Sunday, February 3, 2013

Life of Pi - பசியும் வாழ்தலும்


“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’

அங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.

கதைச்சுருக்கம் / கதைக்களம்

பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.


பிலிப்பைன்ஸ் தீவைக் கடக்கும் வழியில் புயல் காற்று தாக்கிட, பை குடும்பம் ஏறி வந்த கப்பல் கடலில் மூழ்க பை மட்டும் தப்பித்துவிடுகின்றான். அவனுடன் காலுடைந்த ஒரு வரிக்குதிரை, கழுதப்புலி மட்டும் படகில் மாட்டிக்கொள்கின்றன. இடையில் அவன் அப்பா வளர்த்ததிலேயே மிகவும் கொடூரமான மிருகம் ரிச்சர்ட் பார்க்கர் நீந்தி வந்து படகில் ஏறிக் கொள்கிறது. பை அதன் மீது அவனுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் பயத்தால் உடனே கடலில் குதித்துவிடுகிறான். அதன் பிறகு படகின் மூலையில் இருக்கும் கம்பொன்றைப் பற்றிக்கொண்டு ஓர் இரவை அரைத்தூக்கத்துடன் கழிக்கின்றான். வாழைப்பழச் சீப்புடன் மிதந்து வந்து படகில் ஏறுகிறது ஓராங் ஊத்தான். இப்பொழுது பை-யுடன் சேர்த்து கழுதைப்புலி, ஓராங் ஊத்தான், ரிச்சர்ட் பார்க்கர் மற்றும் வரிக்குதிரை படகில் இருக்கிறார்கள். படத்தின் அடுத்த முக��கியமான பாதி கடலில் பயணிக்கின்றது.

பசித்தக் கழுதைப்புலி முதலில் வரிக்குதிரையையும் பிறகு ஓராங் ஊத்தானையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. ஏற்கனவே தன் பிள்ளையைப் பறிக்கொடுத்த சோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஓராங் ஊத்தான் கொல்லப்பட்டு இறந்துகிடக்கும் காட்சி மனத்தை வருத்துகிறது. அனைத்தையும் கொன்றுவிட்டு ‘பை’யை நோக்கி உறுமுகிறது கழுதைப்புலி. பை கோபத்தின் உச்சத்திற்குச் செல்கிறான். கடவுள் மீது அதிக நம்பிக்கையுடையவனும் சைவ உண்ணியுமான பை, அந்தக் கொலைகளைக் கண்டு மிரள்கிறான். தடுப்பொன்றின் மூலம் கழுதைப்புலியுடன் போராடுகிறான். அதற்கிடையில் அந்தக் கழுதைப்புலியை ரிச்சர்ட் பார்க்கர் எனும் புலி சடாரென திரைக்குள் தோன்றி பாய்ந்து தின்றுவிடுகிறது. இப்பொழுது மீதமாக இருப்பது பை-யும் புலியும் மட்டுமே. இப்பொழுது நிகழ்ந்த சம்பவம் வெறும் காட்சியோ அல்லது கொலையோ கிடையாது. இது அசலான அறிவியல். அல்லது வாழ்வியல். அறிவியலில் நாம் ‘food chain’ படித்திருப்போம். உணவு சங்கிலி. ஒவ்வொரு உயிரும் உயிர் வாழ்வதற்காக இன்னொரு ஜீவராசியைச் சார்ந்திருக்கும். புலி மான் அல்லது பிற மிருகங்களைச் சார்ந்திருக்கும், பாம்பு தவளையைச் சார்ந்திருக்கும். இப்படிப் பட்டியல் மேலும் பல வன விலங்குகளை உட்படுத்தி நீண்டு கொண்டே போகும்.

பசியின் பிடியில் சிக்கிக்கொண்ட அந்த மிருகங்கள் இப்பொழுது ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. குறிப்பாக மாமிச உண்ணிகளுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால், கழுதைப்புலியின் செயலை பை ஒரு கொடூரமான செயலாகப் பார்க்கிறான். அதைக் கொலை என உணர்ந்து பதற்றமும் ஆத்திரமும் கொள்கிறான். பை-யின் மனத்தில் இருந்திராத ஓர் அனுபவத்தின் முன் அவன் தவிக்கின்றான். இயற்கையின் நியதிக்கு முன் பதற்றம் கொள்கிறான். அடுத்த கணமே ரிச்சர்ட் பார்க்கர் கழுதைப்புலியைக் கொல்வதன் மூலம் இயற்கையின் நியதி எனும் மாபெரும் உண்மையை அவன் முன் ‘கொலை’ எனும் பிம்பத்துடன் கட்டியெழுப்புகிறது. கடலில் சிக்கிக்கொண்ட ஒரு தனிப்படகில் நிகழும் இக்காட்சித்தான் மொத்த உலகமே. இதை இவ்வளவு நிதானமாகக் காட்சிப்படுத்திச் சொல்லிச் செல்லும் ஒளிப்பதிவும் இயக்கமும் வியக்கத்தக்க முயற்சி.

கனடிய எழுத்தாளர் ‘யான் மார்ட்டல்’ எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படம் இது. அந்நாவலில் பை புலியுடன் மொத்தம் 227 நாட்கள் தனிமையில் எப்படித் தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறான் என்பதாகவே எழுதப்பட்டிருந்தது. அந்த மாபெரும் மானுட அனுபவத்தை சில அதிசயமிக்கக் காட்சிகளுடன் திரைப்படமாக்கிய அங் லீ பாராட்டுதலுக்குரியர்.

புலியும் தனிமையும்

ரோபர்ட் செமெக்கிட்ஸ் இயக்கி தோம் ஹான்க்ஸ் நடித்து 2000ஆம் ஆண்டில் வெளியான ‘cast away’ திரைப்படத்தோடு சில விசயங்களை life of pi படத்துடன் ஒப்பிட்டு உரையாட முடியும். அப்படத்தில் தனித்தீவில் சிக்கிக் கொண்ட தோம் ஹேன்க்ஸ் எத்தனையோ மாதங்கள் தனியாக வாழ்கிறான். அவன் எப்படித் தன் உணர்வுகளை மனநிலையைக் சுயமாகக் காப்பாற்றிக் கொள்கிறான் என்பதே படத்தின் உச்சம். அதே போல இப்படத்தில் பை எப்படி 227 நாட்களைத் தனிமையில் கடத்துகிறான் என்பதே கதையின் மையப்பொருள். அத்தனை நாட்கள் கடல் கொடுக்கும் மிதக்கும் போதையையும் தனிமை கொடுக்கும் ஆழமான வெறுப்பையும் அவன் வெல்ல வேண்டும் என்பதே அவனுக்கிருக்கும் சவால்.

தன் ஐரோப்பிய நாவலாசிரியரிடம் தன் அனுபவத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும் பை, ‘அந்தப் புலி மட்டும் இல்லையென்றால் என்னால் அன்று உயிருடன் இருந்திருக்க முடியாது’ எனக் குறிப்பிடுகிறார். கடலில் அவன் உயிருடன் மீதி நாட்களைக் கடப்பதற்கான ஒரே உந்து சக்தி புலி. மற்ற பிற தேசங்களைவிட இந்தியாவே புலியை ஓர் உன்னதமான குறியீடாகவும், கொடிய விலங்கின் பிரதிநிதியாகவும், சாமியின் வாகனமாகவும் இன்னும் பல வடிவங்களில் கொண்டாடுகிறது; வழிப்படுகிறது. புலி ஓர் வழிப்பாட்டுக் குறியீடு அல்லது வீரத்தின் குறியீடாக மட்டுமே போற்றப்பட்டது. ஆனால், இப்படத்தில் பை அதன் மீது வேறொரு அர்த்தத்தைப் புகுத்துகிறான். தன் தனிமையை அத்தனை நாட்களில் பகிர்ந்துகொண்டு ஒரு சக பயணியாக அவனைப் பல பரிணாமத்திற்குள் உட்படுத்துகிறது புலி. பை-யின் அப்பா புலி குறித்து அவனுக்குள் ஏற்படுத்திய பயத்தைக் கொண்டு புலியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டே இருந்தான். புலியுடன் கடலில் இருந்த நாட்களில் பாதியை அதனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை உணர்வின் மூலம் உயிர் வாழ்ந்தான். மீத நாட்களைப் புலியுடன் இணைந்து அடுத்த கணத்தை நகர்த்தினான். இந்த இரு மனோபாவங்களும் வாழ்க்கையின் மாபெரும் முரண்.

முற்றிலும் மனிதர்களுக்கு ஆபத்தான மிருகமான புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே பை-த்தான் பசி மரணப்பயம் என்பதற்கு முன் புலியுடன் இணைந்து ஒன்றாகின்றான். எத்தனை பயங்கரமும் கொடூரமும்கூட மரணத்திற்கும் பசிக்கும் முன் மண்டியிட்டு தோற்றுப் போகின்றன. பசியின் வாட்டத்தாலும் உயிர் வாழ நேர்ந்த போராட்டத்தாலும், துவண்டு போய்விடும் புலியை பை எடுத்துத் தன் மடியில் படுக்க வைக்கின்றான். இதுவே வாழ்க்கையின் அனைத்துப் புரிதல்களையும் உடைத்துப் பார்க்கும் காட்சியாகும். நமக்குக் கற்பிக்கப்பட்ட அனைத்தையும் தளர்த்திப்பார்க்கும் தருணம். இரு வெவ்வேறான தன்மைகள் கொண்ட இணங்கி வாழவே முடியாத உயிர்கள் இணையும் ஆச்சர்யமான புள்ளி. இருவரும் தொடர்ந்து வாழ்வதற்கான தேவைகளை உணர்ந்து பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். பை-யின் கட்டுபாட்டுக்குள் புலி வருகிறது. ரிச்சர்ட் பார்க்கருக்காக பை மீனைப் பிடித்த உண்ணக் கொடுக்கின்றான். ஒரு சர்க்கஸ்காரனின் ஆணைக்கு அடிப்பணியும் புலியாக மாறுகிறது ரிச்சர்ட் பார்க்கர்.

227 நாட்கள் கழித்து இறுதியில் மெக்சிக்கோவின் கரையை வந்தடையும் அப்படக்கை அங்குள்ளவர்கள் கண்டெடுத்து பை-யைக் காப்பாற்றுகிறார்கள். துவண்டுபோன தன் கண்களின் வழியாக பை ரிச்சர்ட் பார்க்கரைப் பார்க்கின்றான். படகிலிருந்து எகிறிக் குதித்துச் சட்டென தன் முன் விரிந்துகிடக்கும் காட்டை நோக்கி ஓடிவிடுகிறது புலி. இது படத்தின் அடுத்த பரிணாமம். பை-க்குத் உடனேயே தேவை மனிதர்கள்தான். ஆனால், புலிக்கோ தேவை என்பது வேறாகி இருக்கின்றது. வேட்டையாடி வாழ அதற்குத் தேவையான வனத்தை நோக்கி எந்த உணர்வுமின்றி ஓடிவிடுகிறது. ஆனால், பை அப்பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுகின்றான். மீண்டும் பை நியதியின் முன்னால் ஏமாற்றமடைந்து நிற்கின்றான். படகில் போராட்டத்தினூடே அவன் கண்ட புலிக்கும் இப்பொழுது தான் வாழ்வதற்கான அனைத்தும் உள்ள வனத்தை நோக்கி ஓடும் புலி வேறு என்பதையும் அறியாமல் தவிக்கின்றான். பிரிவு எல்லாம் கணங்களிலும் சோகத்தை வரவழைப்பது மட்டுமல்ல. மிக இயல்பாக நிகழ்ந்துவிடும் நியதியும்கூட.

குரூரமான பார்வையுடைய புலியால் பிற உயிரைக் கொன்று வாழமட்டுமே முடியும் எனத் தன் அப்பாவால் பை-க்குக் கற்பிக்கப்படுகிறது. அதே புலி படகிலிருந்து கடலுக்குள் குதித்து மீண்டும் ஏற முடியாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி படகின் கீழ்நுனி கயிற்றைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாகப் பை-யைப் பார்க்கின்றது. அதே புலி வாழ வழி கிடைத்தவுடன் பார்க்காமலேயே சென்றுவிடுகிறது. அனைத்துத் தருணங்களிலும் சந்தர்ப்பவாதம் பை-யை உயிர் வாழ வைத்ததைப் போல, தேவை நீங்கியவுடன் பிரிந்து செல்கிறது. புலியும் பை-யும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சந்தர்ப்பமே அவர்களை உயிர்ப்பித்திருக்கிறது. இதுவே படத்தின் மையத்தைத் தொடுவதாக உணர்கிறேன். கடவுள் இருக்கிறார் என்பதே இங்கே நியதி ஒன்றொடொன்று பிணைந்திருப்பதும் முரண்பட்டிருப்பதும் என்பதன் மூலமே விவாதிக்கப்படுகிறது. வாழ்க்கையின் மிக மோசமான உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பத்தில் எத்தனை முரணான உயிர்களும் இணையும் நியதியை மாற்று தரிசனமாக ‘life of pi’ நமக்கு அளிக்கின்றது.

கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 1- கே. பாலமுருகன் -
thanks: vallinam

1 comment:

Unknown said...

அந்த மர்ம தீவு ஒன்று வருகிறதே அங்கு அவன் தாமரையை பார்க்கிறான், படுத்து கொண்டு உறங்கும் கடவுளை பார்க்கிறான், பிறகு அந்த மாதிரி தீவு இல்லை என்கிறார்கள். இதை விவரியுங்களே நண்பரே