Friday, November 12, 2010

வல்லினம்- புதிய படைப்பாளிகளை அடையாளம்காணல்

மேம்போக்கான பொழுதுபோக்கு இலக்கியங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்திலேயே அதற்கு முற்றிலும் முரணான வாழ்வின் கவனிக்கத்தக்க தருணங்களையும் சிக்கல்களையும், தீவிரமாய் அதைப் படைப்பாக்கி வெளிப்படுத்தும் நல்ல இலக்கியங்களும் பொதுவான கவனத்தைப் பெறாவிட்டாலும் இயங்கிக் கொண்டேதான் இருக்கும். இது சமக்காலத்தின் இலக்கிய தர்மம் என்பது போலவே தோன்றுகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களைக் கொண்டு போய் வாசகர்களிடம் சேர்ப்பது குறித்தான செயல்பாடுகளின் மீதே இப்போதைக்கு ஒட்டுமொத்த கவனம் திரும்ப வேண்டும்.

ஆரம்பத்தில் அநங்கம் இதழ் தொடங்கிய காலக்கட்டம் முதல் ஒவ்வொரு இதழிலும் ஒரு அறிமுக எழுத்தாளரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தோம். ஆனால் அவர்கள் அந்த அறிமுகத்திற்குப் பிறகு காணாமல் போவதுதான் அறிமுகங்கள் அளிக்கும் விந்தை போல. முனிஷ்வரன், தயாஜி தவிர்த்து மற்றவர்கள் எழுதுவதில்தான் தன்னை விலக்கிக் கொண்டார்களா அல்லது எழுதாமல் மௌனத்தின் மூலம் தன்னைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறார்களா எனபதும் கேள்விக்குறி. அறிமுகங்களை விட அவர்களிடம் தரமான இலக்கியத்தைக் கொண்டு போய் சேர்த்து முதலில் அவர்களிடம் சில திறப்புகளை ஏற்படுத்த முயல்வதே சிறந்த வழி. பிறகு அவர்களுக்கான இடத்தைத் தேடிக் கண்டடையவும் வாய்ப்புண்டு.

தற்சமயம் வல்லினம் இளம் படைப்பாளிகளையும் வாசகர்களையும் அடையாளம் காண்பதில் சாத்தியமான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. மேம்போக்கான இலக்கியங்கள் அச்சு இதழில் மட்டும் பல நிலையிலான வாசகர்களை எட்டி வரும் வேளையில் இணைய வசதியைப் பயன்படுத்தி நல்ல இலக்கியங்கள் உலக தமிழர்களுடைய வாசிப்பின் மையமாக ஆகிவருவதை வல்லினம் மூலம் உணரலாம். மலேசியாவில் எழுதி வரும் தத்துவப்பார்வை, அரசியல் உணர்வு, வாழ்வின் அழகியல், காத்திரமான மதிப்பீடுகள் கொண்ட பல முக்கியமான படைப்பாளிகள் வல்லினத்தில் எழுதி வருகிறார்கள். மலேசிய இலக்கியத்தை நோக்கி விரியும் வாசகப் பார்வை பொழுது போக்கு இலக்கியங்களின் மீது படிந்துவிடுவதில் எவ்வளவு அபாயம் இருக்கிறதோ அதே போல திவீர இலக்கியத்தின் மீது கவனம் குவிய வாய்ப்புகளும் இப்பொழுது தாராளமாக இருக்கின்றன. வல்லினம், அநங்கம், மௌனம் மேலும் வல்லினம் இணையப்பக்கம் போன்றவற்றின் மூலம் மலேசிய இலக்கியத்தின் இன்னொரு முகத்தை வாசகர்கள் கண்டறியலாம்.

நவீன இலக்கியம் மீதான தேடல் ஒரு வாசகனை உலக இலக்கியத்தின் ஆழ்ந்த ஆத்மாவிற்குள் போய் நிறுத்தும் என்பதற்கு இங்குள்ள பல முக்கியமான வாசகர்கள் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்களின் தொடர் வாசிப்பு இப்பொழுது இலக்கியம் படைத்து வரும் அனைவரின் படைப்பின் மீதும் தீவிரமான பல அம்சங்களைக் கூர்மையாகக் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் விழக்கூடும். அது ஒருவேளை இங்குப் படைக்கப்படும் இலக்கியத்தின் தரம் என்கிற நம்பிக்கையை அசைக்கக்கூடும். ஆகையால் மிகவும் சொற்பமாக(நான் அறிந்தவரையில்) நல்ல வாசிப்பில் தன்னை ஈடுப்படுத்தியிருக்கும் இந்த மாதிரியான வாசகர்களின் தாக்கம் மாணவர்களிடமும் உருவாக வேண்டும் என்பதற்காகவே வல்லினம் தனது “2010 சிறப்பிதழை” தொகுத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இலவசமாக அளித்துள்ளது. மாணவர்கள் நவீன இலக்கியத்தின் மீது ஆழ்ந்த வாசிப்பை ஏற்படுத்திக் கொண்டால் அடுத்த தலைமுறையில் இன்னும் கூடுதலான பின்புலத்துடன் மலேசியாவில் படைப்புகள் எழுதப்படும் வாய்ப்புண்டு. இந்த நம்பிக்கையை விரிவுப்படுத்தும் வகையில் புதிய இளம் படைப்பாளிகளுக்கு வல்லினம் வாய்ப்பை அளிக்கிறது. ஆகையால் எழுத விருப்பம் உடையவர்கள், தங்களின் படைப்புகளை பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஆலோசிக்கப்படும். வெளிப்படையான விவாதத்திற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் எப்பொழுதும் இடம் உண்டு. முதலில் ஆழமான தேடல் நிரம்பிய வாசிப்பே நம்மை செம்மைப்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது.

vallinam: editor@vallinam.com.my

ananggam: bala_barathi@hotmail.com

கே.பாலமுருகன், மலேசியா

2 comments:

தயாஜி said...

நன்றி அண்ணா........

தேவன் மாயம் said...

அன்பின் பாலமுருகன்! உங்கள் குழு முயற்சிகள் நிச்சயம் நல்ல பலன் தரும். நல்ல வாசிப்புக்கு நேரமும் அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவுள்ள வேலைப்பளு மிக்க மலேயாவில் இது போன்ற முயற்சிகள் மிகக் கடினமே!