Wednesday, April 13, 2011

கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்-2

1. வித்தைக்குப் பிறகும்

வித்தைக்குத் தயாராகும்
சிறுமிக்குப் பிறர் வியக்கக்கூடிய
அதிசயம் அல்லது கோமாளித்தனம் தேவைப்பட்டது.

நாக்கைச் சுழித்து
கருவிழி இரண்டையும்
இடம் மாற்றி அசைத்து அசைத்து
முன்பல்வரிசையை உதடுக்கு வெளியில் வைத்து
சத்தமாகச் சிரிப்பதன் மூலம்
ஒரு வித்தையைக் காட்டிவிட்ட மகிழ்ச்சி
சிறுமிக்கு.


குரங்கைப் போல
தாவிக்குதித்து சத்தமிட்டு
அக்குளைச் சொறிந்து
நடந்துகாட்டுவதன் மூலம்
அடுத்த வித்தைக்குத் தயாரானாள்.

 நாக்கை நீட்டி
உடனேயே உள்ளிழுத்துக்கொண்டு
உடலை நெளித்து
கண்களை மூடித் திறக்கும்போது
பாம்பாகியிருந்தாள்.

பிறகொருநாள்
சிறுமி நடப்பதும் பேசுவதும்
சிரிப்பதும் விளையாடுவதும்கூட
வித்தையாகப் பார்க்கப்பட்டது.

சோர்வுற்று
ஆர்வமில்லாமல்
தரிசிக்கப்பட்ட சிறுமியின் அமைதி
எல்லோரையும் வெறுப்பேற்றியது.

உடலில் அசைவில்லாமல்
உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் மீது
கல் எறியப்பட்டது.
சாட்டையால் விலாசப்பட்டது.
தலை முடியைக் கொத்தாகப் பிடித்து
தரதரவென இழுத்துவரப்பட்டாள்.

வலி தாங்காமல்
தவளையைப் போல
குதிக்கத் துவங்கிய சிறுமி
மீண்டும் வித்தைக் காட்ட
எல்லோரும் கைத்தட்டினார்கள்.

2.தனித்திருக்கும் வீடு

நான்
இல்லாமல்போகும்
சில பொழுதுகளில்
வீடு என்னைப் பற்றி
பேசத் துவங்குகிறது.

அதன் முனகல்
என்னைப் பற்றியதாகவே
இருக்கின்றது.

வீட்டின் ஒவ்வொரு மூலையிலும்
எனக்கென ஒரு கதை இருந்தது.

அக்கதைகளைச் சொல்லிமுடித்த பிறகு
நான் வீடு வந்து சேர்கிறேன்.
ஒன்றுமே நடக்காததுபோல
எல்லாமே நெருக்கமாக
என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன.

நான் கவனிக்காதபோது
வீட்டுச்சுவர்
என் முதுகைச் சுரண்ட
முயல்கிறது.

நான் படுத்திருக்கும்போது
வீட்டின் தரை
என்னை அணைத்துக்கொள்கிறது.

நான் நடந்துகொண்டிருக்கும்போது
வீட்டின் பல்லிங்குகற்கள்
நகர்ந்து தூரத்தைக் குறைத்துவிடுகின்றன.

நான் உறங்கிக்கொண்டிருக்கும்போது
சன்னல்கள் நிலா கதையைச் சொல்லிக்கொண்டே
இருக்கின்றன.

தனிமையான இரவின்
மௌனம் தாளாமல்
அமர்ந்திருக்கையில்
வீட்டின் அறைகளில்
இருள் சூழ்ந்துகொள்கிறது.

என்னிடம் உரையாடமுடியாமல் போன
வீட்டின் துயரம்
ஒரு சுவாசம்போல
கேட்டுக்கொண்டிருக்கிறது.

கே.பாலமுருகன்

1 comment:

Ratnavel Sothivel said...

இவ்வளவு அருமையான கவிதையில் எழுத்துப் பிழைகளை காண மனதுக்கு பெரும் சுமையாக இருக்கிறது, திருத்தினால் என்ன ?
விளாசப்பட்டது என்று திருத்தவும்,
பளிங்குகற்கள் என்று திருத்தவும்
அன்புடன்
சோதி