Tuesday, September 28, 2010

ஒரு குழந்தை தன் குழந்தைத்தனத்தை இழக்கிறது




குழந்தைகள் இழந்துவரும் குழந்தைத்தனங்களும் சுதந்திரமும் என்பது அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு தூரத்தில் வைக்கப்படும் கண்ணாடி பொருள்கள் போலவும் விஷ திரவங்கள் போலவும் ஆகிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடும்.”

அண்மையில் ஒரு திருமண விருந்தில் பார்க்கக் கிடைத்த ஒரு தொடர் நிகழ்வு மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எத்தனையோமுறை பார்த்தும் உணர இயலாத ஒன்றை மீண்டும் அதன் உள் அடுக்குகளில் நுழைந்து ஆழமாகப் பார்க்கும்போது குற்ற உணர்வே சட்டென மேலிடுகிறது. எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அப்பாவையும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையும் வெகுநேரம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் தொடங்குவதற்குக் காரணம் தன் அப்பாவின் பிடியிலிருந்து தப்பிக்க அந்தக் குழந்தை எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான்.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயத்துப் பார்க்கக்கூடிய துடிப்பும் உடல் இயக்கமும் தூக்கலாகவே இருந்தது. கைக்கு எட்டாத ஒன்றையும் அதன் இடத்திலேயே வைத்து தன் பார்வைகளாலும் கண் அசைவுகளாலும் தொட்டுவிடக்கூடிய தீவிரம் குழந்தைகளுக்கு உண்டு. தன் அப்பாவிடம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அலங்காரத் துணிகளைக் காட்டி காட்டி எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அடக்குவதற்கு மட்டுமே அந்த அப்பா முனைந்துகொண்டிருந்தார். விரலை உதட்டில் வைத்து சத்தமாகஉஸ்என்றார். பதிலுக்குக் குழந்தையும் அதே போல செய்து காட்டிஉஸ்என்றது.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அடுத்த நாற்காலிக்கு எகிறி குதிக்க முயன்ற குழந்தையின் கால்களைச் சடாரென பிடித்துக் கொண்டு அவர் மடியில் அமர வைத்தார். அது தொடர்ந்து தன் உடலை இலேசாக்கி அவரது பிடியிலிருந்து நழுவ முயன்றது. பெரியவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான வெறுப்புதான் குழந்தைகளின் மனதில் ஆழமாக வளர்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் பெரியவர்களின் சாதாரண அறிவுறையைக்கூட மாபெரும் அடக்குமுறையாகக் கருத வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குழந்தை அந்த அப்பாவின் பிடியிலிருந்து தப்பித்து வரிசையின் கோடிக்கு ஓடி போய் அங்கிருந்து தன் அப்பாவை அழைத்தது. அவருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்திருக்கும் போல, முகக் குறிப்புகளின் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். குழந்தையும் அதே போல செய்து காட்டி மீண்டும் அவரை அழைத்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போனவர், தன் இருக்கையிலிருந்து எழுந்துபோய் அந்தக் குழந்தையின் கைகளைக் கிள்ளி அங்கிருந்து கடைசி வரிசைக்கு அழைத்துக் கொண்டு போனார். குழந்தை அழும் சத்தம் மண்டபத்தை இரண்டாகக் கிழித்து எறிந்தது. இதுதான் நான் குறிப்பிட்ட பெரியவர்களின் கட்டுப்படுத்தும் முறைக்கு எதிரான குழந்தைகளின் வன்முறை. தன் உச்சக் குரலில் அழுது தன் வெறுப்பைக் காட்டுவது.

இந்த நிகழ்வு தொடர்ந்து எனக்குள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகிவிட்ட துண்டிப்பு பற்றியே சிந்திக்க வைத்தது. முதலில் நம் சமூகத்தில் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அக்கறை, அந்தக் குழந்தையின் இயல்பைப் புரிந்துகொள்வதில் காட்ட மறுத்துவிடுகிறோம்.

நம் குழந்தைகள் இந்த உலகைக் காணும் அல்லது இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கொண்டிருக்கும் தரிசனம் என்பதை எப்பொழுதும் நம்முடைய பழக்கப்பட்ட கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோமே தவிர அந்தக் குழந்தையின் கண்களின் வழியாக அந்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. குழந்தைகளுக்கான உலகைப் பார்க்கும் கண்களை நாம் இழந்ததைப் போல குழந்தைகளும் நம்முடைய(பெரியவர்களின்) அதீதமான கட்டுப்படுத்துதலால் தனது குழந்தைதனங்களையும் இழந்துவிட்டன. மீதி இருப்பது அறநெறியும் எதிர்காலத்தில் அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றிய தகவல்களும்தான்.

எப்பொழுதுமே பெரியவர்களின் பொதுபுத்தியின் வழியாகத் தீர்க்கமாக நிறுவப்பட்ட அறத்தின் மூலமாகத்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுகிறோம். பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைவிற்கு எதிராக செய்யப்படும் அனைத்தையும் குற்றம் எனவும் தகாத செயல் எனவும் பொதுவாக வரையறுத்துவிடப்படுகிறது. ஆகையால் குழந்தைகளும் தான் செய்த குழந்தைத்தனத்தை ஒரு குற்றத்திற்கு நிகரான செயலாகக் கருதி பெரியவர்களின் அடக்குமுறையைத் தன்னை அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறது. முதலில் பெரியவர்களுக்கு எது குழந்தைத்தனங்கள் என்பதையும் எது குற்றச்செயல் என்பதையும் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு குழந்தை கல்லை தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு கைத்தட்டி சிரித்தால், அது குழந்தைத்தனம். அதே கல்லைத் தூக்கி இன்னொரு குழந்தையின் தலையில் எறிந்துவிட்டுச் சிரித்தால், அது தவறான ஒன்று என உணர்த்த வேண்டிய செயல். குழந்தைக் கல்லை எடுப்பதையே தடுத்து நிறுத்த வேண்டும் என நினைப்பது ஒன்றை ஆரோக்கியமாக வடிவமைக்க முனைவதில் அடைந்திருக்கும் பலவீனம் என்றே சொல்லலாம். தன்னைக் கடிப்பதற்குத் துரத்தி வரும் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தும் அளவிற்காகவாது அந்தக் குழைந்தைக்கோ அல்லது சிறுவன்/சிறுமிக்கோ துணிச்சல் இருக்க வேண்டாமா? கல்லை எடுத்து தூக்கி எறியும் ஓர் அனுபவத்தையே நம்மால் தடை செய்ய முடியாது.

குழந்தைகளின் ஆர்பாட்டமும் ஓட்டமும் சத்தமும் இல்லாத குடும்ப நிகழ்வுகளையும் திருமணங்களையும் யாராவது விரும்புவார்களா? அப்படியும் விரும்ப நேர்ந்தால், அந்தச் சமூகத்தை அல்லது மனிதர்களை என்ன சொல்வது? எப்படித் தன் குழந்தையை தன்னால் உருவாக்கப்படும் அறத்திற்குச் சாதகமாக கட்டமைக்க வேண்டும் என்பதில் பெரியவர்கள் காட்டும் தீவிரம் நாளடைவில் அந்தக் குழந்தைக்கு வெருப்பையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வெறுப்புணர்வே அதே அறங்களுக்கு எதிரான மன அமைப்பாக அமைந்துவிடுகிறது. பிறகென்ன? அதிலிருந்து தப்பிப்பதற்கு அவர்கள் செய்யும் அனைத்துமே குற்றச்செயல், வெறுக்கத்தக்க செயல் எனக் கருதப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

முதலில் நாம் குழந்தைகளுக்குச் சில நேரங்களில் நம் வழிக்காட்டுதலுடன் கூடிய சுந்ததிரத்தை வழங்க வேண்டும். பொது இடங்களில் அதன் ஆபத்தை அறியாமல் ஓட ஆசைப்படும் குழந்தைகளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே அதன் பாதுகாப்பைச் சொல்லி சுதந்திரமாக ஓட விட வேண்டும். ஆனால் அவன் சுதந்திரமாகக் கத்திக் கொண்டு ஓடுவதையே குற்றம் எனவும் தடுக்க வேண்டிய செயல் எனவும் நினைப்பது குற்றம்தானே?

என்றாவது பெரியவர்கள் குழந்தைகளைப் பேச அனுமதித்ததுண்டா? எப்பொழுதும் அவர்களின் குரலை மீறிக் கொண்டு பெரியவர்களின் சொற்களே கடைசி ஒலிப்பாக இருக்க வேண்டும் என்பதே அறமாக இருக்கிறது. அவர்களுக்கான தேர்வு அவர்களுக்கு எப்பொழுதுமே வழங்கப்படுவதில்லை. திணிக்கப்படுவதே உண்மை.

ஏதாவது ஒரு திருமண அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால், அங்குக் கட்டாயம் ஒரு குழந்தையையாவது பிடித்து ஓர் இடத்தில் அமர வைக்கும் முயற்சிகள் கடுமையாக நடந்துகொண்டிருக்கக்கூடும். மேலும், யாரோ ஒரு பெரியவரின் பார்வை கத்தியின் கூர்முனைபோல குழந்தைகளின் நடவடிக்கைகளின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து அவர்களின் மீது விழக்கூடும் அளவிற்கு மிக மிகக் கூர்மையான பார்வை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Saturday, September 18, 2010

சினிமாவும் வாழ்வும்

கடந்த வருடத்திலிருந்து சினிமா விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். 40க்கும் மேற்பட்ட சினிமாவை(உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை) விமர்சித்துள்ளேன். பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகள் என் வலைப்பூவிலும் நயனம் மலேசிய வார இதழிலும் பிரசுரமாகி வருகின்றன.

கல்லூரி காலத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் ஒரு சிலர் சினிமா குறித்த ஆழ்ந்த சிந்தனையும் மதிப்பீடுகளும் இரசனையும் உடையவர்களாக இருந்ததால், எது தீவிரமான சினிமா என்கிற தேடல் எனக்குள் இருந்தது. மேலும் என் பள்ளிக்கால நண்பர்களான சிலருக்குக் குறிப்பாக காளிதாஸ், சுந்தரேஸ் போன்றவர்களுக்கும் ஆஸ்கார் விருது பெற்ற சினிமாவைப் பார்ப்பதில் இருந்த தீவிரம் என்னையும் அதனைத் தேடி நகரச் செய்தன. இன்றைக்கு 60க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற மாற்று மொழி படங்களைப் பார்த்து சிலாகித்துள்ளேன். ஒரு சில படங்கள் பற்றி எழுத முடியாத தடுமாற்றங்களையும் அடைந்துள்ளேன். அதன் மையமும் கதை ஓட்டமும் என்னைஎங்கேயும் நுழையவிடாதபடிக்கு அசாத்தியமான வேலிகளை உற்பத்தி செய்துவிடுகின்றன. ஆகையால் அந்த மாதிரி படங்களைப் பார்த்து எனக்குள் புதியதாக ஒரு புலன் முளைத்து விடுவதாக ஓர் உணர்வு தோன்றுவதோடு சரி, அதைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட எழுத முடியாமல் நான் அடையும் பதற்றத்துடன் அந்தச் சினிமாவுக்குள் காணாமல் போய்விடுகிறேன்.

அண்மையில் சிங்கப்பூரில் நான் சந்தித்த செழியன் தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் வரை எல்லோரும் சினிமாவை ஒரு வாழ்வாகக் கருதுகிறார்கள். அதனுடன் பயணிக்கிறார்கள். சினிமா வெறும் பொழுது போக்குக்குரிய தொலைக்காட்சியோடு நின்றுவிடக்கூடிய ஒரு சாதனமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. படத்தைப் பார்ப்பதோடு நின்றுவிடும் சராசரி நுகர்வாளனாகக்கூட தடைப்பட்டுவிடாமல் அந்தப் படத்தின் ஏதாவது ஒரு திறப்புக்குள் நுழைந்துவிடும் முயற்சிகளைத்தான் ஒரு சினிமா விமர்சகனாகச் செய்து வருகிறேன்.


நான் முதன் முதலில் கமல் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தைத்தான் அக்காவுடன் திரையரங்கில் பார்த்தேன். அப்பொழுது 7 வயதுதான். குட்டையான கமல் திரையில் தோன்றியவுடன் எல்லோரும் அதைப் பிரமித்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் அமர்ந்திருந்த நாற்காலியின் மீது ஏறி நின்று கைத்தட்டியதாக அக்கா கூறியிருக்கிறார்.

திரையரங்கில் அமர்ந்திருந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் என்னைத் திரும்பி பார்த்து சிரித்ததாகவும் அருகில் அமர்ந்திருந்த சிலர் எனக்கு ஆர்வமுட்டியதாகவும் அறிகிறேன். ஒரு வேளை இந்தச் சிறு சம்பவத்திலிருந்தும் தொடங்கியிருக்கலாம் எனது சினிமாவின் தேடல். அதன் பிறகு திரையரங்கில் போடப்படும் அல்லது நான் விரும்பிப் பார்க்கும் எல்லாம் படங்களையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்துவிடுவேன். ஒரு படத்தை ஒருமுறை பார்த்தால், அது ஏதோ ஒருவித போதாமையை ஏற்படுத்திவிடும், தரிசிக்க முடியாத சினிமாவின் முக்கியமான பக்கங்களிலிருந்து தவறி விழுந்துவிடுவோம் என்கிற எச்சரிக்கை உணர்வு ஒருவேளை அப்பொழுதே எனக்குள் இருந்திருக்கக்கூடும். ஆகையால்தான் குறிப்பிட்ட தேர்வு ஏதும் இல்லாமல் பிடித்தசினிமாவை 5 முறைக்கூட பார்த்ததுண்டு. இப்பொழுதும் ஒரு சினிமாவை ஒருமுறையோடு பார்த்துவிட்டு அதற்குரிய விமர்சனத்தை எழுதிவிடலாம் என்று தோன்றவில்லை. ஆகையால்தான் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்துவிட்ட பிறகுதான் விமர்சனம் எழுதவே அமர்கிறேன்.

அண்மையில் பார்த்த ‘seven pounds” திரைப்படத்தை மூன்று முறை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஓர் ஆழ்ந்த மனிதநேயத்தையும் வன்முறைக்கு எதிராக மனித மனம் செயல்படும் விதத்தையும் அந்தத் திரைப்படத்தில் தரிசிக்க முடிந்தும் அதை மேலும் ஆழமாக உணர வேண்டும் என்பதற்காக அத்துனைமுறை பார்க்க விருப்பப்பட்டேன்.

சினிமா தன்னுடன் ஒரு கலாச்சாரத்தின் கதையை வைத்திருக்கிறது, ஒரு மானுடத்தின் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுருக்கிறது, ஒரு சமூகத்தின் வரலாறை தனக்குள் புனைந்திருக்கிறது, ஒடுக்கப்பட்டவர்களின் முகங்களைப் புதைத்து வைத்திருக்கிறது. இப்படி இன்னும் பல மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் முன்னிறுத்தக்கூடிய அசலான சினிமாவைத் தேடியே அலைந்து கொண்டிருக்கிறேன்.

அநங்கம் 7

§¸.À¡ÄÓÕ¸ý


Monday, September 13, 2010

சிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும் : ஜெயமோகனுடன் கழிந்த விடுமுறையும் வெறுமையும்

நேற்று 12.09.2010(ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூரில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் இரு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆகையால் முதல்நாள் இரவு சுங்கைப்பட்டாணியிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம். அதிகாலை 6மணிக்கெல்லாம் கோலாலம்பூர் சேர்ந்துவிட்டதால் மீண்டும் ஒரு பேருந்து எடுத்து புடு ராயா பக்கமாகச் சென்று அங்குக் குளித்துவிட்டுக் கிளம்புவதற்கு இடம் தேடினேன். 25 ரிங்கிட் கொடுத்து ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பதற்கும் குளிப்பதற்கும் இயன்றது. பச்சைபாலன் 9மணிப்போல அங்கு வந்து என்னை அழைத்துக் கொண்டார்.

சிறுகதை பட்டறை சரியாக 10மணி போல தொடங்கியது. ஜெயமோகன், பிரமானந்த சுவாமி, எழுத்தாளர் கோ.முனியாண்டி, கௌரி சர்வேசன், நயனம் ஆசிரியர் இராஜகுமாரன், பச்சைபாலன், கல்வி அதிகாரி மூர்த்தி, சேகரன், ஆறு.நாகப்பன், யுவராஜன், நவீன், மணிமொழி, தோழி, சந்துரு, சிவா பெரியண்ணன் போன்ற பல கோலாலம்பூரைச் சேர்ந்த படைப்பாளிகள் பட்டறையில் கலந்துகொண்டனர். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறுகதை பட்டறை சங்கத்தின் பனிமனையில் நடத்தப்பட்டது.

ஜெயமோகன் சிறுகதை பட்டறையில் குறிப்பிட்ட சில விசயங்கள் குறிப்புகளாக(ஞாபகத்தில் உள்ள) தரப்படுகிறது:

1. மூன்று நாள் பட்டறையில் தரவேண்டிய சிறுகதை பற்றிய வழிக்காட்டுதல்களை இங்கு ஒரே நாளில் மூன்று பிரிவுகளாகத் தரவேண்டியுள்ளது.

2. சிறுகதை என்பது சிறிய கதை அல்ல. சிறுகதை என்பது சொல்லப்படக்கூடாது, காட்டப்பட வேண்டும்.

3. சிறுகதை என்பது அதன் முடிவை நோக்கி படைக்கப்பட்டதாக அமைக்கப்பட வேண்டும். சிறுகதையின் முடிவு திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். வாசகர்கள் எதிர்ப்பார்த்திராத ஒரு முடிவை கதையின் முடிவில் புனைந்து, மீண்டும் சிறுகதை முடிவிலிருந்து தொடங்குவதாக அமைக்கப்பட வேண்டும்.

4. ஒரு சிறுகதையின் முடிவு திருப்பத்தைக் கொண்டிருக்காமல் அது ஒரு கவித்துவமான விவாதமாக அல்லது கவித்துவமான புள்ளியில் முடியலாம்.

5. முடிவிற்கு ஏற்புடைய வகையில் சிறுகதையின் உடல் அமைந்திருக்க வேண்டும். எ.கா, ஈட்டியின் கூர்முனைக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஈட்டியின் உடல் போல. சில சமயங்களில் அளவுக்கு அதிகமான விவரிப்புகள் கதையின் முடிவில் உருவாகும் தாக்கம்/பாதிப்பை வலுவிழக்கச் செய்துவிடும்.


6. சிறுகதைக்குள் ஒரு கதை ஒளித்து வைத்திருப்பது மேலும் சிறுகதையைக் கூர்மைப்படுத்தும். வாசகன் கதையின் முடிவில் அந்த ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு கதையைக் கண்டடையும்போது சிறுகதை இன்னொரு கதையை வாசகனுக்குள் உருவாக்கிவிட்டிருக்கும்.

7. தேவையில்லாத சொற்களைக் கதையிலிருந்து நீக்குவதன் மூலம் கதை சிறுகதையின் அளவீடுகளைத் தக்க வைத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத வாக்கியங்கள், சாதாரணமான வாக்கியங்கள், கதைக்கு அவசியமற்ற வாக்கியங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

8. உரையாடல் ரொம்பவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சாதரணமாக இருவர் உரையாடும் விதத்தைக் கதையில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உரையாடலைச் சிந்தித்து தேவையான அளவில் கச்சிதமாக அதன் முக்கியம் கருதி எழுத வேண்டும்.

9. சிறுகதைகளுக்குப் பக்க அளவில் வரையறை கொடுப்பது மிக மோசமான அபத்தம். ஆகையால் அதற்கு அளவு கிடையாது. வாசிப்பத்தில் ஏற்பட்ட சோம்பேறித்தனம்தான் கடுகு கதை, நொடி கதை என உருவாகிவிட்டது.

10. உலகின் பெரும்பாலான நல்ல சிறுகதைகள் “நான்” என்ற தன்னிலை கதைச் சொல்லலைத்தான் கையாண்டிருக்கின்றன. ஆகையால் கதைச் சொல்லியைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த “நான்” எந்தக் கதைப்பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதையும் யாரிடமிருந்து கதை சொல்லப்பட்டால் மேலும் வலுவான பாதிப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தும் எனவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

11. ஒரு உதாரணக் கதையைச் சொல்லி, அந்தச் சிறுகதை எங்கிருந்து தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்பதையும், எந்த இடத்தில் முடிப்பது, யார் கதைச் சொல்லி போன்ற கேள்விகளை எழுப்பி சிறுகதை குறித்து மேலும் விரிவாகப் பேசினார்.

12. பின்நவீனத்துவம், நவீனத்துவம் என்கிற கதையெல்லாம் எழுதப்பட முடியாது, அப்படி அடையாளப்படுத்தி எழுதுவது கதையைச் செய்வதற்குச் சமமாகும். நல்ல சிறுகதைகள் மனிதர்களைப் பற்றிய கதையாகத்தான் இருக்கும். கோட்பாடுகள் அந்தக் கதையை வாசித்துப் புரிந்துகொள்வதற்கான மதிப்பீட்டுக் கருவிகள் மட்டுமே.


கலை இலக்கிய விழா-2
இடம்: கோலாலம்பூர் சோமா அரங்கம்
மாலை மணி 6.30க்குத் தொடங்கியது.

ஓராண்டு ஓடி முடிந்தது பெரிய இடைவேளியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கலை இலக்கிய விழாவிற்கு சுவாமி பிரமானந்தவுடன் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர்களைப் பார்க்கும்போது நேற்றுதான் பார்த்து பேசிவிட்டு வந்ததைப் போல இருந்தது. சந்துரு, சிவா பெரியண்ணன், தோழி, யோகி, தினேசுவரி, வாணி ஜெயம், பச்சைபாலன், சிங்கை இளங்கோவன், ராஜகுமாரன், கோ.முனியாண்டி, டாக்டர் சண்முகசிவா, யுவராஜன், வல்லின ஆசிரியர் நவீன், அகிலன், தயாஜி, பொன் கோகிலம், மணிமொழி, கா.ஆறுமுகம், கல்வி அதிகாரிகள் மூர்த்தி, சேகரன், பெர்னாமா வினோத் குமார், சிதனா, மலாயாபல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர் டாக்டர் குமரன், தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் திரு.பாஸ்கரன் போன்ற பெரிய கூட்டம் விழாவிற்கு வருகையளித்திருந்தனர்.

அன்றுதான் இசை விமர்சகரும் கவிஞருமான நண்பர் அகிலனுடன் அறிமுகம் ஏற்பட்டது. நான் 2007-இல் அவருடைய கவிதைகளைக் காதல் இதழில் வாசித்திருந்தேன். அதன் பிறகு அகிலன் எந்த இதழிலும் எழுதாமல் போயிருந்ததால், அவரைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்திந்திருந்தது. மீண்டும் அவர் வல்லினத்தில் எழுதத் தொடங்கியபோதுதான் வலைப்பூ மூலம் தொடர்பு ஏற்பட்டது. இன்செப்ஷன் படத்தின் இசை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அநங்கம் இதழ் ஒன்றையும் பெற்றுக் கொண்டார். மிகவும் எளிமையாக நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் நண்பர் அகிலன்.

கவிதாயினி தினேசுவரி கலை இலக்கிய விழாவின் அறிவிப்பாளராக நிகழ்வை நெறிப்படுத்தினார். வரவேற்புரையாற்றிய எழுத்தாளர் பச்சைபாலன் மலேசியாவில் இலக்கிய செயற்பாடுகளையும் வல்லினம் இதுவரை மலேசிய தற்கால இலக்கியத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைச் சொல்லி, வல்லினத்தை “மாற்று அணி” எனும் அடையாளத்துடன் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அநங்கம் மௌனம் போன்ற இலக்கிய சிற்றிதழ்களின் பங்கையும் அடையாளப்படுத்தி பேசினார்.

தலைமை உரை ஆற்றிய வல்லின இதழின் ஆலோசகர் டாக்டர் சண்முக சிவா அவர்கள், எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய அறச்சீற்றத்தைப் பற்றி கூறினார். இளம் எழுத்தாளர்கள் துணிச்சலாக கருத்தையும் எதிர்வினையையும் முன்வைக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தொகுப்பாசிரியர் உரையில் நவீன் அவர்கள் வல்லினம் (மலேசியா – சிங்கப்பூர் 2010) இதழ் உருவான பின்னனியைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தற்கால இலக்கியம் குறித்த பிரக்ஞையும் பரிச்சயமும் இல்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு மலேசிய சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொகுப்பை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவருக்குள் உருவாகியிருந்த எண்ணம்தான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார். சுங்கைப்பட்டாணி சுல்தான் அப்துல் அலிம், பினாங்கு துங்கு பைனுன், ராஜா மலேவார் போன்ற மேலும் சில ஆசிரியர் பயிற்றகத்திற்கும், மலாயா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம் போன்ற மேலும் சில கழகங்களுக்கும் இந்த வல்லினத்தின் தொகுப்பு நூல் இலவசமாகத் தரப்படவிருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து ஜெயமோகனை எழுத்தாளர் யுவராஜன் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார். இதற்கு முன் கெடாவில் நடந்த ஒரு இலக்கிய நிகழ்வில் ஜெயமோகன் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. அதே போல ஒரு கல்லூரியில் ஜெயமோகனை ஒரு சினிமாக்காரர் என்கிற தோரணையில் ஒரு முக்கியமான நபர் பேசினார். ஜெயமோகனின் களம் சினிமா என்பது ஒரு மேலோட்டமான தட்டையான புரிதல் ஆகும். தவறான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் யுவராஜனும் சுவாமி பிரமானந்தாவும் மிகச் சுருக்கமான அதே சமயம் ஜெயமோகனின் படைப்புலகம் சார்ந்த அருமையான அறிமுகத்தை வழங்கினார்கள்.

தொடர்ந்து ஜெயமோகன் தமிழின் முக்கியமான நாவல் என்கிற தலைப்பில் உரையாடினார். பிரமிக்க வைத்த பிரமாண்டமான இலக்கிய உரை என இதைப் புரிந்துகொள்ளலாம். அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனை அவருடையது. ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” என்கிற நாவலின் மூலம் அவருக்கு உருவான மனநிலையைப் பகிர்ந்து கொண்டார். அந்த நாவல் அவருக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தையும் தனிமையையும், வெறுமையையும் சுட்டிக்காட்டி ஒரு நாவல் படித்து முடித்தவுடன் காலத்தின் மிக நீண்ட தனிமையையும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிக்கிவிட்டிருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு நாவல் என்பது தரிசனம், காலத்தின் தரிசனமாக இருக்க வேண்டும், மேலும் பொது புத்தியைச் சார்ந்ததாகவும் அந்தப் பொது புத்தி என்கிற ஒட்டு மொத்த பார்வையில் நுண்ணிய பார்வையும் இருக்க வேண்டும் எனக்கூறினார். ஒரு கண்ணில் யானையையும் மறு கண்ணில் எறும்பையும் பார்க்கின்ற ஆற்றல் நாவலாசிரியர்களுக்கு இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் இந்த நிகழ்வில் நாவல்கள் குறித்து ஆற்றிய உரை ஜெயமோகன் வலைத்தலத்தில் இன்னும் சில நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதில் அவர் பேசியதின் முழுமையான பதிவும் இருக்கும். நாவல் வாசிப்பு என்பது ஒரு தவம் போல, முடிந்தவுடன் ஏற்படும் அமைதியும் வெறுமையும் தற்கொலை உணர்வுக்குக்கூட இட்டுச் செல்லும் என்கிறார் படைப்பாளர் ஜெயமோகன். அவரிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு பேருந்தில் வீடு திரும்பும்போது ஜெயமோகனுடன் கழிந்த எனது விடுமுறையில் எங்கோ ஒரு தனிமையும் வெறுமையும் அப்பிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, September 10, 2010

ஜெயமோகனுடன் மூன்றாவது நாள்-3: உள் முரண்களும் உலக அரசியலும்

குறிப்பு: இந்தத் தொடர் யாவும் ஜெயமோகனுடன் இருந்த எனது தருணங்களின் பதிவு மட்டுமே. மற்றபடி ஜெயமோகன் கூறிய விசயங்களின் தொகுப்பாகவோ அல்லது மேற்கோளாகவோ இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசியதில் என் மீது படிந்த ஒரு சிறு தெறிப்பின் விளைவே இந்தத் தொடர்ப்பதிவுகள்.

மூன்றாவது நாள் ஏற்கனவே திட்டமிட்டப்படி சுவாமி பிரமனந்தாவும் ஜெயமோகனும் கடாரத்திற்குச் சோழர்கள் வந்ததற்கான அடையாளங்களின் சேகார மையம் எனச் சொல்லப்படும் பூஜாங் பள்ளதாக்கிற்கு வருவதாகக் கூறியிருந்தார்கள். நான் அவர்களை அங்கே போய் சந்திப்பதாக முந்தையநாள் இரவே திட்டமிட்டிருந்தோம். புறப்படுவதற்கு முன் என்னுடன் முடிந்த அளவில் பல நண்பர்களை அழைத்துச் செல்லலாம் எனத் தீர்மானித்திருந்தேன். ஜெயமோகனுடன் உரையாடுவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க் ஒரு சிறு ஏற்பாடு. அதன்படி தலைமை ஆசிரியரும் வாசகருமான திரு.ரவி அவர்களையும் என்னுடன் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர் திரு.ஹென்ரி அவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன்.

தலைமை ஆசிரியர் ரவி அவர்களுடன் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு கீழேயுள்ள சிறு நகரத்தில் இருக்கும் ஒரு சீனக் காப்பி கடையில் அமர்ந்துகொண்டோம். திரு.ரவி அவர்கள் தீவிரமான தமிழ் தேடல் உள்ளவர். வங்காளத் தேசத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நாவலைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாவல் பிரதி ஆங்கில வடிவில் அவரிடம் இருப்பதாகவும் எனக்குப் படிப்பதற்குத் தருவதாகவும் கூறிக் கொண்டிருந்தார். சுவாமியும் ஜெயமோகனும் காலை மணி10.30 போல் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அனைவ்ருமாக முதலில் பூஜாங் அருங்காட்சியக மையத்திற்குள் சென்றோம். சோழர் காலத்தில் இங்குக் கிடைக்கப்பட்ட கற்கள், அவர்களின் வருகையைத் தெரிவிக்கும் தொல்லியல் பொருள்கள், சிலைகள், தடயங்கள் போன்றவை அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையிட்டார். பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றிய குறிப்புகள் தற்போதைய வரலாற்று பாடத்திட்டத்தில்கூட இடம்பெறாததை அவரிடம் கூறினேன்.

சிறிது நேரம் எல்லாம் பொருள்களையும் பார்வையிட்ட ஜெயமோகன் இது யாவும் சோழர் காலத்திற்குரிய தடயங்கள்/கலை அடையாளங்கள் கிடையாது எனவும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். பௌத்த மதத்தின் முக்கியமான குறியீடுகளான தாமரையும் யானையும் மீண்டும் மீண்டும் தொல்லியல் பொருள்களில் காணப்படுவதன் மூலம் இது பௌத்த காலக்கட்டம் உலகம் முழுவதும் பரவிய நூற்றாண்டைக் குறிப்பிடும் என அடையாளப்படுத்தினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் எந்தவித முழுமையான ஆய்வும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டார். வெளியே மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் Candi எனச் சொல்லக்கூடிய சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் கீழ் அடித்தளத்தை ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தோம். அதையும் பார்வையிட்ட ஜெயமோகன் இவையனைத்தும்கூட மிக மிகப் பழமையான பௌத்த கோவில்கள் கட்டப்பட்ட கோவில் கட்டிடங்களின் மிச்சங்கள் எனக் கூறினார். மேலும் தூண்களின் அடித்தளக் கற்களையும் அதன் நடுவில் இருக்கும் குழியையும் காட்டி இங்குத்தான் பௌத்த ஆலயங்களில் பயன்படுத்தப்படும் துபிகளை நடுவதற்கான இடம் எனக் குறிப்பிட்டார். மிகவும் ஆதாரப்பூர்வமான மறுப்புகளை நிகழ்த்திக் கொண்டே வந்து அங்குப் பதிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுக்கு முரணான கருத்தாக்கங்களையும் முன்வைத்தார். (பூஜாங் பள்ளத்தாக்குகளில் புதைந்து கிடக்கும் உண்மைகள் எனும் ஒரு தலைப்பில் ஜெயமோகனை விவாதிக்கச் செய்தால் உள்நாட்டில் நடந்திருக்கும் இருட்டடிப்புகளைக் கண்டுபிடித்துவிடலாம்.)

பிறகு அவ்வப்போது உலக அரசியலைத் தொட்டும் உலக அளவில் எளிய மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பல தளங்களில் வைத்து பேசிக் கொண்டே இருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இல்லத்திற்கு உணவருந்த சென்றோம்.

மாலை: பினாங்கு காந்தி மண்டபத்தில் “இந்திய ஞான மரபும் காந்தியும்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஜெயமோகனை அறிமுகப்படுத்தி பேசிய மூத்த இலக்கியவாதி திரு.ரெ.கார்த்திகேசு அவர்கள் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைத் தொட்டுப் பேசி மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தி வைத்தார். சுவாமியின் வகுப்பிற்கு வாடிக்கையாக வரும் பலர் அந்தச் சொற்பொழிவிலும் கலந்துகொண்டனர். எழுத்தாளர் திருமதி பாவை, தேவராஜுலு போன்றவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காந்தி பற்றி குறிப்பிடுகையில் அவர் அஹிம்சை என்கிற கொள்கையை சமணப் பின்புலத்திலிருந்துதான் கற்றுக் கொள்கிறார் எனக் குறிப்பிட்டார். மேலும் காந்தியின் கூற்றுப்படி ஒவ்வொரு சமூகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் எனவும் ஒரு சமூகம் சிவில் சமூகம் இன்னொரு சமூகம் அரசியல் சமூகம் எனவும் கூறினார். காந்தி முழுக்கப் போராடியது அரசியல் சமூகத்திற்கு எதிராக அல்ல, மாறாக சிவில் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் போராட்டங்களை முன்னெடுத்தார் எனக் கூறினார். அரசியல் சமூகம் என்பது மக்களைப் பிரதிநிதித்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் சமூகத்தையும் மாற்றியமைக்கலாம் எனக் கூறினார். தொடரும்

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, September 9, 2010

ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும்

குறிப்பு: இந்தப் பதிவுகளில் ஜெயமோகன் குறிப்பிட்டதாகக் கூறப்படும் எல்லாமும் ஜெயமோகனுடன் ஏற்பட்ட உரையாடலின்போது என் மனதில் பதிவு செய்யப்பட்டது மட்டுமே. ஒளி/ஒலி நாடாக்களைப் பயன்படுத்த வாய்ப்புக் கிட்டவில்லை. ஆகையால் கருத்து பிழை ஏதேனும் நேர்ந்தால், அது என்னுடைய தவறாக இருக்கக்கூடும்.

இன்று காலையிலேயே பிரமானந்த ஆசிரமத்திற்கு நானும் கோ.புண்ணியவானும் சென்றுவிட்டோம். நவீன இலக்கிய சிந்தனைக்களம் அண்ணன் ஜெயமோகனைப் பினாங்கிற்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். அதன்படியே ஆசிரமத்திலிருந்து சுவாமியின் வாகனத்தில் நான், புண்ணியவான், மணிஜெகதீசன், குமாரசாமி, ஜெயமோகன், சுவாமி மற்றும் தமிழ் மாறன் என மொத்தமாக 7 பேர் சென்றோம்.

ஜெயமோகன் இன்று கொஞ்சம் கூடுதலான உற்சாகத்துடன் காணப்பட்டார். காலையிலேயே எழுத்தாளர்களை முன்வைத்து சொல்லப்படும் பல நகைச்சுவைகளைச் சொல்லிக் கொண்டே வந்தார். அப்பொழுதுதான் அண்ணன் மகிழ்ச்சியாகச் சிரித்ததைப் பார்த்தேன். இரண்டு பேர் மது அருந்திவிட்டு போதையில் சாலையில் படுத்துக் கிடந்திருக்கிறார்கள். அப்பொழுது காவல்துறை அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரையும் எழுப்பி மிரட்டியிருக்கிறார். மேலும் இருவரும் யார் என விசாரித்துள்ளார். ஒருவன் எழுந்து விழுந்துகிடக்கும் மற்றொருவனைக் காட்டி அவர்தான் பிரபல எழுத்தாளர் எனக் கூறியிருக்கிறான். பதிலுக்கு நீ யார் என காவல்துறை அதிகாரி கேட்க, “நான் அவருடைய தீவிர வாசகன்” எனக் கூறியிருக்கிறான்.

மேலும் நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டே போனார் ஜெயமோகன். ஒருவன் தூக்கம் வருவதில்லை எனவும் அது ஒரு பிரச்சனையாக இருப்பதாகவும் மருத்துவரிடம் சென்றிருக்கிறான். அந்த மருத்துவர் இலக்கிய நாட்டம் உள்ளவர், உடனே தூக்கம் வருவதற்கு மருந்து எழுதி கொடுத்திருக்கிறார். “பொன்னியின் செல்வன் காலையில் இரண்டு வேளை படிக்கவும், மாலையில் மூன்று வேளை படிக்கவும் என. ஜெயமோகன் ஒவ்வொரு நகைச்சுவையையும் சொல்லிவிட்ட பிறகு தன்னை மறந்து சிரித்தார்.

பினாங்கிலுள்ள தண்ணீர் மலை கோவிலைச் சென்றடைந்ததும், அந்தக் கோவிலைப் பற்றி கேட்டறிந்து கொண்டார். கோவில் புதுப்பிக்கப்பட்டு வருவதையும் மேலே புதிய கோவில் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தார். தண்ணீர் மலையின் படிக்கட்டுகளில் பேசிக் கொண்டே ஏறினோம். ஜெயமோகன் எப்பொழுதும் வித்தியாசமான அபாரமான தகவல்களையும் ஞானத்தையும் கொண்டுள்ளார். அவரால் உடனுக்குடனே எந்த விசயத்தையும் தொட்டு ஆழமாக உரையாட முடிகிறது.

முருக கடவுள் சங்க காலத்தில் ஒரு குறுநில சிறு தெய்வம் எனவும் சங்கம் மறுவிய காலக்கட்டத்தில்தான் அதாவது பக்தி காலக்கட்டத்தில் பெருந்தெய்வமாக வழிப்படப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். செட்டியார்கள் புலம்பெயர்ந்தபோது முருகரையும் கொண்டு சென்றார்கள், அவரையும் முருக பக்தியையும் பரப்பினார்கள் எனவும் சான்றுகள் உள்ளன. பினாங்கிலுள்ள தண்டாயுதபாணி கோவிலுக்குக் கீழேகூட செட்டியார் கோவில் ஒன்று உள்ளது. மேலும் இந்து கடவுள்கள் பற்றியும் அந்தப் பக்தி மார்க்கங்களையும் தண்டாயுதபாணி கோவிலில் வைத்து மேலும் உரையாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு பிறகு நகர் உலா வந்தோம். ஜெயமோகன் காரிலேயே அமர்ந்துகொண்டு பினாங்கு நகரத்தின் பகுதிகளையும் மக்களையும் பார்த்துக் கொண்டே வந்தார். பினாங்கு குறித்த வரலாற்று சான்றுகள் சிலவற்றை தமிழ் மாறன் கூறினார். நகரத்தைப் பற்றி குறிப்பிடுகையில் ஜெயமோகன் அவர்கள் அதன் மக்கள் அமைப்பைப் பற்றியும் அங்கு உருவாகியிருக்கும் இடைவெளிகள் பற்றியும் ஒரு விசயம் கூறினார். பெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். வசதியில்லாதவர்களின் இருப்பிடம்தான் நகரம், அவர்களுக்கான எல்லாம் தேவைகளும் அங்கேயே மிக வசதியாக முடித்துக் கொள்ளப்படுவதால்தான் அவர்கள் நகரத்திலிருந்து தூரமாகத் தள்ளி வசிப்பதை விரும்புவதில்லைப் போல.

மேலும் ஜெயமோகன் கம்ப இராமயணத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். எத்தனை எத்தனை எதிர் அவதூறுகள் வந்தபோதும் கம்ப இராமாயணம் வரலாற்றில் எப்படியாவது தன்னை மீட்டுக் கொண்டு மீண்டும் உயர்வான இடத்தில் தன்னை நிறுவிக்கொள்ளும் எனக் கூறினார். இறை மறுப்பை முன்னெடுப்பதற்காகத் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த சி.அண்ணாதுரை கீமாயணம் எனப் புத்தகம் எழுதினார். இது இராமயணத்தைக் கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட பிரதியாகும். ஆனால் அதே காலக்கட்டத்தில் சிலம்பொலி செல்லப்பன் மேலும் ஒரு சில மனிதர்களின் மூலம் கம்பர் விழா நடத்தப்பட்டு, பல ஆய்வுகள் நடத்தப்பட்டு கம்ப இராமாயணம் மீண்டும் எழுந்து உருப்பெற்றது எனக் கூறினார்.

மாலையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் “எழுத்தும் இலக்கிய எழுத்தும்” எனும் தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்தினார். 100க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்களும் பொது மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். பெரும்பாலும் ஜெயமோகனின் இலக்கிய படைப்புகளைப் படிக்காதவர்கள் இருந்தமையால், அவர் வசனம் எழுதிய சினிமாக்களைக் குறிப்பிட்டு சொல்லி அவரை அடையாளப்படுத்தவே நேர்ந்தது. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகாவது ஜெயமோகனைத் தேடி வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

அந்த நிகழ்வில் ஜெயமோகன் பேசிய சில குறிப்புகள்:

1. தமிழ் இலக்கியம் என ஒன்று இப்பொழுது இல்லை, இனி உலக இலக்கியம் எனப் பிரக்ஞை மட்டுமே உருவாக வேண்டும், உலக இலக்கியங்கள் இப்பொழுது தமிழில் அதிகமாக மொழிப்பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைப்பதால் தமிழ் வாசகர்கள் இனி நம் இலக்கியத்தை உலக இலக்கியம் என்கிற பரப்பிலிருந்துதான் மதிப்பிட வேண்டும்.

2. சமரசமற்ற எழுத்துத் தீவிரம் உருவாக வேண்டும். அது மட்டுமே எப்பொழுதும் தரமான ஓர் இலக்கிய முயற்சியை நோக்கி நம்மை நகர்த்தும்.

3. கறாரான விமர்சனப் போக்கு உருவாக வேண்டும். எதையும் எப்படியும் வன்மையாக நிராகரித்து கலை விமர்சனத்தை நிகழ்த்தக்கூடிய ஆளுமை உருவாக வேண்டும்

4. உலக இலக்கிய வாசிப்பை ஒவ்வொரு எழுத்தாளனும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உலக இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் அண்மைய மாற்றங்கள்வரை ஒரு எழுத்தாளனால் அறியப்பட்டிருக்க வேண்டும்

5. காலம் காலமாகப் பல மாற்றங்களையும் புதுமையையும் கண்டதுதான் 2000 வருட வரலாற்றைக் கொண்ட நம் மரபு. புதுமையையும் புதுப்பித்தலையும் கொண்டிராத எந்த மரபும் வளர்ந்ததாகச் சொல்ல முடியாது. தொல்காப்பியமே மாற்றத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.


6. பின்நவீனத்துவம் பற்றி அறிந்துகொள்வதற்கு முன் நவீனத்துவம் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நவீனத்துவத்தின் தோல்விதான் பின்நவீனத்துவம் என்கிற புரிதல் ஏற்பட வேண்டும்.

7. கோட்பாடுகள் அனைத்தும் ஒரு படைப்பைப் புரிந்து கொள்வதகான துணைக்கருவிகள் மட்டுமே, அதைக் கொண்டுதான் ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது “படைப்பைச் செய்தல்” எனும் அளவிற்குக் கருதப்படும்.

மேலும் பல விசயங்களைத் தொட்டு ஜெயமோகன் உரையாடினார். சினிமா தொடர்பான சில கேல்விகளும் கேட்கப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. தொடரும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா