரத்தின் மூலம் கலையை ஒரு கவர்ச்சி நடிகையின் தொப்புளை சினிமாக்காரர்கள் ஆபாசமாகக் காட்டி பணம் சம்பாரிப்பது போல, உறிஞ்சி எடுக்கிறார்கள்.



“உங்களுக்குப் பிடித்த பாடகர் இவரா? இவரை நீங்கள் தேர்வு செய்ய B <  >  Vote  < >  என இடம் விட்டு தட்டி, இந்த எண்களுக்கு அனுப்பிவிடுங்கள், ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் 50 சென் வசூலிக்கப்படும்” என அந்தப் போட்டியின் இறுதி சுற்று போட்டியாளர்களுக்கு ஒரு எழுத்தோ எண்ணோ கொடுத்து நம் முன் உலாவ விடுவதுண்டு. ஒரு சில நேர்மையான இரசிகர்கள் குறுந்தகவலைத் தாராளமாக அனுப்பித் தள்ளுவார்கள். சிறுக சிறுக இந்தக் குறுந்தகவல் ஓட்டு முறை ஒரு பரவலான வழிமுறையாக வியாபாரமாக எல்லாம் போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு மக்களிடமிருந்து பல 50 சென்கள் பறிக்கப்படுகிறது எனத் தோன்றுகிறது.


இரண்டாவது குறிப்பு:

இந்த மாதிரி ஓட்டு மூலம்தான் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னனியை நினைத்தால் மிகப் பலவீனமாக உள்ளது. இரசிகர்களின் குறுந்தகவல் என்பதை மையமாக வைத்து ஒரு கலைஞன் வெற்றியாளனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, இது என்ன சந்தையில் சிறந்த விலை போகும் கோழி இறைச்சையை வாடிக்கையாளர்கள் கொத்திக் கொண்டு போவது போல இருக்கிறது.

அடுத்ததாக குறுந்தகவலின் வழி மட்டுமே அதிக பெரும்பான்மை பெறுபவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுப்படுகிறார். எடுத்துக்காடாக போட்டியில் கலந்துகொண்டு இறுதி வெற்றியாளர்களில் ஒருவருக்கு, அதிக நண்பர்களும் உறவுக்காரர்களும் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவருக்கு 50 சென் செலவழித்து பலமுறை ஓட்டுப் போட குவியும் கூட்டத்திற்குக் கணக்கே இல்லாமல் போக, அந்த மாதிரியான வசதி இல்லாத நடுத்தர கலைஞர்களின் நிலை? அப்படியென்றால் இந்த வெகுஜன இரசிகர்களின் 50 சென் குறுந்தகவல் தேர்வு உண்மையை நோக்கியதாக மட்டுமா இருக்கும்? சுயநலம் இல்லாத மிக நேர்மையான தேர்வு முறையா நிகழும்? குறைந்தபட்சம் தன் உறவுக்காரனை, அல்லது தன் மகனை, தன் அண்ணனை, தன் மச்சானை, தன் நண்பனை வெற்றிக் கொள்ளச் செய்ய ஒருவர் 5 முறை குறுந்தகவல் அனுப்பத் தொடங்கினால், அவரது உறவுக்காரகள் மட்டும் 60 பேர் என வைத்துக் கொண்டால், அவரது பெற்றோர்களின் நண்பர்கள், அந்த நண்பர்களின் நண்பர்கள் என மிகப் பெரிய பிரச்சார வேட்டையில் பெறப் போவது பெறும்பான்மை வாக்குகளாக இருந்தாலும், அதில் சுரண்டப்படப் போவது இந்த மாதிரியான வாய்ப்புகள் குறைந்த சக கலைஞன் தான் என்பது இந்தத் தொலைகாட்சி நிறுவனங்களுக்குத் தெரியப் போவதில்லையா?

மேலும் இந்த இறுதி சுற்று தொடங்கிய நாள் முழுவதும் தொலைக்காட்சியில் இதே விளம்பரம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு, அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பது இந்த 50 சென் ஓட்டுத் தேர்வுகள்தான். இதைச் சார்ந்துதான் அதாவது எல்லாம்வகையான மோசடிகளும் சுயநல ஏமாற்றங்களும் நடப்பதற்குச் சாத்தியமான இந்த ஓட்டுமுறையை வைத்து வெற்றியாளர்களை நிர்ணயம் செய்வது நியாயமா? போதாதற்கு அவ்வப்போது வெற்றியாளர்களைத் திரையில் தோன்ற வைத்து, “ஓட்டுப் போடுங்கள். . என் எண்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்” என போலி அரசியல்வாதிகள் போல வியாபாரம் செய்யும் அளவிற்குக் காட்டிவிடுகிறார்கள். இதுதான் கலையை வளர்க்கும் முறையா? தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார்கள் என சினிமாவில் பார்த்ததுண்டு, அதே பாணியைத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களையும் செய்ய வைப்பது கலைக்கு விரோதமானது அல்லவா?

உங்கள் உறவினருக்காகவும், உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் நண்பருக்காகவும் 1 முறை, 5 முறை, 10 முறை என கைத்தொலைபேசியிலிருந்து நீங்கள் அனுப்பும் வாக்கு / ஓட்டுகள், இந்த வாய்ப்பில்லாத போட்டியில் வெற்றிப் பெற துடிப்புடன் வந்திருக்கும் இன்னொரு கலைஞனின்/ போட்டியாளனின் உரிமையை முயற்சியை நம்பிக்கைகளை 50 சென் கொடுத்து சுரண்டுகிறீர்கள் என்பதை உணருங்கள்.

தேர்ச்சிப் பெற்ற நீதிபதிகளைக் கொண்டு வந்து அல்லது ஆர்வம் உள்ள ஆளுமைகளுக்கு நீதிபதிக்கான பயிற்சிகளைக் கொடுத்து, அதைச் சார்ந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதே முறையாகும். அப்படியே பார்வையாளர்களின் இரசிகர்களின் பங்களிப்பை உங்கள் போட்டியில் கொண்டு வரவேண்டுமென்றால், இந்தப் போட்டி குறித்த கருத்துகளை இலவசமான குறுந்தகவலின் வழி அனுப்பி வைக்க வகைச் செய்யுங்கள். யாருடைய காசையும் பெறத் தேவையும் இல்லை மேலும் ஆதரவும் பரவலாகக் கிடைக்கும். இதை நான் எல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பரிந்துரைச் செய்கிறேன். மாற்றத்திற்கு வித்திடுவோம்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Sunday, November 1, 2009

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் - உலகக் கொடுரங்களுக்கு அப்பாற்பட்ட சித்திரத்தின் வர்ணங்கள்

முதல் பகுதி

மலேசிய சிறுகதை விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு  ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய படைப்பு குறித்து பலவகையான முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவியபோதும் விமர்சக துறையில் அவருடைய பங்கு மறுக்க முடியாதது.  எளிய வாசகனுக்கும் உரிய விமர்சன மொழி அவருடையது.

   ஒவ்வொரு படைப்பாளனின் படைப்புகளும் விமர்சிக்கப்பட வேண்டும். மலேசிய சூழலில் இலக்கியம் குறித்து அல்லது இலக்கியம் மீதான சம்பிரதாய விமர்சன கோட்பாடுகளுக்கு எதிராக மாற்று விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுச் சிந்தனை வழக்கமான அதிகாரங்களுக்கும் பதவி பீடங்களுக்கும் கூஜா தூக்கும் மனோபாவங்களை உடைக்க முற்பட வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களை விமர்சிக்கக்கூடாது எனும் மேதாவித்தனமான பார்வைகளைக் களைந்து, விமர்சனத்தில் புதுமையைக் கொண்டு வர வேண்டும்.

அக்டோபர் மாத யுகமாயினி இதழில் மலேசிய ரெ.கார்த்திகேசுவின் “மல்லியும் மழையும்” எனக் கதையை வாசிக்க நேர்ந்தது. செப்டம்பர் மாத நவீன களத்தின் சந்திப்பில் கூலிம் நண்பர்களுடன் கார்த்திகேசுவின் முக்கியமான சிறுகதையான, “ஒரு சுமாரான கணவன்” குறித்து விவாதிக்கவும் விமர்சிக்கவும் பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருடைய இந்தக் கதையையும் வாசிக்கும்போது இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகளை அடையாளங்காண முடிந்தது.

“ஒரு சுமாரான கணவன்” கதையில் புலம் பெயர்ந்து நகரத்தின் அடுக்குமாடி வீடொன்றிற்கு புதியதாக திருமணம் ஆகி வரும் இரு தம்பதிகளின் அக உலகத்தை அதன் உளவியல் சார்ந்து மேலோட்டமாக ஆராய்ந்திருக்கிறது. நடுத்தர மனபாவங்களை முன்வைத்து வாழ்வின் மீதான மதிப்பீடுகளைக் கூர்மையாக்கும் கதையின் கடைசியில் ரொட்டி சானாய் எடுத்து வரும் அடுக்குமாடியின் கீழுள்ள கடைக்காரனின் பாத்திரத்தின் மூலம் வாழ்வின் புதிய எதார்த்தங்களை படைப்பிற்குள் கொண்டு வருகிறார். ரெ.கா-வின் எழுத்து சிக்கலானவை அல்ல, மொழிநடையும் மிக இயல்பாக எல்லாரையும் (சனரஞ்சக வாசகனையும்) கவரக்கூடியது. ஆனால் வெறும் கவர்ச்சிக்காக எழுதக்கூடியவரும் அல்ல. மிக எளிமையாக மேல்தட்டு – நடுத்தர மக்களின் வாழ்வைப் படைப்பாக்கியவர். (இன்னொரு மூத்த படைப்பாளி ஒருமுறை – ரெ.காவின் எழுத்து மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்) இது எழுத்தாளனின் தேர்வு குறித்தது. அவருடைய “அந்திம காலம்” நாவல் மேல்தட்டு எழுத்து கிடையாது என்பதையும் தனது எழுத்தின் மூலம் காட்டியிருக்கிறார். ஆனால் ஒட்டு மொத்தமாக அவரது படைப்பை வாசிப்பவர்களுக்கு, அவரது எழுத்து மேல்தட்டு மக்களின் அக உலகத்தையும் சிக்கல்களையும் விநியோகம் செய்வதாகவே தோன்றலாம்.

“மல்லியும் மழையும்” கூட ஒரு மேல்தட்டு குடும்பத்தின் வாழ்க்கையையும் அந்தக் குடும்பத்திலுள்ள தாத்தா பேத்தியின் உறவையும் முன்வைத்து, குழந்தையின் அகவியலைத் தொட்டு எழுதியிருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் வீட்டின் சில வர்ணனைகளிலும், வீட்டில் பணிப்பெண் இருப்பதாகக் கூறும் இடங்களிலும் இது பணக்கார குடும்பம் என அவதானித்துக் கொள்ளலாம். அடுத்ததாக மல்லி கதைபாத்திரமும், தாத்தா கதைபாத்திரமும் உரையாடல்களில் சந்தித்துக் கொள்ளும் இடங்கள்தான் கதையின் மையம். சோர்வு தட்டிய தாத்தாவின் உலகம் தளர்ந்தவையாக வர்ணங்கள் இழக்கத் துவங்கும் இயலாமைகளாகப் புரிந்துகொள்ளப்படும் வேளையில் பேத்தியின் உலகம் வர்ணங்களால் நிரம்பக்கூடியதாக அபாரமான கற்பனைவாதங்களுடன் வளரக்கூடியதாகவும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

மல்லி வர்ணம் தீட்டும் ஓர் ஓவியத்தைப் பற்றி கதையில் விவரிக்கப்படும் இடம் மிக முக்கியமானவை. “ பிள்ளைகள் விளையாட்டுப் பூங்காவின் ஓர் ஊஞ்சல், ஒரு சறுக்குப் பலகை, ரெட்டை ஜடை போட்ட சிறுபெண் சடை பறக்க ஓட்டம், ஒரு பந்து, உதைக்க காலைத் தூக்கிய பையன், ஒரு குருவி, தூரத்தே மலைகளும் சூரியனும்” என்று அந்த ஓவியத்தைப் பற்றி விவரம் இடம் பெறுகிறது. ஒவியம் முழுக்க எல்லாமும் மிகவும் அழகானவை. ஆனந்தமான கொண்டாட்டங்களை முன்னிறுத்தக்கூடிய பொருள்கள், செயல்கள் என குழந்தைகளின் உளவியலை கட்டமைப்பது இந்த அழகியல்தான் எனச் சொல்லப்படுகிறது. அடுத்த வரியில், “ உலகின் கொடுமைகளைக் குழந்தைகளுக்குக் காட்டாமல் விளையாட்டையும் ஆனந்தத்தையும் மட்டுமே வடிக்கட்டி காட்டும் சித்திரங்கள்” என எழுதியிருக்கிறார். இதுவொரு குழந்தை உளவியல் அணுகுமுறை. உலகியல் உக்கிர நடப்பின் எல்லைகளிருந்து குழந்தைகளின் அக அமைப்பை அகற்றும்/கட்டமைக்கும் உத்தி.

எனக்கு மாணவர்கள் எழுதும் “கடற்கரை” குறித்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. “கடற்கரைக்குச் சுற்றுலா சென்றோம்” அல்லது “கடற்கரை” எனத் தலைப்பிட்ட கட்டுரையை 20 மாணவர்களுக்கு அளித்திருந்தேன். பிறகு அக்கட்டுரைகளைத் திருத்தும் பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஒட்டு மொத்தமாக எல்லாம் மாணவர்களும் கடற்கரை குறித்து ஒரேவிதமான ஒழுங்குகளையே தனக்குள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஏறக்குறைய ஒரேவிதமான கடற்கரையைத்தான் கட்டுரைக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக ஒரு தம்பி ஒரு தங்கை, இருவரும் கடலில் குளிக்கிறார்கள், கண்டிப்பாக அவர்களின் கையில் ஒரு பந்து இருக்கிறது, மேலும் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பர், தூரத்தில் சிலர் நீச்சல் அடித்துக் கொண்டே இருப்பர், எல்லாம் அம்மாக்களும் உணவு பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அப்பாக்களுக்குக் கடற்கரைக்கு வந்தால் நாளிதழ் படிப்பதைத் தவிர வேறு சுவாரிசயங்கள் இல்லை போல(எல்லாம் அப்பாக்களும் இதைத்தான் செய்கிறார்கள் மாணவர்களின் கட்டுரையில்).

மாணவர்கள் ஏற்கனவே வாசித்த மாதிரி கட்டுரையின் அமைப்பை தன் அகத்தில் வலுவாக ஓர் ஒழுங்காக வைத்துக் கொண்டிருப்பதன் விளைவாக இதை அணுகலாம். அவர்களின் கடற்கரை ஆனந்தங்களின் கொண்டாட்டங்களாக மட்டுமே கட்டமைப்பக்கப்பட்டு போதிக்கவும் படுகிறது. இது எங்கிருந்து மாணவர்களின் அகத்தில் ஒட்ட வைக்கப்படுகிறது என்றால், ஒன்றாம் ஆண்டு இரண்டாம் ஆண்டுகளில் மாணவர்கள் வர்ணம் தீட்டும் எல்லாம் கடற்கரை ஓவியங்களும் இப்படிப்பட்ட சித்திரமாகத்தான் இருக்கிறது. என்னுடைய (1989) ஒன்றாம் பருவத்தில் நான் வர்ணம் தீட்டிய கடற்கரை ஓவியத்தின் ஒழுங்குகள்தான் இப்பொழுதும் (2009) இருந்து வருகிறது. மாணவர்களின் கடற்கரைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்க வைக்கப்படுகிறதா?

கதையில் மல்லி, மனிதர்களின் உடலுக்கு ஒழுங்குகளைச் சிதைக்கும் வகையிலான வர்ணங்களைத் தீட்டுகிறாள். ஒரு காலுக்கு மஞ்சள் வர்ணமும் இன்னொரு காலுக்கு பளுப்பு வர்ணமும் தீட்டி தாத்தாவின் சோர்ந்துபோன அகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். இதுவரை பார்த்து பழகிப் போன ஒழுங்குகளை அகற்றுவது தடுமாற்றத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மல்லி சொல்கிறாள், “இது இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் தாத்தா, எல்லாம் ஒரே கலர்லே இருக்கறது நல்லா இல்லெ”. எல்லாவற்றின் மீதும் சோர்வளிக்கக்கூடிய பிம்பங்களின் மீதும் தனது படைப்பாற்றலின் மூலம் மாற்று வர்ணங்களைப் பூசி அதன் ஒழுங்கை உடைத்து அழகைக் காட்டுகிறாள் மல்லி. அது அவளின் தரிசனம், குழந்தைகளின் உளவியலின் மீதான நமது பாரம்பரிய புரிதலை மாற்றிக் காட்டும் பார்வை.

இரண்டாம் பகுதி

ஆனால் கதை நெடுக அதீதமான குழந்தையின் மொழி, எல்லாம் புத்திசாலித்தனங்களையும் ஆழமான சொல்லாடல்களையும் விவாதங்களையும் குழந்தைகள் பேசுவது போலவே சித்தரிப்பது, அவர்களின் எளிமையை மீறும் ஒரு வன்முறையாகவும் கருதக்கூடும். மழையின் வர்ணத்தை உணர்த்துவதன் மூலம் தாத்தாவின் உலகம் ஒரு மானுட உச்சத்தை எட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது. தாத்தாவின் உள்ளத்தில் தோன்றும் உளக்குரலாகத் துவங்கும் கதை கடைசியில் அவருக்குள்ளே புதிய புரிதலுடன் சரிகிறது.

பல இடங்களில் கதையில் வரும் தாத்தா ஓர் இலக்கிய வாசகர் அல்லது எழுத்தாளர் எனப் புரிந்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்களின் மூலம் காட்டப்பட்டுருக்கிறார். காலச்சுவடு, சு.ரா, சிறுகதை என மீண்டும் அறம்/இலக்கியம் சார்ந்த கூறுகள். (வைரமுத்துவின் வரிகளைக் காட்டுவதன் மூலம், மழை குறித்து வைரமுத்து மட்டுமே எழுத முடியும் போல, அல்லது மழையைப் பார்த்தால் வைரமுத்துவின் வரிகள் மட்டுமே ஞாபகத்திற்கு வரும் போல என்கிற சலிப்பு உண்டாகுகிறது- இது என் பிரச்சனை)

இன்னொரு இடத்தில் “சிறுகதையை எழுதிவிட்டால், ஓர் எழுத்தாளன் தாங்கள் அதை வாசகனுக்கு விளக்க வேண்டியதில்லை, என்ற விதியைத் தாங்களாக வகுத்துக் கொண்டு அவர்களாக வாசகர்களிடமிருந்து ஒளிந்து வாழ முடிகிறது” எனக் கதையாசிரியரின் வரி முன்னுக்குப் பின் முரணாக வந்து விழுகிறது. இலக்கியத்தில் பாராம்பரியமான ஒழுங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை முன்னிறுத்தும் வகையைச் சேர்ந்த வரிகள் இவை.

அப்படியென்றால் இனி கதையை எழுதிவிட்டு, அந்தக் கதையைப் பற்றி வாசகனிடன் பக்கம் பக்கமாக விளக்கமளித்து வாசகனின் சுதந்திரத்திற்குள் தலையிட வேண்டுமா? அல்லது அவனது வாசக சுதந்திரத்தை அபக்கறிக்க வேண்டுமா? ஒரு புறப்பொருளையே தனது பேத்தி ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட வர்ணங்களில் தரிசிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் கதையில் வரும் தாத்தா, ஒரு படைப்பை, இலக்கியத்தை, ஏன் இவ்வளவு கராரான ஒழுங்குகளுடன் பரிந்துரை செய்கிறார் எனும் கேள்வி எழுகிறது.

2005 என நினைக்கிறேன், தனது “ஊசி இலை மரம்” சிறுகதை தொகுப்பை வெளியீடு செய்ய சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த எழுத்தாளர் ரெ.கா, “ஒரு கதை அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் பல புரிதல்களை அல்லது எல்லைகளைத் தொடும் முயற்சிகளைக் கொடுக்க வேண்டும், அதுதான் சிறுகதையின் வெற்றி” என தனது விமர்சன உரையில் சொல்லியிருந்தார். அது அப்பொழுது அழுத்தமாக என் மனதில் பதிந்திருந்தது. இன்றும் அப்படியொரு (முன்பைவிட) மதிப்பீடுகள்தான் பற்பல வாசிப்புகளுக்குப் பிறகும் எனக்குள் இருக்கிறது. இது மாறுப்படலாம்.

இதைத் தவிர்த்து, கதையின் மற்றொரு பகுதிகளை, குழந்தைகளின் உலகையும் அதன் அதிசயத்தக்க வர்ணங்களையும் தரிசிக்கும் அழகியலான களமாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இது எனது விமர்சனம் மட்டுமே. –தொடரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, October 30, 2009

மலேசிய குட்டி முதலாளித்துவமும் அதிகாரத்துவத்தின் இழிக்குரலும்

சில வருடங்களுக்கு முன்னதாகவே தமிழர்கள் சுயத்தொழில், வியாபாரம், சிறுத்தொழில் என பொருளாதார ரீதியில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும். சிறு தொழிலுக்கான பயிற்சிப் பட்டறைகள், வழிக்காட்டுதல்கள் ஆங்காங்கே நடந்து வருவது அதற்கு அரசியல் தலைவர்கள் தலைமை தாங்குவதையும் நாளேடுகளில் பார்த்திருக்கக்கூடும்.

தமிழர்களை உற்பத்தியாளர்களாகவும் முதலாளிகளாகவும் மாற்றியமைக்கும் முயற்சிகள் காலணித்துவ சிந்தனைக்கு எதிர்விளைவாகவே இதனைக் காண முடியும் மேலும் சிறு சிறு சுரண்டல்களுக்கு ஆளான ஒரு சமூகம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கட்டமைத்துக் கொள்ள வியாபாரமும் தொழிலும் மட்டுமே ஏற்கத்தக்க களமாகும் என்கிற ரீதியில் அதிகமான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருந்தனர். சமீப காலமாக சிறுத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு பார்வையில் நல்ல வளர்ச்சியும் ஆரோக்கியமும்கூட.

ஆனால் மார்க்சிய சிந்தனைப்படி இது ஒருவகை அரசியலிலிருந்து விடுப்படுதல், அரசியலுக்கு அப்பால் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துதல் என்கிற வகையில் இந்த வளர்ச்சி முன்வைக்கப்பட்டாலும், பொதுபுத்தி சார்ந்து பார்த்தால், மீண்டும் ஒரு சில குட்டி முதலாளிகளே உருவாகியிருக்கிறார்கள் எனப்படுகிறது. குழுவாதத்தின் புரட்சி குரல்களுக்கு நடுவில் சிக்கி, கரைந்துபோன அல்லது வலுவிழந்துபோன இந்தப் பார்வை, குட்டி முதலாளித்துவம் வளர்ந்து, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் பேரமைப்புகளாக மலேசியாவில் வளர்ந்து விட்டதைக் கவனிக்க மறந்துவிட்டது. இப்பபொழுது அதன் விளைவுகள் நாடலவிளான குற்றங்களாகக் கொண்டு வரப்படுகின்றன.

பொருளீயலை மேம்படுத்த வேலை உலகத்தில் சிக்கிக் கிடக்கும் குடும்பம் அல்லது பெரும் தொழில்கள் செய்யும் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் பணிப்பெண்களாக இருப்பது இந்தோ, இந்தியா, பங்களாடேஸ் பெண்கள்தான். சமீப காலமாக இந்த மாதிரி உழைக்கும் பிரதேசத்து பணியாளர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துதல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என்ற குற்றங்கள் குட்டி முதலாளிமார்களாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கவையாகும்.

அண்மையில் கிள்ளான் இந்திய தம்பதியர்களான தன் எஜமானர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளான இந்தோ பணிப்பெண் மருத்துவனையில் மரணமடைந்த செய்தி இந்திய குட்டி முதலாளிகளின் கொடுமைகளை மேலும் உக்கிரமாகக் காட்டியுள்ளது. வீட்டுக் கழிவறையில் வைத்து பூட்டுதல், சுடு நீரை உடலில் ஊற்றுதல், மொட்டையடித்து அவமானப்படுத்துதல், சூடு வைத்தல் என்று இந்த அதிகார மேல்தட்டு சக்திகளின் கொடுமைகளுக்கு, உழைக்க வந்த அன்னிய தேசத்து அப்பாவிகள் பலியாக வேண்டுமா? யார் வளர்த்துவிட்டது இந்த மனோபாவங்களை இந்தப் பணக்கார முதலாளிகளிடம்?


இயலாமை காரணமாகப் பிழைக்க வந்த தொழிலாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலே போதுமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைக் கொடுத்தாலே போதும், ஆனால் அவர்கள் மேலும் மேலும் இந்த மாதிரி மனிதநேயம் சிதைந்த குட்டி முதலாளிகளிடம் சிக்கி, சுரண்டப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதும் என சீரழிவது வண்மையானது. முதலாளிகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது வெளிநாட்டவர்களை இங்கே உழைக்கக் கொண்டுவரும் ஏஜேண்டுகள், அவர்களின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது, அவர்களின் உழைப்பு இழிவுப்படுத்தப்படாது, சுரண்டப்படாது என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்ட பின்பே முதலாளிகளிடம் அவர்களைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்பும் பல இந்திய உணவகங்களிலும் இதே போன்ற கொடுமைகள்தான் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. பட்டினி கொடுமையால் உணவகங்களில், அதிகமான நேரங்கள் வேலை வாங்கப்படுவதும், உறக்கம் இன்றி உழைப்பதும் என்று மிகப் பயங்கரமாகச் சுரண்டப்பட்டார்கள். இந்திய தமிழர்களை மலேசிய தமிழர்களே இப்படிக் கொடுமைப்படுத்தி அதிகாரம் செலுத்துவது இன்னொரு காலணித்துவ மனோபாவங்களையே காட்டுகிறது.

மேலும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொழிலாளியான ஒருவரை மலேசிய இந்திய முதலாளியும் அவரின் குடும்பமும் உடல் சித்ரவதை செய்து, அவரைக் கொன்று குரூண் செம்பனை தோட்டத்தில் தூக்கி வீசினார்கள். முதலாளிமார்களின் பயங்கரவாதத்தைக் காட்டும் இச்செயலை ஒட்டு மொத்த மலேசிய சமூகமே மறந்து போனதை ஞாபகப்படுத்துகிறேன். நாளிதழில் அவர் மலேசியாவிற்கு வேலைக்கு வந்த புகைப்படத்தையும், கொடுமைக்குள்ளான சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரின் ஆரோக்கியமும் சக்திகளும் முழுமையாக இந்த அதிகார பேய்களால் சீரழிக்கப்பட்டதை ஒட்டு மொத்த மலேசியாவும் பார்த்து, இந்தச் செய்தி அவ்வளவு பரபரப்பாகியும், மீண்டும் இதே போன்ற கொடுமைகள் இந்த முதலாளி வர்க்கத்தால் நடத்தப்படுவதென்றால், இந்த முதலாளிமார்களுக்கு என்ன உணர்வே இல்லையா?

இந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கொடுமைகள் குறித்து வெகுமக்களின் உணர்வுகள் எப்படிப் பதிவாகிறது எனவும் தெரியவில்லை, காரணம் இன்றைய சூழலில் நமது பலரின் வீட்டில் தரையைத் துடைத்துக் கொண்டும் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டும் தனது குடும்பங்களை விட்டுப் பிரிந்து வேலை செய்து கொண்டிருப்பது இந்தப் இந்தோ பணிப்பெண்கள்தான். இவர்கள் என்ன இழிப் பிறவிகளாக? இப்படி நடத்தப்பட நமக்கு யார் உரிமையைக் கொடுத்தது? எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் அம்மா வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு அவர் வீட்டிலிருக்கும் இந்தோ பணிப்பெண் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதன் ஒரு வரி மனதை அதிகமாகவே காயப்படுத்தியது.

“இந்த நாய்ங்க பொழைக்க வந்துட்டு என்னா திமுறு, சும்மா சும்மா பாத்ரூம் கழுவ வைக்காதீங்கனு என்கிட்டயே சண்டெ போடுது”

இதுதான் ஒட்டுமொத்த குட்டி முதலாளி வர்க்கத்தின் மொழியா? எப்பொழுது அந்த அம்மா அத்தகையதொரு சொல்லாடல்களை உழைக்கும் வர்க்கத்திருக்கு எதிராகப் பிரயோகம் செய்யத் துவங்கினார்? குட்டி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு குடும்ப உறுப்பினர்களையும் பாதித்திருக்கலாம் அல்லது நமது காலணித்துவ மனோபாவமாகக்கூட இருக்கலாம்.

குற்றத்திற்கான தண்டனைகளை பயங்கரமாகப் பிரகடனப்படுத்துவதிலும், குற்றத்திற்க்கான தண்டனைகளை விளம்பரப்படுத்தி மக்களைப் பயமுறுத்தல் செய்வதையும்தான் சட்டமும் ஊடகங்களும் செய்கின்றன எனத் தோன்றுகிறது. குற்றம் நிகழ்ந்ததன் அரசியல் – சமூக பின்னனிகள், எப்படி இக்குற்றம் உக்கிரமடையாமல் இருக்க பரிந்துரைகளை உற்பத்தி செய்வது என ஆழந்து சிந்திக்காத ஒரு சூழலா இங்கு உள்ளது? கேள்விக்குறிகள் தேங்க தேங்க குற்றங்கள் மறக்கப்பட்டு மீண்டும் குட்டி முதலாளித்துவம் வளரவே செய்யும் உயிர்களையும் பறிக்கும் அளவிற்கு.
அண்மையில் மலேசிய எழுத்தாளர் மீனாமுத்து எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இந்தோ பணிப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியிருப்பார். இறுதியில் அந்தப் பெண் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவாள். ஆனால் முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாதவள், வீட்டின் தண்ணீர் தொட்டியில் அவளது மாத விடாய் நம்கினை அதன் குழாயில் போட்டு அடைத்துவிட்டு வந்துவிடுவதாகக் கதை முடிவடையும். இதுதான் கொடுமைகளுக்கு எதிரான செயல்.

குறிப்பு: ஒரு சிலர் இவர்களை நன்முறையில் வழிநடத்தி அன்பாகப் பழகுவதும் இங்கு உண்டு. அதே சமயம் பெரும்பாலான சூழலில் இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்க, சக உயிரைத் துன்புறுத்தும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு மோசமானவர்களாகிவிட்டோமா? ஒட்டு மொத்த சமூகமே இந்தக் குட்டி முதலாளிகளின் போக்கு குறித்து கண்டனத்தை எழுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து மலேசிய வரும் தமிழர்களை (ஒரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படிப் பிழைக்க வந்தவர்கள்தான் என மறந்து) கொடுமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது சர்வதேச அளவில் மலேசிய தமிழர்கள் குறித்து பலவீனமான மதிப்பீடுகளைக் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இது வலுவடைவதற்கு முன் நம் குரல்கள் முதலில் தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்தக் குட்டி முதலாளித்துவத்தை உடைக்க வேண்டும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, October 29, 2009

உலக சினிமா விமர்சனம் - பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான வடிவமும் - ஒரு மௌன போராட்டம் (spring, summer, winter, fall, and spring)

“இரவும் பகலும் குளிர் காலமும் வசந்த காலமும் பசியும் திருப்தியும் சேர்ந்ததுதான் கடவுள்”

கொரியாவின் பின்புலத்தில் ஒரு மலைபிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஏரி போல புதைந்து கிடக்கும் இடத்தில் பௌத்த ஆலயம் இருக்கிறது. நீர்ப்பரப்பின் நடுவில் எப்பொழுதும் அசைந்து அல்லது மிதந்து கொண்டிருப்பது போன்ற ஆலயம். ஒரு முதிய பௌத்த துறவியும் ஓர் சிறுவயது பௌத்த துறவியும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கதைத் துவங்குகிறது.

நான்கு பருவக் காலத்தின் பின்னனிகளுடன் அதே இடத்தைப் படமாக்கியிருப்பது அசாத்திய கலை முயற்சி எனலாம். வெயில் காலம், மழைக்காலம், குளிர்க்காலம், இளவேனிற் காலம் என்கிற வெவ்வேறான சூழலில் ஒரே பௌத்த ஆலயமும் ஏரியும் அதே பௌளத்த பிக்குகளுடன் காட்சிப்படுத்தியிருப்பது கொரியா சினிமாவான இப்படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம்.

பின்காலணியத்துவ சமூகம் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், கொரியா சினிமா தனக்கான அசலை அடையாளங்கண்டு, தனது நிலப்பரப்பில் கலாச்சார வெளியின் மூலம் சினிமா எல்லையை உலகப் பார்வைக்கு விரிவுப்படுத்திக் கொண்டது எனலாம். அதில் பல உலக தரத்திலான விருதுகளை வென்ற கி டுக் கிம் எனும் இயக்குனர் முக்கியமானவர். அவர் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் இது.

“முதலில் மென்மையாகவும் மிதந்து செல்லும் தன்மை உடையவராகவும் மாறுங்கள். இயற்கையோடு போராடாதீர்கள். அதற்கு மாறாக, அதனுடன் கலந்து உறவாடுங்கள்”

படம் முழுக்க பௌத்த துறவிகள் இருவரும் ஆசிரமத்தில் இருப்பதாகவும் ஆசிரமத்தை விட்டுப் படகில் பயணிப்பதாகவும், ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் மிதக்கக்கூடிய தோற்றத்துடன் மலைப்பிரதேட்சங்கள் வெறிக்கும் உருவமாக நிலைத்திருப்பது ஜென் கோட்பாடுகளின் படிமங்களாகச் சொல்லப்பட்டுருக்கிறது போல தோன்றுகிறது.



“இறுக்கத்தையும் துன்பத்தையும் உண்டு பண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம்”

மேற்குறிப்பிட்ட ஜென் சிந்தனை, மனிதன் தன்னுடன் சுமந்து திரியும் தன்னுடைய உலக வாழ்வியலை, தன்னால் செய்யப்பட்ட பாவங்களை, தனக்கான சிந்தனைகளை ஒரு கணமான கல்லைப் போல கட்டிக் கொண்டு அலைகிறான், அது அவனை வண்மையாக சோர்வடைய செய்கிறது, அவனைத் துவண்டு விடச் செய்கிறது என்பது போல, படத்தில் வரக்கூடிய பௌத்த துறவி சிறுவன் ஒரு மீனையும், தவளையையும், பாம்பையும் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி நீரில் விடுகிறான். அதன் தத்தளிப்பையும் துன்பத்தையும் கண்டு மகிழ்கிறான். இவனுடைய செயலைப் பார்க்கும் அவனது குரு, அவனையும் கல்லால் கட்டி அவன் துன்பம் விளைவித்த உயிரினங்களை விடுவிக்கும்படி சொல்கிறார். அவனும் கல்லைத் தனது உடலில் சுமந்து கொண்டு அந்த உயிரினங்களைத் தேடி அலைகிறான். சுமத்தல், சுமந்து செல்லுதல் எவ்வளவு துன்பம் என உணர்கிறான். பிறகு மீனும் பாம்பும் இறந்து கிடப்பதைப் பார்த்துக் கதறி அழுவதோடு முதல் பருவக் காலம் முடிவடைகிறது. பிறகு அடுத்த பருவக் காலத்தில் அவன் இளைஞனாக வளர்ந்துவிடுகிறான்.


“இந்தப் பிரபஞ்ச முழுமையை எப்படிப் பார்க்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் வாழ்வும் அமையும். வெறுமனே, வெறுமையாக சூன்யமாக இருங்கள் என்று பௌத்தம் கூறுகிறது”

ஆலயம், புத்தர் சிலை, குரு, பருவ காலத்தின் மாற்றங்கள் என மட்டுமே வாழும் அந்தப் பௌத்த துறவியின் உலகம் வெறுமையில் சூழ்ந்திருப்பதாகவும், இந்த மலைப்பிரதேசங்களையும், காட்டையும், ஏரியையும், அதன் முழுமையோடு தரிசிக்கும்போது, வெறுமையாக சூன்யமாக மட்டுமே உணர முடியும் என்பது போல, அவனின் உலகத்தில் ஒரு முழுமை இருக்கிறது, ஆனால் சொற்கள் இல்லை, பகிர்வுகள் இல்லை. ஆணைகள் படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறான்.

இங்கு யாரும் யாரையும் வெற்றிக் கொள்வது இல்லை. பிரபஞ்சத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு சண்டையிட்டுக் கொள்ள முடியாது என்கிற பௌத்த சாரத்திற்கேற்ப படத்தின் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் ஒரு பருவக் காலம் போல வெறுமனே கடந்து செல்கிறது. பனி வந்து மறையும் ஒரு தருணம் போல, ஆலயத்தின் வெளியைச் சுற்றியே நகர்கிறது எல்லாமும்.

புத்தர் தன் பரிசோதனையாக, மனித மனம் என்ற தன்மையில் மிக ஆழமாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு ஒன்றுமே இல்லை, வெற்றிடமாக உள்ளது என்று சொன்னார். மிக மிக நுண்ணிய தன்மையில் பொருள் மறைந்து விடுகிறது. அங்கு வெறும் சக்திதான் நிலவுகிறது. சூன்யம் ஓர் அனுபவம் மட்டுமே, அதை விளக்க முடியாது, ஆகையால் அனுபவப்பூர்வமாக புத்தத்தை யாரும் வெல்ல முடியாது, ஆனால் உலகியல் தர்க்கம் சார்ந்து புத்த சிந்தனைகளை தோற்கடிக்க முடியும் அல்லது கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பின்னனியில்தான் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. பௌத்தமும் பௌத்தத்திற்கு எதிரான உலகியல் பிடிமானங்களும் சந்தித்துக் கொள்ளும் ஒரு மையப்புள்ளியாக இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரமத்திற்கு வைத்தியத்திற்காக வரக்கூடிய இளம்பெண்ணுடன் அந்த இளம் துறவிக்குக் காதல் ஏற்படுகிறது. முதன் முதலில் அவன் பார்க்கக்கூடிய பெண்ணாக அவள் அங்கு வந்து சேர்கிறாள். அவளுடன் சுற்றித் திரிகிறான், உடலுறவு கொள்கிறான், எதிலிருந்து அவன் விலகியிருந்தானோ அவையனைத்தும் அந்தப் பெண் மூலமாக அவனை வந்தடைகிறது. உலகியல் சுகத்துக்கங்களை ஒரு சுமையென சுமந்து கொள்ளத் துவங்கியதும், புத்தத்திற்கு எதிரான மனம் அவனுக்கு உருவாகிறது. தான் கண்டடைந்த சுகங்களின் மூலம் தான் இருப்பதாகவும், தன்னைப் பற்றி அதிகமாகவும், அந்தப் பெண்ணை ஆழமாகவும் காதலிக்க துவங்கும் கணங்களில் உலகியலுக்கும் பௌத்தத்திற்கும்  மௌன போராட்டம் நிகழ்த்தப்படுகிறது. பிறகு ஆசிரமத்திலிருந்து வெளியேறி உலகியல் வாழ்விற்குச் சென்றுவிட்டு, ஒரு கொலையும் செய்துவிட்டு மீண்டும் ஒரு பருவக் காலத்தில் ஆசிரம் திரும்புகிறான். அந்தப் பெண் பௌத்தத்திற்கு எதிரான வடிவமாகவே வந்து, பிறகு படத்தின் இறுதியில் ஆசிரமத்தின் எதிரில் பனிகட்டி இடைவெளியில் சிக்கி இறந்தும் விடுகிறாள். இப்படியாகப் படம் ஒரு விரிவான தளத்தில் இயங்குகிறது.

படத்தின் காட்சியமைப்புகளும், ஒளிப்பதிவும் தமிழ் பார்வையாளர்களுக்குப் புதிய பிரமாண்டமான அனுபவமாக இருக்கும். மேலும் எந்த அலட்டலும், மிகைத்தன்மைகளும், போலித்தனங்களும், ஆட்டமும் பாட்டமும், குத்தாட்டமும், மசாலாக்களும் இல்லாமல் மிக நேர்த்தியாக பௌளத்தத் துறவிகளின் வாழ்வையும், நிலப்பரப்பு சார்ந்த ஒவ்வொரு பருவக் காலங்களையும் அழகியலோடு காட்டியிருப்பது மாற்றுச் சினிமாக்கான வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது.

“சினிமா சமூக – கலாச்சார – பண்பாட்டு நிதர்சனங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி, ஒப்பனைகளின்றி, போலித்தனங்களின்றி, மிகையின்றி, நகலின்றி, வாழ்வையும் அசல் மனிதர்களையும் காட்டக்கூடிய களம் மட்டுமே”

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, October 26, 2009

வீடு - மனித நகர்வின் அடையாளம்

ஒரு தனித்த வீடு
திறந்த கதவுகள்
சருகுகள் நுழையும்
பரந்த வெளி
ஆள் நடமாட்டமில்லாத
சூன்யத்தில்
யாரோ சிலர்
பேசிக் கொள்கிறார்கள்
சிரிப்பதும் கேட்கிறது


சிலரின்
இயக்கங்களை என்றுமே
சுமந்தபடியே
தனித்த வீடு

வீடு என்பதை கற்களாலும் பலகையாளும் ஆணியாலும் கட்டப்பட்ட ஜடப்பொருள் என்று சொல்லவே இயலாது. வீடு ஒரு சிலரின் அல்லது மனிதக் கூட்டத்தின் கனவுகளால் நிரம்பிய உயிருள்ள காலத்தின் சாட்சி. வீடு மனிதர்களைச் சுமந்து நிற்கும் சாமி என்றுகூட சிலர் கொண்டாடுகிறார்கள். வீட்டைப் பார்த்து பார்த்து, இடத்திற்கிடம் தனது கற்பனையாலும் உழைப்பாலும் சேகரித்த பணத்தைக் கொண்டு உருவாக்கும் மனிதர்களின் கண்களில் அந்த வீடு பற்றிய கனவுகளை, எண்ணங்களை நுணுக்கமாகப் பார்க்கலாம்.

வீடு வாழ்கிறது. தன் பிள்ளையை வயிற்றில் சுமந்துக் கொண்டு வாழும் கங்காருவைப் போல, வீடு மனிதர்களை விழுங்கிக் கொண்டு காலத்திற்குக் காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் மாபெரும் இயக்கத்தை, இன்ப துன்பங்களை, வெறுப்பை, ஆசைகளை சமாளித்தபடியும், சகித்தபடியும் வீடு நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீடுகளும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வின் அடையாளம், அவனது அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளைப் பாதுகாத்து தன்க்குள்ளே வைத்திருக்கும் வீடு தொடங்கி வாழ்வு முழுவதும் அவனது கதறல்களை, அழுகைகளை, வலிகளை ஏற்றுக் கொண்டு அவனைக் கட்டித் தழுவி அவனது வெறுமைகளை வெறுமையாகவும் இரசனைகளை இரசனையாகவும் சுயம் காக்கும் வீடுவரை, வீடு மனிதர்களின் அகப் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. எனக்கான வீடுகள்கூட இன்றுவரை என்னுடன் வளர்ந்து, என் நினைவுகளில், என் விரல்களில், உடலில், கால்களில் ஒட்டிக் கொண்டு என்னுடனே அலைந்து கொண்டிருக்கின்றன.


5 வயது நெருங்கிய சமயத்தில்தான் எனக்கு எனது முதல் வீட்டின் பிரக்ஞை தோன்றியது என்று நினைக்கிறேன். அப்பொழுது நாங்கள் இரப்பர் காட்டுப் பகுதியில் ஒர் இரட்டைமாடி பலகை வீட்டில் குடியிருந்தோம். மேல்மாடியில் எனது அறை இருந்திருக்கும். சன்னலின் வழியாக அதன் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு எக்கி எக்கி, இரப்பர் மரங்களின் உச்சியைப் பார்க்க முயற்சி செய்ததைப் போல தோன்றுகிறது.

5 வயதில் நான் உணர்ந்த எனது முதல் வீட்டின் நினைவுகள் மங்களான காட்சிகளாகத்தான் பதிந்து கிடக்கின்றன. படிக்கட்டுகளில் நான் எப்பொழுதும் தூக்கி வீசும் பெங்குயின் விளையாட்டுப் பொம்மைகள் சிதறிக் கிடக்கும். அம்மாவோ அப்பாவோ அதை எடுத்து என் அறையில் வந்து போட, அதை நான் மீண்டும் படிக்கட்டுகளில் தூக்கி எரிந்து சிரித்திருக்க வேண்டும்.

அப்படியென்றால் என் அறையின் வாசலில் நான் வெளியேறாமல் இருக்க தடை கம்பிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். படிக்கட்டுகள் என் அறையின் வாசலில் வந்து சேரும் இடம் எப்பொழுதும் ஒரு இருளைச் சுமந்தபடியே இருப்பதால், யார் எனது அறைக்கு முன்னால் வந்து நின்றாலும் அவர்களின் முகமும் உருவமும் இருட்டாகத்தான் தெரியும்.(பிந்தைய நாட்களில் இருளைப் பார்க்க நேரும் போதெல்லாம், அங்கு ஏதாவது ஒரு உருவத்தைக் கற்பனை செய்து கொள்ளும் பழக்கமும், இதனால்தான் ஏற்பட்டிருக்கும் போல).

ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் பத்து டுவா என்கிற மலாய்க்காரர்கள் அதிகம் இருக்கும் இடத்திற்கு வாடகை வீட்டைத் தேடி பிடித்து வந்து சேர்ந்துவிட்டோம். அங்குதான் நான் வளரத் துவங்கி, சுதந்திரம் கிடைத்து வீட்டை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள துவங்கிய நாட்கள் ஆரம்பித்தன. அதுவும் ஒரு பலகை வீடுதான். வயலைச் சுற்றிய இடம் என்பதால் தட்டாம் பூச்சிக்கு மவுசு அதிகம். எப்பொழுதும் தட்டான் பூச்சி பறந்து கொண்டிருக்கும் இடமாக இருந்தது. சன்னலில் வந்து முட்டிக் கொண்டு மீண்டும் பறக்கும் தட்டான் பூச்சிகளின் வீடாக எனது வீடு மாறியிருந்தது. வயலுக்குச் சென்று தட்டான் பூச்சிகளைச் சேகரிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியிருந்தேன்.

அந்த வீட்டில், எனக்கான அறை, சமையலறையை நெருங்கினாற்போல அமைந்திருந்ததால், இரவில் படுத்துறங்க கொஞ்ச சிரமமாக இருக்கும். அம்மா உறங்கும்வரை சமையலறையில்தான் எதையாவது உருட்டிக் கொண்டும் சுத்தம் செய்து கொண்டும் இருப்பார். அதனால் கொஞ்சம் தைரியமாக இருக்கும். அவர் உறங்கிய பிறகு, சமையலறையிலிருந்து ஏதாவது வினோதமான சத்தம் கேட்பது போலவே பிரமையாக இருக்கும். அந்தச் சத்தங்களினூடே ஏற்பட்ட பீதியுடன் உறங்கிய நாட்கள்தான் அதிகம்.


சமையலறை கதவின் கீழ்ப்பக்கம் சிறிய இடைவெளி இருப்பதால், அந்தத் திறப்பை அடைப்பதற்காக அப்பா எப்பொழுதும் ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொண்டபடியே இருப்பார். முதலில் பாலித்தீன் பைகளை வைத்து அடைத்து பார்த்தாயிற்று. எலி தொல்லை அதிகப்படியால் அடிக்கடி அந்தப் பைகள் கிழிந்து தொங்கி, இடைவெளியை மீண்டும் உருவாக்கியிருக்கும். அப்பா வேறு பலகையைக் கொண்டு செய்து பார்த்தும், நாளடைவில் அந்தப் பலகையையும் ஆணி பெயர்ந்து கொள்ளும். அம்மாதான் இந்த ஓட்டையால் மிகவும் சிரமப்பட நேர்ந்தது. சமையலறை வீட்டின் வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் இறக்கமான பகுதியில் இருப்பதால் பக்கத்து கிணறிலிருந்து ஊர்ந்து வெளியேறும் பூரான் பூச்சிகளுக்கு அடிக்கடி பலியாகிவிடுவார். 4 முறை பூரான் கடித்து அம்மா அவதிபட்ட போது வீட்டின் கீழ்த்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அந்த இடைவெளியின் மீது அதிகமான வெறுப்பு உண்டானது.

அதன் பிறகு எனக்கு 11 வயது நெருங்கியபோது அப்பா எங்களை வேறு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு மோட்டார் பட்டறையின் பக்கத்து வீடு அது. கீழே சிவப்பு சிமெண்டு என்பதால் எப்பொழுதும் அந்த வர்ணம் நகர்ந்து கொண்டே இருப்பது போல தோன்றும். அந்த வீட்டில்தான் எனக்குப் முதல்முறை பேய் பயம் ஏற்படத் துவங்கியது. எனக்கென்று ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்துதான் பேய் என்கிற என் கண்களுக்குப் புலப்படாத ஒரு உலகத்தைப் பற்றி அதிகமாக அக்கறைக் கொள்ளத் துவங்கினேன்.

என் அறை ஜன்னலின் கீழுள்ள மூன்று கண்ணாடிகள் இல்லாததால், இரவில் அந்த இடைவெளியில் தெரியும் வீட்டின் பக்கத்திலுள்ள அடர்ந்து காடு கொஞ்சமாக அகன்று வந்து என் அறையை எட்டிப் பார்ப்பது போலவே பிரமைகள் ஏற்படும். ஏன் இந்த மாதிரி எப்பொழுதும் என் வீட்டிலுள்ள பகுதிகளில் இடைவெளி ஏற்படுகிறதோ என்று வியப்பாக இருக்கும். அந்த இடைவெளியில் தெரியும் காட்டை வெறித்தவாறே தயங்கி தயங்கி கண்களை மூட முயற்சித்து பார்ப்பேன். எனக்கே அறியாத ஒரு தருணத்தில் தூங்கிவிடும்போதுதான் அந்தப் பீதி மறந்து போயிருக்கக்கூடும்.


அந்த வீட்டில்தான் எனக்கு ஒரு நண்பனும் கிடைத்தான். என் வீட்டிலிருந்து 5 வீடுகள் தள்ளி அவன் வீடு இருந்தது. இரவில் கடைக்கு என்னை அனுப்புவார்கள். என் வீட்டையொட்டி இருக்கும் காட்டுப் பகுதியைக் கடந்து சென்றால்தான் கடை வரும். அந்தப் பாதையில் நடக்கும்போதெல்லாம் எல்லாம் வகையான சாமி பாடல்களையும் வேகமாகப் பாடிக் கொண்டே ஓடுவேன். மூச்சு வாங்க கடையில் நுழையும் போது “கண்ணு” அக்கா வேடிக்¨யாக “பயந்தாங்கோளி வந்துட்டான்” என்று கத்துவார். அந்த அக்காவின் கண்கள் பெரியதாக விரிந்து இருப்பதால் அவருக்கு “கண்ணு அக்கா”னு பெயர் இருந்தது.

அந்தச் சமயங்களில் அந்த இருள் பாதையில் பழக்கமானன் என் நண்பன் பார்த்திபன். என்னுடன் அவனும் என் வீடு வரை நடந்து வந்து எனக்கு தைரியத்தைக் கொடுத்தவன் அவன்தான். கொஞ்ச நாட்களில் இரவில் என் வீட்டுக்குள்ளே வந்து என்னுடன் ஓடியாடி விளையாடக்கூடிய அளவிற்கு நெருக்கத்தை உருவாக்கியிருந்தான். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அவனைப் பிடித்திருந்ததாலும் அவனுக்குள்ளிருக்கும் முதிர்ச்சி நிலையை அறிந்ததனாலும் அவனுடன் எங்கு வேண்டுமென்றாலும் அனுப்புவதற்கு எங்கள் வீட்டில் தயாராக இருந்தார்கள். நானும் பார்த்திபனும் எங்கள் வீட்டின் எதிர்புறமுள்ள பங்களா வீட்டில் விளையாடுவதற்காகக் கிளம்பிவிடுவோம். என் வீட்டிற்கு அடுத்தபடியாக நான் பயந்து அலறியது அந்தப் பங்களா வீட்டுக்குத்தான்.

பாழடைந்த வீடு, அறைக் கதவுகள் திறந்தபடியே அடர் இருளைச் சுமந்து கொண்டு அச்சுறுத்தலாக இருக்கும். பார்த்திபன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த வீட்டின் இருளை ஊடுருவி நுழைந்து எதிரொலிக்கும் அந்தக் காலியான பங்களாவிலிருந்து கத்திக் கொண்டே வெளியே ஓடி வருவான். நாங்கள் அந்தப் பங்களாவிலிருந்து வந்த பிறகும் எங்களின் குரலின் எதிரொலி எங்கேயோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்தப் பங்களா அந்தக் காலத்தில் தோட்டக் கங்கானியின் மனைவி வாழ்ந்த வீடு என்று சிலர் சொன்னார்கள்.

எனக்கு 16 வயது வந்தபோது நாங்கள் அங்கிருந்து வேறு வீடு மாறுவதற்கு கட்டாயம் ஏற்பட்டது. அந்த வீட்டைவிட்டு வேளியேறும்போது மனம் வலித்தது. எங்களின் எல்லாம் நகர்விலும் தொற்றிக் கொண்டிருந்த துன்பம் வலி, பகிர்தல், அமைதியான பொழுதுகள், அப்பாவின் சத்தம், அக்காவின் சிரிப்பொலி, அம்மாவின் கதறல், பார்த்திபன் விளையாடிவிட்டு மறந்து விட்டுப்போயிருந்த விளையாட்டுத் துப்பாக்கி. . . எல்லாவற்றையும் வெறும் நினைவுகளாகச் சுமந்து கொண்டு, அந்த வீட்டையும் “உப்பு குட்டி” ஏற்றுக் கொண்டு வேறு வீட்டுக்கு நடந்தேன்.


மனிதர்களின் முதுகில் இந்த மாதிரி எத்தனை வீடுகள் சுமக்கப்படுகிறதோ? எல்லாரின் பருவ நகர்தலிலும் கண்டிப்பாக வீடுகளின் நினைவுகள் பதிந்து கிடக்கும். ஒவ்வொருவரின் வாழ்விலும் வீட்டை நேசித்த கணங்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். வீட்டை உருவாக்குவது என்பது தனியொரு கலை. வீடுகள் வெறும் வீடல்ல. மனித உணர்வுகளால் நிரம்பிய கனவு கோட்டை, அவர்களின் நகர்வின் அடையாளம்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
நன்றி : நாம் இதழ் சிங்கப்பூர்

Wednesday, October 21, 2009

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் சிங்கப்பூர் பயணம்

பின்நவீனத்துவ எழுத்தாளராக அறியப்படுபவருமான, பிரேம் – ரமேஸ் குறிப்பிட்டது போல பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் முக்கியமானவருமான எழுத்தாளர் எம்.ஜி.சுரேஸ் அவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒருமாதம் காலம் வரையில் இருப்பார். பின்நவீனத்துவம் சார்ந்து இதுவரை 10 நாவல்கள்வரை படைப்பிலக்கியத்தில் எழுதியவர், பின்நவீனத்துவத்தில் ஆழ்ந்த அறிவும் சிந்தனையும் கொண்டவர் ஆவார்.

“பின்நவீனத்துவம் நமது கலை, இலக்கிய , மொழி மேம்பாட்டிற்கு மிக அவசியமானது, இந்தியாவில் பின்நவீனத்துவத்தை ஓர் இருண்மையான வடிவம் என்கிற அளவில் புரிந்து வைத்துக் கொண்டு இருண்மையைத் தேடியே அதற்கான புரிதல்களை நகர்த்துகிறார்கள்” என்று தனது வலுவான சிந்தனைகளை கருத்துருவாக்கங்களை இதுநாள்வரை உருவாகியிருக்கும் பின்நவீனத்து புரிதல்களை முரண்பாடுகளை உடைப்பதாக இருக்கிறது எம்.ஜி.சுரேஸ் அவர்களின் உரையாடல்.

தொலைப்பேசியின் வாயிலாக இருமுறை அவருடன் தொடர்புக் கொண்டதில், இந்த முறை மலேசியாவிற்கு வருவதில் விசா சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததோடு அடுத்தமுறை நேரடியாக மலேசியாவிற்கே வருவிருப்பதாகத் தெரியப்படுத்தினார். மேலும் அநங்கம் இதழ் சார்பாக வரும் சனிக்கிழமை அவரைச் சிங்கப்பூரில் சந்தித்து “பின்நவீனத்துவமும் அதன் முரண்பாடுகளும்” குறித்து விரிவான உரையாடலை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். இந்த உரையாடலில் பின்நவீனத்துவம் குறித்து அண்மையில் எழுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் முன்வைத்து அவர் தரப்பு கருத்துகள் சேகரிக்கப்படும்.

பின்நவீனத்துவம் மிக அவசியமானது, அதை மிக எளிமையாகப் புரிந்துகொள்ளலாம் என்கிற தன்னுடைய விவாத மொழியுடன் தொடர்ந்து இலக்கியத்தில் ஈடுப்பட்டு, பல புத்தகங்கள் எழுதி, தீவிரமாகச் செயலாற்றி வரும் எம்.ஜி.சுரேஷிடம் பின்நவீனத்துவம் குறித்து கேள்விகளை முன்வைக்க விரும்புகிறவர்கள், கேள்விகளை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். உங்களின் பெயருடன் அந்தக் கேள்வியும் பதிலும் அநங்கம் இதழில் பிரசுரிக்கப்படும்.

பின்குறிப்பு: அனாமதேய அடையாளத்துடன் கிண்டலான கேள்விகளுடன்(சிலர் இதைச் செய்கிறார்கள்) உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான கேள்விகளை முன்வைக்கவும்.

கே.பாலமுருகன்
மின்னஞ்சல்: bala_barathi@hotmail.com

Monday, October 19, 2009

வரும் 24ல் சிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும் ஒளிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்

“கல்லூரி” திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் சிங்கப்பூர் 24.10.2009 அன்று சிங்கப்பூரில்

சிங்கப்பூர் ஆங் மோ கியோ நூலகத்தில் 24.10.2009 அன்று மாலை 6.15மணிக்கு கவிஞர் அய்யப்பமாதவன் இயக்கிய செழியன் ஒளிப்பதிவு “தனி” குறும்படம் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்வில் செழியன் அவர்கள் நல்ல சினிமா பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நிகழ்வின் இறுதியில் செழியனுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை
pandiidurai@yahoo.com

Tuesday, October 13, 2009

பணியிடத்து அதிகாரக்குரல்கள்



       கடந்த பத்தியில் தமிழாசிரியர்கள் பற்றி குறிப்பிடிருந்தபோது, ஆசிரியர்கள் சுதந்திரமாக தனக்குரிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் தலைமை ஆசிரியர்களால் வழிநடத்தபடுவது போலவும், பள்ளியில் முழுநேரமாக அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் கருத்துகள் சொல்லப்பட்டிருந்தது. இந்தச் சூழல் எல்லாம் பள்ளிகளிலும் இல்லை. தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இப்படியொரு அதிகாரக் குரலை வெளிப்படுத்துவதில்லை. நட்புடன் அன்பாகப் பழகக்கூடிய நல்ல தலைமை ஆசிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதே சமயம் கண்டிக்கத்தக்க தனது பதவியின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அதிகாரத் தொனியுடன் ஆசிரியர்களை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்களும் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


             ஒரு சில பள்ளிகள் அந்தந்த தலைமை ஆசிரியரின் விருப்பப்படி அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடத்தப்படுவது மறுக்க முடியாத உண்மை. தலைமைத்துவ அமைப்பை தன் சுய விருப்பபடி அமைத்துக் கொண்டு அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களை அதிகாரம் பண்ணி அதிகநேர வேலை வாங்குதல், தொடர்பில்லாத சந்திப்புகளுக்கு அனுப்புதல், அவர்களின் பணி உயர்வில் மெத்தென போக்கைக் காட்டுதல் போன்றவற்றைச் செய்வதுண்டு. இதையும் கடந்து ஆசிரியர்களுடன் அணுக்கமாகப் பழக மறுத்து, நல்ல உறவை வளர்த்துக் கொள்ள தயங்குபவர்களும் உண்டு. காரணம் அதிகாரமும் ஆக்கிரமிப்பும் ஒரு பரவசமான இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது. அந்த இடைவெளி அவசியமானதாகக் கருதப்பட்டு கொண்டாடவும் படுகிறது.

                   ஒரு சிலர் தனது பதவியின் காரணமாக தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் புரிந்துணர்வுடன் செயல்பட விரும்பமாட்டார்கள். எல்லோரையும் “தனக்குக் கீழ்” வேலை செய்பவர்களே என்கிற அடையாளத்தினுள் வைத்திருப்பதாலும், அவர்கள் மீது அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஆதிக்கத்தைச் செலுத்த தனக்கு உரிமை இருப்பது போலவும் உடன்பட்டுப் போகாமல் எப்பொழுதும் ஊழியர்களுடன் பகைமை உணர்வையே வெளிப்படுத்துபவர்களும் உண்டு. இங்கே பழி வாங்கல்கள் தாராளமயமாக்கப்பட்டிருக்கும். இதனால் ஊழியர்கள் அதிகாரக்குரல்களால் நசுக்கப்படும் மீதங்களாக ஓர் இயந்திரம் போல உழைப்பைக் கொடுத்துவிட்டு திரும்பும் ஜடங்களாக மாற்றப்பட்டிருப்பார்கள். இதற்கும் இயந்திரத்தை இயக்கி வேலை செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு.

                     பள்ளியில் ஆசிரியர்களுக்கு அவர்கள் மீது காண்பிக்கப்படும் அதிகாரத்தின் கொடுமைகளை அவர்கள் தாராளமாகத் தட்டிக் கேட்கும் உரிமை உண்டு. ஆட்டு மந்தையைப் போல தலை ஆட்டிக் கொண்டு கூட்டத்துடன் கூட்டமாக அதிகாரத் தொனிகளுக்கு முன் மண்டியிட வேண்டிய நிலை ஆசிரியர்களுக்கு வரக்கூடாது. ஆசிரியம் அறிவுசார்ந்த துறை என்பதால் வலிமையான சிந்தனையால் தன்னை கோலோட்சி பண்ணும் அதிகாரத்திலிருந்து மீட்டுக் கொள்ளும் திறனை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். பணியிடத்தின் அதிகாரத்துவ மனோநிலைகள் தவிர்க்கப்பட்டு, “தன்னுடன் பணியாற்றும்” என்கிற புரிதலுக்கு ஆட்பட்டு, எல்லாம் உரிமையும் கொண்ட சக மனிதர்களாக எல்லோரையும் வழிநடத்தக்கூடிய தலைமைத்துவ போக்கு உருவாக வேண்டும். உலக அளவில் பார்த்தோமானால், பல நாடுகளின் அரசின் வீழ்ச்சிக்கும், அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்கும் அதிகாரக் குரல்களே காரணமாக இருப்பதை, இந்தப் போக்கு எவ்வளவு வன்முறையானது என்பதை உணர முடியும்.

கே.பாலமுருகன்

Monday, October 12, 2009

தமிழாசிரியர்கள் எங்கே?

கோலா மூடா யான் மாவட்டத்தில் உள்ள எல்லாம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மாவட்ட அதிகாரியின் மூலம் கவிதைக் கருத்தரங்கம் குறித்து அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் நேற்று நிகழ்வில் கெடா கோலா மூடா யான் மாவட்டத்திலுள்ள 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 4 ஆசிரியர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டது வரவேற்க்கத்தக்க ஒன்று என்றும் சொல்லலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட பலர் எழுப்பிய கேள்வி எங்கே தமிழாசிரியர்கள்? கொடுக்கப்பட்ட பதில்கள்:

ஒருவேளை : 1. தீபாவளி நெருக்கம் என்பதால் அலைச்சல்


2. இலக்கிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது


3. கட்டாயப்படுத்தாதவரை எனக்கெதற்கு இலக்கியம் என்கிற
மனோநிலை

(குறைந்தபட்சம் கலந்துரையாடலில் கலந்துகொண்டு விவாதம் செய்திருக்கலாம், தனது எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம்-)

மூன்று மலேசிய தமிழ் நாளிதழ்களில் அறிக்கை கொடுத்தும் ஏன் தகவல் சேராமல் இருந்திருக்கும்? வாய்ப்பில்லை, காரணம் ஒருசிலர் அதிகபட்சமாக வாசிப்பதே இந்த நாளிதழ் மட்டும்தான். கல்வி இலாகா தொடர்புடைய ஒருவர் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நமது ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது போல என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

கடந்தமுறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் “சிறுகதைக் கருத்தரங்கம்” நடத்தும்போதும் அதில் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்ட சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர். அந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்.

“எதுக்கு எங்களெல்லாம் இந்த நிகழ்ச்சில்லெல்லாம் கலந்துக்க சொல்றாங்க”
“நாங்க எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்?”
“எதுக்கு இலக்கியம் இலக்கியம்னு அறுக்கறாங்க?”

அதன் பிறகு இனி கட்டாயத்தின் பேரில் எந்த ஆசிரியர்களையும் இலக்கிய நிகழ்விற்கு அழைப்பது மீண்டும் ஒரு இனப்படுகொலைகளுக்கு ஒரு ஹிட்லரை அழைப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று பயம் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி கொடுக்கப்படும் இலக்கியம்கூட ஒரு வன்முறைத்தான். அறிமுகம் செய்து பார்க்கலாம், அதில் ஈர்ப்புக் கொண்டவர்கள் நிச்சயம் தனக்கான நேரத்தைத் தாராளமாக இலக்கியத்திற்காகச் செலவழிப்பார்கள்.

முன்பெல்லாம் தமிழாசிரியர்கள்தான் இலக்கியம் ஆர்வம் கொண்டவர்களாக இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாக, இலக்கிய விவாதங்கள், புதிய களம் உருவாக்குவது என்று தீவிரமாக இயங்கியவர்கள், இப்பொழுது எல்லாம் ஒரு பொருளியல் சிந்தனைக்குள் சுருங்கி மங்கிவிட்டது போல. ஒருசிலரிடம் அறிக்கைகள் வந்ததா என்று கேட்டதற்கு, “வந்துச்சி அதை தலைமை ஆசிரியர் மேசை மேலே போட்டு வைத்திருந்தார்” என்றதும் நிகழ்வில் எந்தத் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளாததும் அதிர்ச்சியே. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வரமுடியாததைத் தெரிவித்தது பாராட்டக்கூடிய விசயம். மற்றபடி பொதுமக்கள் ஆதரவுடன் சில வாசகர்களின் வருகையால் நேற்றைய கவிதைக் கருத்தரங்கம் 25 பேருடன் நடந்தேறியது. கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு.ப.அர்ச்சுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் தொடர்ந்து இலக்கிய நிகழ்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்வது ஒரு முன்னுதாரணம்)
-தொடரும்-

கே.பாலமுருகன்