Saturday, December 5, 2009

எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்

நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்வினையாலும் எதிர்ப்புக் குரலாலும், அரசாங்கம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 12 பாடங்கள் வரை எடுக்கலாம் என்கிற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்கள் தயக்கமின்றி தமிழ் பாடத்தையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தேர்வில் எடுக்கலாம். இது சிறுபான்மை இனத்தின் மிகப் பெறிய வெற்றி என்றே சொல்லலாம். வன்முறையைக் கையாளாமல் கருத்தியல் ரீதியிலான அணுகுமுறையினால் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது.
வெளி அமைப்புகள், பத்திரிக்கைகள் மேலும் தனிநபர்கள் என தமிழுக்கு ஆதரவாக எதிர்வினைகளை கருத்துகளை தைரியமாக பதிவுச் செய்திருப்பது தமிழ் சமூதாயம் இன்னமும் விழிப்புநிலையில் இருப்பதையே அடையாளப்படுத்துகிறது.

இருப்பினும், அமைச்சரவையின் தீர்மானம் மீண்டும் ஒரு அதிருப்தியை எழுப்பியிருக்கிறது. அமைச்சரவையில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்திய மக்களின் சார்பாக முன்வைத்த கோரிக்கையைக் கலந்துரையாடிய அமைச்சரவை எடுத்திருக்கும் புதிய தீர்மானங்கள் இன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது:

1.இனி வரும் எஸ்.பி.எம் மாணவர்கள் தேர்வில் 12 அல்லது 11 பாடங்கள் எடுக்கலாம். ஆனால், அடிப்படையான 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே தேர்வின் முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

2.மேலும் கூடுதலாக எடுக்கப்படும் பாடங்களின் மதிப்பெண்கள் கல்விக் கடனுதவி பெறுவது போன்ற விண்ணப்பங்களுக்கு கணக்கிடப்படாது.(அதாவது தமிழ் / தமிழ் இலக்கிய பாடங்கள் அரசு ரீதியிலான எந்த மதிப்பீடுகளுக்கும் பயன்படுத்தப்படாது)

அப்படியென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் பொழுது போக்கு பாடங்களாக மாற்று அடையாளத்துடன் திரும்பவும் கொண்டு வரப்படுகிறது என்று மட்டுமே அர்த்தப்படும். ஓர் அரசு ஏன் சிறுபான்மை இனத்தின் தாய்மொழியை அங்கீகரிக்க இத்துனை தயக்கங்களைக் காட்டுகிறது என்ற கேள்வி சராசரி குடுமகனுக்கும் எழக்கூடும். இதன் மூலம் மூன்று முக்கிய இனத்தவர்களின் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, பெரும்பான்மை சிறுபான்மை என்கிற இடைவெளியின் மொத்த அரசியல் சௌகரிகங்களையும் முன்வைத்து எடுக்கப்படும் மேல்மட்ட தீர்மானங்களா இவை?

எல்லாம் எஸ்.பி.எம் மாணவர்களுக்கும் தேசிய மொழி கட்டாயப் பாடமாக இருக்கும் பட்சத்தில், ஏன் இந்திய மாணவர்களுக்கு மட்டும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க மலேசியாவில் வழியில்லை? எங்களின் மொழியை அங்கீகரிக்கவும் அதை எஸ்.பி.எம் தேர்வு அறிக்கையில் மரியாதைக்குரிய மொழியாக அங்கீகரித்து வெளியீடவும் ஏன் அரசாங்கம் இத்துனை மௌனங்களையும் தடைகளையும் உற்பத்தி செய்து வாளாயிருக்கிறது? என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் கேள்வியாலும் சந்தேகத்தாலும் எதிர்ப்பார்த்து நிற்கின்றது.

அமைச்சரவைக்கு மீண்டும் ஓர் எதிர்க்கருத்தாக,நியாயமான வேண்டுகோளாக அவர்களின் தீர்மானங்களை மாற்றியமைக்கக் கோறி, தோட்ட மாளிகையில் வருகின்ற 12.122009 நடப்பதாக இருந்த கவன ஈர்ப்புக் கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அதன் தலைவர் திருவேங்கடம் அறிவித்துள்ளார். கெடா பினாங்கு மாநைலங்களிலிருந்து 10 பேருந்திற்கும் மேலாக வரவிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது, மேலும் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புக் கூட்டங்களும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அடுத்த மாற்றம் குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Thursday, December 3, 2009

சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு - மொழி பேரழிவு



கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சுமார் 4391 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எடுத்து அதன் தேர்வையும் எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை 1998-இல் 340ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடக் காலக்கட்டத்தில் 4000 இந்திய மாணவர்கள் தன் தாய்மொழி மீதான அக்கறையையும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தையும் காட்டியிருப்பது பெருமைக்குரிய முன்னேற்றமாகும். இனத்தின் அடையாளம் மொழியும் மொழியறிவும் ஆகும் தொடர்ந்து தன் தாய்மொழியை வளர்ப்பதன் மூலமும் அதை அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதன் மூலமும் ஒரு மொழியை அழியாமல் பாதுகாக்க இயலும்.

அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. ஒரு சராசரி மலேசிய குடிமகனாக இந்தப் பிரச்சனையை அணுகும்போது, தமிழ்க் கல்விக்கே பேரழிவு நடைப்பெறவிருப்பதை மிகவும் வெளிப்படையாக அனுமானிக்க முடிகிறது.

எஸ்.பி.எம் என்பது மலேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள்(17/18 வயது)) படிவம் 5இல் மேற்கொள்ளும் உயர் தேர்வாகும். இந்தத் தேர்வை எழுதிய மாணவர்கள் உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடரலாம் அல்லது வெளிநாட்டில் பயிலச் செல்லலாம், அல்லது உள்நாட்டு கல்லூரிகள், ஆசிரியர் பயிற்றகம், தொழில் திறன் பயிற்சி கல்லூரிகள் எனத் தொடரலாம். இத்துனைக் காலமாக எஸ்.பி.எம் தேர்வில் கலை மற்றும் அறிவியல் வகுப்பைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கிய பாடத்தையும் தனது தேர்வு பாடமாகவும் எடுத்து வந்தனர்.

ஆனால், அடுத்த வருடம் தொடக்கம், எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடம் மட்டுமே எடுக்க முடியும் என்கிற வரையறை கல்வி அமைச்சின் புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இனி இரண்டு வகையான மொழி பேரழிவு தனது அரசியல் கிளையைப் பரவவிடும் என்பதை நமது இந்திய கல்வியாளர்கள் உணர்ந்து அதை வெளிப்படையாகப் பொது மக்களுக்கு தெரிவிப்பார்களா என்பதும் சந்தேகத்திற்குரிய இடமாக இருக்கிறது.

பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் மொழியான தேசிய மொழி(மலாய் மொழி) கட்டாயப் பாடமாகவும் அதிகாரப்பூர்வ மொழியாகவும் கற்பிக்கப்பட்டு, அதை மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கல்வி வாய்ப்புகள் சாத்தியப்பட வேண்டுமென்றால் தேசிய மொழியில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்கிற சட்டத்தை ஒட்டுமொத்த மலேசியர்களும் ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் இன்னமும் அதைப் பின்பற்றுவதோடு தமிழ்ப்பள்ளியில் மரியாதைக்குரிய வகையிலும் நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டு, இன்றும் நம் இந்திய மாணவர்கள் தேசிய மொழியான மலாய் மொழியில் சிறந்த தேர்ச்சிப் பெற்றும் வருகின்றனர். சிறுபான்மையினர் தேசியத்தை ஏற்றுக் கொள்வதோடு மதிக்கவும் செய்கிறார்கள், ஏன் இந்தத் தேசியம் சிறுபான்மையினத்தவரின் தாய்மொழிக்கு சரிவு ஏற்படகூடிய சட்டங்களை அமல்ப்படுத்த வேண்டும்?

எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற சட்டம், இந்தப் புது நடைமுறை அமலுக்கு வந்தால் கலை பிரிவில் படிக்கும் மாணவர்கள் தமிழ் அல்லது தமிழ் இலக்கியம் என ஏதாவது ஒன்றையே தேர்வு செய்ய முடியும், மேலும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் இரண்டு தமிழ் பாடத்தையும் எடுக்க முடியாமல் போய்விடும்.(மக்கள் ஓசை 2.12.2009) இது தாய்மொழிக்கு நேரிடையாக ஏற்படப் போகும் அழிவு என்பதை எந்தவித உடனடி உணர்ச்சிவசத்திற்குரிய புரிதலும் இல்லாமல் மிக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ள முடியும்.

    "எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை, ஆகையால் தாய்மொழி தேர்வை பள்ளியளவிலேயே எழுதிக் கொள்ளுங்கள்" என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளார். ஒரு முக்கியமான சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்கு எதிரான ஆதிக்கக் குரலாக இந்தப் புதிய சட்டத்தை அணுகக்கூடுமா? தேசியம் என்ற கட்டமைப்பு சிறுபான்மையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர சிறுபான்மையின் முக்கியத்துவங்களை அலட்சியப்படுத்துவதாக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது அரசியலின் மிகப் பெரிய தவறாகவும், அரசியல் சக்திகளின் நேர்மையின்மையெனவும் கருதக்கூடும்.

பள்ளி அளவிலேயே தாய்மொழி தேர்வை நடத்திக் கொண்டு, பள்ளி நிர்வாகமே அதற்குரிய சான்றிதழை வழங்கிக் கொள்ளட்டும் என்ற பரிந்துரை மேல்மட்ட தீர்மான மதிபீட்டுக் கொள்கையிலிருந்து சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியை அலட்சியப்படுத்தி நீக்குவது போல தோன்றுகிறது. இது ஒருவகையில் தாய்மொழியைப் பயின்றால் எதிர்க்காலத்தில் வேலை வாய்ப்பும் வெற்றி வாய்ப்பும் இல்லை, அதே சமயம் அறிவியல் மாணவர்களுக்குத் தமிழ் மொழி தேவையில்லாத மொழியாகிவிடும் என்கிற புரிதலையும் கொண்டிருக்கிற அரசின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

“ஒரே மலேசியா” என்கிற கொள்கையின் தந்தையான மலேசியப் பிரதமர், இந்தச் சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழிக்குரிய பெரும் பாதிப்பை உடனடியாக உணர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க ஆலோசிக்க வேண்டும் என்றுதான் இந்திய சமூகமே எதிர்ப்பார்க்கின்றது.

குறிப்பு:  ஏ எடுக்க முடியாமல் போனதற்காக, தற்கொலை செய்து கொண்ட இந்திய மாணவர்களின் முகங்களும், அதே சமயம் 6 பாடத்தில் ஏ எடுத்து ஒரு பாடத்தில் வீழ்ச்சி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட யூ.பி.எஸ்.ஆர் மாணவரின் முகமும் தோல்வியின் பிம்பமாக வந்துவிட்டுப் போகிறது. அப்படி வந்துவிட்டுப் போகும் போதெல்லாம் எந்தவித முன்னறிப்பும் இன்றி அதிருப்தியும் கோபமும் ஏற்படுகின்றது.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.


Tuesday, December 1, 2009

பிழையான செய்தியை வெளியிடுவதுதான் பத்திரிக்கை தர்மமா? மலேசிய நண்பன் பத்திரிக்கைக்குக் கண்டனம்

ஒரு முக்கியமான செய்தி தகவல் ஊடகமான பத்திரிக்கையில் வெளியிடப்படுகிறதென்றால், அது பலமுறை ஆய்வு செய்யப்பட்டு, தகவல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு தொடர்புடையோரின் அனுமதியும் பெற்ற பிறகுதான் பிரசுரம் ஆக வேண்டும். இது பத்திரிக்கையில் செய்தி பிரசுரத்திற்கான நம்பகமான வழிமுறை.

ஆனால் அன்மையில் (29.11.2009) மலேசிய நண்பன் பத்திரிக்கையில் வெளிவந்த “யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் கோலா மூடா மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகளின் வீழ்ச்சி” எனும் தலைப்பிட்ட செய்தியில் பிழையான தகவலை எப்படிப் பொறுப்பிலுள்ள பத்திரிக்கை அனுமதித்திருக்கக்கூடும் என கேள்வி எழுகிறது. அந்தப் பத்திரிக்கை செய்தியில் கேள்விக்கு இடமாக வழிமுறை தவறிய இரண்டு விசயங்கள் யாருடைய கவனக்குறைவால் கையாளப்பட்டுள்ளது எனவும் தெரியவில்லை.

1. கோலா மூடா யான் (கெடா மாநிலம்) சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தொடர்ந்து 3 ஆண்டுகள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் வீழ்ச்சி அடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. – மலேசிய நண்பன்

மேற்குறிப்பிட்ட தகவல் பிழையானதாகும். சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரான திரு.வீரையா அவர்களைச் சந்தித்த போது, அவர் ஆதாரத்துடன் மூன்றாண்டுகளாக அப்பள்ளி தேர்வு விகிதத்தில் உயர்வுக் கண்டுள்ளாதத் தெரிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்நாட்டு தமிழ்ப் பத்திரிக்கையில் அலட்சியம் ஒரு தமிழ்ப்பள்ளியின் நற்பெயரை எந்த அளவிற்கு பொதுவில் பொய்யான தகவலால் அவமானப்படுத்தியுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது. இது கண்டிக்கத்தக்க கவனக்குறைவு.

2. மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகள் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வீழ்ச்சி குறித்து சமூக அமைப்புகள் பள்ளி நிர்வாகத்துடன் பேசவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. –மலேசிய நண்பன்

பொய்யான தகவல் அடிப்படையில் வெளியான செய்தியை ஒட்டி மேலும் அதை வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் என்ற சொல்லையும் பயன்படுத்தி அப்பள்ளியின் நிர்வாகத்தைக் கேலி செய்வது போலவும் இப்படியொரு வரி சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

யார் அந்தச் சமூக அமைப்புகள்? அந்த அமைப்பின் பெயரை வெளியீடக்கூட சம்பந்தபட்ட பத்திரிக்கைக்குத் தெரியாதா? கல்வி அமைச்சுக்குக் கீழ், மாவட்ட கல்வி இலாகாவின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்க தமிழ்ப்பள்ளியின் மீது கேள்வி எழுப்பும் முன் சரியான முறையான அணுகுமுறைகளைக் கொண்ட செய்தி சேகரிப்புகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரி அரைகுறையான தகவலை வெளியீட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் தமிழ்ப் பத்திரிக்கை செய்யக்கூடிய தர்மமா இது?

மேல்மட்டத்தில் இருப்பவர்கள் அல்லது பொறுப்பில் உள்ளவர்கள் உடனடியாக இந்த மாதிரி தமிழ்ப்பள்ளிகளின் பிம்பத்தை அவமானப்படுத்தும் செயல்களை (கொஞ்சமும் நியாயமற்ற செயல்களை) செய்பவர்களுக்கு எதிராக மாற்றுக் குரலை எழுப்ப வேண்டும். எழுச்சியும் வீழ்ச்சியும் எல்லாம் இடங்களிலும் மிக இயல்பாக நடக்கக்கூடியவை. கல்வி சிந்தனையும் பொது அறிவும் சமயோசிதமும் நிரம்ப இருக்கக்கூடிய சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், இம்மாதிரியான வீழ்ச்சியையும் எழுச்சியையும் அணுகக்கூடிய ஆற்றலும் பக்குவமும் கைவரப் பெற்றிருக்க வேண்டும். உடனடியாக உணர்ச்சி அலையை எழுப்புவதன் மூலம் இப்படித்தான் சில தவறுகளும் சரிவுகளும் நடந்துவிடும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற சமூக அலட்சியங்களை பொது ஊடகத்தில் நிகழ்த்துவதன் மூலம் சொந்த இனத்தின் அடையாளங்களின் மீதே மண்னை வாரி இறைத்துக் கொள்வது போன்ற செயலாக ஆகிவிடும்.

இதற்கு முன்பும் ஒருமுறை (2008-ல்) ஆர்வார்ட் 3 மற்றும் ஆர்வார்ட் 2 தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையைப் பிழையாகப் பிரசுரித்த ஒரு தமிழ்ப் பத்திரிக்கையின் அலட்சியத்தையும் நினைவுக்கூற முடிகிறது.

குறிப்பு: பத்திரிக்கைகள் ஒரு செய்தியை வெளியீடும் முன் தனது செய்தி குறித்து நம்பகமான தகவல்கள் இருப்பதையும், கேலியான கடுமையான விமர்சனங்களை உள்ளடக்கிய சொல்லாடல்களைத் தவிர்த்திருப்பதையும் உறுதிப்படுத்துவது நல்லது. தமிழ்ப் பத்திரிக்கைகளை வாசிக்கும் சராசரி வாசகர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com



Sunday, November 29, 2009

அதிகாரத்தின் குரல் -3 உரையாடல் (தொண்டை குழியிலிருந்து நிரம்பும் ஆணாதிக்கம்)


இடம்: வீடு
கரு: குரலை உயர்த்தும் சில அப்பாக்களின் தொண்டை குழியிலுருந்து நிரம்பும் ஆணாதிக்கமும் அதன் கொடூரமான உடலில் முளைக்கும் மயிர்களும்

அப்பா: எங்க போறாளாம் அவ? (அம்மாவை நோக்கி)

மகள்: ம்மா. . கொஞ்சம் மரியாதையா பேச சொல்லுங்க.

அப்பா: என்னாடி மரியாதெ? வாயெ உடைச்சி, கட்டிப் போட்டு வளர்த்திருந்தா போவாளா இப்படி ஊர் மேய?

மகள்: ப்பா. . திருப்பியும் சொல்றேன் மரியாதையா பேசக் கத்துக்குங்க. உங்க குடும்ப லட்சணம்தான் ஊர் மேயுது. . கேட்டுக்குங்க.

அப்பா: திமுற பாத்தியா? அப்பனையே எதிர்த்துப் பேசறே? எவன் கத்துக் கொடுத்தான்? அதான் ஊர் மேயறியோ. . மூஞ்சிலாம் உடைஞ்சிறும் சொல்லிட்டேன்.

(வெற்று மேலுடலுடன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அப்பா எழுந்து திடமாக நின்று கொண்டார். தன் திமிர் பிடித்த உடலை மிகப் பயங்கரமான தோற்றத்துடன் முறுக்கினார்)

மகள்: நான் எங்கப் போறேன் எங்கேந்து வர்றேன்னு உங்களுக்குத் தெரியுமா? யேன் இப்படி நாகரிகம் இல்லாம யோசிக்கிறீங்க?

அப்பா: உங்க நாகரிகத்தெ தூக்கி ஜாம கொட்டாய் பீ அல்லூருலெ போடு! அதான் அன்னிக்கு பாத்தனே. . அப்பயே வெட்டிப் போட்டுருக்கனும் உன்னெ. உனக்கு எதுக்குடி எவன் கூடயோ பேச்சி? அதுவும் காதலிச்சவன்கூட. அதான் அவனெ மிரட்டி அடிச்சி விரட்டியாச்சே

மகள்: பழைய கதையை பேசாதீங்க. படிக்கறெ வயசுலெ காதல் வர்றதெ ஒரு அப்பாவா எப்படிக் கையாளனும்னு தெரியாமே காட்டு மிராண்டி மாதிரி நடந்துக்கிட்டிங்க. இன்னிக்கு வரைக்கும் ஒரு சந்தேகம் பிடிச்ச மிருகம் மாதிரி இருக்கீங்க. அன்னிக்கு அவனெ எதார்த்தமாதான் டவுன்லெ பாத்தேன். பேசனன். . அவ்ளதான்.

அப்பா: ஆளே ஏக்காதேடி. உன்னெ விட்டா பிள்ளையே பெத்துப் போட்டுடவெ. எந்தப் புத்துலெ எந்த பாம்பு இருக்குனு எவனுக்குத் தெரியும். அடிச்சாதான் மிதிச்சாதான் நீ அடங்குவே, படிக்கற வயசுலெ காதல் பண்ற எரும மாடுகளும் அடங்கும். காதலாம் காதலாம் மண்ணாங்கட்டி.

மகள்: காதல் பண்றெ எல்லாரும் என்னா தப்பாவா போய்ட்டாங்கெ? சும்மா நியாயம் இல்லாம பேசாதீங்க. உங்க கட்டுப்பாட்டுலெ இருக்கறனாலே உங்களுக்கு மிஞ்சி நாங்க எதுவும் செஞ்சிற கூடாது. அதனாலெதான் உங்க திமிறுத்தனத்தாலே எங்களெ கட்டுப்போட்டுப் பார்க்கறீங்க.

அப்பா: படிச்சட்டா. . படிச்சிட்டாலே. . அதான் இந்தப் பேச்சி. அப்பனுக்கு தெரியும் மகள எப்படி வளக்கறதுன்னு. நீ எங்கயும் வெளிய போக வேணாம். கம்முன்னு வீட்டுலே இரு. எவன வந்து எங்க நிக்க சொல்லிருக்கெ படுவா. .

மகள்: ம்மா. . இவரு ஓவரா பேசறாரு. என் வயசுக்கு மரியாதை கொடுக்க சொல்லு. ஒரு பொம்பள பிள்ளைக்கிட்ட எப்படிப் பேசனும்னுகூட தெரில. .

அப்பா: ஆங்ங்ங். . எங்களுக்கு எல்லாம் தெரியும். அவளெ அதிகம் பேசாமெ வாயெ மூட சொல்லு. எல்லாம் தெரிஞ்ச மாதிரி பொம்பள பிள்ளிங்க பேசக்கூடாது, தெரியுமா? உங்களுக்குல்லாம் ஒன்னும் தெரியாது.. .

மகள்: தெரியுமே எல்லாம் தெரியும்! சின்ன வயசுலேந்து என்னோடெ எந்தத் திறமையும் வெளிய காட்ட முடியாத மாதிரி அடக்கி அடக்கி வச்சி என்ன கொன்னுட்டிங்களே, அது தெரியும். சந்தேகப் பிடிச்ச பேய் மாதிரி அலைஞ்சி எங்க சந்தோசத்தையும் கொன்னுட்டிங்களே, அதும் தெரியும்.

அப்பா: உன் திறமையே தூக்கி மண்ணுலெ பொதைச்சிரு. இங்க நான் இருக்கன், சம்பாரிச்சி போட, உங்கள பாத்துக்க, உனக்கு எதுக்கு தனியா திறமையெ காட்டனும். . திறமையெ காட்டி என்னா மந்திரி பதவியா வாங்க போற?

மகள்: எல்லாருக்கும் சின்ன சின்ன கனவு ஆசையும் இருக்கும். நீங்க மட்டும்தான் வாழ்றதா உங்களுக்கு நெனைப்பா? எங்களையும் கொஞ்சம் வாழவிடுங்க. மத்தவங்க உணர்வுக்கும் கொஞ்சம் மதிப்புக் கொடுங்க. .

அப்பா: தோ பாரு. .என்னை என்னா கையாளாகாத அப்பன்னு நினைச்சியா, பிள்ளிங்கள பேசவிட்டுட்டு ஒம்போது மாதிரி நிக்க. . அடிச்சி மண்டையெ பொழந்துருவேன். நான் என்னா சொல்றெனோ அதை மட்டும் கேளு. நீயா எதையும் யோசிக்காதெ. மத்தவன் சொல்றதெ கேட்டுக்கிட்டு படிச்ச திமுறுல பேசாதெ. உன்னெ வளர்த்தெ எனக்கு தெரியும் உனக்கு என்ன செய்யனும்னு. .

மகள்: சின்ன வயசுலேந்து நான் ரொம்ப நல்லா பாடுவேன்னு எல்லாம் சொல்லுவாங்க, மனசாறெ புகழுவாங்க. உங்களுக்கு இது தெரியுமா? என்னிக்காவது பாராட்டிருக்கீங்களா? உங்களுக்கு வேண்டியதெல்லாம் “ஏ” எடுக்கனும். அப்படி “ஏ” எடுக்கறவங்கத்தான் உங்களுக்கு மனுசாளு. “பீ” எடுத்தா அவுங்களாம் என்னா மிருகமா? ஊர்ல உள்ளவந்தான் இன்னிக்கு, “ஏ” யை தூக்கி வச்சிக்கிட்டு, “ஏ”க்காக வாழ்றான் ஓடுறான், அலையுறான். . கொண்டாடுறான். . சொந்த அப்பா நீங்களும் அப்படித்தானே? “ஏ” எடுக்கனும் பரீட்சையிலேன்னு சொல்லி எப்படிலாம் என்னெ கொடுமெ படுத்துனிங்க? என்னிக்காவது நான் நேசிச்சி படிச்சிறக்கனா? உங்களுக்கும் மத்தவங்களுக்கும் பயந்தே எல்லாம் “ஏ” ஏ” ஏ ன்னு எடுத்தேன். எனக்காக என் ஆசைகளுக்கா வாழ்க்கையிலே ஒரு “சீ” கூட நான் எடுக்கலெ.

அப்பா: உன்னெ கஸ்ட்டப்பட்டு படிக்க வச்செ என்ன பாத்து எப்படிக் கேக்கறே. . நாயே! படிச்ச பிள்ளைன்னு பாத்தா, அடாவடியா பேசறே. . மவளே. . உன்னெ என்னா செய்யனும்னு தெரியுமா, கை காலுளாம் உடைச்சி மூளையிலெ உக்கார வைக்கனும். .

(இன்னமும் நம்முடைய காதுகளுக்கு எட்டாத இரகசியங்களில் இப்படியொரு அதிகாரத்தின் குரல்கள் ஓங்கி ஒலிக்கவே செய்கின்றன)

-இந்த வருடம் யூ பி எஸ் ஆர் தேர்வில் இந்தச் சமூகமும் பள்ளி நிர்வாகங்களும் எதிர்ப்பார்க்கும் “ஏ”க்களைப் பெறாத மாணவர்களுக்காக அடுத்த பாகம் விரைவில் வரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, November 26, 2009

ஆர்வார்ட் 3 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் 4 நாள் கோலாலம்பூர் புத்ராஜெயா கல்விச் சுற்றுலா

கடந்த 19 ஆம் திகதி தொடங்கி 22 ஆம் திகதி வரை பள்ளி விடுமுறைக்காலத்தை முன்னிட்டு எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் (குரூண் ஆர்வார்ட் 3 – கடாரம்) கோலாலம்பூர் புத்ராஜெயா போன்ற இடங்களுக்குக் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

முதலில் மாணவர்களுக்கான மதிய உணவு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்(kementerian Belia dan sukan) ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் வழங்கப்பட்டது. அதன் பிறகு புத்ரா ஜெயா வட்டாரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு கோலாலம்பூர் பயணம் செய்தோம்.

கோலாலம்பூரில் முக்கியமான இடங்களான தேசிய மிருகக்காட்சி சாலை, பெட்ரோ சைன்ஸ், அறிவியல் மையம், பிளேனெட்டேரியோம், மைன்ஸ் வொண்டர்லைன், இரட்டை மாடி கோபுரம், ஒற்றை மாடி கோபுரம் என்று மேலும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.

குறிப்பு: இந்தப் பயணத்தில் (கல்விச் சுற்றுலா) கலந்துகொண்ட பெரும்பாலான மாணவர்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்லாதவர்கள் ஆகும். இது அவர்களுக்கு ஒரு நல்ல மகிழ்ச்சிக்கரமான விடுமுறையாக இருந்தது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Wednesday, November 18, 2009

காந்தி: வேறொரு அடையாளம் (நவீன களம்)

இந்த மாதத்தின் நவீன களத்தின் இரு சந்திப்பிலும் காந்தியவாதத்தைப் பற்றிய உரையாடல்களே அதிகமாக இருந்தது. ஏற்கனவே காந்தியைப் பற்றிய வரண்ட வரலாற்றுப் பார்வையே இருந்ததால், பிறர் காந்தியைப் பற்றிய எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைகள் புத்தகங்கள் என வாசித்தேன்.

விவாதிப்பதற்கு காந்தி குறித்த தத்துவ அரசியல் பார்வை அவசியம் என்பதால் மேலும் மேலும் அவரைப் பற்றிய கட்டுரைகள் பலராலும் பல நிலைகளில் எழுதப்பட்ட படிமங்களே அதிகமாகக் கிடைத்தும், ஒருவருக்கொருவர் காந்திய சித்தாந்தத்தில் மிகத் தீவிரமாக முரண்படுவது முதலில் வாசிப்பு சிக்கலை ஏற்படுத்தியது. நவீன களத்தில் மிக எளிமையான சொல்லாடல்களில் அவரைப் பற்றிய புரிந்துகொள்ள முற்பட்ட கடினமான மதிப்பீடுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரமாக உரையாடினோம்.

காந்தியின் அரசியல், அவர் உருவாக்கிய தேசியம், பெரும்பான்மைய சக்திகளின் மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கியதல்ல, சிறுபான்மையையும் உள்ளடக்கியது. பார்ப்பனர்கள் பார்ப்பனல்லாதவர்கள் என இரு பிரிவினருக்கும் மத்தியில் நிலவிய அரசியல் நேர்மையின்மை, சர்ச்சை, இனவாத தீண்டாமைகளை, தனது அரசியல் நேர்மையுடன் களைய முற்பட்டவர். இந்தச் சிக்கல், முரண்பாடு மட்டுமே அவரது தேசிய கட்டமைப்பின் நடைமுறைக்கு மாபெரும் சவாலாக இருந்தது.

காந்தியின் , “மகாத்மா” என்கிற அடையாளம்தான் அவர் குறித்த மதிப்பீடுகளைப் பலவீனமாக்குகிறது என்றும், காந்தி ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாக மட்டுமே அணுகப்படுவதால், வாழ்நாள் முழுவதும் தனது பின்பற்றுதல்களை, வாழ்வைப் பரிசோதனை செய்து கொண்டே இருந்த காந்தி, ஒழுக்கம் என்கிற கோட்பாட்டிலிருந்து நழுவிய ஓர் இந்துத்துவவாதி என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார். இது தன்னை ஒரு சாதாரண மனிதன் என்று தன் வாழ்வை பரிசோதனை களமாக ஆக்கிக் கொண்ட காந்தியின் கோளாறு கிடையாது, மகாத்மா என்ற சொல்லாடல்களுடன் அவர் மீது நாம் வைக்கும் மதிப்பீடுகளின் கோளாறு என் அ.மார்க்ஸ் அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்து மதத்தால், வருணா சாதி முறையால் பாதிப்புக்குளளான ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியிலிருந்து பேசியவர்கள் அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள். ஆனால் காந்தியோ இந்த ஒடுக்குமுறைக்கு யார் காரணமோ அந்த மக்களின் மத்தியில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பேசியவர். எந்த வருணாசிரம கொள்கையின் பிடிமானத்தில் தீண்டாமையின் மூலம் பிறரை ஒடுக்கினார்களோ, அந்த நம்பிக்கையின் மூலமே அதன் அடிபடையிலேயே அதை மறுக்க முனைந்தவர். காந்தியின் மொழியும் பெரியாரின் மொழியும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று அதன் நுண் அரசியலுடன் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

காந்தியின் சத்தியாகிரகம் குறித்து, அது அரசுக்கு எதிராக ஒருவர் தன்னை வருத்திக் கொண்டு அழிந்து போகிற முட்டாள்தனமான ஒரு காரியம் என்று சர்ர்ச்சை இருந்தது. அ.மார்க்ஸ் போன்ற கட்டுரையாளர்கள், அது பெருந்திரளான மக்களை சட்டத்தை மறுக்க வைக்கிற, மீற வைக்கிற, அதன் மூலம் அரசைப் பணிய வைக்கிற போராட்ட வடிவம் என்ற புரிதலை ஏற்படுத்தினார்கள்.

தனது தேசியவாதக் கொள்கையின் மூலம், மதச்சார்பின்மை என்கிற தத்துவக் கருத்தாக்கத்தை ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்றியமைத்ததில் காந்தியின் பங்கு மிக முக்கியமானது. மேலும் நடப்பில் இருந்த இந்து மத்திற்கு எதிரான கருத்துகளையே கடைசிவரை முன் வைத்துள்ளார் காந்தி. இந்து மதத்தை முற்றிலும் மறுக்காமல், அதைச் சீர்த்திருத்த வேண்டும் சீரமைக்க வேண்டும் என்றே பரிந்துரைத்தார். காந்தி ஒரு இந்துத்துவவாதி என்று சொல்வதைச் சிலர் மறுக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், காந்தியைக் கொன்றது ஓர் இந்துவாக இருக்கும்பட்சத்தில் காந்தியை வெறும் இந்து கொள்கைவாதி என்று அடையாளப்படுத்துவதில் அர்த்தம் இல்லை எனவே நினைக்கிறேன்.

காந்தியின் அரசியல் நேர்மை அவரது அடையாளத்தைத் தூக்கிப் பிடித்தது. வன்முறைக்கு எதிரான ஒரு போராட்ட வடிவத்தை முன்மொழிந்து அதனைக் கொண்டு போராடியவர். பார்ப்பானியவர்களை நோக்கி, உங்கள் அதிகாரங்களையும் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள், திராவிடர்களுக்கான வாய்ப்புகளை அவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும், பார்ப்பனியில்லாதவர்களை நோக்கி, பிராமனர்களை ஒழிப்பதுதான் என்கிற கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள், அதிகாரங்களையும் பதவிகளையும் பகிர்ந்து கொள்வதிலும் பறிப்பதிலும் இருக்கும் வெறியையும் துறந்துவிட வேண்டும் என்று தனது அரசியல் பார்வையை இந்த இரு தரப்பினரால் பிளவுப்படும் தேசியவாதத்தை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தினார். காந்தியின் வேறொரு அடையாளம் இது. காந்தியை ஒரு ஒழுக்கம் சார்ந்த ஆளுமையாகப் பார்க்கும் விதத்திலிருந்து விலகி, அவரை நோக்கிய வேறொரு அடையாளத்தையும் கொண்டிருப்பதும், மறுவாசிப்பும் மிக அவசியமானது.

( ஒரு தந்தையாக காந்தி மிகப் பெரிய தோல்வியடைந்தார் என்ற சர்ச்சையும் அவர் மீது உள்ளது- இதை அவர் குடும்ப வாழ்வுடன் மட்டும் ஒப்பிடாமல், அவரது அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருப்பதால் இங்குக் குறிப்பிடபடவில்லை- தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்தால்)

சொல்வதற்கு நிறைய இருந்த போதிலும். . . முற்றும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

நன்றி: அ.மார்க்ஸ் கட்டுரைகள்
மணிஜெகதீசன், பிரம்மானந்தா, கோ.புண்ணியவான், வாசகர் பாண்டியன்,
பாலாஜி(சிங்கப்பூர்)

Monday, November 9, 2009

செழியன் - சாரு - எஸ்.ரா - விச்சுவாமித்திரன் அவர்களின் சினிமா பார்வை

அய்யப்பன் மாதவன் இயக்கிய “தனி” குறும்பட வெளியீட்டிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் குறும்பட இயக்குனரும் ஆனந்த விகடன் “உலக சினிமா” கட்டுரையாளருமான செழியன் அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும் நேர்காணல் செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.

இயக்குனர் பேரரசுவின் சகோதரரான அறிவுநிதி அவர்களின் இல்லத்தில்தான் செழியனைச் சந்தித்துப் பேசினேன். தெளிவான முகத்துடன் மிகவும் நிதானமாகக் காட்சியளித்தார். கருத்துகளை மிக எளிமையாக எவ்வித சிக்கலும் தடுமாற்றங்களும் இன்றி முன் வைக்கக்கூடியவராக இருந்தார். ஏற்கனவே செழியனின் சினிமா பார்வையை ஆனந்த விகடன் தொடர் சினிமா கட்டுரையின் மூலம் பலர் அறிந்திருக்கக்கூடும்.

இன்றைய தழிச் சூழலில், சினிமா குறித்த ஆழ்ந்த பிரக்ஞையையும் மாற்றுப் பார்வையையும் தனது கட்டுரை மூலம் வெளிப்படுத்துபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ஆகும். குறிப்பிட்டு சொல்வதென்றால் சாரு நிவேதிதா, விசுவாமித்திரன், செழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களே ஆகும். மேலும் இணையத்தில் பலர் சினிமா குறித்த (முக்கியமாக தமிழ் சினிமா) விமர்சனங்களை எழுதி வருவதும் வரவேற்கத்தக்கது. இந்த நால்வரின் சினிமா கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தவர்களுக்கு ஒவ்வொன்றும் சில நேர்த்தியான இடங்களில் வித்தியாசப்படுவதை அறிய முடியும்.

சாரு தனது சினிமா கட்டுரைகளில் திரைக்குப் பின்னாலுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி மிகவும் விரிவாக அவர்களின் ஆளுமை சார்ந்து பேசக்கூடியவர். சினிமாவில் உள்ள மற்ற பல அம்சங்களையும் குறிப்பாக இசையைப் பற்றி அதன் வரலாறு சார்ந்தும் பல தகவல்களை ஒப்பீடுகளைத் தரக்கூடியவர் ஆகும். ஒரு சில ஒப்பீடுகளுக்காக அவர் தனது விமர்சனங்களுக்குள் கொண்டு வரும் திரைப்பட கலைஞர்கள் தமிழில் அறியப்படாதவர்களும் அதே சமயம் கவனிக்கத்தக்க ஆளுமைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒளிப்பதிவுகள் பற்றி பேசும்போது மிகவும் தட்டையான மொழிகளுக்குள் தகவல் வரட்சியின்றி, உலக சினிமாக்களை மேற்கோள்காட்டி விரிவாகப் பேசக்கூடியவர் சாரு. ( சில சமயங்களில் நமது செல்வராகவனையும் அகிரா குரோசாவையும் ஒரே புள்ளியில் இணைக்கும் அபாயமான ஒப்பீடுகளையும் காட்டி மிரளவும் செய்வார்)

அடுத்தபடியாக எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமா கட்டுரைகள் மிக முக்கியமானவையாகும். எளிதில் வாசகனை ஈர்க்கக்கூடிய வகையிலான சினிமா பார்வையை கவர்ச்சியான மொழியுடன் சொல்லக்கூடியவர். நண்பன் சினிமா பற்றி கூறுவது போல அவரது சினிமா கட்டுரைகள் நம்மை நெருங்கி வந்துவிடும். அவரது பெரும்பாலான சினிமா பார்வை மனித வாழ்வோடு ஒப்பிட்டு அதன் அழகியலை அடையக்கூடியதாக விவரிக்கப்பட்டிருக்கும். மேலும் எல்லாம் சினிமாக்களின் முகத்தையும் அதன் அடையாளத்தையும் வாழ்வியலின் பின்புலத்தோடு அவதானிக்கக்கூடியவர் எஸ்.ரா. (சினிமாவிற்கான உண்மையான படிமங்களுக்குள் அதிகபடியான இவரது வழக்கமான சொல்லாடல்கள் ஆக்கிரமிப்பு செய்யும்போது, சினிமாவின் சில காட்சிகள் புனைவுகளாக மாறிவிடுகிறது- “போல போல” என்ற தனது கற்பனைவாத ஒப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் அசலைத் தவறவிடுவதாகத் தோன்றும்)

அடுத்ததாக செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது. (தனது மனோத்துவ/உளவியல் மதிப்பீடுகளின் மூலம் சில சமயங்களில் வாசகனின் அல்லது பார்வையாளனின் சாதாரண கிரகித்தலையும் சிக்கலாக்கிவிடும் ஆக்கிரமிப்பு செழியனின் விமர்சனங்களில் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் ஒரு சில கட்டுரைகளில் ஒரே விதமான அணுகுமுறைகளே நுட்பமாகப் பாவித்திருப்பது போல தோன்றக்கூடும்.)

அடுத்ததாக தீராநதி இதழில் சினிமா பற்றி எழுதிவரும் விச்சுவாமித்திரன் ஆவார். இவருடைய சினிமா கட்டுரையின் மொழி மிகவும் சிக்கலானது. அதே சமயம் இவரது சினிமா மீதான சொல்லாடல்கள் தத்துவம் சார்ந்து அதன் கட்டமைப்பைத் தரமான களத்தில் விவரிக்கக்கூடியது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை அல்ல. மேலும் ஆரம்பக்கால சினிமா வாசகனுக்கு முற்றிலும் ஏதுவான வடிவமும் அல்ல. இவரது சினிமா கட்டுரைகள் பெரும்பாலும் பிராந்திய அடையாளத்துடன் எழுதப்படக்கூடியது. ரஷ்ய சினிமா, கொரியா சினிமா எனப் பெயரிடப்பட்ட, நிலப்பரப்பின் பின்னனியில் அதன் தத்துவம் - பண்பாடு - கலாச்சாரம் - அரசியல் - போன்ற அம்சங்களின் உள்ளீடுகளை அளவுகோளாக்கி படத்தை விவரித்து எழுதுவார். ( இவரது சினிமா கட்டுரையைப் படித்து முடித்த பிறகு, சினிமா பார்க்கும் ஆவலைவிட வரலாறு அரசியல் படிக்க வேண்டும் என்ற ஆவலே மேலிடும் என்றே கருதுகிறேன். அளவுக்கு அதீதமான தகவல்களும் சான்றுகளும் சில சமயங்களில் அசல் சினிமா என்கிற வடிவத்தின் எளிமையைக் குறைத்துவிடுவதாகப்படுகிறது)

தமிழில் சினிமா குறித்தும் உலக சினிமா குறித்தும் இனி அதிகம் எழுதவும் விவாதிக்கவும் பட வேண்டும். தமிழிலேயே பல மாற்றுச் சினிமா எடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது உள்நாட்டில்கூட பல இளைஞர்கள் தரமான குறும்படங்களை எடுப்பதில் ஆர்வமும் காட்டி வருகிறார்கள் என்பதால் சினிமா குறித்தான வாசிப்பும் மீள்வாசிப்பும் அவசியமானதாகும். நமது வாழ்வைப் பதிவு செய்து வைப்பதில் இலக்கியமும் சினிமாவும் மிக முக்கியமான வடிவங்களாகும். போலித்தனமான, அசலுக்கு எதிரான இலக்கியமும் சரி, சினிமாவும் சரி, வெறும் மசாலா கலவைகளாகத்தான் பணம் சம்பாரித்துவிட்டு காணாமல் போய்விடும். யதார்த்தங்களை சினிமா புனைவுகளுடனும் அசலான மனிதர்களையும் வாழ்வையும் கலை நுட்பம் சார்ந்து வெளிப்படுத்தும் சினிமாவும் இலக்கியமும் மட்டுமே ஆரம்பத்தில் சர்ச்சைகளைச் சந்தித்தாலும் வரலாற்றில் பேசப்படும் முக்கியமான பதிவாக இருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா


Tuesday, November 3, 2009

50 50 சென்களாக பறிக்கப்படுகிறது – ஒரு வணிக வாக்குகளின் நாக்கு

முதல் குறிப்பு:

தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் பெரும்பான்மையான போட்டிகளின் இறுதி சுற்றை நினைத்தாலே வெகுஜன இரசிகர்களின் மீதும் பார்வையாளர்களின் மீதும் பரிதாபமாக இருக்கும். காரணம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைந்தபட்சமாக அவர்களிடமிருந்து 50 50 சென்களாக பறிக்கப்படும் என்பது மிக சாத்தியம்.  ஒரு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தனது விளம்பரத்தின் மூலம் கலையை ஒரு கவர்ச்சி நடிகையின் தொப்புளை சினிமாக்காரர்கள் ஆபாசமாகக் காட்டி பணம் சம்பாரிப்பது போல, உறிஞ்சி எடுக்கிறார்கள்.



“உங்களுக்குப் பிடித்த பாடகர் இவரா? இவரை நீங்கள் தேர்வு செய்ய B <  >  Vote  < >  என இடம் விட்டு தட்டி, இந்த எண்களுக்கு அனுப்பிவிடுங்கள், ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் 50 சென் வசூலிக்கப்படும்” என அந்தப் போட்டியின் இறுதி சுற்று போட்டியாளர்களுக்கு ஒரு எழுத்தோ எண்ணோ கொடுத்து நம் முன் உலாவ விடுவதுண்டு. ஒரு சில நேர்மையான இரசிகர்கள் குறுந்தகவலைத் தாராளமாக அனுப்பித் தள்ளுவார்கள். சிறுக சிறுக இந்தக் குறுந்தகவல் ஓட்டு முறை ஒரு பரவலான வழிமுறையாக வியாபாரமாக எல்லாம் போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு மக்களிடமிருந்து பல 50 சென்கள் பறிக்கப்படுகிறது எனத் தோன்றுகிறது.


இரண்டாவது குறிப்பு:

இந்த மாதிரி ஓட்டு மூலம்தான் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னனியை நினைத்தால் மிகப் பலவீனமாக உள்ளது. இரசிகர்களின் குறுந்தகவல் என்பதை மையமாக வைத்து ஒரு கலைஞன் வெற்றியாளனாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, இது என்ன சந்தையில் சிறந்த விலை போகும் கோழி இறைச்சையை வாடிக்கையாளர்கள் கொத்திக் கொண்டு போவது போல இருக்கிறது.

அடுத்ததாக குறுந்தகவலின் வழி மட்டுமே அதிக பெரும்பான்மை பெறுபவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுப்படுகிறார். எடுத்துக்காடாக போட்டியில் கலந்துகொண்டு இறுதி வெற்றியாளர்களில் ஒருவருக்கு, அதிக நண்பர்களும் உறவுக்காரர்களும் இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவருக்கு 50 சென் செலவழித்து பலமுறை ஓட்டுப் போட குவியும் கூட்டத்திற்குக் கணக்கே இல்லாமல் போக, அந்த மாதிரியான வசதி இல்லாத நடுத்தர கலைஞர்களின் நிலை? அப்படியென்றால் இந்த வெகுஜன இரசிகர்களின் 50 சென் குறுந்தகவல் தேர்வு உண்மையை நோக்கியதாக மட்டுமா இருக்கும்? சுயநலம் இல்லாத மிக நேர்மையான தேர்வு முறையா நிகழும்? குறைந்தபட்சம் தன் உறவுக்காரனை, அல்லது தன் மகனை, தன் அண்ணனை, தன் மச்சானை, தன் நண்பனை வெற்றிக் கொள்ளச் செய்ய ஒருவர் 5 முறை குறுந்தகவல் அனுப்பத் தொடங்கினால், அவரது உறவுக்காரகள் மட்டும் 60 பேர் என வைத்துக் கொண்டால், அவரது பெற்றோர்களின் நண்பர்கள், அந்த நண்பர்களின் நண்பர்கள் என மிகப் பெரிய பிரச்சார வேட்டையில் பெறப் போவது பெறும்பான்மை வாக்குகளாக இருந்தாலும், அதில் சுரண்டப்படப் போவது இந்த மாதிரியான வாய்ப்புகள் குறைந்த சக கலைஞன் தான் என்பது இந்தத் தொலைகாட்சி நிறுவனங்களுக்குத் தெரியப் போவதில்லையா?

மேலும் இந்த இறுதி சுற்று தொடங்கிய நாள் முழுவதும் தொலைக்காட்சியில் இதே விளம்பரம் தொடர்ந்து காண்பிக்கப்பட்டு, அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பது இந்த 50 சென் ஓட்டுத் தேர்வுகள்தான். இதைச் சார்ந்துதான் அதாவது எல்லாம்வகையான மோசடிகளும் சுயநல ஏமாற்றங்களும் நடப்பதற்குச் சாத்தியமான இந்த ஓட்டுமுறையை வைத்து வெற்றியாளர்களை நிர்ணயம் செய்வது நியாயமா? போதாதற்கு அவ்வப்போது வெற்றியாளர்களைத் திரையில் தோன்ற வைத்து, “ஓட்டுப் போடுங்கள். . என் எண்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்” என போலி அரசியல்வாதிகள் போல வியாபாரம் செய்யும் அளவிற்குக் காட்டிவிடுகிறார்கள். இதுதான் கலையை வளர்க்கும் முறையா? தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார்கள் என சினிமாவில் பார்த்ததுண்டு, அதே பாணியைத் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களையும் செய்ய வைப்பது கலைக்கு விரோதமானது அல்லவா?

உங்கள் உறவினருக்காகவும், உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் நண்பருக்காகவும் 1 முறை, 5 முறை, 10 முறை என கைத்தொலைபேசியிலிருந்து நீங்கள் அனுப்பும் வாக்கு / ஓட்டுகள், இந்த வாய்ப்பில்லாத போட்டியில் வெற்றிப் பெற துடிப்புடன் வந்திருக்கும் இன்னொரு கலைஞனின்/ போட்டியாளனின் உரிமையை முயற்சியை நம்பிக்கைகளை 50 சென் கொடுத்து சுரண்டுகிறீர்கள் என்பதை உணருங்கள்.

தேர்ச்சிப் பெற்ற நீதிபதிகளைக் கொண்டு வந்து அல்லது ஆர்வம் உள்ள ஆளுமைகளுக்கு நீதிபதிக்கான பயிற்சிகளைக் கொடுத்து, அதைச் சார்ந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதே முறையாகும். அப்படியே பார்வையாளர்களின் இரசிகர்களின் பங்களிப்பை உங்கள் போட்டியில் கொண்டு வரவேண்டுமென்றால், இந்தப் போட்டி குறித்த கருத்துகளை இலவசமான குறுந்தகவலின் வழி அனுப்பி வைக்க வகைச் செய்யுங்கள். யாருடைய காசையும் பெறத் தேவையும் இல்லை மேலும் ஆதரவும் பரவலாகக் கிடைக்கும். இதை நான் எல்லாம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பரிந்துரைச் செய்கிறேன். மாற்றத்திற்கு வித்திடுவோம்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா


Sunday, November 1, 2009

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் - உலகக் கொடுரங்களுக்கு அப்பாற்பட்ட சித்திரத்தின் வர்ணங்கள்

முதல் பகுதி

மலேசிய சிறுகதை விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு  ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு பல நல்ல சிறுகதைகளையும் படைத்தவர். அவருடைய படைப்பு குறித்து பலவகையான முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவியபோதும் விமர்சக துறையில் அவருடைய பங்கு மறுக்க முடியாதது.  எளிய வாசகனுக்கும் உரிய விமர்சன மொழி அவருடையது.

   ஒவ்வொரு படைப்பாளனின் படைப்புகளும் விமர்சிக்கப்பட வேண்டும். மலேசிய சூழலில் இலக்கியம் குறித்து அல்லது இலக்கியம் மீதான சம்பிரதாய விமர்சன கோட்பாடுகளுக்கு எதிராக மாற்று விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். எதிர்க் கருத்துகள் அல்லது மாற்றுச் சிந்தனை வழக்கமான அதிகாரங்களுக்கும் பதவி பீடங்களுக்கும் கூஜா தூக்கும் மனோபாவங்களை உடைக்க முற்பட வேண்டும். இளம் எழுத்தாளர்கள் மூத்த எழுத்தாளர்களை விமர்சிக்கக்கூடாது எனும் மேதாவித்தனமான பார்வைகளைக் களைந்து, விமர்சனத்தில் புதுமையைக் கொண்டு வர வேண்டும்.

அக்டோபர் மாத யுகமாயினி இதழில் மலேசிய ரெ.கார்த்திகேசுவின் “மல்லியும் மழையும்” எனக் கதையை வாசிக்க நேர்ந்தது. செப்டம்பர் மாத நவீன களத்தின் சந்திப்பில் கூலிம் நண்பர்களுடன் கார்த்திகேசுவின் முக்கியமான சிறுகதையான, “ஒரு சுமாரான கணவன்” குறித்து விவாதிக்கவும் விமர்சிக்கவும் பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருடைய இந்தக் கதையையும் வாசிக்கும்போது இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகளை அடையாளங்காண முடிந்தது.

“ஒரு சுமாரான கணவன்” கதையில் புலம் பெயர்ந்து நகரத்தின் அடுக்குமாடி வீடொன்றிற்கு புதியதாக திருமணம் ஆகி வரும் இரு தம்பதிகளின் அக உலகத்தை அதன் உளவியல் சார்ந்து மேலோட்டமாக ஆராய்ந்திருக்கிறது. நடுத்தர மனபாவங்களை முன்வைத்து வாழ்வின் மீதான மதிப்பீடுகளைக் கூர்மையாக்கும் கதையின் கடைசியில் ரொட்டி சானாய் எடுத்து வரும் அடுக்குமாடியின் கீழுள்ள கடைக்காரனின் பாத்திரத்தின் மூலம் வாழ்வின் புதிய எதார்த்தங்களை படைப்பிற்குள் கொண்டு வருகிறார். ரெ.கா-வின் எழுத்து சிக்கலானவை அல்ல, மொழிநடையும் மிக இயல்பாக எல்லாரையும் (சனரஞ்சக வாசகனையும்) கவரக்கூடியது. ஆனால் வெறும் கவர்ச்சிக்காக எழுதக்கூடியவரும் அல்ல. மிக எளிமையாக மேல்தட்டு – நடுத்தர மக்களின் வாழ்வைப் படைப்பாக்கியவர். (இன்னொரு மூத்த படைப்பாளி ஒருமுறை – ரெ.காவின் எழுத்து மேல்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்) இது எழுத்தாளனின் தேர்வு குறித்தது. அவருடைய “அந்திம காலம்” நாவல் மேல்தட்டு எழுத்து கிடையாது என்பதையும் தனது எழுத்தின் மூலம் காட்டியிருக்கிறார். ஆனால் ஒட்டு மொத்தமாக அவரது படைப்பை வாசிப்பவர்களுக்கு, அவரது எழுத்து மேல்தட்டு மக்களின் அக உலகத்தையும் சிக்கல்களையும் விநியோகம் செய்வதாகவே தோன்றலாம்.

“மல்லியும் மழையும்” கூட ஒரு மேல்தட்டு குடும்பத்தின் வாழ்க்கையையும் அந்தக் குடும்பத்திலுள்ள தாத்தா பேத்தியின் உறவையும் முன்வைத்து, குழந்தையின் அகவியலைத் தொட்டு எழுதியிருக்கிறார். கதையின் ஆரம்பத்தில் வீட்டின் சில வர்ணனைகளிலும், வீட்டில் பணிப்பெண் இருப்பதாகக் கூறும் இடங்களிலும் இது பணக்கார குடும்பம் என அவதானித்துக் கொள்ளலாம். அடுத்ததாக மல்லி கதைபாத்திரமும், தாத்தா கதைபாத்திரமும் உரையாடல்களில் சந்தித்துக் கொள்ளும் இடங்கள்தான் கதையின் மையம். சோர்வு தட்டிய தாத்தாவின் உலகம் தளர்ந்தவையாக வர்ணங்கள் இழக்கத் துவங்கும் இயலாமைகளாகப் புரிந்துகொள்ளப்படும் வேளையில் பேத்தியின் உலகம் வர்ணங்களால் நிரம்பக்கூடியதாக அபாரமான கற்பனைவாதங்களுடன் வளரக்கூடியதாகவும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

மல்லி வர்ணம் தீட்டும் ஓர் ஓவியத்தைப் பற்றி கதையில் விவரிக்கப்படும் இடம் மிக முக்கியமானவை. “ பிள்ளைகள் விளையாட்டுப் பூங்காவின் ஓர் ஊஞ்சல், ஒரு சறுக்குப் பலகை, ரெட்டை ஜடை போட்ட சிறுபெண் சடை பறக்க ஓட்டம், ஒரு பந்து, உதைக்க காலைத் தூக்கிய பையன், ஒரு குருவி, தூரத்தே மலைகளும் சூரியனும்” என்று அந்த ஓவியத்தைப் பற்றி விவரம் இடம் பெறுகிறது. ஒவியம் முழுக்க எல்லாமும் மிகவும் அழகானவை. ஆனந்தமான கொண்டாட்டங்களை முன்னிறுத்தக்கூடிய பொருள்கள், செயல்கள் என குழந்தைகளின் உளவியலை கட்டமைப்பது இந்த அழகியல்தான் எனச் சொல்லப்படுகிறது. அடுத்த வரியில், “ உலகின் கொடுமைகளைக் குழந்தைகளுக்குக் காட்டாமல் விளையாட்டையும் ஆனந்தத்தையும் மட்டுமே வடிக்கட்டி காட்டும் சித்திரங்கள்” என எழுதியிருக்கிறார். இதுவொரு குழந்தை உளவியல் அணுகுமுறை. உலகியல் உக்கிர நடப்பின் எல்லைகளிருந்து குழந்தைகளின் அக அமைப்பை அகற்றும்/கட்டமைக்கும் உத்தி.

எனக்கு மாணவர்கள் எழுதும் “கடற்கரை” குறித்த கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. “கடற்கரைக்குச் சுற்றுலா சென்றோம்” அல்லது “கடற்கரை” எனத் தலைப்பிட்ட கட்டுரையை 20 மாணவர்களுக்கு அளித்திருந்தேன். பிறகு அக்கட்டுரைகளைத் திருத்தும் பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. ஒட்டு மொத்தமாக எல்லாம் மாணவர்களும் கடற்கரை குறித்து ஒரேவிதமான ஒழுங்குகளையே தனக்குள் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் ஏறக்குறைய ஒரேவிதமான கடற்கரையைத்தான் கட்டுரைக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக ஒரு தம்பி ஒரு தங்கை, இருவரும் கடலில் குளிக்கிறார்கள், கண்டிப்பாக அவர்களின் கையில் ஒரு பந்து இருக்கிறது, மேலும் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருப்பர், தூரத்தில் சிலர் நீச்சல் அடித்துக் கொண்டே இருப்பர், எல்லாம் அம்மாக்களும் உணவு பறிமாறிக் கொண்டிருக்கிறார்கள், இந்த அப்பாக்களுக்குக் கடற்கரைக்கு வந்தால் நாளிதழ் படிப்பதைத் தவிர வேறு சுவாரிசயங்கள் இல்லை போல(எல்லாம் அப்பாக்களும் இதைத்தான் செய்கிறார்கள் மாணவர்களின் கட்டுரையில்).

மாணவர்கள் ஏற்கனவே வாசித்த மாதிரி கட்டுரையின் அமைப்பை தன் அகத்தில் வலுவாக ஓர் ஒழுங்காக வைத்துக் கொண்டிருப்பதன் விளைவாக இதை அணுகலாம். அவர்களின் கடற்கரை ஆனந்தங்களின் கொண்டாட்டங்களாக மட்டுமே கட்டமைப்பக்கப்பட்டு போதிக்கவும் படுகிறது. இது எங்கிருந்து மாணவர்களின் அகத்தில் ஒட்ட வைக்கப்படுகிறது என்றால், ஒன்றாம் ஆண்டு இரண்டாம் ஆண்டுகளில் மாணவர்கள் வர்ணம் தீட்டும் எல்லாம் கடற்கரை ஓவியங்களும் இப்படிப்பட்ட சித்திரமாகத்தான் இருக்கிறது. என்னுடைய (1989) ஒன்றாம் பருவத்தில் நான் வர்ணம் தீட்டிய கடற்கரை ஓவியத்தின் ஒழுங்குகள்தான் இப்பொழுதும் (2009) இருந்து வருகிறது. மாணவர்களின் கடற்கரைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே இருக்க வைக்கப்படுகிறதா?

கதையில் மல்லி, மனிதர்களின் உடலுக்கு ஒழுங்குகளைச் சிதைக்கும் வகையிலான வர்ணங்களைத் தீட்டுகிறாள். ஒரு காலுக்கு மஞ்சள் வர்ணமும் இன்னொரு காலுக்கு பளுப்பு வர்ணமும் தீட்டி தாத்தாவின் சோர்ந்துபோன அகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறாள். இதுவரை பார்த்து பழகிப் போன ஒழுங்குகளை அகற்றுவது தடுமாற்றத்தையும் பதற்றத்தையும் கொடுக்கும் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மல்லி சொல்கிறாள், “இது இப்படி இருந்தால்தான் அழகாக இருக்கும் தாத்தா, எல்லாம் ஒரே கலர்லே இருக்கறது நல்லா இல்லெ”. எல்லாவற்றின் மீதும் சோர்வளிக்கக்கூடிய பிம்பங்களின் மீதும் தனது படைப்பாற்றலின் மூலம் மாற்று வர்ணங்களைப் பூசி அதன் ஒழுங்கை உடைத்து அழகைக் காட்டுகிறாள் மல்லி. அது அவளின் தரிசனம், குழந்தைகளின் உளவியலின் மீதான நமது பாரம்பரிய புரிதலை மாற்றிக் காட்டும் பார்வை.

இரண்டாம் பகுதி

ஆனால் கதை நெடுக அதீதமான குழந்தையின் மொழி, எல்லாம் புத்திசாலித்தனங்களையும் ஆழமான சொல்லாடல்களையும் விவாதங்களையும் குழந்தைகள் பேசுவது போலவே சித்தரிப்பது, அவர்களின் எளிமையை மீறும் ஒரு வன்முறையாகவும் கருதக்கூடும். மழையின் வர்ணத்தை உணர்த்துவதன் மூலம் தாத்தாவின் உலகம் ஒரு மானுட உச்சத்தை எட்டுவதாக எழுதப்பட்டிருக்கிறது. தாத்தாவின் உள்ளத்தில் தோன்றும் உளக்குரலாகத் துவங்கும் கதை கடைசியில் அவருக்குள்ளே புதிய புரிதலுடன் சரிகிறது.

பல இடங்களில் கதையில் வரும் தாத்தா ஓர் இலக்கிய வாசகர் அல்லது எழுத்தாளர் எனப் புரிந்துக்கொள்ளக்கூடிய சாத்தியங்களின் மூலம் காட்டப்பட்டுருக்கிறார். காலச்சுவடு, சு.ரா, சிறுகதை என மீண்டும் அறம்/இலக்கியம் சார்ந்த கூறுகள். (வைரமுத்துவின் வரிகளைக் காட்டுவதன் மூலம், மழை குறித்து வைரமுத்து மட்டுமே எழுத முடியும் போல, அல்லது மழையைப் பார்த்தால் வைரமுத்துவின் வரிகள் மட்டுமே ஞாபகத்திற்கு வரும் போல என்கிற சலிப்பு உண்டாகுகிறது- இது என் பிரச்சனை)

இன்னொரு இடத்தில் “சிறுகதையை எழுதிவிட்டால், ஓர் எழுத்தாளன் தாங்கள் அதை வாசகனுக்கு விளக்க வேண்டியதில்லை, என்ற விதியைத் தாங்களாக வகுத்துக் கொண்டு அவர்களாக வாசகர்களிடமிருந்து ஒளிந்து வாழ முடிகிறது” எனக் கதையாசிரியரின் வரி முன்னுக்குப் பின் முரணாக வந்து விழுகிறது. இலக்கியத்தில் பாராம்பரியமான ஒழுங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை முன்னிறுத்தும் வகையைச் சேர்ந்த வரிகள் இவை.

அப்படியென்றால் இனி கதையை எழுதிவிட்டு, அந்தக் கதையைப் பற்றி வாசகனிடன் பக்கம் பக்கமாக விளக்கமளித்து வாசகனின் சுதந்திரத்திற்குள் தலையிட வேண்டுமா? அல்லது அவனது வாசக சுதந்திரத்தை அபக்கறிக்க வேண்டுமா? ஒரு புறப்பொருளையே தனது பேத்தி ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட வர்ணங்களில் தரிசிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் கதையில் வரும் தாத்தா, ஒரு படைப்பை, இலக்கியத்தை, ஏன் இவ்வளவு கராரான ஒழுங்குகளுடன் பரிந்துரை செய்கிறார் எனும் கேள்வி எழுகிறது.

2005 என நினைக்கிறேன், தனது “ஊசி இலை மரம்” சிறுகதை தொகுப்பை வெளியீடு செய்ய சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வந்த எழுத்தாளர் ரெ.கா, “ஒரு கதை அதை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் பல புரிதல்களை அல்லது எல்லைகளைத் தொடும் முயற்சிகளைக் கொடுக்க வேண்டும், அதுதான் சிறுகதையின் வெற்றி” என தனது விமர்சன உரையில் சொல்லியிருந்தார். அது அப்பொழுது அழுத்தமாக என் மனதில் பதிந்திருந்தது. இன்றும் அப்படியொரு (முன்பைவிட) மதிப்பீடுகள்தான் பற்பல வாசிப்புகளுக்குப் பிறகும் எனக்குள் இருக்கிறது. இது மாறுப்படலாம்.

இதைத் தவிர்த்து, கதையின் மற்றொரு பகுதிகளை, குழந்தைகளின் உலகையும் அதன் அதிசயத்தக்க வர்ணங்களையும் தரிசிக்கும் அழகியலான களமாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இது எனது விமர்சனம் மட்டுமே. –தொடரும்-

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, October 30, 2009

மலேசிய குட்டி முதலாளித்துவமும் அதிகாரத்துவத்தின் இழிக்குரலும்

சில வருடங்களுக்கு முன்னதாகவே தமிழர்கள் சுயத்தொழில், வியாபாரம், சிறுத்தொழில் என பொருளாதார ரீதியில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும். சிறு தொழிலுக்கான பயிற்சிப் பட்டறைகள், வழிக்காட்டுதல்கள் ஆங்காங்கே நடந்து வருவது அதற்கு அரசியல் தலைவர்கள் தலைமை தாங்குவதையும் நாளேடுகளில் பார்த்திருக்கக்கூடும்.

தமிழர்களை உற்பத்தியாளர்களாகவும் முதலாளிகளாகவும் மாற்றியமைக்கும் முயற்சிகள் காலணித்துவ சிந்தனைக்கு எதிர்விளைவாகவே இதனைக் காண முடியும் மேலும் சிறு சிறு சுரண்டல்களுக்கு ஆளான ஒரு சமூகம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கட்டமைத்துக் கொள்ள வியாபாரமும் தொழிலும் மட்டுமே ஏற்கத்தக்க களமாகும் என்கிற ரீதியில் அதிகமான தமிழர்கள் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருந்தனர். சமீப காலமாக சிறுத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது இன்னொரு பார்வையில் நல்ல வளர்ச்சியும் ஆரோக்கியமும்கூட.

ஆனால் மார்க்சிய சிந்தனைப்படி இது ஒருவகை அரசியலிலிருந்து விடுப்படுதல், அரசியலுக்கு அப்பால் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துதல் என்கிற வகையில் இந்த வளர்ச்சி முன்வைக்கப்பட்டாலும், பொதுபுத்தி சார்ந்து பார்த்தால், மீண்டும் ஒரு சில குட்டி முதலாளிகளே உருவாகியிருக்கிறார்கள் எனப்படுகிறது. குழுவாதத்தின் புரட்சி குரல்களுக்கு நடுவில் சிக்கி, கரைந்துபோன அல்லது வலுவிழந்துபோன இந்தப் பார்வை, குட்டி முதலாளித்துவம் வளர்ந்து, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் பேரமைப்புகளாக மலேசியாவில் வளர்ந்து விட்டதைக் கவனிக்க மறந்துவிட்டது. இப்பபொழுது அதன் விளைவுகள் நாடலவிளான குற்றங்களாகக் கொண்டு வரப்படுகின்றன.

பொருளீயலை மேம்படுத்த வேலை உலகத்தில் சிக்கிக் கிடக்கும் குடும்பம் அல்லது பெரும் தொழில்கள் செய்யும் பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் பணிப்பெண்களாக இருப்பது இந்தோ, இந்தியா, பங்களாடேஸ் பெண்கள்தான். சமீப காலமாக இந்த மாதிரி உழைக்கும் பிரதேசத்து பணியாளர்களை வன்கொடுமைக்கு உட்படுத்துதல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், பட்டினி போடுதல் என்ற குற்றங்கள் குட்டி முதலாளிமார்களாலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கவையாகும்.

அண்மையில் கிள்ளான் இந்திய தம்பதியர்களான தன் எஜமானர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளான இந்தோ பணிப்பெண் மருத்துவனையில் மரணமடைந்த செய்தி இந்திய குட்டி முதலாளிகளின் கொடுமைகளை மேலும் உக்கிரமாகக் காட்டியுள்ளது. வீட்டுக் கழிவறையில் வைத்து பூட்டுதல், சுடு நீரை உடலில் ஊற்றுதல், மொட்டையடித்து அவமானப்படுத்துதல், சூடு வைத்தல் என்று இந்த அதிகார மேல்தட்டு சக்திகளின் கொடுமைகளுக்கு, உழைக்க வந்த அன்னிய தேசத்து அப்பாவிகள் பலியாக வேண்டுமா? யார் வளர்த்துவிட்டது இந்த மனோபாவங்களை இந்தப் பணக்கார முதலாளிகளிடம்?


இயலாமை காரணமாகப் பிழைக்க வந்த தொழிலாளிகளிடம் நேர்மையாக நடந்து கொண்டாலே போதுமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைக் கொடுத்தாலே போதும், ஆனால் அவர்கள் மேலும் மேலும் இந்த மாதிரி மனிதநேயம் சிதைந்த குட்டி முதலாளிகளிடம் சிக்கி, சுரண்டப்படுவதும் கொடுமைப்படுத்தப்படுவதும் என சீரழிவது வண்மையானது. முதலாளிகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது வெளிநாட்டவர்களை இங்கே உழைக்கக் கொண்டுவரும் ஏஜேண்டுகள், அவர்களின் உயிர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராது, அவர்களின் உழைப்பு இழிவுப்படுத்தப்படாது, சுரண்டப்படாது என்கிற உத்திரவாதம் அளிக்கப்பட்ட பின்பே முதலாளிகளிடம் அவர்களைக் கொடுக்க வேண்டும் என்ற உறுதி எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு முன்பும் பல இந்திய உணவகங்களிலும் இதே போன்ற கொடுமைகள்தான் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. பட்டினி கொடுமையால் உணவகங்களில், அதிகமான நேரங்கள் வேலை வாங்கப்படுவதும், உறக்கம் இன்றி உழைப்பதும் என்று மிகப் பயங்கரமாகச் சுரண்டப்பட்டார்கள். இந்திய தமிழர்களை மலேசிய தமிழர்களே இப்படிக் கொடுமைப்படுத்தி அதிகாரம் செலுத்துவது இன்னொரு காலணித்துவ மனோபாவங்களையே காட்டுகிறது.

மேலும் ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொழிலாளியான ஒருவரை மலேசிய இந்திய முதலாளியும் அவரின் குடும்பமும் உடல் சித்ரவதை செய்து, அவரைக் கொன்று குரூண் செம்பனை தோட்டத்தில் தூக்கி வீசினார்கள். முதலாளிமார்களின் பயங்கரவாதத்தைக் காட்டும் இச்செயலை ஒட்டு மொத்த மலேசிய சமூகமே மறந்து போனதை ஞாபகப்படுத்துகிறேன். நாளிதழில் அவர் மலேசியாவிற்கு வேலைக்கு வந்த புகைப்படத்தையும், கொடுமைக்குள்ளான சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரின் ஆரோக்கியமும் சக்திகளும் முழுமையாக இந்த அதிகார பேய்களால் சீரழிக்கப்பட்டதை ஒட்டு மொத்த மலேசியாவும் பார்த்து, இந்தச் செய்தி அவ்வளவு பரபரப்பாகியும், மீண்டும் இதே போன்ற கொடுமைகள் இந்த முதலாளி வர்க்கத்தால் நடத்தப்படுவதென்றால், இந்த முதலாளிமார்களுக்கு என்ன உணர்வே இல்லையா?

இந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான கொடுமைகள் குறித்து வெகுமக்களின் உணர்வுகள் எப்படிப் பதிவாகிறது எனவும் தெரியவில்லை, காரணம் இன்றைய சூழலில் நமது பலரின் வீட்டில் தரையைத் துடைத்துக் கொண்டும் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டும் தனது குடும்பங்களை விட்டுப் பிரிந்து வேலை செய்து கொண்டிருப்பது இந்தப் இந்தோ பணிப்பெண்கள்தான். இவர்கள் என்ன இழிப் பிறவிகளாக? இப்படி நடத்தப்பட நமக்கு யார் உரிமையைக் கொடுத்தது? எனக்குத் தெரிந்த ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவரின் அம்மா வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு அவர் வீட்டிலிருக்கும் இந்தோ பணிப்பெண் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அதன் ஒரு வரி மனதை அதிகமாகவே காயப்படுத்தியது.

“இந்த நாய்ங்க பொழைக்க வந்துட்டு என்னா திமுறு, சும்மா சும்மா பாத்ரூம் கழுவ வைக்காதீங்கனு என்கிட்டயே சண்டெ போடுது”

இதுதான் ஒட்டுமொத்த குட்டி முதலாளி வர்க்கத்தின் மொழியா? எப்பொழுது அந்த அம்மா அத்தகையதொரு சொல்லாடல்களை உழைக்கும் வர்க்கத்திருக்கு எதிராகப் பிரயோகம் செய்யத் துவங்கினார்? குட்டி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு குடும்ப உறுப்பினர்களையும் பாதித்திருக்கலாம் அல்லது நமது காலணித்துவ மனோபாவமாகக்கூட இருக்கலாம்.

குற்றத்திற்கான தண்டனைகளை பயங்கரமாகப் பிரகடனப்படுத்துவதிலும், குற்றத்திற்க்கான தண்டனைகளை விளம்பரப்படுத்தி மக்களைப் பயமுறுத்தல் செய்வதையும்தான் சட்டமும் ஊடகங்களும் செய்கின்றன எனத் தோன்றுகிறது. குற்றம் நிகழ்ந்ததன் அரசியல் – சமூக பின்னனிகள், எப்படி இக்குற்றம் உக்கிரமடையாமல் இருக்க பரிந்துரைகளை உற்பத்தி செய்வது என ஆழந்து சிந்திக்காத ஒரு சூழலா இங்கு உள்ளது? கேள்விக்குறிகள் தேங்க தேங்க குற்றங்கள் மறக்கப்பட்டு மீண்டும் குட்டி முதலாளித்துவம் வளரவே செய்யும் உயிர்களையும் பறிக்கும் அளவிற்கு.
அண்மையில் மலேசிய எழுத்தாளர் மீனாமுத்து எழுதிய சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இந்தோ பணிப்பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளைக் காட்டியிருப்பார். இறுதியில் அந்தப் பெண் வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவாள். ஆனால் முதலாளியால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாதவள், வீட்டின் தண்ணீர் தொட்டியில் அவளது மாத விடாய் நம்கினை அதன் குழாயில் போட்டு அடைத்துவிட்டு வந்துவிடுவதாகக் கதை முடிவடையும். இதுதான் கொடுமைகளுக்கு எதிரான செயல்.

குறிப்பு: ஒரு சிலர் இவர்களை நன்முறையில் வழிநடத்தி அன்பாகப் பழகுவதும் இங்கு உண்டு. அதே சமயம் பெரும்பாலான சூழலில் இந்தக் கொடுமைகள் நடந்துகொண்டே இருக்க, சக உயிரைத் துன்புறுத்தும் அளவிற்கு நாம் என்ன அவ்வளவு மோசமானவர்களாகிவிட்டோமா? ஒட்டு மொத்த சமூகமே இந்தக் குட்டி முதலாளிகளின் போக்கு குறித்து கண்டனத்தை எழுப்ப வேண்டும். இந்தியாவிலிருந்து மலேசிய வரும் தமிழர்களை (ஒரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படிப் பிழைக்க வந்தவர்கள்தான் என மறந்து) கொடுமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது சர்வதேச அளவில் மலேசிய தமிழர்கள் குறித்து பலவீனமான மதிப்பீடுகளைக் கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இது வலுவடைவதற்கு முன் நம் குரல்கள் முதலில் தமிழர்கள் மத்தியில் உருவாகி வரும் இந்தக் குட்டி முதலாளித்துவத்தை உடைக்க வேண்டும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா