Monday, October 12, 2009

தமிழாசிரியர்கள் எங்கே?

கோலா மூடா யான் மாவட்டத்தில் உள்ள எல்லாம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அதன் மாவட்ட அதிகாரியின் மூலம் கவிதைக் கருத்தரங்கம் குறித்து அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் நேற்று நிகழ்வில் கெடா கோலா மூடா யான் மாவட்டத்திலுள்ள 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 4 ஆசிரியர்கள் மட்டுமே இலக்கிய ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டது வரவேற்க்கத்தக்க ஒன்று என்றும் சொல்லலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட பலர் எழுப்பிய கேள்வி எங்கே தமிழாசிரியர்கள்? கொடுக்கப்பட்ட பதில்கள்:

ஒருவேளை : 1. தீபாவளி நெருக்கம் என்பதால் அலைச்சல்


2. இலக்கிய ஆர்வம் இல்லாமல் போய்விட்டது


3. கட்டாயப்படுத்தாதவரை எனக்கெதற்கு இலக்கியம் என்கிற
மனோநிலை

(குறைந்தபட்சம் கலந்துரையாடலில் கலந்துகொண்டு விவாதம் செய்திருக்கலாம், தனது எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கலாம்-)

மூன்று மலேசிய தமிழ் நாளிதழ்களில் அறிக்கை கொடுத்தும் ஏன் தகவல் சேராமல் இருந்திருக்கும்? வாய்ப்பில்லை, காரணம் ஒருசிலர் அதிகபட்சமாக வாசிப்பதே இந்த நாளிதழ் மட்டும்தான். கல்வி இலாகா தொடர்புடைய ஒருவர் இலக்கிய நிகழ்வுகளுக்கும் நமது ஆசிரியர்களுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது போல என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

கடந்தமுறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் “சிறுகதைக் கருத்தரங்கம்” நடத்தும்போதும் அதில் கட்டாயத்தின்பேரில் கலந்துகொண்ட சில ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குறைப்பட்டுக் கொண்டனர். அந்த ஆசிரியர்கள் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்.

“எதுக்கு எங்களெல்லாம் இந்த நிகழ்ச்சில்லெல்லாம் கலந்துக்க சொல்றாங்க”
“நாங்க எதுக்கு இதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்?”
“எதுக்கு இலக்கியம் இலக்கியம்னு அறுக்கறாங்க?”

அதன் பிறகு இனி கட்டாயத்தின் பேரில் எந்த ஆசிரியர்களையும் இலக்கிய நிகழ்விற்கு அழைப்பது மீண்டும் ஒரு இனப்படுகொலைகளுக்கு ஒரு ஹிட்லரை அழைப்பது போன்ற உணர்வைக் கொடுத்துவிடும் என்று பயம் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி கொடுக்கப்படும் இலக்கியம்கூட ஒரு வன்முறைத்தான். அறிமுகம் செய்து பார்க்கலாம், அதில் ஈர்ப்புக் கொண்டவர்கள் நிச்சயம் தனக்கான நேரத்தைத் தாராளமாக இலக்கியத்திற்காகச் செலவழிப்பார்கள்.

முன்பெல்லாம் தமிழாசிரியர்கள்தான் இலக்கியம் ஆர்வம் கொண்டவர்களாக இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்களாக, இலக்கிய விவாதங்கள், புதிய களம் உருவாக்குவது என்று தீவிரமாக இயங்கியவர்கள், இப்பொழுது எல்லாம் ஒரு பொருளியல் சிந்தனைக்குள் சுருங்கி மங்கிவிட்டது போல. ஒருசிலரிடம் அறிக்கைகள் வந்ததா என்று கேட்டதற்கு, “வந்துச்சி அதை தலைமை ஆசிரியர் மேசை மேலே போட்டு வைத்திருந்தார்” என்றதும் நிகழ்வில் எந்தத் தலைமை ஆசிரியர்களும் கலந்து கொள்ளாததும் அதிர்ச்சியே. ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வரமுடியாததைத் தெரிவித்தது பாராட்டக்கூடிய விசயம். மற்றபடி பொதுமக்கள் ஆதரவுடன் சில வாசகர்களின் வருகையால் நேற்றைய கவிதைக் கருத்தரங்கம் 25 பேருடன் நடந்தேறியது. கோலா மூடா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் உயர்திரு.ப.அர்ச்சுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர் தொடர்ந்து இலக்கிய நிகழ்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்வது ஒரு முன்னுதாரணம்)
-தொடரும்-

கே.பாலமுருகன்

Sunday, October 11, 2009

இன்று கெடாவில் கவிதைக் கருத்தரங்கம்

       தாமதமான அறிவிப்பிற்கு வருந்துகிறேன். தேசிய அளவில் நடந்த கல்வி அமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டு குழு லங்காவியில் நடத்திய பட்டறையில் கலந்து கொண்டதால், 5 நாட்களுக்கும் மேலாக பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை. புதுக்கவிதை மாற்றங்கள் குறித்தும் நவீன கவிதை அறிமுகமும் மூத்த இலக்கியவாதிகள் கலந்து சிறப்பிக்க இன்று நடைப்பெறுகிறது கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் கவிதைக் கருத்தரங்கம்.


முதல் அமர்வு
5.30-6.00 மாலை
புதுக்கவிதையும் மாற்றங்களும் – எழுத்தாளர் எம்.கே ஞானசேகரன்

இரண்டாம் அமர்வு
6.10-6.40 மாலை
நவீனக் கவிதைக் களம் ஓர் அறிமுகம் – எழுத்தாளர் கோ.புண்ணியவான்

மூன்றாம் அமர்வு
6.50-7.30 மாலை
அநங்கம் இதழ் கவிதைகள் ஓர் பார்வை(கலந்துரையாடல்) – மணிஜெகதீசன்

-தேநீர் விருந்து

கேள்வி பதில் அங்கத்துடன் அண்மைய கவிதை வளர்ச்சி/ கவிதைக்கான அடுத்த கட்டங்கள் குறித்து கலந்துரையாடி பயன்பெற கெடா மாநில எழுத்தாளர்கள், வாசகர்கள், பொது மக்களை அன்புடன் அழைக்கின்றோம். தவறாமல் வந்து கலந்து கொண்டு இலக்கிய நுகர்வைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திகதி: 11.10.2009 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : சுத்த சன்மார்க்க வள்ளலார் மன்றம் சுங்கைப்பட்டாணி
Vallalar mandram Taman Ria (Belakang Caltex Jln Cinta Sayang)
நேரம் : மாலை 5.20- 7.30வரை

-கே.பாலமுருகன்

Friday, October 9, 2009

மழைக்கால கவிதைகள்

1
துக்கம் பிடித்த
ஓர் இரவில்
வந்து சேர்ந்தது
மழைக்காலம்.
அம்மா தகற வாளியை
தூக்கிக் கொண்டு ஓடுகிறார்
மழையைச் சேமிக்க.
மங்கிய உறக்க
பிரக்ஞையுடன்
சொட்டு சொட்டாக
எனக்குள் சேமித்துக் கொண்டிருந்தேன்
இன்று தொடங்கிய மழைக்காலத்தை.

2
நனைந்த குடைகளின்
மேற்பரப்பிலிருந்து
ஒழுகிகொண்டிருந்தது
அன்றைய மழைக்காலம்.
எவ்வளவு உதறியும்
அடைமழையென
குடையின் உடலில்
தேங்கிக் கிடக்கிறது
துளிதுளியாய்
நான் சந்தித்த ஒரு மழைக்காலம்.

3
கோடையின் இறுதியை
விழுங்கிக்கொண்டு
வந்தது போன வருடம்
என்னைவிட்டுச் சென்ற
மழைக்காலம்.
சன்னலின் வழியே
மழையை எக்கிப் பிடிக்க முயன்ற
என் பால்ய முயற்சிகளை
மீண்டும் தொடர்கிறேன்.
வேறொரு மழைக்காலம்
வேறோரு சன்னல்.
புதிய மழை.
உதிர்ந்து வீழ்கிறேன்
மழைத்துளிகளில்.

thanks: vaarththai magazine september

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com

Monday, October 5, 2009

பால்ய நண்பன் வீடு திரும்பினான்


4ஆம் ஆண்டு படிக்கும்போது அம்மாவின் தோழி ஒருவர் நாங்கள் புதியதாக மாறிப் போயிருந்த வீட்டைப் பார்வையிட பக்கத்து கம்பத்திலிருந்து வந்திருந்தார். அத்துடன் அது எங்களின் 3ஆவது புதிய வீடு. வீடு மாறி புதிய இடத்திற்கு வரும்போது ஏற்படும் உற்சாகம் குதுகலமானது. அம்மாவின் தோழியுடன் வந்த அவரின் பையன் அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமானான். முதல் நாளே என் சைக்கிளில் அமர்த்திக் கொண்டு புதியதாக வந்த கம்பம் முழுக்க சவாரி அடித்தேன். கம்பம் முழுவதும் சீனர்கள்தான். சீன கம்பம் என்றுகூட சொல்லலாம்.


அதன் பிறகு அவனுடன் வளர்ந்த எனது பொழுதுகள் எங்கோ ஓர் இடத்தில் தேங்கிக் கிடந்தது. இன்று என் வீடுவரை என்னைத் தேடி கண்டுபிடித்து வந்திருந்தான். 2000த்திற்குப் பிறகு அவன் ஏதோ குண்டர் கும்பலில் ஈடுபட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக அவனுடைய அம்மா ஒவ்வொருநாளும் வீடுவரை வந்து அழுதுவிட்டுப் போவார்.

ஆறாம் படிவம் பயிலும்போது ஒரு திருவிழாவில் குண்டர் கும்பலுடன் ஒரு கேங்-வுடன் காதில் வட்டமான தோடுடன், முடியெல்லாம் வர்ணம் பூசிக் கொண்டு வேறொரு நண்பனாக தென்பட்டான். நானும் அவனும் அவ்வளவு நெருக்கமில்லைத்தான், ஆனால் அவனுடன் விளையாடிய பால்ய கால நினைவுகளும், பக்கத்து கம்பம்வரை நடந்தே திரிந்த நாட்களும் அவனுக்கும் எனக்கும் மத்தியில் ஓர் இருப்பை உண்டாக்கியிருந்தது. அவனைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம், விவரிக்கலாம். ஆனால் அது நீண்டுவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு குண்டர் வேட்டை சம்பவத்தில் அவர்களுக்கும் மலாய்க்காரர் நண்பர்களுக்கும் அடிதடி சண்டை முற்றி, அந்தக் கும்பலில் இருந்ததற்காக, அவன் காட்டிற்குள் இரண்டு நாட்கள் ஓடி அலைந்ததாகவும், பிறகு அங்கிருந்து தப்பித்து கோலாலம்பூர் சென்று அங்குத்தான் அவன் வாழ்வை அவன் தேடிக் கொண்டான் என்றும் கூறினான். இப்பொழுது பல சிரமங்களைக் கடந்து முயற்சிகளைக் கடந்து காவல்துறையில் சேர்ந்து நலமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினான். வாழ்ந்த ஊரை திரும்பவும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வீடு திரும்பியதாகவும், தன் அம்மா அவனை இன்னமும் வெறுக்கிறார் என்றதும், மனம் ஒரு கனம் வலித்தது.

அவரை என்னுடன் அழைத்துப் பார்த்ததாகவும், இந்த ஊரைவிட்டு வரமாட்டேன் என்று அவர் சொன்னதுடன், “வீட்டெ உட்டு ஓடிப் போனாவன் எதுக்குடா திரும்பி வரனும்” என்று கத்தினார் என்றும் சொல்லிவிட்டு தலை குனிந்தான்.


“எங்க அம்மாவுக்கு என் மேல பாசமே இல்லையா பாலா? அவங்கனாலெதான்னே நான் வீட்டைவிட்டு ஓடனென். . “

அவனின் வாழ்வின் மீதான அதிருப்திகளை ஒரு கணம் அசை போட்டது மனம். அவன் வீடு முழுக்க குரல்கள். அவனை புறக்கணிக்கக்கூடிய, அவனை அவமானப்படுத்தக்கூடிய, அவனை அலட்சியப்படுத்தக்கூடிய, அவனைத் தூக்கி எறியக்கூடிய குரல்கள். மதியத்தில் அவன் வீடு தேடிச் செல்லும்போதெல்லாம் அவன் வீட்டிற்கு வெளியில் ஏதும் அறியாமல் வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பான். உள்ளே அவன் அம்மாவும் அக்காவும் கத்திக் கொண்டிருப்பார்கள்.

“இவங்களோடெ இருக்க முடிலெடா. . சும்மா. . கத்திக்கிட்டெ. . நான் இன்னும் சாப்டகூட இல்லெ தெரியுமா?”

அவனை நினைத்து வருத்தம் அடையக்கூட சரியான முகப்பாவனையைக் காட்டத் தெரியாமல் திரும்பி வந்துவிடுவேன். அவன் காணாமல் போனபோது சமயத்தில் அதை ஒரு சராசரி செய்தியாகவே எடுத்துக் கொண்டேன்.

இன்று என் வீட்டின் முன் வந்து நின்றவன், “தெரிலையா பாலா?” என்றதும் ஆச்சர்யமாக இருந்தது. கோலாலம்பூரிலிருந்து காரில் வந்திருந்தான். அவன் கடந்து வந்த எல்லாம் சூழலையும் சொன்னபோது, வீட்டை விட்டு வெளியேறுவது ஒரு தோல்வியடைந்த அசம்பாவிதம் என்று மட்டும் நினைக்க முடியவில்லை. அவன் அடைந்த திருப்பங்களும், அவன் சந்தித்த மனிதர்களும் அவனை மீண்டும் உருவாக்கியிருக்கிறது.

“அம்மாவை மட்டும் விட்டுறாதெடா. .” என்று மட்டும் சொல்ல முடிந்ததே தவிற அவன் என்னைவிட்டுப் போன பிறகு எனக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவனுடன் பேச வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இனி கோலாலம்பூர் வந்தால் அங்குமிங்கும் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் நண்பர்களைத் தேடி அலையவோ அல்லது அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு “என்னைப் பார்க்க வர முடியுமா? “ என்றோ கேட்க அவசியமிருக்காது. எங்கிருந்தோ தொலைந்தவன் எங்கிருக்கிறான் என்று அறிந்ததும் அவன் வாழ்வில் மீதமாக விடப்பட்ட இடங்கள் நிரம்பியிருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எனக்குள் பழைய நண்பனைப் பார்க்க பக்கத்துக் கம்பத்திற்கு நடந்து சென்ற ஒரு மனோபாவமும் அந்த வெயிலும் மீண்டும் முளைத்திருந்தது.


கே.பாலமுருகன்

Saturday, October 3, 2009

சிங்கப்பூரில் அநங்கம் இதழும் இலக்கிய வட்டமும்

இந்த வருடம் மார்ச் மாதத்தில் அநங்கம் இதழ் 3 சிங்கப்பூரில் அறிமுகம் செய்ய அங்குள்ள வாசகர் வட்டம் மூலம் வாய்ப்புக் கிடைத்திருந்தது. மலேசியாவிலிருந்து அநங்கம் இதழ் சார்பாக அதன் ஆசிரியர் குழுவிலிருந்து நான், கோ.புண்ணியவான், தேவராஜன் அவர்களும் சென்றிருந்தோம்.

நானும் மூத்த எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களும் கோலாலம்புரிலிருந்து இரயில் பயணத்தின் மூலம் சிங்கப்பூருக்குச் சென்றோம். அன்று இரவு முழுவதும் இரயில் பயணம் மிகவும் மௌனம் நிரம்பியதாக உறக்கத்திலும் திடீர் விழிப்புக்கு மத்தியிலும் கரைந்திருந்தது.

பாலுமணிமாறன் பாண்டித்துரை அவர்கள் எங்களுக்காக அறை தயார் செய்து வைத்திருந்தார்கள். தேவராஜன் ஜோகூரிலிருந்து பேருந்தின் வழியாக வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இலக்கிய பேச்சு, சிற்றிதழ்கள் குறித்தான மாற்றங்கள் பற்றி தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தோம்.

(மலேசியாவிலிருந்து எழுத்தாளர்கள் சிவா பெரியண்ணன், நவீன் போன்றவர்களும் வந்து கலந்து கொண்டனர்)
அன்று முழுவதும் பல சிங்கப்பூர் எழுத்தாளர்களை வாசகர்களைச் சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்புக் கிட்டியிருந்தது. அநங்கம் இதழ் குறித்து பலர் தனது விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தினார்கள். என் சார்பாக அநங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் குறித்தும் படைப்புகள் குறித்தும் தெரிவித்துக் கொண்டதில் அநங்கத்திற்கு சரியான களம் சிங்கப்பூரில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது.

 சிங்கப்பூர் வாசகர்களுக்கும் சிங்கப்பூர் இலக்கியவாதிகளுக்கும், நண்பர்களுக்கும் இந்த வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்கப்பூர் நண்பர்களுடன் குறிப்பாக தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இலக்கிய ஆர்வமும் தீவிர ஈடுபாடும் கொண்ட எழுத்தாளர்களுடன் ஏற்பட்ட நட்பு ஆரோக்கியமான சூழல் என்றே கருதுகிறேன்.

பாண்டித்துரை, பாலுமணிமாறன், எம்.கே குமார், சின்னபாரதி, ஷனாவாஸ், பாண்டியன், பாலாஜி, கண்ணபிரான், டாக்டர் லட்சுமி, ஜெயந்தி சங்கர், சித்ரா ரமேஸ், ஜோதிபாரதி, மாதங்கி போன்றவர்களின் நட்பு மேலும் இலக்கிய சூழலுக்கான வலுவை ஏற்படுத்தியிருந்தது. இவர்களின் வட்டம் தீவிரமாக இலக்கிய சூழலில் ஈடுபட்டு பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதாகும்.

இலக்கியம் - தொடர்பு - ஈடுபாடு போன்ற விடயங்களில் தீவிர பங்களிப்புள்ள எழுத்தாளர் வட்டமும் இலக்கிய எல்லையை வலுப்படுத்த மிக அவசியமானதே. இது இலக்கியத்திற்குள் நிகழும் அரசியல் என்கிற பார்வை விழுந்தாலும், எழுத்தாளர்களுக்கு மத்தியில் தொடர்பும், ஈடுபாடும், இயக்க செயல்பாடுகளும் அவசியமானதே.


மேலும் ஜெயந்தி சங்கர், பாண்டித்துரை, மாதங்கி, சித்ரா, எம்.கே.குமார் போன்றவர்கள் தொடர்ந்து அநங்கத்திற்கு படைப்புகள் அனுப்பி பங்கெடுத்துக் கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தொடரட்டும் அநங்கம் வட்டம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா




அநங்கம்”


மலேசியதீவிர இலக்கிய இதழான “அநங்கம்” மூன்றாவது இதழ் மார்ச்-09 மாதத்தில் சிங்கப்பூர் ஆங் மோ கியோ பொது நூலகத்தில், வாசகர் வட்டம் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இயந்திரங்களுக்கு மத்தியில் சிக்கி பதட்டமான ஒரு நிலையில் இன்று நாங்கள் வந்திருந்தாலும், இங்குள்ள இலக்கியச் சூழல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது என்று பேசத்தொடங்கிய மலேசிய எழுத்தாளரும், அநங்கம் இதழுமான ஆசிரியர் கே.பாலமுருகன் நுகர்பொருள் சந்தையை கடந்து சிற்றிதழ்கள் வெற்றியடைய வேண்டிய முன்வைத்து “அநங்கம்” என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு அகராதியை புரட்டவேண்டியிருக்கிறது என்று வினவி, ஆகாயம் என்றபோது என் அரூபமான எண்ணப்பாடு சிதைவுக்குள் உட்பட்டது. சுதந்திரமான வெளியை சிற்றிதழ்கள் அடையவேண்டும். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் (எனக்கு இப்போதெல்லாம் வரலாற்றை புரட்டும் போது ஒரு வித பயம் ஏற்படுகிறது) கடாரம் மண் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த மண்ணில் ஒரு சிற்றிதழ் வரவேண்டும் என்ற எண்ணமும், ஆர்வமும்தான் காரணம். இதழின் நோக்கம், சிற்றிதழ்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்று சொற்களை கோர்க்கும் முன் தெரிந்து விழுந்தன வார்த்தைகள் வெகுஜனப் பத்திரிக்கை தீவிரப்பத்திரிக்கையின் வேறுபாட்டை முன்வைத்து, வெகுஜனப் பத்திரிக்கையால் துண்டாப்பட்ட சிறுகதையை உள்ளடக்கி பேசிய மலேசிய மூத்த எழுத்தார் கோ.புண்ணியவான், வல்லினம் இதழ் பெண்ணியம், தலித்தியம் என சிற்றிதழ் தீவிரத்தை கோட்பாடு சார்ந்த இலக்கியங்களை முன்னிருத்துகிறது. பெண்ணியச் சிந்தனை வெளிவர இன்று அநங்கம், வல்லினம் இருக்கிறது என புதிய வெளி திறந்ததற்கான சாளரத்தை முன்நிறுத்தினார்.;


மூகமூடிகளை கலைந்து மகிழ்ச்சிக்குரிய பயணம் என்றுச் சொல்லி, மலேசிய கவிதை இதழமான “மௌனம்”-த்தின் நிலைப்பாடும் போக்கும் கவிதை குறித்த தீவிரம், அதற்கான புரிதல் களம் என்ற செய்திகளை எழுத்தாளரும் “மௌனம்” இதழின் ஆசிரியருமான ஜாசின் தேவராஜ் இறுக்கம் தளர்ந்து மிக சுருக்கமாக பேசினார்


அநங்கம் இதழுக்கு வலுவான தொடக்கமாக இருந்த சிறுகதைகளை சுட்டி வெளிவந்த மூன்று இதழ்களுக்கான சிறுகதைகளை சிங்கப்ப+ர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர் எழுதிய சிறுகதையையும் முன்வைத்து, அந்தந்த சிறுகதையின் பயணப் போக்கில் பயணப்பட சிங்கப்பூர் எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அநங்கம் பத்திகளை முன்வைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

நிறைவான கலந்துரையாடலின் நிறைவற்ற தேகத்தோடு மறுநாள் விடிந்தது.



○ நன்றி
பாண்டித்துரை சிங்கப்பூர்

Friday, October 2, 2009

ஒரு யுகத்தைக் கடக்கும் காலணிகள்

நகரத்தில் காலணிகளுக்குத் தனி மவுசு உண்டு. காலணி என்பது பாதைசாரிகளின் களையாத கனவுகள். சோர்ந்து போய்விட்ட அவர்களின் நகர வாழ்வைத் தாங்கிப் பிடித்துக் கொண்டி நகரத்தை வலம் வருவது அனேகமாக இந்தக் காலணிகளாகத்தான் இருக்க முடியும். தினமும் நகரத்தில் நடப்பவர்கள் நகரத்தில் இருப்பவர்கள் அணிந்திருக்கும் காலணிகள் விசித்திரமான யாரும் கவனியாத ஒரு பெரும் கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன.

அப்பாவிற்கு ஜப்பான் சிலிப்பர் அணியும் பழக்கமுண்டு. வெளியே போனாலும்கூட இந்த ஜப்பான் காலணியைத்தான் அணிந்து கொண்டு செல்வார். அந்தக் காலணிக்கு எப்படி ஜப்பான் பெயர் வந்தது என்பதில் இன்னமும் ஆச்சர்யம்தான். ஜப்பான்காரர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட காலணியாக இருக்கலாம் அல்லது ஜப்பான்காரர்கள் அறிமுகப்படுத்திய காலணியாகக்கூட இருக்கலாம்.

சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை என்று எல்லாம் வர்ணங்களிலும் ஜப்பான் காலணி இரண்டு வார்களுடன் மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கும். நகரத்தில் பலர் இதை அணிந்து கொண்டு சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது. அனேகமாக நகரத்திற்கு நடந்து வரும் எளிமை மனிதர்களின் காலணியாக ஜப்பான் காலணிதான் இருந்திருக்க முடியும். அப்பாவும் அதில் ஒரு ஆள். வெயில் பொழுதுகளில் எப்படி ஜப்பான் சிலிப்பர் மிகவும் வசதியாகக் கருதப்பட்டதோ அதே போல மழைக் காலங்களில் அது அசௌகரிகமாகவும் கருதப்பட்டது. சதக் சதக் என்று யாரோ சிலர் கடைத் தெருக்களில் நடந்து வரும் ஓசையைக் கேட்டபொழுதெல்லாம் அந்த நபர் ஜப்பான் சிலிப்பர்தான் அணிந்திருக்கிறார் என்று சரியாக அனுமானிக்க இயன்றது.

அப்பா அவர் வைத்திருந்த இரண்டு ஜப்பான் சிலிப்பர்களையும் மிகவும் நேசித்திருக்கிறார் என்பதை அந்த ஜப்பான் சிலிப்பர் தைபூசத் திருவிழாவின்போது காணாமல் போன தினத்தன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு சிலிப்பர் ஏற்கனவே வார் அறுந்து மூலையில் கிடந்திருந்தது. அடுத்த சிலிப்பர் திருவிழாவில் அப்பா எங்கேயோ வைத்து தொலைத்துவிட்டு, அன்று முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டார். அங்கேயும் இங்கேயும் வெறும் கால்களுடன் அலை மோதிக் கொண்டிருந்த அப்பாவை நாங்கள்தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தோம்,

“வேற சிலிப்புரு வாங்கிக்கலாம்ப்பா”

“டே! என்னா பேசறே? அது மாதிரி வராது. . எத்தன வருசமா வச்சிருக்கேன் தெரியுமா? எஸ்டேட்ல இருக்கும்போதுலேந்து வச்சிருக்கேன்”

மறுநாள் எல்லோருக்கும் முன்பே அப்பா எழுந்து கொண்டு நகரத்திற்குக் கிளம்பிவிட்டார். திருவிழா தேர் சென்ற நகரத்துப் பாதைகளில் நடந்து போனால் அங்குதான் அவருடைய சிலிப்பர் எங்காவது இருக்கும் என்ற அபாரமான நம்பிக்கையில். அவருடன் நானும் சென்றேன். குறைந்த வாகனங்களுடன் நகரம் பரபரப்பிற்க்காக ஆய்த்த நிலையில் தயாராகிக் கொண்டிருந்தது. கோவில் தேர் சென்ற பாதைகள் ஐஸ் பாலித்தீன்களும், பொங்கல் கட்டிக் கொடுத்த பாலித்தீன்களும், தாள்களூம் என்று குப்பையாக இருந்தது. அதில் எங்கே அப்பாவின் காலணி என்று தேடுவது? அப்பா வேகமாக நடந்து முன்னேறினார்.

“அப்பா யாராவது போட்டுட்டு போயிருந்தாங்கனா? எப்படி இருக்கும்?”

“இருக்கும்டா. . எங்கயும் போயிருக்காது”

வழியில் பல இடங்களில் அறுந்த காலணிகள் முதல் தனது ஜோடியை இழந்த ஒற்றைக் காலணிவரை பார்க்க நேர்ந்தது. இப்படி நகரத்தில் நடக்கும் திருவிழா காலங்களில் காலணிகளைத் தொலைப்பதென்பது இயல்புதான். ஒற்றைக் காலணிகளைப் பார்க்கும்போது மனதில் ஒருவிதமான வலி உண்டாகிவிடுகிறது. யாரோ விட்டுச் சென்ற ஒற்றைக் காலணிதானே என்று அலட்சியமாக அவற்றைக் கடந்துவிட முடியவில்லை. ஏதோ ஒரு சோகத்தைச் சுமந்து கொண்டு நடு சாலையில் தவிக்கவிடப்பட்ட ஆன்மாவின் வாழ்வைப் போலவே அந்தக் காலணியின் தோற்றத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. எங்கு தேடியும் அப்பாவின் அந்த ஜப்பான் காலணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருவரும் நகர வாழ்விற்குக் கொஞ்சம்கூட தொடர்பில்லாத ஒரு காரணத்தால் ஏற்பட்ட சோகத்துடன் வீடு திரும்பினோம். அப்பா அதற்குப் பதிலாக புதிய ஜப்பான் காலணியை வாங்கிக் கொள்ளவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அறுந்துபோன பழைய ஜப்பான் சிலிப்பரை தைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். பிறகுதான் நகரத்திற்குச் சென்று புதியதாக வேறோரு காலணியை வாங்கிக் கொண்டு வந்தார். அது ஜப்பான் சிலிப்பரல்ல. அவர் அதை மறந்திருந்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு மழைப் பொழுதில் நகரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது காலணி அறுந்து கொண்டது. அந்தச் சிலிப்பரை அணிந்துகொண்டு நடக்கவும் முடியவில்லை, அதைக் கழற்றியெறிந்துவிட்டு வெறும் கால்களில் நடக்கவும் கூச்சமாக இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு காலணி தைக்கும் கடைவரை நகர்ந்துவிட்டேன். அங்கு காலணி தைப்பவரின் கடையில் ஏற்கனவே அறுந்த சிலிப்பருடன் இரண்டு பேர் நின்றிருந்தனர்.

“இப்பத்தான் வாங்கனேன் அதுக்குள்ள பிஞ்சிருச்சி. என்னா சிலிப்பரோ?”

“இப்பலாம் சிலிப்பரு எங்க தாங்குது. அதுவும் ஜப்பான் சிலிப்பர் அறவே பாய்க்க முடியாது”

அப்பொழுதுதான் உற்றுக் கவனித்தேன். அந்த நபர் கையில் பிடித்துக் கொண்டிருந்தது ஜப்பான் சிலிப்பர். அதை வைத்திருந்தவரின் முகம் வெயிலில் கருத்துப் போயிருந்தது. பழைய சிலுவார் ஒன்றை அணிந்து கொண்டு முன் பாக்கெட் கிழிந்த சட்டையுடன் நின்றிருந்தார்.

“இது ஒன்னு 4-5 வெள்ளி சொல்றானுங்க தம்பி. எங்க வாங்கறது. நல்லா தெச்சி கொடுங்க”

“கித்தாலாம் தெச்சாலும் தாங்காது. சும்ம கொஞ்ச நாளைக்குப் பாய்க்கலாம், அவ்வளவுதான்”

அந்த நபரின் முகம் தளர்ந்து போவதைப் பார்த்தேன். ஜப்பான் சிலிப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார். திருவிழாவில் மட்டுமில்லை நகரத்தில் எந்த நேரத்திலும் யாரோ ஒருவரால் ஜப்பான் சிலிப்பர் வாழ்வின் எளிமைகளுல் முக்கியமான அம்சமாகக் கருதப்பட்டு வருகின்றன. வார் அறுந்த சிலிப்பருடன் இன்றும் நகரத்தில் சிலர் நடந்து கொண்டிருக்கிறார்கள், ஒருவேளை அவர்கள் அணிந்திருப்பது ஜப்பான் சிலிப்பராகக்கூட இருக்கலாம். நகரத்தின் ஒவ்வொரு காலத்திலும் புது புது காலணிகள் வந்து குவிந்த வண்ணமே இருந்தாலும், ஜப்பான் சிலிப்பர்களை அணிந்து கொண்டு நகரத்திற்குள் நுழையும் மனிதர்களை எங்கேயாவது பார்த்திருக்கீர்களா?

ஆக்கம் : கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Thursday, October 1, 2009

மழைக்கால பறவைகள்

மழை நாட்களில் பள்ளியில் பல இடங்களில் மழை நீர் ஒழுகிக் கொண்டிருக்கும். அன்றைய தினம் மழை பொழுதுகள் கால்களில் ஒட்டிக் கொண்டே நாங்கள் நகரும் எல்லாம் இடங்களுக்கும் பின்தொடரும் என்றே சொல்லலாம். 25 நிமிட பயணத்திற்குப் பிறகு உடலுக்குக் கீழ் பாதிவரை நனைந்துகொண்டே வந்து சேர்வேன்.

“டே. . சார் நனைஞ்சிட்டாரு. .”

மழைக்காலங்களில் நான் வந்து சேரும் கணங்களில் மாணவர்கள் உதவிக்கென்று என்னைச் சூழ்ந்துகொள்வார்கள். நீர் சொட்ட சொட்ட காலை நிதானங்களை எங்கோ அவசரத்தில் ஏதோ ஒரு சாலை சந்திப்பில் தொலைத்துவிட்டு வந்திருப்பேன். பரப்பரப்பாக கொஞ்சம் கோபமாகவும் உள்ளே நுழையும் என்னை மாணவர்கள்தான் அசௌளகரிகங்களை மறக்கடிக்கும் முயற்சிகளைச் செய்து மகிழ்ச்சிப்படுத்துவார்கள். காலையிலேயே தொடங்கும் மழைக்காலங்களில் அதுவும் ஒரு மோட்டாரில் பயணம் செய்யும் ஆசிரியர்களின் நிலையை எப்படி அவ்வளவு துல்லியமாக விவரிப்பது என்று தெரியவில்லை.

“யேன் சார் வரும்போதே மழையெ கொண்டு வர்றீங்க?”

“சார் மழையெ ஏத்திகிட்டு வந்துடுவாருடா”

மாணவர்களைப் பொருத்தவரையில் நான் மழையைக் கொண்டு வரும் அல்லது மழையை மோட்டாரில் வைத்து சவாரி அடித்துக் கொண்டு வரும் ஆசிரியர். அவர்களின் எள்ளலும் நகைப்பும் மழைக்காலங்களில் குளிருடன் துளிர்த்துப் போயிருக்கும். பேருந்தில் ஏறி வரும் மாணவர்கள் மழைப்படாத தனது வசதிகளைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். சில மாணவர்கள் மழையில் நனைந்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்வார்கள்.

“சார். . மழைலே நனையவே விடமாட்டுறாங்க சார். . ஏன் சார்?”
“சார் எங்கம்மா மழை வந்திருச்சின்னா புத்தகத்த எடுத்துப் படிக்க சொல்லிருவாங்க”

“நான் மழை வந்திருச்சின்னா இளுத்துப் போத்திக்கிட்டு தூங்கிருவேன், எங்க வீட்டுலே அப்படித்தான் செய்ய சொல்லுவாங்க”

ஏன் மாணவர்களை மழையைக் காட்டி பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்? நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில், மழையில் நனைந்தால் காய்ச்சல் வந்துவிடும் என்று சொல்லியே மழையை அண்டவிடாமல் தூரமாகவே விலக்கி வைத்திருந்தார்கள். இன்றைய மாணவர்கள் மழைக்காலத்தில் அறைக்கதவைச் சாத்திக் கொண்டு அதன் நுகர்வையையெல்லாம் தொலைத்துவிட்டு, புத்தகங்கள் புரட்டுவதும் உறங்குவதுமென காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் மழை எப்படி இருக்கும் என்ற அனுபவங்களையும் மறந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

“சார் இன்னிக்கு மழையைப் பத்தி படிக்கலாமா?”

“சார் சார். . மழைலே ஆட்டம் போட்டுக்கிட்டே படிக்கலாம் சார்”

எப்பொழுதும் மாணவர்களின் மழைக் குறித்த கனவுகளை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மழை நாட்களிலும் வகுப்பில் ஏற்படும் ஒழுகுதலை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். நான் போதிக்கும் வகுப்பின் நடுகூரையில் இன்னும் சரிசெய்யப்படாத ஓட்டை இருப்பதால், மழை ஒழுகி வகுப்பிற்குள் நிரம்பிக் கொண்டிருக்கும். பாடம் போதிக்கும் கணங்களில் வகுப்பின் நடுபகுதியில் வாளியை வைத்துவிட்டு அதில் சொட்டு சொட்டாக ஒழுகிக் கொண்டிருக்கும் மழைநீரின் சிறு இரைச்சலை ஆயாசமாகக் கேட்டுக் கொண்டே இருப்போம்.

“ஏய் மழை நம்ப கிளாஸ்க்கு படிக்க வந்திருக்குடா”

மாணவர்கள் மழையின் வருகையை கூரையிலிருந்து ஒழுகும் அதன் முதல் துளியிலிருந்து வரவேற்கிறார்கள். நாள் முழுக்க மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் பயம், வீட்டுப் பாடம், கரும்பலகை என்ற அனைத்து வகுப்பறை விதிகளையும் கடந்து ஓடி போய் மழையில் நிற்க வேண்டும் என்கிற மனநிலையுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களின் ஏக்கங்களைப் பாடப் புத்தகம் என்கிற கட்டுபாட்டுகளுடன் சேர்த்துக் கட்டி வைத்திருப்பதாகவே தோன்றும். சில சமயங்களில் மழைநாளின் போது மாணவர்களைக் கொஞ்ச நேரம் வகுப்பிற்கு வெளியே அழைத்து வந்து மழையைக் காட்டுவேன். மழையில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளையும் காட்டுவேன்.

“அங்க பாரு மழைக்குருவி. . அதுக்கு மழை வரப் போதுனா தெரியும்னு பாட்டிச் சொல்லிருக்காங்க சார்”

அந்த மழைக்குருவியைப் பார்த்தேன். மழையுடன் இணைந்த, இனி வரலாறு முழுக்க மழையை ஊகிக்கும் குருவியாகவே பார்க்கப்படப் போகிற அதன் வாழ்வைக் குறித்து பிரமிப்படைந்தேன். எங்களின் பார்வையை அதன் கால்களில் கட்டிக் கொண்டு வெகுதூரம் பறந்தது. பள்ளியின் கூடாரத்திலிருந்து வடிந்து ஒழுகி விளிம்பிலிருந்து சொட்டும் ஒவ்வொரு மழைத்துளிகளையும் மாணவர்கள் கைகளில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். மழைநாட்கள் அவர்களின் கைகளில் குவிந்து ஒழுகிக் கொண்டிருக்கும்.

“சார் மழையை கணக்குப் பண்ண முடியுமா?”

மழையையொட்டி மாணவர்களிடம் எப்பொழுதும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்துகொண்டே வருகின்றன. அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மழையைப் பார்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அறிவியல் ரீதியில் பல விளக்கங்கள் கொடுத்தாலும் மழையின் இரகசியங்களையும் மகத்துவங்களையும் வெறும் அறிவியல் விளக்கத்துடன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மழை தனக்குள் பல வினோதங்களைச் சுமந்துகொண்டு வானத்திலிருந்து விழும் அதிசய நட்சத்திரமாகப் பார்த்துக் கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

“சார் நான் மழையெ இந்த வாளிலெ பிடிக்கட்டா?”

அவ்வளவு பெரிய மழையை என் வகுப்பு மாணவி வாளியில் பிடிக்க நினைப்பதை என்னவென்று சொல்வது? மாணவர்களின் மழைநாட்களை அவர்களுக்கென விட்டுவிடுங்கள். அவர்கள் சுதந்திரத்துடன் மழையை இரசிக்கும் மழைக்கால பறவைகள். மழை அவர்களின் உலகத்தில் பல அதிசயங்களுடன் பெய்துகொண்டே இருக்கின்றன. மழை என்பது வெறும் அறிவியல் மட்டுமல்ல, நம் பால்ய காலத்தின் நினைவுகள். உங்களின் பள்ளிப் பருவத்தில் மழை ஒரு கதாநாயகன் போல உங்களைக் கவர்ந்திருக்கக்கூடும். முதன் முதலாக நீங்கள் மழையில் நனைந்ததையும் மழையில் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் எல்லோரும் மழைக்கால பறவைகளாக இருந்திருக்கிறோம்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
மலேசியா

Wednesday, September 30, 2009

விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல - இனப்படுகொலைகளின் உச்சம்

தமிழீழ அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமான ராஜ பக்சேவின் அரசின் கொடூரம், சகிக்க முடியாத உண்மை. மீனகம் செய்தி வலைத்தலத்தில் அவ்வப்போது உண்மை செய்திகள் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு சில செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன.

இவ்வளவு அநியாயங்களும் உலக நாடுகளின் ஆதரவில் அவர்களின் கண்கானிப்பில்தான் நடந்து கொண்டிருக்க, மடிந்து சாவது நம் தமிழர்கள்தான். உலக வரலாற்றின் இப்படியொரு கடுமையான உயிர் பலிக்கு ஆளான ஒரே இனமாக தமிழிழம் மட்டுமே இருக்க முடியும். தமிழர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துரோகங்களுக்கு உலகம் என்ன செய்யப் போகிறது? பார்த்துக் கொண்டிருக்கிறது. . .


இவ்வளவு கொடூரங்களை நடத்திய அரசிடம் பாதுகாப்பு தஞ்சம் அடைந்து கொண்டு அரசியல் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்குத் துணைப்போன கருணா பேசுவதற்கோ அல்லது பேட்டி அளிக்கவோ என்ன தகுதி கொண்டிருக்கிறார்? பேசட்டும் பேசட்டும். .

-கே.பாலமுருகன்


இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்

வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பொருத்தமான ஊட்டச் சத்து உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது என்று இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதமாக வன்னி தடுப்பு முகாம்களில் பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் நாடு திரும்புவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் விருந்து கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் போஸ் கூறுகையில்,

முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக நான் சிகிச்சை அளித்து வருகின்றேன். குழந்தை மருத்துவர் என்ற முறையில் ஊட்டச் சத்துக் குறைபாட்டை மருத்துகளால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது என்றுதான் கூறுவேன்.

குறைந்தது மூன்று மாதங்களுக்காவது அவர்களுக்கு நல்ல சத்துணவு வழங்கப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு கிடைக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். முகாம்களில் தயாரிக்கப்படும் உணவு, ஊட்டச் சத்துக் குறைந்த குழந்தைகளுக்கு சரியானது என நான் நினைக்கவில்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்துணவுகள் கொடுக்கப்பட வேண்டும். முட்டையின் விலை மிக அதிகமாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் முட்டை கொடுக்கப்பட வேண்டும். புரதச் சத்துள்ள முட்டை உணவு கொடுத்தாலேயே இந்தக் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.


உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!


இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.


போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!


இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

நன்றி: மீனகம் செய்தி இணையத்தளம்

அநங்கம் சிற்றிதழ் விமர்சனம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (2008)

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.

இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.

பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.

கே.பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமான இளைஞர். வாசிப்பதிலும்  விவாதிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாகயிருந்தது.

நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.



அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.





முதல் அநங்கம் இதழின் போது எஸ்.ராமகிருஷ்ணன் அளித்த விமர்சன பத்தி.

நன்றி : அநங்கம் இதழ் 1
கே.பாலமுருகன்

Tuesday, September 29, 2009

“நான் காட்டிக் கொடுக்கவில்லை” – கருணாவின் பேட்டி

தமிழீழ துரோகி, காட்டிக் கொடுத்த கருணா, புலிகளின் யுத்த தந்திரங்களை அம்பலப்படுத்திய தூரோகி என பலவாறு அடையாளப்படுத்தப்பட்ட முன்னால் விடுதலை புலி இயக்கத்தின் போராளி கருணாவின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே வழங்கியிருக்கிறேன்.

இந்தப் பதிவு எந்தச் சார்புத்தன்மையும் இல்லாமல், வாசகர்களின் பொதுப்பார்வைக்காக மட்டுமே இடப்படுகிறது. கருணா சொன்னவைகள் உண்மையா பொய்யா என்ற விவாதத்தை முன்னெடுக்க இந்தப் பதிவு உதவக்கூடும். உண்மை நிலவரம் அறிந்த வாசகர்கள் / பொது மக்கள் கருணாவின் இந்த வாக்குமூலத்தை எதிர்த்து தங்களின் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் அல்லது இங்கேயே பதிவிடலாம்.

அண்மையில் மலேசியாவில் கிடைக்கப்பெறாத அம்ருதா எனும் இதழிலிருந்து இந்தப் பேட்டியை மீண்டும் டைப் செய்து இங்கே கொடுத்துள்ளேன். நன்றி.


இலங்கையில் யுத்தம் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அங்கு சென்றிருந்தார். தன் நண்பர் ஒருவரின் மகளின் திருமணத்துக்காகச் சென்றிருந்தவர் இலங்கை தமிழ் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் போராளிகளையும் என பலரையும் இப்பயணத்தில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களில் யாராவது ஒருவரையாவது சந்தித்துவிட வேண்டும் என்னும் தோப்பிலின் முயற்சி, அவர்கள் யுத்தப் பகுதியில் இருந்ததால் நிறைவேறவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த, விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து பிரிந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கருணாவையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறார்.



தோப்பில்: யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் முஸ்லீம் மக்கள் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் பெருமளவு முஸ்லீம்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? முஸ்லீம்கள் செய்த தவறு என்ன?

கருணா: முஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை, ஐயா. தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முஸ்லீம்கள் நல்ல ஆதரவு வழங்கி வரவேற்றார்கள். தங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழர்களோடு சேர்ந்து அவர்களும் ஒத்துழைத்தார்கள். ஆனால், புலிகள் இயக்கம் இதை சரிவர கையாளவில்லை. அப்பொழுது இருந்த சில போராட்ட அமைப்புகள் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சில சதித் திட்டங்களை மேற்கொண்டது. இந்த நோக்கத்தில் 18 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிலர் வந்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

அந்த சதிகள் எல்லாம் பிற்காலத்தில் அம்பலமாகியிருக்கிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ராணுவத்தை ஆங்காங்கே குவிப்பதற்காக புலிகளால் நிறைய படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்தான் முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லீம் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்த பொழுது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்கள் வேறு வழியில்லாமல் அரச படைகளால் உருவாக்கப்பட்ட சில ஊர்க்காவல் படை என்ற பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதனால், முஸ்லீம் மக்கள் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று புலிகள் கருதினார்கள். எனவே, யாழ்ப்பாணத்தில் எவரும் இருக்க இயலாது என்று வெளியேற்ற முற்பட்டார்கள். அந்த நேரத்திலும் நான் அதை எதிர்த்தேன். நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் கதைக்கிற ஒரு சகோதர இனத்தை வெளியேற்றுவது இயலாத விடயம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். அதை யாரும் கேட்கவில்லை. முஸ்லீம்களை, சகல உடமைகளையும் பறித்துப் போட்டு உடுத்தியிருந்த உடுப்போடு அனுப்பிவைத்தார்கள் யாழ்ப்பாண மக்கள். அந்நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். அதை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் அதை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு வலு இருக்கவில்லை. ஆனாலும், முஸ்லீம்கள் வெளியேற்றம் சரித்திரத்தில் ஒரு அழியாத வடுவாக வரப்போகிறது என்று எங்கள் ஆலோசனைகளை சொன்னோம்.

இக்காலகட்டத்தில், இந்த வெளியேற்றத்தின் ஊடாக வெளி நாட்டில் இருந்து பயிற்றுவிக் கப்பட்டு வந்திருந்தவர்கள் தங்கள் சதித் திட்டங்களை செயல்படுத்தி கலவரங்களை உண்டாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். உண்மையில் அதையெல்லாம் செய்தது வெளிநாட்டு சக்திகள். 85ஆம் ஆண்டு இது மேற்கொள்ளப்பட்டது.

தோப்பில்: கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதி தமிழர்கள் இருக்கிறார்கள் அடுத்து முஸ்லீம்களும் அதற்கடுத்து சிங்களவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இனங்கள். இந்த மூன்று இனத்தவர்களையும் இணைப்பது மாதிரியான ஒரு ஆட்சி முறையை ஏன் ஏற்படுத்த முடியாது?

கருணா: நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; பிரபாகரன் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஐயா. கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளையர்கஷீமீ வந்த காலத்தில் யாழ்ப்பாண ராச்சியம், கண்டி ராச்சியம், கோர்ட் ராச்சியம் என்று மூன்று ராச்சியமாக இருந்தது.
வெள்ளையர்கள் காலத்தில் யாழ்ப்பாண தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களின் கல்வியறிவை வளர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது கிழக்கு மாகாண மக்கள் கொஞ்சம் பின்தங்கி இருந்தாங்க. கிழக்கு மாகாணத் தமிழர்கள் விவசாயத்திலும் முஸ்லிம்கள் வர்த்தகத்திலும் ஈடுப்பட்டிருந்தார்கள். கல்வியறிவு பெற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அதிகார மையங்களின் முக்கியமான பதவிகளில் இருந்தார்கள். நீதிமானாக, மருத்துவராக, வக்கீலாக எல்லாமாக இருந்தார்கள். அதனால் கிழக்கு மாகாண மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியம் அவர்களிடம் இருந்தது. இந்தியாவில் பிராமணர்கள்தான் எல்லா அதிகார மையங்களிலும் இருக்கிறார்கள்; மலையாளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருப்பது போல், இங்கும் இருந்தது. எங்கட அப்பாவுக்கு அப்பா அதைப் பற்றி கதைப்பார். எங்கட காலத்தில் அது கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்படியான எண்ணக்கரு இப்பொழுதும் இருக்கிற ஏகாதிபத்திய பழமைவாதிகள், மாகாணம் பிரிவதை விரும்பமாட்டாங்க. மாகாண சபை பிரிந்து இருப்பதால் எதுவித பாதிப்பும் வரப்போவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.


தோப்பில்: புலிகள் அமைப்புக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பின்னடைவுக்கு, நீங்கள்தான் காரணம் என ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது, நீங்கள் அவர்களது யுத்த வழிமுறைகளையும் மறை பிரதேசங்களையும் காட்டிக் கொடுக்கிறீர்கள் என்று.

கருணா: அது எனக்கு தெரியும், ஐயா. நான் காட்டிக்கொடுக்கிற ஒரு ஆளாகத்தான் இன்று சுட்டப் படுகிறேன். விடுதலைப் புலிகளை எதிர்க்கிற ஆட்களை துரோகிகள், காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்வது இயக்கத்தில் ஒரு மரபு. ஏன் ஒருவன் வெளியேறுகிறான் என்று தளத்தில் உள்ள மக்கள் பிரச்சினையைப் பற்றி ஆராயமாட்டாங்க. கிழக்கு மாகாணத்தவர்கள் துரோகம் செய்து போட்டார்கள் என்று வடக்கு மாகாணத்தவர்கள் சொன்னார்கள். உண்மையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. யுத்தத்தில் அழிந்து கொண்டிருக்கிறதுக்கு ஒரு முடிவு வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிக்கிட்டோம், ஐயா.

நன்றி

அம்ருதா செப்டம்பர் இதழ் (இந்தியா)
வலைப்பூ தொகுப்பு : கே.பாலமுருகன்