Saturday, July 11, 2009

அலைந்து திரிவது ஒரு மாபெரும் பயணம் – அர்த்தமற்ற பயணங்கள்




மாபெரும் போராளி சே குவாரா தனது மோட்டார் பயணத்தின் போது 3000க்கும் மேற்பட்ட மைல்கல் கடந்து பயணித்த போதுதான் தனக்கான வாழ்வின் மகத்துவங்களையும் தனது வெளியையும் அதன் அர்த்தங்களையும் கண்டைகிறார். பயணம் அவரின் வாழ்வின் தடத்தை மாற்றியமைத்தது. போலிவியா காட்டுக்குள் இருந்தபோது அவரின் நாட்குறிப்புகள் அவரின் வாழ்வின் துல்லியமான பகுதிகளையும் உணர்வுகளையும் அவர் அலைந்து திரிந்த ஒவ்வொரு சுவடுகளுக்கும் அப்பால் படிந்திருக்கும் அனுபவங்களையும் காட்டும். பயணம் செய்வது நம் வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாகும். ஒவ்வொருநாளும் பல மனிதர்கள் பல இடங்களுக்குப் பல காரணங்களுடன் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுநாள்வரையில் நீங்கள் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூற முடியுமா? அந்த ஒவ்வொரு பயணங்களிலும் நீங்கள் சந்தித்த மனிதர்களையும் சம்பவங்களையும் அதன் பிறகு அவதானித்துள்ளீர்களா? அவசரமாக எல்லாவற்றையும் கடந்துபோகும் சுபாவத்தினாலேயே பல பயணங்களை தினசரி கடமையைப் போலவே பாவித்துக் கொண்டு மறந்தும் துறந்தும் விடுகிறோம். பல மேதைகள் பயணம் செய்வதை விரும்புகிறார்கள், நேசிக்கிறார்கள். பலரின் வாழ்வை அர்த்தமுள்ளாக்கியதே அர்த்தமற்ற பயண்ங்கள்தான் என்றால் நம்ப முடியுமா?

அதென்ன “அர்த்தமற்ற பயணம்”? எந்தவித நோக்கமுமில்லாமல் அலைந்து திரிவது, தேசம் விட்டு தேசம் தாண்டுவது, பேருந்து பிடித்து ஊர் ஊராகச் செல்வது, போகும் இடத்தை நிர்ணயம் செய்யாமல் பயணம் செய்வது. இப்படிப் பல வகையிலான பயணங்கள். காலையில் பேருந்து பிடித்தால் சரியாக 5 மணிநேரத்தில் போய் சேரும் இடத்தை வந்தடைந்துவிடலாம் என்று டிக்கெட் உட்பட எல்லாமும் நேர்த்தியாக அமைந்த பயணம் மிக பாதுகாப்பானவை, சலிப்பை ஏற்படுத்தக்கூடியவை. எங்கு சென்று சேர போகிறோம் என்கிற எல்லாவற்றையும் மிக ஒழுங்கமைப்புடன் தீர்மானித்துவிட்டு, பயணம் செய்வது எவ்விதத்திலும் பயனை அளிக்காது. நான் சொல்வது அம்மாதிரியான பயணங்கள் கிடையாது.

மத குருக்கள், ஞானிகள், எழுத்தாளர்கள், போராளிகள் என சமூகத்தைச் சேர்ந்த பலரும் தீர்மானிக்கப்படாத எத்தனையோ பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் வாழ்வைத் திட்டமிடலுக்கு அப்பாற்பட்டு வைத்து பார்க்கிறார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் தோற்றுவித்த மத குரு பிரபுபாதா அவர்கள் கிருஷ்ண நாமத்தைப் பரப்புவதற்காக தனியாக கப்பல் ஏறி கையில் சொற்ப பணத்துடன் லாஸ் ஏஞ்சலஸ் சென்றார். கடவுளின் மீதான நம்பிக்கை மட்டுமே அவரைக் கடல் தாண்டி செல்வதற்குப் பலத்தைக் கொடுத்திருந்தது. அவரது பயணத்தினால் கிருஷ்ண பக்தி உலகம் முழுவதும் சென்றடைந்தது. லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அவர் முதலில் பக்தியைப் போதித்தது ஹிப்பிகளுக்குத்தான். ஹிப்பிகள் என்றால் போதைப் பித்தர்கள். அவர்களின் கவனங்களைப் பக்தியின்பால் திருப்பிவிட்ட மத குரு அவர்.

எனக்குத் தெரிந்து பல எழுத்தாளர்கள், இன்றும் வாழ்வின் இரகசியங்களையும் அதன் தனித்துவங்களையும் தேடி ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பயணம் அவர்களின் படைப்பிலக்கியத்தை விரிவாக்குகின்றது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்றவர்கள் வாழ்நாள் முழுவதும் அர்த்தமற்ற பயணத்திலேயே பக்குவம் அடைந்தவர்கள், தனக்கான படைப்பிலக்கிய வெளியைக் கண்டடைந்தவர்கள் என்றே சொல்லலாம். எஸ்.ரா உயிர்மையில் அவரும் கோணங்கியும் மேற்கொண்ட அதிசய பயணங்கள் பற்றி மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

உலக புகழ் பெற்ற ஜப்பானிய சினிமா இயக்குனர் அகிரா குரோசாவா ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படித்தான் பதில் அளிக்கிறார்.

“ஒரு சிறந்த சினிமாவைத் தருவதற்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்?”

“எதையும் படிக்கக்கூடாது. இது பள்ளிப் பாடமல்ல. வீட்டை விட்டு தூரமாகப் பயணம் செய்து அலைந்து விட்டு வர வேண்டும். மூலை முடுக்குகளில் சுற்றி அலைய வேண்டும். வீடு வந்து சேரும் போது ஒரு நல்ல சினிமாவுக்கான எல்லாமும் உன்னிடம் இருக்கும்”

இனிமேல் ஏதாவது ஒருநாளில் ஒரு நல்ல அர்த்தமற்ற பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். காரணங்கள் எதுவும் அற்ற வெறுமனே சுற்றி அலைந்துவிட்டு வரக்கூடிய ஒரு பயணத்திற்காக உங்களைத் தயார் செய்யுங்கள். அது உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். நம்முடைய பரபரப்பான தினசரி அட்டவணை வாழ்வின் எல்லாம் துரங்களையும் ஒழுங்குகளையும் அறுத்து போட்டுவிட்டு, உங்களுக்காகப் பயணம் செய்யுங்கள். பயணம் உங்களுக்கான பாதையை அடையாளப்படுத்த வாய்ப்புகள் உண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 10, 2009

தோற்றுப்போகும்வரைத்தான் காதல் கவிதைகள்




நேற்றுவரை
என் விரல்களின் இடுக்குகளில்
காதலுக்கென ஒரு வரி
சிக்கியிருந்திருக்கலாம்.

நான் கடந்து வந்த
இரவுகளின் பெரும்
முணுமுணுப்பாக
இருந்ததென்னவோ
காதலின் ஒற்றை
வரிகள்.

நேற்றுவரை
வலியும் துக்கமும்
ஏக்கமும் முயற்சிகளும்
இருந்தன.
கவிதைகளும் இருந்தன.

இன்று
நெடுநாள் காத்திருப்பிற்குப்
பிறகு காதலில்
வெற்றியடைந்து
காதலியைப் பெற்றுவிட்டேன்.
கவிதைகளெல்லாம்
எங்கோ தொலைத்துவிட்டன.

2

தப்பித்து தப்பித்து
எத்தனையோ இரவுகளுக்கு
பிறகு
இன்றுதான்
ஒரு காதல் வரியை
சேமிக்க முடிந்தது.

அடுத்த வீட்டு
காதலன்
அவனின் காதலிக்காக
வைத்திருந்த கவிதைகளை
எப்படியோ காற்றில்
தவறவிட்டிருக்கிறான்.

200 நாட்கள்
கடும் முயற்சிகளுக்கு
பிறகு
அன்றென்னவோ
ஒரு காதல் கவிதையை
எழுதிவிட்டேன்.
ஆனால் அதுபோல
ஏற்கனவே 1000 கவிதைகள்
பிரசுரமாகிவிட்டன
என்பதை அறிந்துகொண்டபின்
பத்திரபடுத்த இயலாதது
இந்தக் காதல் கவிதைகளென
தீர்மானித்தேன்.


3
ஒரு காதல் கவிதையை
எழுதிய பிறகு
அதனைப் பத்திரப்படுத்த
மேகத்தின் விளிம்பில்
கட்டி வைத்தேன்.
மழையென பொழிந்து
சாக்கடை நீரில்
தேங்கிக் கிடந்தது.

தோற்றுப்போன
ஒரு காதலின் இரகசியங்களை
பறவைகளிடம் கொடுத்தனுப்பினேன்.
அது ஊராக ஊராக
எச்சமாகக் கழிந்து
தள்ளியது.

காதலுக்குத்தான்
மேகங்களும் பறவைகளும்
காதலின் தோல்விகளுக்கல்ல
என்பதை பாழாய்போன
ஒரு காதலும்
கற்றித்தரவில்லையே.

கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com

Wednesday, July 8, 2009

இருளைக் கடப்பதுதான் தைரியமா?

இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிற்சி முகம்களோ அல்லது தன்முனைப்பு முகாம்களோ நடந்தால் அதில் நடக்கும் அபத்த கூத்துகள் பற்றி சொல்லவே வேண்டாம். பித்த மூளைகளின் அரிப்புகள், தனியார் நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளில் புகுந்து தன்முனைப்பு கொடுக்கிறேன் என்கிற பெயரில் ஏற்படுத்தும் கூத்துகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

அம்மா அப்பாவின் தியாகங்களை உணர்த்துவதற்காக, அம்மா பாடல், சோகப் பாடல்களைப் போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அழச் செய்து திருத்த வேண்டும் என்கிற மனோபாவத்துடன் அலைகிறார்கள். இதில் பல்கலைகழக மாணவர்களும் இதற்கு உடந்தையாக இருந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களை உளவியல் ரீதியில் பயமுறுத்துகிறார்கள்.

சரி அதை விட்டுத் தள்ளலாம். அதையும் கடந்து மேலும் ஒரு நடவடிக்கை இருக்கிறது. இதுதான் அபத்தத்தின் உச்சம். மாணவர்களுக்கு தைரியத்தை உண்டாக்க போகிறோம் என்கிற திட்டத்துடன், அவர்களை நடுகாட்டில் இருட்டில் தனியாக நடக்கவிட்டுப் பயிற்சி அளிக்கிறார்கள். தன்முனைப்பு முகாமை நடத்தும் அவர்களே இருளில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு மாணவர்கள் தனிமையில் நடக்கும்போது பயமுறுத்தி உற்சாகமும் படுத்தவே செய்கிறார்கள்.

மாண்வர்கள் என்ன இருளில் காட்டில் இலைகளைச் சுற்றிக் கொண்டு போருக்கா போகப் போகிறார்கள்? அந்தக் காலத்திலிருந்தே நாம் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களை வழிநடத்துவதிலும் தோல்வியடைந்தே வந்திருக்கிறோம். அட்தானால்தான் இருளைக் கண்டால் மாணவர்களும் குழந்தைகளும் அலறுகிறார்கள். அதன் நிதர்சனத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தன்னை வெளிச்சத்தில் இருத்திக் கொண்டு இதுதான் உண்மையென நினைத்துக் கொள்கிறார்கள். இருளைக் கடக்க வேண்டும் அது பயங்கரமானது என்று கற்பிக்கப்பட்டே வந்துள்ளதால் அவர்களின் பார்வை இருளின் மீது ஒரு பூச்சாண்டியைப் பார்ப்பதற்கு நிகரான மனநிலையில் படர்கிறது.


இதன் விளைவு என்ன தெரியுமா?

மாணவர்கள் அலறியடித்துக் கொண்டும் அழுது கொண்டும் ஓடுகிறார்கள். பயத்தில் விழி பிதுங்கி செய்வதறியாமல் மனம் துடிதுடிக்க தனக்குள்ளே அமிழ்ந்து போகிறார்கள். இருளைக் கண்டு அதைக் கடக்க முடியாமல் தவித்து அதன் விளிம்பில் நிற்கிறார்கள். இதுதான் அந்த நடவடிக்கையின் விளைவும் அதை நடத்துபவர்களுக்குக் கிடைத்த முதுகு சொறிதலும்.
இருளைக் கடந்து வருவதுதான் தைரியத்திற்கான அளவுகோலா? இருளில் தனியாக நடந்துவிட்டால் அவன் வீரனாகிவிடுவானா? என்ன ஒரு முட்டாள்தனமான புரிதல் இது? இருள் என்பது மிக அருகமையிலுள்ள ஒரு உண்மை. வெளிச்சம் என்பது நாம் ஒழுங்காக நடப்பதற்க்காகச் செய்யும் பாசாங்குத்தனம். ஒரு சுவாமிஜி சொல்லியிருக்கிறார். பாரதி இருளை குறைந்த வெளிச்சம் என்றுதான் சொல்லுகிறார். இருளை எப்படிப் பார்க்க வேண்டும் உணர வேண்டும் என்கிற சிறு பயிற்சிகூட இல்லாத இவர்களெல்லாம் எப்படி தமிழ்ப்பள்ளிகளுக்குள் நுழைகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

இப்பபடியே போனால், மாணவர்களெல்லாம் வீட்டிற்கு வெளியில் இருளில் படுத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்கள் தனது வீரத்தைக் காட்டுவதற்காக. வாழ்வில் அவர்கள் நிகழ்த்தி காட்ட வேண்டிய சாகசங்கள் எவ்வளவோ இருக்க, இருளுக்குள் நடந்து அழாமல் வருவதுதான் சாகசம் என்றால், எனக்குத் தலைச் சுற்றுகிறது. முதலில் இப்படி தன்முனைப்பு நடத்தி மாணவர்களின் உளவியலைச் சீரழிக்கும் இவர்களை 14 வருடம் காட்டில் வாழ்ந்து வர அனுப்பி வைக்கப்பட வேண்டும். புராணத்திலெல்லாம் ஆ ஊ ன்னா காட்டுக்கு கிளம்பி விடுகிறார்களே. நடைமுறை உலகத்தில் வாழ்த் தெரியாத இவர்களும் புராண மனிதர்கள்தான் என்னைப் பொருத்தவரையில். காட்டுக்குச் சென்றாலும் இவர்கள் ஆபத்தை ஏற்படுத்த நிறைய வாய்ப்புகள் உண்டு. மிருகங்களுக்கு, "காட்டில் வாழ்வது எப்படி?" என்று பாடம் எடுத்தாலும் எடுப்பார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, July 6, 2009

சை. பீர்முகமது எழுதிய ‘ஜாலியன் வாலா படுகொலையும் அஜித் சிங்கும்” சிறுகதை குறித்து கலந்துரையாடல்

இன்று கெடா மாநில எழுத்தாளர் சங்க செயலவை கூட்டத்திற்குப் பிறகு வழக்கம்போல சிறுகதை கலந்துரையாடல் நடைபெற்றது. இம்முறை மலேசிய படைப்பாளியின் கதை குறித்த கலந்துரையாடல் என்பதால் சை.பீர்முகமது எழுதி ஏப்ரல் “உயிரெழுத்து” இதழில் வெளிவந்த சிறுகதை கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கதை அஜித் சிங் என்கிற சீக்கிய இளைஞனின் வாழ்வைக் காட்டி சீக்கியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கொண்டிருக்கும் 5 மத அடையாளங்களை மனிதநேய தளத்தில் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது.

ஒரு நம்பிக்கையாக இருந்த சீக்கியம், குரு கோவிந்த சிங்கின் வருகையாலும் சீக்கியர்களுக்கு எதிராக இஸ்லாமிய முகாலய மன்னன் அவுராத் ஜித் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையாலும் இனப்படுகொலையாலும் அவர் எழுப்பிய போராட்டாமும் போரும் பிறகு மத அடையாளமாக நிறுவப்பட்டதை ஆங்காங்கே கதைகளில் வலிந்து புகுத்திச் சொல்லியிருக்கிறார். படிப்பறிவு இல்லாத அஜித் சிங் அந்த 5 அடையாளங்களை வைத்திருப்பதே ஜாலியன் வாலா பார்க் படுகொலையில் உயிரிழந்த தன் முஸ்லிம் நண்பனுக்காக என்று கதையில் சை.பீர் காட்டியிருக்கிறார். ஜாலியன் வாலா படுகொலையைச் செய்த “டையர்” உத்தம் சிங்கால் கொலை செய்யப்படுகிறான் (எல்லோருக்கும் தெரிந்த வரலாறு) என்பதைக் கேள்விப்பட்டதும், அவன் தனது சீக்கிய மத அடையாளங்களைத் துறப்பதாகக் கதை முடிகிறது.

வரலாற்றில் எப்பொழுதோ நடந்த சீக்கிய கொடுமைகளுக்குச் சாதகமாக திணிக்கப்பட்ட இஸ்லாம் எதிர்ப்புணர்ச்சியும் அதன்பால் உருவான அடையாளங்களும் இப்பொழுது சமூகத்தில் நல்ல முறையில் நல்லிணக்கத்துடன் வாழும் சீக்கிய (இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் நண்பர்களாக சமரசமாக வாழும்) இஸ்லாமியம் உறவுகளுக்கு நடுவே அதே வன்முறையுடன் பின்பற்றப்பட வேண்டுமா என்கிற கேள்வியை நடைமுறை மீது சுமத்துவது போல கதையை சை.பீர் வடிமைத்துள்ளார்.

கலந்துரையாடலில் பெரும்பாலும் நண்பர்கள் சை.பீரின் கதை மனதில் ஒட்டவில்லை, மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட கருத்தாக்கத்திற்காக கதையில் சை.பீர் மெனக்கெட்டுள்ளார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது என்று பகிர்ந்துகொண்டார்கள். ஜாலியன் வாலா படுகொலையையும் சீக்கிய மத அடையாளங்களையும் தேர்ந்தெடுத்து மனிதநேய கதையைச் சொல்ல முற்பட முயன்ற சை.பீர் அதற்கான வடிவமாக சிறுகதையைத் தேர்ந்தெடுத்து தோல்வியடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது. சில இடங்களில் தேவையில்லா உரையாடல்கள், மேற்கொள்கள் காட்டப்படுகிறது. கதையின் இறுக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காத நிலையில் இந்த மாதிரியான நீட்டிப்புகள் தேங்கிவிடுகின்றன என்றும் சொல்லப்பட்டது.

சை.பீர் அவர்கள் இதையே ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் கொஞ்ச சிறப்பாக இருந்திருக்கும் என்றும் சிலர் சொன்னார்கள். படைப்பைப் படைத்த பிறகு அதை எவ்விதத்திலும் மதிப்பீட எல்லாம் உரிமைகளும் வாசகனுக்கு உண்டு. அதை நியாயப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ, அந்த நியாயப்படுத்துதலின் நம்பகத்தன்மையை ஏற்றுக் கொள்வதும் வாசகனுக்குரிய களம். கலந்துரையாடலில் கலந்துகொண்ட, மணிஜெகதீஸ், குமாரசாமி, புண்ணியவான், முனியாண்டிராஜ், க.பாக்கியம், சந்தியாகு, ஜோன்சன் எல்லோரும் தங்களின் பங்களிப்பைச் செய்தார்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, July 4, 2009

மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சுற்றுலா சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்

முன்பு ஒரு முறை பல நடிகர்கள்- இசை அமைப்பாளர்கள் என்று கலக்கல் செய்த படம் சுயம்வரம். வெகுவிரைவிலேயே ரசிகர்களால் மறக்கப்பட்ட படம். காரணம் சலிப்பு தட்டும் வகையிலான நடிகர்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து, அதைச் சினிமாவாகவே மாற்றிய சினிமா உத்திதான். அதே போல ஆனால் கொஞ்சம் மாறுதலான முயற்சியில் இயக்குனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் மாயாண்டி குடும்பத்தார் படம்.



இந்தப் படத்தை மேம்போக்காக விமர்சனம் செய்யவே எனக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறது. ஆழ்ந்து விமர்சிக்க படத்தில் அப்படியொன்றும் கலை அம்சங்கள் இல்லை. இயக்குனர்களாக அவ்வளவு பரிச்சியமில்லாத நடிகர் பட்டாளம் கிராமத்திற்குச் சுற்றுலாவிற்குச் சென்றது போலத்தான் படத்தின் நடிகர்கள் தேங்கி நிற்கிறார்கள். “பருத்தி வீரன்” படத்தில் வரும் அசல் கிராமத்தான்களைப் பார்க்க முடியவில்லை. மாயாண்டியின் முதல் மருமகளைத் தவிர.



எல்லாம் கிராமத்து பழைய படங்களில் வருவதைப் போல (நாட்டாமைப் படம் உட்பட) இந்தப் படத்திலும் சொத்து விவகாரத்தால் பங்காளி பகை ஊடாடுகிறது. இரு குடும்பத்திற்கும் பழைய பகையால் படத்தின் தொடக்கக் காட்சியிலேயே திருவிழாவில் சண்டை. நம்மையெல்லாம் நம்ப வைக்க. மணிவண்ணன் மட்டும் ரொம்ப நல்லவராக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் பாத்திரத்தில் நல்ல அப்பாவாக, (“போங்கடா போங்கடா பிள்ளை குட்டிங்கள படிக்க வைய்யுங்கடா” தேவர் மகனில் கமல் சொல்வது போல) அங்குமிங்குமாக பழைய பாணியில் வலம் வருகிறார். பரிதாபத்தைக் கரைத்துச் சொட்டுவதற்காக படத்தின் பாதியில் கருகி இறந்தும் வைக்கிறார். இதை வைத்துதான் அவரின் கடைசி மகனின் பரிதாபங்களையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் அவனின் தியாகங்களையும் எளிதாக முன் வைக்க முடிகிறது.



ஒரு சில கதாபாத்திரத்தின் பங்கு ஆங்காங்கே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் கைவிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பொண்வண்ணன் கதாபாத்திரம் சொற்ப காட்சியில் வந்து படத்தோடு சம்பந்தமில்லாமல் கரைவது போல இருக்கிறது. ஆனால் மிக எளிமையான நடிப்பு அவருடையது. அடுத்தப்படியாக சிமான் அவர்களைச் சொல்லியாகவே வேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் நடத்திய துணிகர செயல்களைப் போலவே படத்திலும் விவசாயிகளுக்கும் எளிய மக்களுக்க்கான போராட்டாவதியாக வலம் வருகிறார். அனேகமாக அவரே இயக்குனரிடம் இப்படியொரு கதாபாத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும் போல. அவர் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ‘அறுவை’ சொற்பொழிவு பாடலுடன் விஜயகாந்த் போல பிரச்சாரம் செய்கிறார். பாடல் வரிகள் வெறும் வரிகளாகவே சலசலவென ஓடி மறைந்துவிடுகிறது, இசையும்கூட. படம் முழுக்க நடிக்க முயற்சி செய்து தோல்விக் கண்டுள்ளார் சீமான். முகத்தில் எந்தச் சலனமும் இல்லாத கதாபாத்திரம். பிரச்சார மேடைகளில் மட்டும் அவருக்கேயுரிய குரல் தொனி.



படத்தில் நல்ல விஷயமே இல்லையா? இருக்கிறது. வழக்கம்போல ஒரு பைத்தியம்தான் வந்து நகைச்சுவை செய்வதாகக் காட்டியதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா? அல்லது எப்பொழுதும்போல ஒரு திருமணத்திற்குச் சென்று அங்கு ,மணப்பெண் ஓடி போக வேறு வழியில்லாமல் கதாநாயகி கழுத்தை நீட்ட, (எத்தனை படத்தில் பார்த்தாகிவிட்டது) அதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா?



இதில், மாயாண்டி விருமாண்டி என்று கிராமத்து பேர்களை (ஏற்கவனே விருமாண்டி படம் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்) வலிந்து புகுத்திக் கொண்ட விதம் அசலான நடிப்பில் தெரியவில்லை. ஆக மொத்தம் மாயாண்டி குடும்பத்தார், இயக்குனர் பட்டாளம் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, பழைய பாணியிலேயே ஒரு பங்காளி கும்மாளம் போட்டுள்ளார்கள். அவ்வள்ளவுதான்.



கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 3, 2009

The Curious case of Benjamin Button-திரைக்கவிதைகள்



1
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.

காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.

உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.

தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.

2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.

-தொடரும்-
கே.பாலமுருகன்

Thursday, July 2, 2009

சிவா பெரியண்ணன் கவிதை

சிவா பெரியண்ணன் கவிதை

நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?

ஏப்ரல் 2006-இல் எழுதியது

குறிப்பு: மலேசிய நவீன கவிஙஞர்களில் முக்கியவானவர். 90களின் பிற்பாதியிலிருந்து இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார். மலாயாபல்கலைக்கழகத்தில் பயின்று இப்பொழுது ஜொகூர்பாருவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். காதல், வல்லினம் போன்ற மலேசிய இதழ்களில் தனது நவீன கவிதைகளின் மூலம் நவீன வட்டத்தில் இருப்பை உருவாக்கியவர். சிவாவின் கவிதைகளில் எப்பொழுதும் ஒரு கேள்வி தேங்கி நிற்கும். அது இந்தப் பிரபஞ்சத்தின் புரிதலைக் கேள்விக்குள்ளாக்கும் கேள்வியாக இருக்கலாம்; அல்லது கழகத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கலாம். 2007 தொடக்கம் காதல் இதழின் வழி அவரது எழுத்துகள் எனக்குப் பரிச்சயம். தற்பொழுது வல்லின இணைய இதழை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, July 1, 2009

பறப்பதற்கு மறந்தேன் -தமிழிலும் ஆங்கிலத்திலும்


பறப்பதற்கு மறந்தேன்
என் காதலிக்காக
ஒரு சொல்லை சேமித்தபோது
எனக்குச் சிறகுகள் முளைத்திருந்தன.

அந்தச் சொல்லில்
என் காதலுக்கான இரகசியங்களை
சேர்த்தபோது
சிறகுகள் வளரத் துவங்கின.

என்னுடன் சேர்ந்து
சிரித்தாள். அழுதாள்.
என் பொழுதுகளைக் கொண்டாடினாள்.
என்னால் பறக்க முடியும்
என்பதை மட்டும்
கற்றுத்தர தவறினாள்.

உடைந்து மனிதனானேன்.

கே.பாலமுருகன்

ஆங்கிலத்தில். . .
“Forgot to fly”
k.balamurugan

When I save
One word for
My love
Growth of wings
Starts on me.

When I stuff
My secret of love
In the word
Wings start to grow.

She laughed with me.
She cried with me.
She enjoyed my lifetime.
But she missed
To teach me
That I can fly.

I broke down
To a common man.

Translated by k.ranjini


யார் இந்த Anonymous?

புளோக்கர்களி‎ன் பதிவில் இந்த “அனாதமேய” பெயர் அல்லது பெயரில்லாத நபர்களின் பதிவுகளைப் பார்க்கலாம். இவர்களில் இரண்டு வகை உண்டு. ஒரு சிலர் புளோக் வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் நண்பர்களின் பதிவில் கருத்துரைக்க “Anonymous” என்கிற குறியீட்டைத் தேர்ந்தெடுப்பார்கள். கீழே அவர்களின் பெயரைக் குறிப்பிடவும் செய்வார்கள்.

அடுத்தபடியாக வருபவர்கள் பெயரை வெளியீட மறுக்கும் கருத்து கந்தசாமிகள். அவர்களில் சிலரின் பதிவு அல்லது கருத்து ஆரோக்கியமானதாக இருக்கின்றது. பெயர் வெளியீட முடியாதவர்கள் கெட்ட வார்த்தையில் கேட்பது, அசிங்கமாகப் பேசுவது என்று கீழ்த்தரமான செயல்களிலும் ஈடுபட துணிவார்கள் இந்த அனாதமேய பேர்வழிகள். ஆதலால் பெயரில்லாமல் வரும் கருத்துகளைப் பிரசுரிப்பதில் கவனம் வேண்டும்.

தைரியமிருந்தால் பெயருடன் முன் வர வேண்டும். பெயரில்லாமல் வந்து பதிவிட்டு பிறரை அவமானப்படுத்த வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் உள்ளே நுழைபவர்களை எதைக் கழற்றி அடிக்க வேண்டும் என்று பதிவாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி தத்திகளிடம் நான் கேட்க நினைக்கும் சில கேள்விகள் உண்டு.

“உனக்கெல்லாம் எதுக்கு பேரு வச்சாங்க?”
“கருத்து சொல்ற முன்னுக்கு தொடை நடுங்குதான்னு பாரு”

தர்க்கம் சார்ந்து பேச முடியாமல் போகும் இடத்தில் சிலர் தனிமனித குனாதிசயங்களையும் அவர்களின் பலவீனங்களையும் அம்பலப்படுத்தி கேலி செய்வது அனாதமேய பேர்வழிகளின் உத்திகளில் ஒன்று. அல்லது கெட்ட வார்த்தையில் திட்டி தனது பிளவாளுமையைக் காட்ட முயல்வது. உனக்கு புத்தி பேதலித்து விட்டதால் பிறரை ஏன் கேலி செய்கிறாய்? உனக்கு வேண்டியது ஒரு கழகம். அதை அமைத்துக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டு சாலையின் நடுவீதியில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்தி கூப்பாடு போட்டு திட்டு. அங்கு உனக்கொரு அடையாளம் கிடைக்கும். பிறர் மனநிலை ஆய்வாளன். ஒழுக்கிய மன்னன் என்றெல்லாம்.

பெயர் வெளியீடக்கூட தைரியம் இல்லாத கோழைகளின் கருத்துகளை நிராகரிக்கும் ஆற்றல் நமக்கு வேண்டும். நம் பதிவுக்குள் நுழைந்து நம்மையோ நம்மைச் சார்ந்த மனிதர்களையோ கெட்ட வார்த்தையிலோ கேவலப்படுத்தும் வகையான சொற்களிலோ பேசும் ஒரு மண்ணாங்கட்டியின் பதிவை நாம் பிரசுரிப்பது என்று அதில் குளிர் காய ஒரு சுயநலம் நமக்கு இருப்பது போன்றுத்தான் தெரியும்.

ஆமாம். நமக்குப் பிடிக்காதவனை பிறர் யாராவது திட்டி பேசினால் அதைக் கண்டு கேட்டு உச்சிக் குளிரும் மனப்பான்மைப் பலருக்கு உண்டு. இதிலும் அந்த மாதிரி சிலர் படைப்பாளராகவும் எழுத்தாளராகவும் உலா வருவது வேதனைக்குரிய விஷயம். படைப்பு சக்தி ஒவ்வொரு உற்பத்தியிலும் நம்மைப் பக்குவப்படுத்தும், நமது ஆளுமையை விரிவாக்கும், இருத்தலியல் சார்ந்து நமது இருப்பை பலமாக்கும். பிறரை கெட்ட வார்த்தையில் ஏசி, கேலி செய்து கும்மாளம் அடிப்பதில் எங்கிருக்கிறது ஆளுமை?

கே.பாலமுருகன்
மலேசியா

Monday, June 29, 2009

புடுராயாவில் உறங்கிக் கொண்டிருப்பவர்கள்

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். அங்கிருக்கும் ஒரு மிகப் பெரிய மையப் பேருந்து நிறுத்தம்தான் புடுராயா. எப்பொழுதும் பயணிகளால் நிரம்பி வழியும் இரண்டுமாடி கடட்டம். கீழ் தளத்தில் பேருந்துகள் வந்து நிற்க, மேலே பிளாட்பாராத்தில் பயணிகள் காத்திருப்பார்கள். அறிவிப்பு வந்ததும் கீழே இறங்கி ஓட வேண்டும். இரைச்சலுடன் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டும் இடித்துக் கொண்டும் எப்பொழுதும் நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.

மேலும் நாம் உள்ளே நுழைந்தவுடன் பேருந்து டிக்கெட் விற்கும் ஆசாமிகள் நம்மை மொய்க்க தொடங்கிடுவார்கள். நாம் போக விரும்பாத ஊரின் பெயரெல்லாம் சொல்லி “அங்க போக போறிங்களா? பஸ் 11மணிக்கு” என்று இம்சிப்பார்கள். கையைப் பிடித்து வழுக்கட்டாயமாக இழுக்காத குறைதான்.

புடுராயாவின் பிளாட்பாரத்தில் நான்கு சதுர வடிவத்தில் இருக்கைகள் பல்லிங்கு கற்களால் போடப்பட்டிருக்கும். நேற்று கோலாலம்பூரிலிருந்து இல்லம் திரும்பும் வழியில் புடுராயாவில் இரண்டு மணி நேரம் இருக்க வாய்ப்புக் கிடைத்தது. வழக்கமாக அந்த மாதிரி தருணங்களில் கோலாலம்பூர் நண்பர்களை அழைத்து இலக்கியம் அரட்ட்டையடிப்பது உண்டு. இந்த முறை யாரும் சிக்கவில்லை. ஒருவர் கடைசிவரை தொலைபேசி அழைப்பை எடுக்கவே இல்லை, மற்றொரு நண்பர் இரவு 11வரை நகர முடியாது என்று சொல்லிவிட்டார், மற்றொருவர் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டதால் இரண்டு மணி நேரம் புடுராயாவில் அமர்ந்து கொண்டு ஏ1எச்1 காய்ச்சல் பரவிவிடுமோ என்கிற சந்தேகத்துடன் பெரும் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்திருக்க வேண்டியிருந்தது.

பயணிகள் கூட்டம் குறைய துவங்கியதும் எங்கிருந்தோ சில மலாய்க்கார கிழவர்கள் கையில் அட்டை பெட்டியுடன் அங்கு வரத் துவங்கினார்கள். எற்கனவே பழகி போன ஒரு நடவடிக்கையைப் போல, இருக்கைகளில் அட்டை பெட்டிகளை விரித்து படுத்துக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்களுக்குள் எப்பொழுதோ யார் எங்கு படுக்க வேண்டும் என்கிற ஒப்பந்தம் எடுக்கப்பட்டிருக்கும் போல, மிக நேர்த்தியாக அவர்களுக்கான இருக்கைகளில் சாவகாசமாக படுத்துக் கொண்டு உறங்கத் துவங்கினார்கள்.

அருகில் நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் பயணிகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. புற உலகைப் பற்றி கொஞ்சமும் அக்கறையில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யார் அல்லது எங்கிருந்து வந்திருப்பார்கள்? இப்படிக் கேள்விகள் எனக்குள் நெளியத் துவங்கின.

சில மனிதர்கள் அவர்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவரை அவர்கள் குறித்த இரகசியங்களும் அதிசயங்களும் நம்மை அல்லது நமக்குள் ஒரு பிரமிப்பாக நெளிந்து கொண்டே இருக்கும் போல.


அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா