Thursday, September 17, 2009

சமாட் சைட் மலாய் கவிதைகள் - தமிழில்: கே.பாலமுருகன்


1. அந்திம விருந்தாளி

ஓர் அந்திம விருந்தாளியாக வந்திருக்கிறோம்
பொழுதுகள் தீர்ந்ததும் திரும்ப வேண்டியதுதான்
வெறுங்கையுடன் வந்துவிட்டோம்
புறப்படும்போது கைகளில் பாவங்களையும்
தீரா ஆசைகளையும் சுமந்து கொள்வோம்

மீண்டும் திரும்புவதற்கான வழிகள் அறிந்து
வந்திருந்த அந்திம விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
பக்தியையும் இன்பத்தையும் கொண்டு செல்லலாம்
வழி மறந்து திசை தொலைத்த விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
சுமையாக வந்து சேரலாம்

ஒருவேளை
அந்திம விருந்தாளி
மனிதர்களைப் பார்த்துவிட்டால்
இருப்பிடத்தை மறந்து
பதவியையும் இனத்தையும்
கொண்டாடத் துவங்குகிறான்

ஓர் உயிர் ஓர் அணுவாக
வந்திருக்கிறோம்
அந்திம விருந்தாளியாக
விடைப்பெறும் கணத்தில்
பக்தியைக் கொண்டு
செல்லலாம்.

2. நூல் நிலையத்தின் உள்ளே

நூல் நிலையத்தின் உள்ளே
குறுகி போயிருந்த என்னைப் பார்த்து
ஒரு முதியவர் கூறினார் :
“கண்களை மூடிக் கொண்டு
புத்தகங்களைத் திறப்பதில்
அர்த்தமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து பார்”

நாளையலிருந்து
நான் நூல் நிலையத்தில் குறுகலாக
இருக்கப் இல்லை
அந்த முதியவரைப் பார்த்து
வெகுநாளாகியும்

இப்பொழுதுதெல்லாம்
நூல் நிலையத்தில்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
திறந்த கண்களுடன்
அந்த முதியவர்
இல்லாத நாற்காலியின்
வெறுமையைப் பார்த்தவாறே.

3. அலை

என் கால்களை
ஒருமுறை தொட்டுவிட்டு
போகும் அலையை
நான் மீண்டும்
அறிவதில்லை

4. வரம்

தேவையான அத்துனையும்
வரமளிக்கப்பட்டும்
அது கிடைக்காமலே
போவதுதான்
கடவுளின் மிக நெருக்கடியான
அன்பளிப்பு

சமாட் சைட் பற்றி

1986களில் பிரபல மலேசிய இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அப்துல் சமாட் பின் முகமாட் சைட் (சமாட் சைட்). 9 ஏப்ரல் 1935-இல் கம்போங் பலீம்பில் பிறந்த சமாட் சைட் இதுவரை இலக்கியத்தில் பல ஆசிய விருதுகளைப் பெற்றுள்ளார். சலீனா, இரவு வானம், காலை மழை என்று பல புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தீவுக்கு முன்பான நினைவுகள்’ என்கிற இவருடைய நாடகம் மலேசிய மலாய் நாடகத் துறையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. 2003-இல் இவருடைய கவிதைகள் “சுவரிலிருந்து வந்த குரல்கள்” எனும் தலைப்பில் பிரசுரமாகி மலேசிய மக்களின் கவனத்தைப் பெற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: அம்ருதா இதழ்
bala_barathi@hotmail.com

3 comments:

Tamilvanan said...

கண்களை மூடிக் கொண்டு
புத்தகங்களைத் திறப்பதில்
அர்த்தமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து பார்”
ஒவோருவர் மனதிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி கருத்திற்கு தமிழ்வாணன்

Unknown said...

தேவையான அத்துனையும்
வரமளிக்கப்பட்டும்
அது கிடைக்காமலே
போவதுதான்
கடவுளின் மிக நெருக்கடியான
அன்பளிப்பு