Sunday, May 17, 2009

ஆசிரியர் தினமும் தன்னை நிறுவிக் கொள்ளும் மாணவர்களும்



இன்று எனது பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம் நிகழ்ந்தது. ஆசிரியர் தினம் ஆசிரியர்களை விட மாணவர்களுக்கு அதிகபடியான கொண்டாட்டத்தைக் கொடுக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. ஆசிரியர்களை மகிழ்வுப்படுத்த வேண்டும் என்கிற உள/வெளி போராட்டத்தில் அன்று முழுவதும் ஈடுபடும் மாணவர்களைக் காண முடியும்.

காலையில் பள்ளிக்கு வந்ததும் எத்தனை ஆசிரியர்களுக்கு முதலில் நான் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லப் போகிறேன் என்கிற திட்டமிடுதல் தொடங்கி ஆசிரியர் கவனத்தைப் பெற்று அதைப் பிற மாணவர்களிடம் பெருமைப்படும் படியாக தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிய அன்றைய நாள் முழுக்க அவர்களுக்கான நாட்கள்தான்.

இன்று எனக்கு ஒரு மாணவன் அவன் ஏற்கனவே பயன்படுத்திய பெண்சில் ஒன்றை வெள்ளைத்தாளில் சுற்றி பரிசாகத் தந்திருந்தான். இதற்கு முன் என்னிடம் அதிகமாக பயப்படும் மாணவன் அவன். பலமுறை அவனை திட்டியும் இருக்கிறேன். மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னனியிலிருந்து வந்திருப்பதால் எப்பொழுதும் மெலிந்தும் சோர்ந்தும்தான் காணப்படுவான். அவனைக் கவனித்து சீர்திருத்த எப்பொழுதும் தனி அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளேன். இருந்தாலும் 5 நாள் பள்ளி நாட்களில் 2 நாட்கள் அவன் பள்ளிக்கு வருவதே அபூர்வமாக இருந்ததால் என் பார்வையிலிருந்து நழுவியபடியே இருந்தான்.

அந்தப் பெண்சில் அவன் ஏற்கனவே பயன்படுத்தி, உடல் முழுவதும் கீறலையும் வெட்டுக் குத்துகளையும் வாங்கியிருந்தது. ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு ஏதாவது ஒரு பரிசை கொடுக்க வேண்டும் என்பதையே தனது குறிக்கோளாக வைத்துக் கொண்டு ஆடம்பரமான பரிசுகள் முதல் எளிமையான பரிசுகள் வரை அவர்கள் கையில் சுமந்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக சென்று அதைக் கொடுத்து அன்றைய தினத்தைக் கொண்டாடிக் கொள்கிறார்கள்.

அவனிடம் அந்தப் பெண்சிலை வாங்கிக் கொண்டு கை கொடுத்த போது, அதைக் கண்டு அவன் உற்சாகமடைந்தான். அருகில் இருக்கும் மாணவனைப் பார்த்து ஒரு சிரிப்பும் சிரித்துக் கொண்டான். இங்கிருந்துதான் அவன் அவனுக்கான அங்கீகாரத்தைத் தேடிக் கொள்கிறான். சிறிது நேர எனது பாராட்டலுக்கே அவன் இப்படியொரு மாற்றத்தை அடைகிறான் என்றால், வாழ்நாள் முழுவதும் அவனை அவனது செயலை தாராளமாக அங்கீகரிக்க மனிதர்கள் இருந்தால், அவன் வாழ்வு எங்காவது முழுமைப்பெறக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆசிரியர்களின் சேவையை கௌளரவப்படுத்தும் தினமாகக் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை ஆசிரியருக்கும் அப்பாற்பட்டு அவர்களை மகிழ்விக்க அவர்களின் கவனத்தைப் பெறும் சாகசத்தில் ஈடுபட காத்திருக்கும் மாணவர்களுக்கான தினமாகவே அதைக் கருதுகிறேன். அன்றைய தினத்தில் ஆசிரியர் சிரித்துக் கொண்டிருப்பார், அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு சுமைகள் இருக்காது, அன்றைய தினத்தில் ஆசிரியருக்கு ‘file works” கணக்காது. ஆகையால் தன்னையும் தனது ஆசிரியர் மீதான அன்பையும் நிருபித்துக் கொள்ள இதுவே சரியான கணமாக மாணவர்கள் பாவித்துக் கொள்கிறார்கள். ஆகையால் ஆசிரியர் தினத்தைக் கட்டமைப்பதே மாணவர்கள்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இருக்கறதே ஆசிரியருக்கு அந்த ஒரு நாள்தான், அதையும் உருவிட்டியா பாவி. . யாரோ திட்டுவது கேட்கிறது.
கே.பாலமுருகன்

Friday, May 15, 2009

எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்களுடன் ஒரு கோப்பை தேநீர் - அநங்கம் இலக்கிய வட்டம்


நாளை (சனிக்கிழமை) 16.05.2009 கோலாலம்பூர் முத்தமிழ் படிப்பகத்தில் காலை மணி 10க்கு மேல் 3மணி வரை எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் ஒரு கோப்பை தேநீர் நிகழ்வு ஆரம்பமாகிறது.

மூத்த இலக்கியவாதியுடன் அவர்களின் படைப்புலகம் படைப்புலக அனுபவங்கள் போன்றவற்றை இளம் வாசகர்கள்-எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலாக திட்டமிட்ட இந்த 'ஒரு கோப்பை தேநீர்' நகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் அல்லது எழுத்தாளர்கள் தொடர்புக் கொள்ளலாம் அல்லது நேரடியாக நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

இடம்: முத்தமிழ் படிப்பகம் செந்துல்
நேரம் : காலை மணி 10.30க்கு
நாள் : 16.05.2009(சனிக்கிழமை)

இந்த முதல் 'ஒரு கோப்பை தேநீர்' கலந்துரையாடலுக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் செய்தவர் அறிமுக எழுத்தாளர் நண்பர் முனிஸ்வரன் குமார்.

மேல் விவரங்களுக்கு: 016-4806241

Thursday, May 14, 2009

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி நிருபர்கள் மூவர் கைது: நாடு கடத்தப்படுவார்கள்?

லண்டன் 'சனல் - 4' தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது: உடன் நாடு கடத்தப்படுவார்கள்?

சிறிலங்கா அரசாங்கத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் மீதான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர சனிக்கிழமை(கடந்த வாரம்) இரவு தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்காக திருகோணமலை சென்றிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிருபரான நிக் பட்ரன் வோல்ஸ், அதன் தயாரிப்பாளர் பெசி டூ, படப்பிடிப்பாளர் மற் ஜஸ்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்படுவதாகவும், இவர்களுடைய விசா இரத்துச் செய்யப்பட்டு மூவரும் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் தொடரும் போர் தொடர்பான பல செய்திகளை 'சனல் - 4' தொலைக்காட்சி தொடர்ந்தும் ஒளிபரப்பி வந்திருக்கின்றது.

இருந்தபோதிலும் கடந்த வாரம் ஒளிபரப்பான வவுனியா முகாம்கள் தொடர்பான தகவல்கள்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததுடன், சிறிலங்கா அரசுக்கும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

வவுனியா முகாம்களில் உள்ளவர்களின் அவலமான நிலைமைகள் தொடர்பாகவும், அங்குள்ள இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் இதில் வெளியான தகவல்கள் அனைத்துலக ரீதியாகவும் சிறிலங்காவுக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தது.

தான் கைது செய்யப்படுவதற்கு இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியமைதான் காரணமாக இருக்க வேண்டும் என கைது செய்யப்பட்ட சில நிமிட நேரத்தில் ஏ.பி. செய்தி நிறுவனத்துடன் தனது செல்லிடப்பேசி மூலமாகத் தொடர்புகொண்ட நிக் பட்ரன் வோல்ஸ் தெரிவித்தார்.

முகாம்களில் போதிய உணவு, குடிநீர் போன்றவை இல்லாததது தொடர்பாகவும், இறந்தவர்களின் உடலங்கள் ஆங்காங்கே காணப்படுவது பற்றியும் பெண்கள் அவர்களுடைய குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களுக்குள்ளாவது தொடர்பாகவும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விபரிக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினரால் கொழும்புக்குக் கொண்டுவரப்படும் இவர்களுடைய விசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு அவர்கள் விரைவாக நாடு கடத்தப்படலாம் என தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில் நிக் பட்ரன் வோல்சின் விசா அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் பி.பி. அபயக்கோன் அறிவித்திருக்கின்றார்.

இலங்கை செய்திகள்

பாரதிராஜா பேச்சு: மகாத்மாகாந்தி நாடு ஈழம்தான்

மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு
இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ் திரையுலக இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பாரதிராஜா மேலும் பேசியதாவது:-

இதுவரை நான் அரசியல் மேடையில் பேசியது கிடையாது. வாழ்க்கையில் நான் பொய்பேசி பழகாதவன். அதனால்தான் நான் இந்த மேடையில் நின்றுகொண்டு இருக்கிறேன். அரசியல் பேச நான் இங்கு வரவில்லை. எனது இனத்துக்கு ஒரு துரோகம் நடக்கிறது என்பதால் நான் இங்கு வந்தேன்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். இது மத்திய அரசின் காதுகளுக்கு கேட்கவில்லை.

பிரபாகரன் சாதாரண மனிதன் அல்ல. அவன் உண்மையான தமிழன். மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழம்தான். இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டுதான் நாங்கள் எங்களை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

சோனியா என்ன பேசுகிறாரோ அதற்கு மன்மோகன் சிங் வாய் அசைப்பார். இலங்கை இராணுவத்தால் பிரபாகரனை தொடமுடியாது. அதனால் தான் அவரை சார்ந்தவர்களை இலட்சக்கணக்கில் இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் மாற்று உடைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள். உலகமே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் சோனியா மட்டும் வாய் திறக்கவில்லை.

போரை நிறுத்தி விட்டு நீங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் உங்களை இரத்தின கம்பளம் போட்டு வரவேற்கிறோம். அதை செய்யாமல் நீங்கள் எப்போது வந்தாலும் எங்களின் எதிர்ப்பை காட்டியே தீருவோம்.

1962-ல் தமிழகத்தில் ஒரு எழுச்சி இருந்தது. அந்த எழுச்சி தற்போது இங்கு வரவேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்று யார் சொன்னாலும் அவர்களுக்கு எங்கள் இதயத்தை கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் பேசியதாவது:-

நாங்கள் பல போராட்டங்கள் மூலம் எங்கள் ஆதரவை இலங்கை தமிழர்களுக்கு தெரிவித்துள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 16 தொகுதிகளிலும் டெபாசிட் கிடைக்காது. காங்கிரஸ் சின்னமான கையில் ஆயுள் ரேகை இல்லாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:-

தமிழ்நாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள் யார் என்று சொல்லத்தான் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம். நமது இராணுவத்தின் மீது நமக்கு வெறுப்புவர காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி தான். 21/2 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கட்சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

இலங்கை செய்திகள்

Tuesday, May 12, 2009

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009


அநங்கம் மே இதழில்:

பத்தி

1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது)

2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்)

3. புத்தகப் பார்வை (காடு நாவல்) கே.பாலமுருகன்

4. வரையறை சம்பளம் யாருக்கு லாபம் (விக்னேஸ்வரன் அடைக்களம்)

5.பலகுரல் கலைஞனின் தனிமைக் குரல் (ஏ.தேவராஜன்)

6. மதிப்புரை: அநங்கம் பத்திகள் (இரா.கண்ணபிரான்)

7. கர்மா: மலேசிய திரைப்பட விமர்சனம் (செ.நவீன்)

8. திரும்பி பார்க்கும் சங்கடங்கள் (பொ.சந்தியாகு)

9.வேண்டும் ஒரு அகராதி (பாண்டித்துரை)

10. தமிழ்ப்பள்ளிகள் - பிரத்தியோக வகுப்புகள் : சாணக்கியமும் சவால்களும்

(கே.பாலமுருகன்)


சிறுகதை:

1. 2030-உம் இடைவெளிகள் 21உம் (முனிஸ்வரன் குமார்)

2. மானாவாரி மனிதர்கள் (சிதனா)

கவிதை:

1. தினேஸ்வரி கவிதைகள்

2. மீராவாணி கவிதை

3. அடிக்குரலெடுத்து கத்த வேண்டும் (சந்துரு)

4. ஒழுக்கம் (யோகி)

5. சிங்கப்பூர் சீனக்கவிதைகள் (தமிழில்: ஜெயந்தி சங்கர்)

6. பரதேசி விட்டுச் சென்ற கவிதைகள்-5 (ரமேஸ்.டே)

7. ப.மனிஜெகதீசன் கவிதைகள்

சிறப்பு பகுதிகள்

1. சந்துரு என்கிற கலைஞனின் ஓவிய ஆளுமை

2. கேள்வி பதில் (ஷோபா சக்தி)

3. மொழிப்பெயர்ப்பு அனுபவங்கள் பற்றி ஜெயந்தி சங்கர்

4.இவர்களுடன் சில நிமிடங்கள் (மா.சண்முக சிவா - கோ.புண்ணியவான்)

இதழாசிரியர்

கே.பாலமுருகன்

துணையாசிரியர்

ஏ.தேவராஜன்

ஆசிரியர் குழு

ப.மணிஜெகதீசன்

கோ.புண்ணியவான்

Friday, May 8, 2009

சிறுகதை - சாமியாடிகளின் கறை படிந்த பிரதேசமும் அலைந்துகொண்டிருக்கும் எண்களும்







கிழக்கைப் பார்த்து அடர்ந்திருக்கும் காட்டு வழியே 20 நிமிடங்கள் நடந்தால், ஒரு சிறு ஓடை தென்படும். அங்கிருந்து வலதுபுற மலைமேட்டில் ஒரு கோவிலின் கோபுரம் சிதிலமடைந்து வானத்தை எக்கிப் பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்து வீழும் பறவையின் சிறகு போல சொக்கியிருக்கும். நீ நின்று கொண்டிருப்பது ஒரு சாமியாடியின் கோவில் என்பதைத் தெரிந்து கொள். நேராக நடந்து மலைமேட்டின் தொங்கல்வரை செல்.

மிக அருகாமையில் தெரியும், பிறகொரு சமயம் உன்னை அது எங்கோ இழுத்துக் கொண்டு போகும் மாயைப் போல தெரியும். சடாரென்று கோவிலின் கோபுரம் கண்களிலிருந்து மறைந்து கானல்போல வெறும் வெயிலாக மாறுவதாகத் தோன்றும். கொஞ்சமும் அக்கறைப்படாமல் விரைந்து ஏறு. மலையின் உச்சியை அடைந்ததும் உனக்கு உடல் முழுவது வியர்த்திருக்கும். உடனே அந்த வியர்வையைத் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு 5 நிமிடம் அங்கேயே காத்திரு. உடல் மீண்டும் நிதானத்திற்குத் திரும்பியதும் உடலிலிருந்து ஏதாவது துர்நாற்றம் வீசுகிறதா என்பதைத் தெரிந்து கொள். இல்லையென்பதை உறுதி செய்தபின் கோவிலை நோக்கி நட.

“4 நம்பர் சொல்லு. . டே. . சொல்லுடா. . 4 நம்பர்லே எல்லாமும் அடக்கம்டா. . பொணத்து மேல உக்காந்து மை எடுக்கற கலை அவ்ள சாதரணம் இல்லடா. . தலைச்சம் பிள்ளையோடெ முதுகெழும்புலேந்து எடுத்த மை”

“டே. . முரளி. . 4 நம்பர். . டே. . நம்பர் எடுக்கப் போலயா. . டெ. . ஆத்தா காவல் கொடுக்கற நேரம் காட்டுலேந்து தலையடி சாமியாருங்க கொழ பண்றானுங்க. . முரளி. .டே. . தூங்கறான் பாரு.. டே”

அறைக் கதவைத் திறந்த அம்மா இன்னும் கொஞ்சம் நகர்ந்து என்னை நெருங்கியிருக்கலாம். அவரின் அழைப்பு காதுக்குச் சமீபத்தில் கேட்கிறது. விழிப்புநிலையில் இருந்தும் எந்தப் பிரதிபலிப்பும் உடலில் இல்லை. வெறும் பிரக்ஞை மட்டும் அறையில் இருப்பதாக உடல் எங்கோ நழுவிவிட்டது போல. எங்கோ ஒரு மலைபிரதேசத்தின் அடிவாரத்தில் அல்லது சுடுகாட்டின் இருளில் இப்படி அதிசயமான மனநிலையில் எங்கோ அலைந்து கொண்டிருக்கும் என் அகத்தின் பாதியை அம்மாவின் அழைப்பு கயிறு போட்டு இழுக்கிறது. குரல்களால் நிரம்பிய ஒரு வெளிப்பரப்பு.

“டே. . என்னா பண்றான் இன்னும்”

அம்மா வந்து உடலைக் கொஞ்சம் பலம் கொண்டு தட்டினார். மலையிலிருந்து உருண்டு கீழே விழுவது போல திடீர் விழிப்பு. கண்களைத் திறந்திருக்கும் எனக்கு எங்கேயிருந்து இந்த விழிப்பு?

“என்னாடா ஒடம்பு இப்டி வேர்த்திருக்கு? ஏகோன் ஓடுது”

அறைக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தும் நான் மட்டும் அறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தேன்.

“போய் நம்பரு எடுத்துட்டு வாடா. . மணியாச்சி. சீனன் கடயெ அடைச்சிருவான்”

நிராகரிக்க இயலாத குரல்கள் எனக்குள் உதிர்ந்து ஏதோ ஒரு உருவகத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. உணர முடிந்தது. தொண்டைக்குள்ளிருந்து என் அம்மாவின் முகத்தை எட்டிப் பார்த்து பிறகு மீண்டும் சலசலவென நீர்ப்போல உள்ளிறங்கி வயிற்றுப் பகுதியிலுள்ள செல்களை மோதுகின்றன.

“கெட்ட கனவு மாதிரி இருக்குமா”

“சரி. . சரி. . கெளம்பி போ”

வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உடலெல்லாம் கூசியது. மோட்டாரை எடுத்துக் கொண்டு நம்பர் கடைக்குச் சென்றேன். அது ஒரு அலமாரி கடை. எல்லாம் பலகை அலமாரிகள். அந்தக் கடைக்குள் நுழைந்து உள்ளே இருட்டில் இருக்கும் ஒரு அறைக்குள் போனால், முதலாளியின் தம்பி பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பான். எப்பொழுதும் உத்தமன் போல வியாக்கியானம் செய்துகொண்டிருக்கக்கூடியவன். அண்ணனைப் பற்றி ஏதாவது குறைப்பட்டும் கொள்வான்.

“ஏசோக் யூ அடா கெனாலா நம்போர்”

நாளை எனக்கு நம்பர் அடிக்கப் போகிறது என்று சப்புக் கட்டினான் மலாய் மொழியில். அவனிடமிருந்து எதையும் கேட்கும் மனநிலையில் நானில்லை. 4 நம்பரை மட்டும் ஒரு தாளில் எழுதிக் கொடுத்தேன். அப்பாவின் கார் எண்கள். 7169. அவன் அதைப் பார்த்துவிட்டு ஏதோ முனகினான். அந்த அறையின் இருப்பு அமானுடமான சூழலை ஏற்படுத்துவது போல இருக்கும். தொலைவில் எறியும் சிவப்பு விளக்கும் அதன் உக்கிரமும் நமக்குள்ளும் தாவுவது போல ஒரு பிரமை.

“யூ மாவு தேங்கோக் போமோ சீனா? பொலே கென்னா நம்போர்லா”

சீன சாமியாடியைப் பார்க்கிறாயா? உனக்கும் அதிர்ஸ்டம் கிட்டுமென அவன் உதிர்த்த வார்த்தைகள் கனவில் சொல்வது போல தோன்றியது. எப்பொழுது வெளியே வந்தேன் என்று தெரியவில்லை. சூழலைப் பற்றிய தெளிவு கிடைக்கும்போது மோட்டாரில் சென்று கொண்டிருந்தேன்.

கிழக்குப் பார்த்த ஒரு திசையில் அடர்ந்த காட்டுப் பாதையில் ஓர் இருளில் நகர்ந்து கொண்டிருந்தேன். எங்கோ மலையின் உச்சியிலிருந்து உச்சாடனக் குரல்கள் சரிந்து அடிவாரத்தில் இறங்கி காடு முழுக்க பரவுவது போல ஒரு சப்த அதிர்வு. யாரோ என்னைக் கட்டி இழுத்துக் கொண்டுருக்கிறார்கள். தூரத்திலிருந்து அந்தக் குரல் ஏதோ முனகுகின்றது. அந்த முனகல் ஒரு மந்திரம் போல என்னை இயக்குகின்றது. ஒரு மரத்தடியைக் கடக்கும்போது அம்மாவும் அப்பாவும் அங்கு அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருப்பது தெரிகிறது. அவர்களை நோக்கி என் வார்த்தைகளை அள்ளி வீசுகிறேன். வெறும் காற்று மட்டும் கசிகிறது எனக்குள்ளிருந்து.

“இங்கு வந்து உக்காரு. . உன் பேரு என்னா?”

“முரளிதரன்”

“முரளி. . நீ வந்து சேந்திருப்பது மலையடி சிவசக்தி கோயிலு”

“உனக்குள்ள 4 நம்பரே இறக்கி உங்க உலகத்துலே இருக்கற குரல்களெ சேகரிக்கனும். . நல்லா கேளு. . உன் வயித்துக்குள்ள முளைச்சிருக்கற சுடுகாடு ரொம்ப பயங்கரமானது. . செத்தவன் சும்மா இருக்கமாட்டான். . வெளிய வரப் பாப்பான். . அவன் வெறும் வார்த்தைகளால் உள்ளவன். . உன்ன பயன்படுத்தி ஒரு வார்த்தையா வெளிய வந்துருவான். . அவனுங்களே அடக்க எண்களால் மட்டும்தான் முடியும். . எண்களெ அழிக்கனும். . அது பற்றிய பிரக்ஞையை எல்லாரும் இழக்கனும். . அப்பத்தான் அந்தச் சுடுகாட்டுப் பிணங்கள் அடங்கும். நல்லா கேட்டுக்கெ நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கோயிலுக்கு வந்துட்டெ. .”

அறைக் கதவைத் திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள். அப்பாவின் கைகள் என் மீது பட்டு என்னை எதுலிருந்தோ மீட்கின்றன.

“டே. . நேத்து எடுத்தியே நம்பரு அடிச்சிருச்சிடா”

கண்களைத் திறந்ததும் வீட்டிற்கு வெளியிலிருந்து நான்கு உருவங்கள் உள்ளே நுழைய காத்திருந்தன. எட்டிப் பார்த்தேன். அதிர்ந்து போவதற்குள் மீண்டும் அப்பாவின் குரல்.

“டே. . போயி சீனன்கிட்ட காசெ வாங்கிட்டு வந்துரு. எப்படியும் 2000 வெள்ளி கிடைக்கும்”

உடல் ஊனமுற்ற குழைந்தைகள் போல அந்த நான்கு உருவமும் வளைந்து நெளிந்து, சுருண்டு, தவழ்ந்த நிலையில் மனித உருவத்திலிருந்து பிசகிய ஓர் அசாத்திய தோற்றத்தில் இருந்தன. மயக்கம் தலைக்கு எட்டி ஓங்கி அடித்தது. மெல்ல அந்த நால்வரும் வீட்டிற்குள் நீர்ப்போல உருகி ஊர்ந்து நுழைந்து கரைந்தார்கள்.


2

அவ்வளவு தூரம் வந்து இன்னும் தோட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதை வளைந்து வளைந்து எங்கோ போய்க்கொண்டிருந்தது. அவ்வப்போது புதியதாக முதுகில் ஒரு வலி துவங்கியிருக்கிறது. முதுகு தானாக வளைந்து கொள்ளவும் செய்கிறது. பயண அசதியின் வெளிப்பாடாக இருக்கலாம். 14ஆம் எண் தோட்டத்தில் ஒரு சாமியாடி இருப்பதாகக் கூறியிருந்தார்கள். அவரைப் பார்த்து ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று தோன்றியது. பாதையின் இழுவைக்கேற்ப விட்டுக் கொடுத்தவனாக மோட்டாரில் நகர்ந்து கொண்டிருந்தேன். இரப்பர் தோட்டத்து எல்லைவரை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஒரு பாதை இலேசாக நெளிந்து காட்டுக்குள் ஓடியது. வழிப்போக்கர்கள் யாரும் இல்லாததால் ஏதோ நம்பிக்கையில் உள்ளே நுழைந்தேன்.

“யாம்மா இங்க சாமியாடி இருக்காராமே. . அவர் வீடு எங்க?”

“அதோ அங்க இராமர் கோயிலு இருக்கே, அதுக்குப் பக்கத்துல முனியாண்டி சாமி கோயிலு இருக்கும் பாருங்க. . அங்கத்தான் அவரு வீடு”

உள்ளே நுழைந்ததும் அந்தச் சாமியாடி காவி வேட்டிக் கட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு உறங்கிவிட்டிருந்தார். சங்கடத்துடன் இலேசாக அவருக்கு முன்னால் போய் முனகினேன். இல்லை, நான் முனகவில்லை. ஏதோ உள்ளுக்குள்ளிருந்து.

“வாங்க உக்காருங்க. . சாரி. . தூங்கிட்டேன். மத்தியானம் இப்படித்தான் சாப்டுட்டா தூக்கம் வந்திருது. . சொல்லுங்க என்னா விசயம்? ஏதாவது முடி கயிறு கட்டனுமா? இல்லெ பேயு ஓட்டனுமா?”

“சாமி. . என்னோட பிரச்சனயே வேற. . எனக்கு எப்பவும் ஒரு கனவு வருது ஆனா அந்தக் கனவு ஒவ்வொரு நாளும் வளந்துகிட்டே வருது. அன்னாடம் கனவுலே நான் ஒரே பாதையிலே ஒரே மலை உச்சிய நோக்கி போறேன். . அங்க ஒரு கோபுரம் தெரியுது. . சாமியாடி ஒருத்தர் இருக்காரு. . அவர் எனக்குப் புரியாத பல விஷயங்களே பேசறாரு”

“என்னப்பா ஏதோ கனவு கினவுனு புலம்பறே. . இந்த மாதிரி கெட்ட கனவுலாம் வர்றது சாதாரணம்தானே. . அதுக்கு என்னா. . ஒரு முடி கயிறு கட்டனா சரியா போயிரும்”

“இல்ல சாமி . . ஏதேதோ நடக்குது. என் வயித்துக்குள்ள ஒரு சுடுகாடு இருக்குனு அந்தச் சாமியாடி சொல்றாரு. . ஆனா என் வயித்துலேந்தோ இல்ல என் உடம்புக்குள்ளேந்தோ ஏதோ ஒன்னு இந்த வெளி உலகத்தெ எட்டிப் பாக்குது சாமி. .என்னால அதெ உணர முடியுது. கனவுலே நான் என் பயணத்தெ எங்க முடிக்கறனோ மறுநாள் கனவுலே அங்கேந்தே பயணத்தெ தொடர்றேன் சாமி. .”

“என்னப்ப உளர்றே? வயித்துக்குள்ள சுடுகாடா? அட நி ஒன்னு. சும்மா இதெல்லாம் ஏதாவது காக்கி சேட்டெ அடிச்சிருக்கும். காட்டுப் பாதையிலே போயிருப்பெ.இரு துன்னுரு தர்றேன். போட்டுக்கோ”

வந்த நோக்கம் எதற்கும் இடம் கிடைக்கவில்லை. சாமியாடி ஏதோ மந்திரம் ஓதி என் நெற்றியில் திர்நீரை அப்பினார்.

“தம்பி. . ஒரு நேரத்துக்கு ஒரு மாதிரியா தெரியறே. தூரத்துலேந்து பாத்தேன் உன் தலெ ரவுண்டா வலைஞ்சி உடம்புலேந்து வெளியே வந்துட்ட மாதிரி இருக்கு. தொங்கிப் போது. பாத்துப்பா. ரொம்ப குனிஞ்ச வேல ஏதாச்சம் செய்யறயா?


3

மலை உச்சியின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அந்தச் சாமியாடி ஒரு மஞ்சள் விளக்குப் போல கோவிலின் கோபுரத்து சுவரிலிருந்து பிளந்து உள்ளே ஊற்றினார். அவரின் உருவம் நீர்ப்போல உருவமற்ற நிலையில் பரவியிருந்தது.

“பயப்படாதெ! நான் உனக்குள் இருக்கும் ஆழ்மன பிரமை! இல்ல இந்தக் கோயிலோட முன்னால் சாமியாடி. எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ. எங்கள் உலகம் உன்னெ பயன்படுத்தி பூமியில உள்ள எல்லாம் எண்களையும் மீண்டும் எடுத்துக்க போறோம். நீ எண்களால் உருவானவன். உன்னெ உன் வயித்துக்குள்ள இருக்கற பிணங்களெ திண்றதுக்காக எல்லாம் எண்களும் உனக்குள்ள வந்துகிட்டு இருக்கு. அருவி போல நீர்ப்போல. நீ ஒருநாள் கரைஞ்சி போகப் போற. எல்லாத்தையும் மீட்கப் போறோம்.. சாமியாடிங்க செஞ்ச எல்லாத்தையும் மீட்கப் போறோம். . எண் மேல செலுத்தன எல்லாம் சூனியங்களையும் எடுத்துக்க போறோம். உலகத்துல்ல மனுசாளுங்க மாதிரி ஒவ்வொரு நாளும் ஒரு எண் பிறக்குது வளருது, ஒவ்வோர் மனுசனோட வயித்துக்குள்ளயும் போயீ உயிர் வாழுது. பிறகொரு சமயத்துலே அவன் ஒரு எண்ணாகவே இருக்கான். அவனுக்குள்ள அந்த எண்தான் எல்லாமுமா இருக்கு.”

4

என் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். முதுகு தண்டு ரொம்பவே வளைந்து காணப்பட்டது. அந்தக் கனவுலகிருந்து என்னால் மீளமுடியவில்லை. தினமும் ஒரு கராரான குரல் எங்கோ தொலைவிலிருந்து கேட்கிறது. இது என்ன பித்தநிலையா அல்லது பிரமையா? வீட்டு முன்வாசலில் வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி அங்கிருந்து கொண்டே ஏதோ முனகினார்.

“டே. . ஏதோ நம்பரு அடிச்சிருச்சாம்? நல்ல இராசிக்காரன்தான் நீ. அந்தக் காலத்துலே நம்பரு அடிக்கறதுக்காக என்னனமோலாம் பண்ணுவானுங்க, வசியம் செய்வானுங்க, சுடுகாட்டுலே உக்காந்து பொணத்துலேந்து மை எடுத்து என்னனமோ பண்ணுவாங்க நம்பரு அடிக்க, அடிச்சிட்டா கோயில்லெ போய் கெடா வெட்டுவானுங்க. நீ அதெல்லாம் செய்யாம பெரிய தொகையா அடிச்சிட்டியே. நம்பரு அடிச்சி நல்லா சாப்டு “8” மாதிரி தலெ சிறுத்தும் வயித்துக்குக் கீழே பெருத்தும் இருக்கறயே”

பகீரென்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கண்ணாடியின் முன் என்னைப் பார்த்தேன். முதுகு தண்டு வளைந்து, கால்கள் சுருங்கி “6” போல தெரிந்தேன். தலை காணாமல் போயிருந்தது.


ஆக்கம்

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
திண்ணை (08.05.2009)

Wednesday, April 29, 2009

படைப்பாளிகள் எஸ்.ராமகிருஷ்னன் ஜெயமோகன் போன்றவர்களைக் காக்கா பிடிப்பது எப்படி?

காக்கா பிடிப்பது என்ற சொல் பிரயோகம் சும்மா தன் துணிவைக் காட்டுவதற்காக சிலர் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். அப்படிச் சொல்வதால் அது அந்த மனிதரை இழிவுப்படுத்துவதாக ஆகிவிடும் என்கிற அவர்களின் நம்பிக்கையில் ஒரு பெரும் துணிச்சல் இருப்பதாக வேறு நினைத்துக் கொள்கிறார்கள். இதில் சிறிய குழப்பம் இருக்கிறது.

எது காக்கா பிடிப்பது என்று சொல்ல முடியும்?

நாம் காரியத்தைச் சாதித்துக் கொள்ள நம் தேவையை நிறைவேற்றிக் கொள்ள காக்கா பிடிக்கலாம். அந்தச் சமயத்தில் சில உத்திகளைக் கையாள வேண்டும் போல. அந்த நமது காக்கா பிடிக்கும் படலத்தில் பலியாகப் போகும் நபரிடம் இல்லாத ஒன்றையும் இருப்பது போல புகழ்ந்து தள்ளுவது அல்லது இருப்பதை மிகைப்படுத்தி சொல்வது, கூடுமான வரை அவரை உச்சத்தில் வைத்துப் புகழ்வது. (உச்சம் என்கிற அளவுகோல் மிக முக்கியம்). சும்மா சாதரண புகழ்ச்சிக்கெல்லாம் சிலர் மயங்கிவிட மாட்டார்கள்.

மேலும் அவரின் மூலம் உங்களை நீங்கள் முன்னிறுத்த வேண்டுமென்றாலும் காக்கா பிடிக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு மனத்திருப்தியோ அல்லது ஆதாயமோ இருப்பதற்கு வாய்ப்புண்டு.

ஒரு சிலர், அவரை அழைத்துக் கொண்டு போய் அவர் குடிகாரராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மலிவான மது முதல் உயர்தர மதுவரை வாங்கிக் கொடுத்து அசத்தி பேர் போட்டுக் கொள்ளலாம்.

முடிந்தால் அவரை அழைத்துக் கொண்டு போய்(சொந்த வாகனமாக இருந்தால் நீங்கள் காக்கா பிடிப்பது அவ்வளவு வெளிப்படையாக தெரியாது) நகரத்தையோ அல்லது புராதான இடங்களுக்கோ செல்லலாம். அவர் உங்களின் நேர விரயத்தையும் தியாகத்தையும் கண்டு மனம் நெகிழும் தருணத்தில் உங்களின் காக்கா பிடிக்கும் படலம் வெற்றி அடைந்துவிட்டது என்று அர்த்தம். சிலர் இப்படித்தான் காக்கா பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். மிகவும் நுட்பமான முயற்சிகள் இது. யாரும் எளிதில் கண்டு கொள்ளாதவாறு.

நானும் அனுதினமும் பெரும்பாடுபட்டும் பல கோயில்கள் ஏறி இறங்கி, அங்கபிரதேசம் செய்து, இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் முக்கிய படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களிடம் மின்னஞ்சல் மூலமாக என்னால் முடிந்தவரை இறை அருளால் காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஜெயமோகன் படைப்புகளின் 2 வருட வாசகன் என்கிற முறையில் அவரின் பெரும்பாலான படைப்புகள் என் ஆழ்மனதைப் பாதித்துள்ளன. பலமுறை எதையோ தேடி என்னையே கண்டடையும் பெரும் முயற்சிகளில் ஒரு மகா வெளிக்குள் உள்நுழைந்து பிசகி, தொலைந்து பலமுறை காணாமல் போயிருக்கிறேன் ஜெயமோகன் படைப்புகளில்.

மூத்த படைப்பாளியான அவருக்கு, இன்று மிக பரபரப்பாக அச்சு இதழ்களும், இனையத்திலும் இயங்கிக் கொண்டு ஆழமான தத்துவம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவருக்கு, என் மின்னஞ்சல்களெல்லாம் அவர் பதில் போடுவதே நான் செய்த அங்கபிரதேசத்தின் பலன் தான். வேண்டுமென்றால் இந்த வருடம் காவடி எடுத்து 1000 குடங்களை உடலெல்லாம் குத்திக் கொண்டு அடுத்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைக் காக்கா பிடிக்கும் படலத்தில் வெற்றி காணப் போகிறேன். இதனால் எனக்கு ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், அவர்களின் தரமான படைப்புகள் பற்றி எனது மானசீகமான வாசக மனதை பகிர்ந்து கொள்ள ஒரு சிறு சந்தர்ப்பமே. மேலும் கொஞ்சம் அங்கீகாரமும் கிடைத்துவிடும் போல என்கிற சிறு நம்பிக்கையும். என்ன அங்கீகாரம், “ஆமாம் தம்பி! உங்களோட கதைகளையும் இணையத்திலும் அச்சு இதழ்களிலும் பார்த்து படித்திருக்கிறேன்..” என்கிர சொல்தான். இது கெஞ்சல் அல்ல. நான் நேசிக்கும் படைப்பாளிகளின் கவனம் நம் மீது படாத என்கிற எதிர்ப்பார்ப்பு. சில நல்லுள்ளங்கள், என்றுமே யாரையும் சாராத நல்லுள்ளங்கள் வேண்டுமென்றால் இதைக் கெஞ்சல், காக்கா பிடித்தல் என்றெல்லாம் முழங்கி கொள்ளட்டும். கவலையே இல்லை.

இது ஒரு வாசகனுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவு, தொடர்பு. வார்த்தைகளால் பிறரின் படைப்பை பற்றி நேர்மையாக சொல்ல பகிர்ந்து கொள்ள எனக்கு வாய் வரவில்லையென்றால், பிறகென்ன படைப்பாளி?

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில் மனதைப் பறிக்கொடுக்காதவர்கள் இருப்பார்களா? இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது அவர்களின் வாசக மனம் சார்ந்தது. அப்படி அவரின் எழுத்தில் வசம் கொண்டால்தான் என்ன தப்பு? குற்றசெயலா? எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை நேரடியாகச் சந்திக்கும் போது அவர் தான் ஒரு எழுத்தாளன் என்கிற கர்வத்தையும் எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நண்பனைப் போல அவரும் கோணங்கியும் புத்தகம் திருடிய கதைவரை பகிர்ந்து கொண்டார்.

இங்கு காக்கா பிடித்தலோ, நரி பிடித்தலோ வெறும் வசை சொல்லாடலாக தேங்கி நின்றுவிடும். மனிதம் மட்டுமே. சக மனிதனிடம் நாம் கொள்ளும் அன்பு, ஒரு படைப்பாளியின் மீது நாம் கொள்ளும் நட்பு, எதிர்பார்ப்பு. . இப்படி வாசக- படைப்பாளி உலகம் தர்க்கத்திற்குள் கட்டுபடாதது.

இறுதியாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் நான் காக்கா பிடித்து மின்னஞ்சல் அனுப்புவதால், அவர் எனக்கு இலவசமாக ஒரு புத்தகம் போட்டோ, அல்லது தனிபட்ட முறையில் எனக்கு அவர் பணம் அனுப்பியோ, அல்லது இதன் மூலம் எங்களின் பேங்க் பேலன்ஸ் நிரம்பி வழிதலோ, ஆகிவிடாது.

குறிப்பு: சாரு அவரிடம் ஒருமுறை என் கதையை அனுப்பி வைத்தேன். இன்னும் புளோக் அல்லது வலைப்பதிவு இல்லாத காலகட்டம் என்பதால் எப்படிப் பிரரின் பார்வைக்கு மதிப்பீடுகளுக்கு நமது படைப்பைக் கொண்டு போவது என்ற வழி தெரியாததால்தான். பிறகு இப்பொழுதெல்லாம், என் கதைகள் படைப்புகள் யுகமாயினி, உயிரெழுத்து, வார்த்தை போன்ற இதழ்களின் வருவதால், மேலும் திண்ணை.காம், உயிரோசை.காம் போன்ற இணைய இதழ்களிலும் வருவதால், எனகென்று சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருப்பதாலும் என் கதைத் தனியாக பிரதியாக்கி யாருக்கும் அனுப்ப வேண்டும் என்கிர கட்டாயம் எனக்கில்லை. அப்படியே அனுப்பி கருத்து கேட்டால், யாருக்கு அப்படி என்ன முதுகு வலி?

வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

கே.பாலமுருகன்

Monday, April 27, 2009

சக உயிரின் மரணம் - 2003இல் ஒரு பதிவு

என் கைகளில்

பாவத்தின் அறிகுறியும்

ஜோனியின் மரணவாடையும்

நிலைத்த சூன்யமாய் . . . . .

கைகள் இரண்டையும்

உதறிப் பார்க்கிறேன்

ஜோனி நன்றியுணர்வுடன்

என் கைகளைப் பற்றிக் கொண்டு

நின்று கொண்டிருக்கிறது.

ஜோனியின்

வாழ்க்கையின் அரைகுறைகள்

என் முதுகிலிருந்து

பாவ அடையாளங்களாய்

விரிந்துகொண்டிருக்கின்றன.

இழந்த சக உயிருக்காக

6 வருடம் கழித்தும்

நினைவு கூர்கிறேன்.

நாய் வளர்ப்பது என்பது நமது பால்ய காலத்தின் மிகப்பெரிய கனவு எனலாம். நாம் வளர்த்த செல்ல பிராணிகளின் வழி நமது பால்யத்தை மீட்டுணரலாம். அதிலும் நாய்கள் காட்டும் நன்றியும் அன்பும் , மனிதர்களோடு ஏன் இந்த இனம் மட்டும் இவ்வளவு நெருக்கமான உறவை வெளிப்ப்படுத்திக் கொள்கிறது என்ற வினாவும் எழுகிறது.

சிறுவயது முதல் ஏதாவது ஒரு நாயின் மரணம் நம் வாழ்வின் நீங்க மறுக்கும் பதிவுகளாக பின் தொடர்ந்து வந்திருக்கும். நினைக்கும்போது அது வெறும் நாய்களின் பெயர்கள் அல்ல, அதையும் கடந்த நமது அன்பைப் பகிர்ந்து கொண்ட இன்னொரு உயிரின் அடையாளமாகவே நீள்கிறது.

அன்புடன்

கே.பாலமுருகன்

“நெளிந்தோடும் பால்யத்தின் மீதான வார்த்தைகள்”




தேட தேட
முடிவில்லா நதியைப் போல
சப்தங்களை இரைச்சல்களை
விழுங்கியபடி
நெளிந்தோடுகிறது
பால்யம்”




பால்யம் தொட்டு, பல கவிஞர்கள் தமது பதிவை கவிதைகளாக கதைகளாக, பத்திகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுத எழுத மீண்டும் மீண்டும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது பால்யம் மட்டுமே எனக்கூட தோன்றுகிறது. இயக்குனர் சத்ய ஜித்ரே அவர்களின் “பாதேர் பஞ்சாலி” படம், மிக நீள் துயரத்தின் படிமங்களில் மூழ்கி படைப்பின் மிக துல்லிய தருணத்தில் உலகை எட்டிப் பார்க்கும் ஒரு பால்யத்தின் நெடுங்கதைதான்.




அந்தப் பால்ய நதியின் கரைகளில் இன்றும் நமது மூப்பின் பிம்பங்கள் வளர்ந்து விரைத்து, உடைந்து, சிதைந்து, மீண்டு, வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் பால்யத்தின் தரிசனங்களை எவ்வித சலனமுமின்றி நீர் குமிழின் சிறு பிளவுகளைப் போல கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அந்தத் தரிசனங்களுக்கு மத்தியில் ஒரு கானல் நீரைப் பார்ப்பது போன்ற மனோபவத்துடன் வாழ்வு தந்திருக்கும் எல்லாம் சம நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சமாளித்துக் கொண்டு பால்யத்தை ஒரு கனவு போல எதிர்கொண்டவர்களாய் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.




“மிக சுமாரான
ஓர் உறக்கத்தில்
தொலைந்திருந்தபோது
சடாரென துள்ளிக்குதித்து
மிதக்கின்றன பால்யத்தின்
முகங்கள்”

பால்யத்தைக் கவிதைகளில் கையாளும் ஒரு சில எழுத்தாளர்கள், அதன் குறியீடாக பொம்மைகளைக் கொண்டு வருகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கட்டிலுக்கடியில் கிடக்கும் தலை அறுந்த பொம்மைகளைப் பால்யத்தின் நினைவுகளென சொல்கிறார். அந்த மாதிரி எல்லாரின் வீட்டிலும் தமது பால்யத்தை ஏதோ ஒரு பொருளைச் சேமித்து வைத்திருப்பதன் மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். நான் எனது 6ஆவது வயதில் பயன்படுத்திய பெங்குயின் பொம்மை விளையாட்டு இயந்திரத்தை அப்படியே வைத்திருக்கிறேன். பெங்குயின் பொம்மைகள் அந்த இயந்திரத்தின் மின்சக்தியால் படிகளில் ஏறி சொந்தமாக சறுக்கி விளையாடும். ஸ்காப்ரோ 2-இல் இருக்கும் போது அப்பா வாங்கி வந்து கொடுத்தது.




இப்பொழுது அந்தப் பெங்குயின் பொம்மைகள் சறுக்கி விளையாடும் சக்தியை இழந்து பழுதுபோன பொருளாக கிடக்கின்றன. ஆனால் என்னவோ அந்தப் பொம்மைகளைப் பார்க்கும் போது மனம் தானாக பால்யம் என்கிற படிகளின் வழியாக இறங்கி வந்து என் 5 ஆவது வயதை எட்டிப் பார்க்கத் தூண்டுகிறது.




“பெங்குயின் பொம்மைகள்
போல
இருந்துவிட்டால்
சறுக்காமல் இருந்திருக்கும்
பால்யம்”

இப்படியாகக் கவிஞன் தனது கவிதை மொழியின் வாயிலாக இழந்த பால்யத்தின் கொண்டாட்ட பொழுதுகளை, தோழர்களின் கதறல்களை, தூக்கி வீசி விளையாடிய பொம்மைகளை என்று எல்லாவற்றையும் தமது நிகழ் உலகத்திற்குள் படிமங்களாகக் கொண்டு வந்து மீள் உருவாக்கம் செய்ய முற்படுகின்றான். அவனது பால்யத்தை தமது வார்த்தைகளால் தனக்குள் சேமித்துக் கொள்கிறான். அந்தவேளையில் அவன் முகம் சிறுத்து, கை கால்கள் சுருங்கி, தொலைத்த பால்ய பொம்மையைத் தேடி ஓடுகிறான். ஒவ்வொருவரும் தமது பால்யத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் தமக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளை மிகவும் சுதந்திரமாக எல்லார் முன்னிலையும் ஒரு குழந்தையைப் போல பகிர்ந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது.

“குளுகுளு நான்சுவர் அறையில்
காட்சிக்கு வைக்கப்பட்ட
பொம்மைப் போல
படுத்திருக்கும் என்னை
வாநீர் ஒழுக
வீட்டின் வாசல்படியில்
படுத்துறங்கிய
நாட்களுக்குள்
கொண்டு செல்வது
இந்தப் பால்யத்தின்
மீத நினைவுகளே”

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Friday, April 24, 2009

நகரத்தில் வாழும் கிழவர்கள் - ஒரு நகரமும் சில மனிதர்களும்




“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்”

பழைய சைக்கிள்கடையோரமாக இந்த மாதிரியான பழைய பாடலின் வரிகளைக் கேட்கும் போது சக்கரச் சுழற்சியில் இயங்கிக் கொண்டிருந்த உடல் சட்டென்று சிறிது நேரத்திற்கு நின்றுவிடுகிறது. உள்ளம் அந்த வரிகளைக் கேட்டு என்னவோ செய்துவிடுகிறது. அந்தக் குரலில் தெரிந்த தளர்வும் தனிமையும் மன உணர்வுகளைப் பிளிவது போல் இருக்கும். நிமிர்ந்து அந்தப் பாடல் வந்த திசைகளில் பார்க்கும்போது அது யாரோ ஒரு கிழவராகத்தான் இருக்கும். முகத்தில் சோர்வும் மெலிந்த தேகமாகவும் வெயிலின் உச்சக்கட்ட கொந்தளிப்பில் அமர்ந்துகொண்டு இலேசான சிரிப்புடன் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார்கள்.

“ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலைவிட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலேயே!”

நகரத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு தற்செயலில் நான் சந்திக்கும் கிழவர்கள் ஏதாவது ஒரு பழைய பாடலுடன்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வில் அந்தப் பழைய பாடல்கள் ஒரு அங்கமாக இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

நகரம் கொடுக்கும் பயங்கரக் கனவுகளிலிருந்து விடுபட்டு அவர்களைத் தனித்து காட்டுவதே அவர்களின் இந்தப் பழைய பாடல்களின் வரிகள்தான். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோவில் மண்டபங்களின் ஓரங்களில் பாலத்தின் அருகேயுள்ள மரத்தடியில் என்று வாழ்விடமின்றி கசங்கிப் போன ஆடைகளுடன் தாடி வளர்ந்து ஒட்டிய வயிறுடன் கிடக்கும் கிழவர்கள்கூட பழைய பாடலின் வரிகளை இராகம் தப்பிப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்கும்போதுதான் குற்ற உணர்வு மேலோங்குகிறது. அதற்கு மேல் அவர்களைக் கடக்க முடியாமல் இயந்திரக் கால்கள் நடுங்குகின்றன.

“இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா”

வாய் முழுக்கச் சிரிப்பாக பசியையும் கடந்த ஒரு ஏகாந்த நிலையில் அமர்ந்து கொண்டு அந்தக் கிழவர்கள் பாடும் வரியில் பழைய நூற்றாண்டையே தூக்கி வந்து நகரத்தில் எறிவது போல இருக்கும்.

கோவில் மணடபத்தின் ஓரங்களில் அமர்ந்திருக்கும் கிழவர்கள்
அந்தக் கிழவர்களின் முகங்கள் யாவும் கடவுளின் சிந்தனையையே மறக்கடித்துவிடும். உறவுகளைத் தொலைத்த பிறகு ஏதோ ஒரு வெயில்பொழுதில்தான் அவர்கள் அங்கே வந்து என்ன செய்வதென்று தெரியாமல் நகரம் கொடுத்த வெறுமையில் பழைய பாடல்களைப் பாடத் துவங்கியிருக்க வேண்டும்.

நிஜ வாழ்க்கை ஏற்படுத்திய மனஅழுத்தத்தில் சுயத்தெளிவை இழந்து கடந்தகால வாழ்வின் மகிழ்ச்சிகளைச் சமாதானத்திற்காக நினைவுகூறும்போதுதான் எங்கிருந்தோ அந்தப் பழைய பாடல்களின் வரிகள் உதிர்ந்து கொள்கின்றன. மீண்டும் மீண்டும் அவர்களின் இளமைகால சாட்சியாக அந்தப் பாடல்கள் மட்டுமே மீதமிருக்கின்றன.

“உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா!
வருவதை எதிர்க்கொள்ளடா”

கர்ணன், கட்டபொம்மன், கைலாச சிவன், வைக்குண்டத்தின் பெருமாள், தமிழ்க் கடவுள் முருகர், இராகவேந்திரா, சை பாபா, என்று எல்லாரும் அவர்களின் பாடலில் எங்கோ ஓர் இடத்தில் வந்து போகிறார்கள். சமயச் சொற்பொழிவு கொடுக்கும் ஆன்மீகத் தன்முனைப்பைவிட அவர்களின் பாடல் வரிகள் உள்ளூக்குள் எதையோ தட்டி எழுப்பிவிடும்.

அந்தக் குரல்கள் உச்சரிக்கக்கூடிய சொற்கள் சோகத்தின் இசையாக வந்து உடலையும் உள்ளத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துவிடுகின்றது. கோவிலின் உள்ளே அமர்வதைவிட வெளியே அவர்களின் பாடல்களைக் கேட்டவாறு அவர்களுக்குத் தெரியாமல் அமர்ந்திருப்பதில்தான் மனம் ஆறுதல் கொள்கிறது.

“கெஞ்சோற்றுக் கடன் தீர்க்க- சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா!”

வீட்டுப் பிரச்சனைகள் தரும் பரபரப்பை தாங்க முடியாமல் போகும் கணங்களில் அந்தக் கோவில் பக்கமாகப் போய்விட்டு வர மனம் தூண்டுகிறது. என்னைப் போல பலர் அந்தப் பாடல்களைக் கேட்பதற்காகவே அங்கு அந்த மண்டபத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். நகர இருளுக்குள்ளிருந்து அந்தக் கிழவர்களின் பழைய பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.

எப்பொழுதாவது அவர்களை நெருங்கி 5 வெள்ளியோ 2 வெள்ளியோ நீட்டும் போது, பாடலை நிறுத்தாமலே அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் பாடலை உற்சாகம் நிறைந்த குரலுடன் அவர்கள் தொடரும் போது பிறவி புண்ணியம் அடைந்துவிட்டது போல இருக்கும்.
என்னைப் போல பலர் அந்தக் கிழவர்களின் பாடலைக் கேட்டு, பணம் தந்துவிட்டுப் போவார்கள்.

கிழவர்கள் தொலைத்த வாழ்க்கையைப் பற்றி யாருக்குமே அக்கறை இல்லை. நகர மனிதர்களின் இழுப்பறி வாழ்விற்கும் அவர்களின் நகரப் பிரச்சனைகளுக்கும் அந்தக் கிழவர்கள் பாடக்கூடிய பழைய பாடல்களின் வரிகள் ஏதோ ஒருவகையில் ஆதரவாகவும் கணநேர உற்சாகமாகவும் இருந்துவிடுகின்றன.

“பகவானே மௌனமேனோ?
இது யாவும் நீதிதானோ? பரிதாபம் என்னைக் கண்டு
கருணையில்லாததேனோ?”

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

(மக்கள் ஓசை நாளிதழில் தொடராக வந்த கட்டுரை- பகுதி 3)