Thursday, August 16, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு- ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - என்.கே.ரகுநாதன்




என்.கே.ரகுநாதன் அவர்கள் ஈழ இலக்கிய வெளியில் ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டவர். ‘தீண்டத்தாகதவன்’ எனும் ஈழச் சிறுகதை தொகுப்பில் அவருடைய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் முக்கியமான நாவலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி பிரசுரமாகியுள்ளது. அப்பகுதி ஒரு சிறுகதைக்கான தன்மையைப் பெற்றுள்ளதால் அந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

ரெஜிஸ்த்தார் எனும் அதிகார வர்க்கம்

மலேசியச் சூழலில் முன்பெல்லாம் குழந்தை பிறந்தவுடன் காவல் நிலையத்தில்தான் பதிவார்கள். பெரும்பாலான பெயர்கள் எழுத்துப்பிழைகளுடன் பதியப்படுவது வழக்கமாகும். சுப்ரமணியம் எனக்
கூறினால், அவர்கள் ‘சுப்பிரமணியம்’ அல்லது ‘சப்பிரமணியம்’ எனப் பதிந்து வைப்பார்கள். மலாய்க்காரர்கள்தான் இது போன்ற தவறுகளைக் காலம் முழுக்கச் செய்து வந்திருக்கிறார்கள். அதனாலேயே பெரும்பாலான இந்தியர்களின் பெயர் அடையாள அட்டையில் பிழையாக அச்சேறியிருக்கும்.

இக்கதையில் வரக்கூடிய நிலைமை வேறு. எப்படி ஒரு சாதிய சமூகத்திற்குள் அதிகாரிகள் அதற்குத் துணைப்போகிறார்கள் என்பதைப் பற்றியே என்.கே.ரகுநாதன் இக்கதையில் பேசியுள்ளார். இக்கதையில் அறிமுகப்படுத்தப்படும் ரெஜிஸ்த்தார் சாதியை ஒரு அளவுகோலாகச் சமூகத்திற்குள் நுழைக்கும் நடுவராக இருக்கிறார். கத்தோலிக்க சமையத்தைச் சேர்ந்த அவர் சாதி வெறிப் பிடித்த சைவ வேளாளர் வசிக்கும் வீடுகளுக்கு மத்தியில் வாழ்கிறார். தன்னைச் சுற்றி வாழும் சாதி வெறிப்பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து அவரும் மேலாதிக்க மனோபாவத்தை உருவாக்கிக் கொள்கிறார். இயல்பாவகவே சமூகத்தைச் சாதிய ரீதியில் கூறு போடும் தொழிலைத் தன் அதிகாரத்தைப் பாவித்து நிறைவேற்றுகிறார்.

கந்தர் தன் மகனை அழைத்துக்கொண்டு பெயர் பதிய யாழ்பாணத்திலுள்ள ரெஜிஸ்த்தார் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்துதான் கதை துவங்குகிறது. ஏற்கனவே அங்கு வாழ்ந்து சாதிய வெறியுடன் செயல்பட்ட ஒரு ரெஜிஸ்த்தாரைப் பற்றித்தான் கதை மையப்படுத்துகிறது. அவரின் வழி யாழ்பாணத்திலுள்ள கீழ்சாதியைச் சேர்ந்தவர்கள் எப்படி மறைமுகமாக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மை தெரிய வருகின்றது. கீழ்சாதி மக்களை எப்படியிருப்பினும் சமூகத்தின் உயர்ந்த தளத்திற்குள் வரவிடாமல் ஓர் எல்லைக்குள்ளே வைத்திருந்ததில் இதுபோன்ற அதிகாரிகளும் முக்கியமானவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ரெஜிஸ்த்தார்களால் அப்படி என்ன செய்திருக்க முடியும்?

கீழ்சாதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் ஒரு பெயர் வைக்க, அதனை மாற்றி கீழ்சாதிகளுக்குரிய பெயரை வைப்பதைத்தான் இந்த ரெஜிஸ்த்தார் செய்து வந்திருக்கிறார். அவர்கள் தன் சாதி அடையாளத்திலிருந்து மீள நினைத்தாலும், சமூகத்தோடு கலக்க நினைத்தாலும் அவர்களைக் கூறு போட்டு அவர்களின் அடையாளத்தைத் திணிப்பதைத்தான் அதிகாரிகள் செய்து வந்துள்ளார்கள். இது ஒரு வகையில் சமூகத்தின் புனிதத்தைக் காப்பாற்றும் செயலாகவே என்னால் பார்க்க முடிகிறது. மேல்சாதி மக்களுக்குத் துணைப்போகும், அவர்களை அண்டிப் பிழைக்கும் அதிகாரிகள் சாதியத்தைக் கடைப்பிடிக்கும் இடைத்தரகர்கள் எனச் சொல்ல முடியும். படிக்காத மக்களை ஏமாற்றும் செயல் அது. கதையில் அப்படிப் பெயர் பதிந்து ஏமாற்றப்பட்டவர்கள் அனைவரும் படிக்காத பாமர மக்களே. சிவகுமார் எனச் சொன்னால், ‘சின்னக்குட்டி’ எனப் பெயர் பதியப்படுவதும், செல்லையா என்றால் செல்லன் எனப் பதியப்படுவதும் ரெஜிஸ்தார்கள் செய்த சிறு மோசடியாகும்.

மேலும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு கீழ்சாதியைச் சேர்ந்த தலைமுறையை அடையாளப்படுத்துவதையும் ரெஜிஸ்தார்கள் செய்து வந்துள்ளார்கள். கதையில் சொல்லப்படும் மற்றுமொரு உண்மை இது. கள்ளுச் சீவுகிற அல்லது பறையடிக்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் தன் தலைமுறையில் குடும்பத் தொழிலிருந்து மீண்டு ஒரு கடையில் விற்பனையாளனாக வேலை செய்தவனாக இருந்தாலும், அவனுக்கு ஒரு பிள்ளைப் பிறக்கும்போது, அதனைப் பதிய நேர்ந்தால், அக்குடும்பத்தின் குலத்தொழிலை வைத்து அவர்கள் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் என முத்திரைக் குத்தப்படும். அவன் தன் குடும்பத் தொழிலிருந்து தன் தலைமுறையை மீட்டெடுத்திருந்தாலும், ரெஜிஸ்தார்கள் அவர்களைப் போன்றவர்களை, ‘மரமேறிகள்’ என்றும் ‘பறையடித்தல்’ என்றும்தான் பிள்ளை பதிவு பத்திரித்தில் குறிப்பிடுகிறார்கள். ஒரு தலைமுறையைத் தன் சாதிய அடையாளத்திற்குள்ளிருந்து தப்பிக்கவிடாமல் பாதுகாக்கும் தொழிலைத்தான் ரெஜிஸ்த்தார்கள் நேர்மையாகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் யாருக்கு நேர்மையாக இருந்தார்கள்? இக்கதையில் வரும் ரெஜிஸ்தார் ஒரு கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சைவ வேளாளர்களின் சாதிய ஏஜேண்டுகளாக இவர் தன் வாழ்நாளில் அங்கிருந்த சமயத்தில் பணியாற்றியுள்ளார். அவர்களின் சாதி வெறிக்கு நேர்மையாக இருந்திருக்கிறார். மேல்தட்டு வர்க்கத்தின் சாதிய மனோபாவத்தின் அடிமைகளாக இதுபோன்ற ரெஜிஸ்தார்கள் காலம் நெடுக இருந்திருக்கிறார்கள்.

கிராமத்தின் எழுச்சி

இக்கதையில் வரும் கந்தர் தன் மகனுடைய பெயரை மாற்றுவதற்கே பதிவு அலுவலுகம் செல்கிறார். அக்கிராமம் ஒரு விடுதலைக்குத் தயாராகியிருப்பதைக் கதையில் குறிப்பிடுகிறார்கள். கந்தரின் மகனுடைய பெயரான ‘இராசன்’ கதையின் இறுதியில் ‘இரவீந்திரனாக’ மாற்றப்படுகிறது. கதை இங்கு முடிந்து ஒரு சாதரண எழுச்சிக் கதையாக மட்டுமே மனதில் நிற்கிறது. பெயரை மாற்றிவிடுவதன் மூலம் ஒரு சமூகத்தைப் பல நெடுங்காலம் கடைப்பிடிக்கப்பட்ட சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மீட்டுவிட முடியுமா? சாதியைத்தக் கடைப்பிடிப்பவர்கள் அதிகாரிகளின் வாயிலாக முன்னெடுத்த சாதிய வெறியின் ஒரு சிறு தெறிப்புத்தான் இது போன்ற பெயர் மாற்றம் செயல்கள். அதுவே தீவிரமான ஒரு சாதிய ஒடுக்குமுறை எனச் சொல்லிவிட முடியாது.

எழுச்சி என்பது இங்கிருந்து தொடங்கலாம் எனச் சொல்ல முடியும். ஆனால், இதுவே போற்றத்தக்க எழுச்சி என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. ரெஜிஸ்த்தாரை மாற்றிவிடுவதன் மூலமோ அல்லது வழக்கமாக வழங்கப்பட்ட சாதி அடிப்படையிலான பெயரை உயர்ச்சாதி சாயலைக் கொண்ட பெயராக மாற்றி வைத்துக்கொள்வதன் மூலம் ஈழச்சமூகத்திற்குள் தீவிரமாக இயங்கும் சாதி மனநிலையை ஒழித்துவிட முடியாது. அது சல்லி வேர்களைப் போல ஆழ்மனதில் புதைந்துள்ளது. அதனை அசைத்துக்கூட பார்க்க முடியுமா என்பதே இந்த யுகத்தின் மிக முக்கியமான கேள்வி.

எம்.கே.ரகுநாதனின் கதை ஒரு இலட்சியவாத சிந்தனை. சாதிக்குள் நிகழும் கொடூரத்தின் ஒரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. அதனை நோக்கி ஒரு மாபெரும் எழுச்சி கனவை விதைக்கிறது.

 கே. பாலமுருகன்
Thanks: Vallinam.com (August)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்தேன்...
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...