Monday, June 1, 2009

தேவதைகளைத் துரட்டியடித்த பொழுதுகள்

எப்பொழுது என் தேவதைகளைத்
துரட்டியடித்திருப்பேன்?





அம்மா சோறு ஊட்டும்போதெல்லாம்
நிலவிலிருந்து உருகி வெளிவந்த
வெள்ளைத் தேவதை
எப்பொழுது என் உலகிலிருந்து
காணாமல் போயிருப்பாள்?
அம்மா இல்லாமல்
சொந்தமாக சாப்பிட
அடம் பிடித்த ஒரு நாளிலா?



அக்காவின் கைப்பிடித்து
கண்ணு கடை சாலையில்
நடந்தபோதெல்லாம்
எனக்கருகில் நடந்து வந்த
மோகினி தேவதை
எப்பொழுது தொலைந்து போயிருப்பாள்?
அக்கா வேண்டாம் என
தனியாக நடக்கப் பழகிய ஒரு நாளிலா?


அப்பாவுடன் மோட்டார்
சவாரி செய்த பொழுதுகளிலெல்லாம்
என்னைப் பின் தொடர்ந்த
காட்டுத் தேவதைகள் எப்பொழுது ஓடிப் போயிருப்பார்கள்?
அப்பா எனக்கென்று தனி சவாரிக்காக
ஒரு சைக்கிள் வாங்கித் தந்த ஒரு நாளிலா?


நீண்ட நாட்களுக்குப் பிறகு
தனிமை எனக்குள்ளிருந்து
உதிரும் போதெல்லாம்
நான் முன்பு தொலைத்த தேவதைகளெல்லாம்
இப்பொழுது கணக்கிறார்கள்
என் மீது சிறுக சிறுக சுமத்தப்பட்ட
தனிமைகளென.


கே.பாலமுருகன்

6 comments:

மாதவராஜ் said...

முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்.
அருபங்களாய் தொலைந்தவற்றை மீட்டெடுக்க முயலும் வரிகளாய் கவிதை இருக்கிறது. வாழ்த்துக்கள்.இனி அடிக்கடி வருவேன்.

மேடேஸ்வரன் said...

bala...amazing

சென்ஷி said...

அழகான கவிதை பாலமுருகன் ;-)

தேவதைகளை மீட்டெடுக்கும் அற்புத பொழுதுகளையும் சற்று எழுதுங்கள்!

தென்னவன். said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

நன்றி
தென்னவன் ராமலிங்கம்

கே.பாலமுருகன் said...

நன்றி தென்னவன் - மாதவராஜ் - மேடேஸ்வரன் - சென்ஷி.

சென்ஷி:
தேவதைகளை நாம்தான் தொலைத்திருக்கிறோம் போல. தேவதைகள் தொலையவில்லை. எழுதலாம் கண்டிப்பாக.

Unknown said...

nice poem..... valthekkel