Friday, October 24, 2014

கத்தி திரைவிமர்சனம்: மாஸ் ஹீரோவும் விவசாயிகளின் பஞ்சமும்


'சினிமா என்பது சமூகத்தைவிட்டு தனியாகப் பயணிக்கக்கூடியதல்ல; சினிமா சமூகத்தோடு, சமூகத்தின் பாரம்பரிய சிந்தனைகளில், புரிதல்களில், கருத்தியலில், இரசனைகளில் பாதிப்பை உருவாக்கியபடியே நகரக்கூடியது' அகிரா குரோசவா , (உலகத் திரைப்பட மேதை, அகிரா. புதுமைப்பித்தன் பதிப்பகம், 2002)

அகிரா குரோசாவின் ரஷமோன் படம் 1951ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பிறகு உலக மக்களிடையே திரையிடப்பட்டது. எது தரமான சினிமா எனப் பிரித்தறிய முடியாத ஐரோப்பிய இரசிகர்கள் நிறைந்த காலக்கட்டம் அது என சத்ய ஜீத்ரே 'singular samurai' முன்னுரையில் அதனைக் குறிப்பிடுகிறார். ஆனால், அதுவரை யாரும் நம்பாத வகையில் ரஷமோன் என்கிற புதிய முயற்சி மாபெரும் வெற்றி அடைந்து ஒரே கணத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பிய இரசனைகளில் பெரும் தாக்கத்தை உருவாக்கி அடுத்தடுத்து வித்தியாசமான சினிமாக்கள் வெற்றியடையும் வகையிலான ஒரு பாதையை ஏற்படுத்திவிட்டது. இதற்கு முந்தைய ஜப்பானிய சினிமாக்களின் வெற்றியை உள்வாங்கிக் கொண்டு அகிரா அடுத்த கட்டத்தை நோக்கி ஜப்பான் இரசிகர்களையும் உலக இரசிகர்களையும் நகர்த்தினார். ஏற்கனவே இருக்கும் ஜப்பானிய இரசனைகளோடு அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆகையால், அவர் என்ன தோல்வியடைந்துவிட்டாரா? அல்லது ஜப்பானிய சமூகப் பிரச்சனையைப் பேச முடியாமல் போய்விட்டாரா?

அகிரா, ஜப்பானிய சமுராய் மரபிலிருந்து தன் சினிமாவைத் துவங்கி, ஜப்பானிய நவீன சமூகத்தின் சிதறல்கள் வரை சமூக அக்கறையுடன் செயல்பட்ட ஒரு திரைப்பட இயக்குனர் ஆவார்.

கத்தி திரைப்படத்தைப் பற்றி சிலர் தன் விமர்சனங்களில், படத்தின் முதல் பாதியைவிட அடுத்த பாதியே விறுவிறுப்பாகப் போகின்றது எனச் சொல்கிறார்கள். நன்றாகக் கவனித்தால், படத்தின் முதல் பாதியில்தான் விவசாயிகள் பஞ்சம் காரணமாகத் தன் கிராமங்களைவிட்டுத் துரத்தியடிக்கப்பட்ட நிலையையும், தற்கொலை செய்துகொண்ட அவலத்தையும், குற்ற உணர்ச்சியைக் கிளப்பிவிடும் வகையில் சொல்லயிருப்பார்கள். இரண்டாம் பாதி விஜயின் மாஸ் ஹீரோவின் அதிரடியே நிறைந்திருக்கும். ஆகக், கத்தி படம் நிரம்ப சமூக அக்கறை நிரம்பிய படமாக இருந்தாலும் ஒரு பொதுஜன இரசனை என்பது அதை நீக்கியெறிந்துவிட்டு அதை விஜய் படமாகவே வலுக்கட்டாயமாகப் பார்க்க ஆரம்பிக்கிறது.

கத்தி திரைப்படம் ஆபத்தான படம் கிடையாது. மற்ற படங்களைப் போல இரட்டை அர்த்தமிக்க வசனங்களோ ஆபாசமான செய்கைகளோ இல்லை. வழக்கமான தமிழ் சினிமா பாணியை விட்டுக் கொஞ்சமும் நகராமல் ஒரு புதிய கருத்தை, சமூகம் மறந்துபோன அவலத்தைப் பேசியுள்ளது. ஆனால், என்னை அது கொஞ்சமும் பாதிக்கவில்லை. சினிமா குறித்த குறைவான தேடல் உள்ளவர்களுக்கும், சினிமாவை வெறும் பொழுதுபோக்குக்கான அம்சமாகவே பார்ப்பவர்களுக்கும் இப்படம் சட்டென அவர்களின் மண்டையில் அடித்திருக்கக்கூடும் அல்லது குறைந்தபட்சம் முதுகைச் சொறிந்துவிட்டிருக்கும். மேலும் அவர்களுக்கு இது முதன்முறையாக விவசாயிகளின் பிரச்சனையைப் பேசிய படம் எனத் தோன்றக்கூடும். நான் முன்பே குறிப்பிட்டதைப் போல , 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமான 'பெப்லி' படத்தைப் பார்க்க நேர்ந்தவர்களுக்கு இரு திரைப்படங்களின் சமூக அக்கறை புரிந்திருக்கும். பெப்லி படம், எந்த மாஸ் ஹீரோவின் உதவியுமின்றி இந்திய மக்களின் மனத்தையும் உள்ளுக்குள் உறைந்துபோன பொறுப்புணர்வையும் அதன் அடிவேர்வரை சென்று கிளறிவிட்டது. பல விமர்சகர்கள் அப்படத்தை முன்னிறுத்தி விவசாயிகளின் பிரச்சனைக்களை அக்காலக்கட்டத்தில் பேசியிருக்கிறார்கள்.


கத்தி படத்தின் ஒட்டுமொத்த தொனியை நன்றாகக் கவனிக்க வேண்டும். அப்படம் முடியும்போது நிச்சயம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதுகூட உங்கள் மனத்தில் நிலைக்காமல், கதிரேசன் என்ற ஒரு கைதி எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறான், எனப் படம் முழுவதும் அவன் மீது கவனத்தைக் குவித்துவிட்டு முடிவடைகிறது. இது முருகதாஸ் செய்த அபத்தம். படத்தின் மையநாடி கதிரேசனைச் சுற்றியே துடிப்பதை அடையாளம் காண முடிகிறது.

விவசாயிகளின் தற்கொலை என்பது வலிமிக்க வேதனைமிக்க ஒரு பிரச்சனை. கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தண்ணீர் சுரண்டல் என்பது மிக முக்கியமான அரசியல். அதை இரண்டையும் பேசி பிறகு அவையனைத்தின்பால் உருவான ஒரு மனவெழுச்சியைத் தன் பக்கம்(மாஸ் ஹீரோ)  ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதுதான் 'கத்தி' படத்தின் திரைக்கதை ஆகும்.

ஆனாலும், ஒரு வகையில் விஜய் போன்ற  தத்துவமும் அரசியலும் கருத்தும் பேசித்திரியும் மாஸ் கதாநாயகர்களுக்கு இது ஒரு திருப்பம் நிறைந்த படமே. இந்திய விவசாயிகளின் பிரச்சனைகளை, இதுவரை வேறெந்த தமிழ் சினிமாவும் பேசாத விசயத்தைத் தன் முதுகில் சுமக்கத் துணிச்சல் பிறந்துள்ளது. படத்தின் ஒரு பகுதி, ஜீவானந்தத்தின் தன்னூத்து கிராமத்தின் வரலாறு சொல்லப்பட்டும் இடம் மிக முக்கியமானது. அதில் விஜய் தோன்றும் காட்சிகளில் மிகவும் எளிமையாக நடித்திருப்பார். அவருக்குள் இருக்கும் அந்த எளிமையை இதுவரை அவரை நாடும் எந்த இயக்குனர்களும் பயன்படுத்த முன்வருவதில்லை என்பதுதான் பிரச்சனையே.

ஒருவேளை இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் அவர்களிடம் கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் விஜய் போன்ற மாஸ் ஹீரோவைத் தேர்ந்தெடுக்காமல் ஒரு சாதாரண கதாநாயகனை வைத்துக்கூட படத்தை வெற்றிக்கரமாகக் கொண்டு போயிருப்பார் எனத் தோன்றுகிறது. காரணம் உண்மையில் இக்கதையின் கதாநாயகனாகக் கதையே இருந்திருக்க வேண்டும்.

அடுத்து, சென்னை நகர்வாசிகளுக்கு இந்தியக் கிராமங்களின் தண்ணீர் பிரச்சனையை உணர்த்துவதற்காக விஜய் செய்யும் போராட்டம் கவனிக்கத்தக்கது. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. தண்ணீர் குறித்த பிரக்ஞையை ஆழமாகச் சொல்ல முற்பட்டுள்ள கட்டங்கள் அவை. ஒரு பெரிய போராட்டமே நடந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களின் கவனம் முழுவதும் அதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கும் தருணத்தில், ஒரு மக்கள் கூட்டத்தை நீர் என்கிற பிரக்ஞைக்குள் தள்ளிக்கொண்டிருக்கும்வேளையில் , திடீரென ஒரு இடைவேளை பாடல், விஜயும் சமந்தாவும் ஆட்டம் போடுகிறார்கள். படாரென்று அவ்வளவு நேரம் கதை சிரமப்பட்டு ஒரு கவனத்திற்குள் குவித்துக் கொண்டிருந்த இரசிகர்களை, அவர்களைச் சிந்திக்க வைத்துக்கொண்டிருந்த ஒரு அறிவார்ந்த தருணத்தில் மீண்டும் ஒரு சராசரி விஜய் இரசினகனாக மாற்றி வெளியே தூக்கியடிக்கிறது. இதெல்லாம் தமிழ்ப்படத்தில் சாதாரணம் எனச் சொல்வீர்கள் என்றால் உங்கள் மூளைக்கு முத்தம்தான் கொடுக்க வேண்டும்.

நான் எப்பொழுதுமே சொல்லக்கூடியதுதான், நம் இரசனை மாறினால்தான் தமிழ் சினிமாவும் மாறும். அந்த இடைவேளை பாடல் எதற்கு? 40 பேரை ஒரே சமயத்தில் அடிக்கும் அந்த மாஸ்த்தனம் எதற்கு? முருகதாஸ் அவரே திணித்துக்கொண்டதா? நிச்சயம் இருக்காது. அது இன்றைய இரசிகர்களின் தேவையாக மாறிவிட்டது. இலக்கியத்தைப் போலத்தான், வாசகனை முன்வைத்து நாம் இலக்கியம் படைத்துக்கொண்டிருந்தால், அது பீட்சா தயாரிப்புக்குச் சமமாகிவிடும்.

அடுத்து, கத்தித் திரைப்படத்தில் கம்யூனிசம் பேசக்கூடிய மக்களுக்காகப் போராடக்கூடிய ஒரு சமூகப் போராளியான ஜீவானந்தம் கதாபாத்திரம் படத்தில் ஒரு 'டம்மி பீசாக' ஆக்கப்பட்டத்தை யாராவது கவனித்திருந்தால், முருகாதாஸின் அபத்தமும் கொஞ்சம் விளங்கியிருக்கும். கதிரேசன் என்கிற வழக்கமான தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ பக்கம் கவனத்தைத் திருப்ப, கதையின் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒரு கதைப்பாத்திரத்தைக் கடைசிவரை அழுது வடியும் ஒரு கோமாளியாகக் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன? 1960களிலேயே எம்.ஜி.ஆர் நடிக்கும் இரட்டை வேடப் படங்களையே இரண்டு கதைப்பாத்திரத்திற்கும் முக்கியம் சேர்க்கும் வகையில் எடுத்திருப்பார்கள் அல்லவா?

என்ன செய்வது, அம்மா இல்லாத பிள்ளையாகவும், அப்பா பெயர் தெரியாத பிள்ளையாகவும் பெரும்பாலும் படங்களில் நடித்தே தமிழ் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இரஜினியைப் பின்பற்றி வரும் விஜய்க்கு முருகாதாஸ் வேறெப்படி படம் எடுத்துக் கொடுப்பார்?

ஆனால், இரு விசயத்துக்காக முருகதாஸ் அவர்களைப் பாராட்டலாம். விஜய் இரசிகர்களைச் சிந்திக்க வைத்துவிட முடியும் என அவர் நம்பிக்கை எந்த அளவில் வெற்றியடையும் எனத் தெரியவில்லை. சினிமா பலரின் வாழ்க்கைக்குள் ஒன்றர கலந்திருக்கிறது. அவர்கள் அதற்குள் இரத்தமும் சதையுமாக ஜீவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தொழிலாளி திரையரங்கம் வந்து அவன் இறுக்கத்தையெல்லாம் தூக்கி எறியும் களமாக இன்றைய தமிழ் சினிமா மாறியிருக்கிறது. அப்படியிருக்க, அவர்களிடம் கலை, தீவிரம் என்றெல்லாம் பேசமுடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற விஜயின் வழக்கமான மொக்கை படங்களில் கொஞ்சமாகச் செருகப்படும் சமூகம் குறித்த பிரக்ஞை ஓரளவிற்காவது அவன் மனத்தைத் தொடக்கூடும். ஆனால், சமூகம் குறித்த கருத்துகளை இப்படித்தான் சொல்ல வேண்டும் என சினிமா ஒரு போதும் வரித்துக்கொள்ளாது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சமூகப் பொறுப்புணர்வையும் தேசப்பற்றையும் விஜய்காந்த் சொன்னால்தான் மக்கள் உணர்வார்கள் என்கிற நிலைக்குச் சினிமா ஆளாகிவிடும்.

அடுத்து, படத்தின் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. மேலும் சராசரியான பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் ஒரு பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு எவ்வளவு முக்கியம் தருகிறது என்கிற விமர்சனத்தைப் படம் முன்வைத்திருக்கிறது. சாவுக்கும் விபத்துக்கும் அழிவுக்கும் நாக்கைத் தொங்கப்போடும் மெடியாக்களுக்கு ஒரு சவுக்கடி என்றே சொல்லலாம்.

ஒரு கமர்சியல் படத்தின் தேவை என்ன?

அது தன்னிடம் நிறைய இரசிகர்கூட்டத்தைக் கொண்டுள்ளது. ஆகவே, கமர்சியல் இயக்குனர்கள் கொஞ்சமாவது அதைப் பயன்படுத்திக்கொண்டு மக்களின் இரசனையை முன்னகர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. ஏற்கனவே கட்டமைக்கப்படிருக்கும் தமிழ் சினிமா இரசனைக்கு நான் தீனி மட்டும்தான் போடுவேன் என்றால் அது கமர்சியல் சினிமாவே கிடையாது. ஸ்தீவன் ஸ்பீல்பர்க் போன்ற ஹாலிவூட்டின் மிகப்பெரிய கமர்சியல் இயக்குனர்கள் எல்லாம் காலம் காலமாக சினிமா இரசனைகளைக் கொஞ்சமாவது மாற்றித்தான் வந்திருக்கிறார்கள்.

இன்று வெகுஜனம் திரண்டிருக்கும் ஓர் இடம் சினிமாதான். மற்ற அனைத்து விசயங்களையும் விட கோடான கோடி மக்களை உடனே சென்றடையும் விசயமும் சினிமாதான். ஆகையால், மற்ற அனைவரையும்விட ஓர் இயக்குனருக்கு சமூக உணர்வு அதிகமாகவே இருக்க வேண்டும். எந்த மாஸ் ஹீரோத்தனமும் இல்லாமல் ஒரு 'அழகர்சாமியின் குதிரை' மக்களைப் பாதிக்கிறது என்றால், எந்தக் கமர்சியல்த்தனங்களும் இல்லாமல் 'கற்றது தமிழ்' சமூகத்தை ஆழமாக விமர்சிக்க முடிகிறதென்றால், ஏன் ஏற்கனவே உள்ள தமிழ் சினிமா இரசனைகளைக் கொஞ்சம் புதுப்பிக்க முடியாமல் போய்விடப்போகிறது?

பொருளாதார வெற்றிக்காக ஓர் இயக்குனர் செய்து கொள்ளும் சமரசம்தான் இதுவென்றால், வெற்றி என்பது பொருளாதாரத்தை மட்டும்தான் குறிக்கின்றதா? ஏன் மொழி, அபியும் நானும் போன்ற படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும் பொருளாதார வெற்றியை அடைய முடிகிறது? அவர்கள் மசாலாத்தனங்களை ஓரளவிற்காவது தூக்கி எறிந்துவிட்டு, திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இதையே நாம் அடுத்த தலைமுறை சினிமா இரசிகர்களாகக் கவனிக்க வேண்டிய விசயமாகும்.

நான் கத்திக்கோ விஜய்க்கோ எதிரி கிடையாது. என்னுடைய 16ஆவது வயதில் அனைத்து விஜய் படங்களையும் வாங்கி வாங்கி இரசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு சராசரி சினிமா இரசிகனாக நான் மாறியிருக்கிறேன்; ஆனால் விஜய் மாறவில்லை எனும் வருத்தமே.

- கே.பாலமுருகன்

No comments: