Friday, January 16, 2009

சிறுகதை - ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை

ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை'
கே.பாலமுருகன்

1
மதிய வெயில் உடைந்து சிதறியது. சன்னலின் வழி ஒழுகிய வெளிச்சத்தைச் சுவாசித்துக் கொண்டிருந்தான். எதிர்வீட்டு சன்னலில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்கூட்டத்தின் நெளிவு கண்களைக் கூசியது. கைகளின் வழியாக வழிந்தோடிய வியர்வை சுருள் தரையில் வீழ்ந்தது.

2
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டர் தாட்கள் சலசலத்துக் கொண்டிருந்தன.உத்தரத்தை அண்ணாந்தபடி கால்கள் இரண்டையும் அகட்டிக் கொண்டு சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தான்.
வெளியே முணுமுணுத்துக் கொண்டிருந்த இருளின் அடர்த்தி அதிகரிக்கத் துவங்கின.வலது மூலையில் வைக்கப்பட்டிருந்த மேசையில் பாதி எழுதப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்த கதை மெல்லிய அலறலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

3
விடிந்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கும்பள்ளி மாணவர்கள் மெல்ல நடக்கத் துவங்கினர்.
அவன் எழுந்து சன்னலில் அமர்ந்துகொண்டு, வேடிக்கைக்குத் தயாரானான்.ஊரும் கூட்டத்தின் நடுவே யாரோ சில மாணவர்கள் மட்டும் அவனைப் பார்த்துவிட்டு நகர்ந்தனர்.
சன்னல் கம்பிகளின் இடுக்கில் முகத்தின் சதைகளை இறுக்கிக் கொண்டு காலை நகர்வுகளை வெறித்துக் கொண்டிருந்தான்.

4
சன்னல் கம்பிகளில் கைவிரல்களை அலையவிட்டுக் கொண்டிருந்தான்.இறுக்கம் அறை முழுவதும் பரவியபடியே இருந்தது.
சுவரில் சிரித்தபடியே இருந்த அவனது 5 வயது புகைப்படத்தில் எறும்புகள் மிகக் குறைவான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன.
காற்று இல்லாத சூன்யம் அவனையும் அறையையும் விழுங்கிக் கொண்டிருந்தது.

5
கடிகாரம் செயலிழந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தன.நகராத கடிகாரத்தின் ஊடே இறுகிப் போன நாட்களைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.
அறைக் கதவில் சிறு இடைவெளி விட்டுப் போயிருந்தது.
வெளி உலகத்தின் சப்தம் மெல்ல உள்நுழையத் துவங்கின.
அறைக்கு வெளியிலிருந்து சூன்ய ஒலிகள் வடிந்து கொண்டே அறைக்குள் நுழைந்த கால அடையாளத்தைக் கட்டிலில் சாய்ந்து கொண்டே மறக்க முயன்ற¡ன்.கைகள் நீண்டன. கால்கள் சுருண்டன. தலை கரைந்து மறைந்தது. உடல் அந்தரத்தில் தவழத் துவங்கின.
நிஜ உலகின் கவனப் பிடியிலிருந்து தப்பி, அவனுடைய அறை மாய உலகத்தில் சிக்கிக் கொள்ள ஆரம்பித்தது.

7
மதிய வெயில் மீண்டும் அறையை இரண்டாகப் பிளந்து கட்டியது.வெயிலின் ஒலி கீற்றினூடே யாரோ சிலர் அறைக்குள் நுழைய எத்தனிப்பது போன்ற பிரமை தட்டியது.
யாராக இருக்கும்?
உடலின் நேர்கோடு விலகி, கோணியவாறே அறைக்குள்ளே நடந்து கொண்டிருந்தான்.பித்துநிலை அதிகரிக்க, உச்சத்தில் கொதித்தது மதிய வெயிலின் உக்கிரம்.

8
உடல் முழுக்க காயங்கள்.
நேற்றிரவு நகங்களால் வயிற்றுப் பகுதியையும் முதுகையும் கிழித்துக் கொண்டு படுத்தவன் காலையில் எழுந்ததும், தொடையைக் கிழித்து, அந்த இரத்தத்தைச் சுவரில் கீறினான்.
நகங்கள் உடைந்து சிதறின.
மீதமிருந்த உடல் பகுதிகளை என்ன செய்ய நினைத்தானோ, அதற்குள்ளாக சூழலைப் பற்றிய தெளிவு மங்கி, மயங்கினான்.

9
சுவரில் சலசலத்துக் கொண்டிருந்த காலண்டரில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது.கட்டிலிலிருந்து சரிந்த போர்வை, தரையில் விரிந்து கிடந்தது.
மாலை வெயில் அடங்கிக் கொண்டிருந்த சமயம் இருள் அறைக்கு அப்பாலிலிருந்து பரவிக் கொண்டிருந்தது.

10
வெளியுலக இறுக்கம் அவிழ்ந்து சொற்கள் சொட்டு சொட்டாக அறைக்குள் புகுந்து கொண்டிருந்தன.
அவன் காதுகளைப் பொத்திக் கொண்டு, கட்டிலுக்கடியில் நுழைந்து பார்த்தான்.சன்னலின் வழியாக வெளியேற முயன்றான்.
கயிற்றை இறுக்கி உற்றத்தில் தொங்கவிட்டான்.
உடல் செயலிழந்து தரையில் வீழ்ந்து துடித்தது.

12
அந்த எழுத்தாளன் எழுதியிருந்த முடிக்காத அந்தக் கதையின் தலைப்பு :‘ஓர் எழுத்தாளனின் கடைசி சில நாட்களுக்கு முன்பான அவனது அறை'
அந்தக் கதையில் இருந்த கடைசி வரி :
எழுத்தாளனின் மாய உடல் அகற்றப்பட்டு சரியாக ஒரு நாள் ஆகியிருந்தது.

நன்றி
உயிரோசை வார இதழ்

1 comment:

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்