Friday, April 16, 2010

கவிதை: மாய்த்தலும் மேய்த்தலும்

1
ஒரு விசுவாசியின்
இறுதி வழிப்படுதலோடு
எல்லாம் அடிமைத்தனங்களும்
முழுமையடைகின்றன.

2
ஒரு அடிமையை
உற்பத்திக்க
முதலில் கற்றுத்தர வேண்டியது
விசுவாசத்தை.

3
தனது கடைசி
நாவையும் பிரயோகித்து
எல்லாவற்றையும்
வழித்துவிட்ட விசுவாசம்
துளையிட்டுத் தேடத்துவங்கியது
முதலாளியின் காலடியையும்
அக்குளையும்.

4
அரசியல் கட்சிகளின்
விசுவாசம்
மிகப்பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன
ஏழைகளும் தீபாவளி பொட்டலங்களும்
விருந்துபரிப்பும் இருக்கும்வரை.

5
துடைத்துவிட்டப் பிறகு
தூக்கியெறியப்பட்டன
விசுவாசமும் நேர்மையும்.

6
தலைவர்களின் மலத்தில்
மொய்க்கின்றன
நன்றியுணர்வும் சமூக உணர்வும்.
தண்ணீர் சுழற்றப்படாத
கழிவறைத் தொட்டியின் வெண்மையில்
தலைவாறும் சில அடிமைகளின்
முகங்கள்.

7
மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிட்டது போல
தேர்தலுக்கான பெயர் பட்டியல்.

8
தலைவருக்காக
சில வேண்டுதல்கள்
நிறைவேற்றப்பட்டன.
கடவுள் மொட்டையடித்து
மயிலிறகைத் தந்தருளினார்
எண்ணெய் தடவி.

9
மாய்த்தலுக்குப் பிறகும்
விழிக்கின்றன
மேடைவாதிகளின் எச்சில் துளிகள்.

10
சமூகம்
சமூகம்
சமூக
சமூ

பை
ப்பை
குப்பை.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா

4 comments:

ko.punniavan said...

விசுவாசம் அடிமைத்தனத்தின் இன்னொரு வடிவம்.அங்கிருந்துதான் அடிமைத்தனம் கரு கொள்கிறது. அல்லது விசுவாசம் போர்த்தியிருக்கின்ற போர்வையை பைய அகற்றினால் அடைமைத்தனத்தைக் கண்டிப்பாய் அடையாளம் காணமுடியும். நம் சமூகத்தில் இந்த மாதிரியான பாத்திரங்களைக் காண்பது மிக எளிது.அடிமையாக பல நூறு ஆண்டுகள் அடிவருடியாக வாழ்ந்து பழகிப்போய்விட்ட சமூக குணத்தை மாற்றுவது அத்துணை எளிதல்ல என்று தோன்றுகிறது. அதனைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். குறியீடுகள் உங்களுக்கு நன்றாகவே இயங்குகிறது.

Tamilvanan said...

//மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிட்டது போல
தேர்தலுக்கான பெயர் பட்டியல்.//

//தலைவருக்காக
சில வேண்டுதல்கள்
நிறைவேற்றப்பட்டன.//

//தலைவர்களின் மலத்தில்
மொய்க்கின்றன
நன்றியுணர்வும் சமூக உணர்வும்.//

நிக‌ழ் கால‌த்திற்கேற்ற‌ ச‌ரியான‌ ச‌வுக்க‌டி க‌விதை.
திடீர் வேட்பாள‌ர்க‌ள் வாசிக்க‌ வேண்டிய‌ க‌விதை.

கே.பாலமுருகன் said...

@கோ.புண்ணியவான்

கவிதை குறித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. ஆழமான பார்வை.

@தமிழ்வாணன்
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

பிரான்சிஸ் சைமன் said...

நீங்க சொன்ன கவிதை நம்ம ஊலு சிலங்கூர் மக்களுக்கு பொருந்துமான்னு
நாளக்கு தெரியும்....

பிரான்சி சைமன்