Thursday, December 29, 2011

கவிதை: ஆண்களின் கழிப்பறை

மன்னிக்கவும்
உள்ளே நுழைவதற்கு 30 சென் செலுத்தியாக வேண்டும்
வசூலிக்க ஆள் இல்லாவிட்டாலும் சிதிலமடைந்துவிட்ட மேசையின் மீதுள்ள
பழைய தகற குவளையில் நீங்கள் போடும் சில்லறைகள்
பேரோசையாகக் கேட்க வேண்டும்.


இடம்: நெடுஞ்சாலையின் ஓரம்
சூழல்: அமிழ்ந்து எரியும் ஒரு நீளமான பல்ப்
விட்டு விட்டு ஒழுகும் நீர்க்குழாய்
பாதி உடைந்து தொங்கும் நிலைக்கண்ணாடி
தூரமாகக் கேட்கும் யாரோ ஒருவனின் பாடல் முணுமுணுப்பு.

விதிமுறைகள்:
உள்ளே நுழையும்போது தாழிடப்பட்டுள்ள கதவுகளையும்
பாதித் திறந்து முதுகு தெரிவதையும் பார்க்கக்கூடாது.
ஆள் அரவமற்றிருக்கும்போது ஏதாவது ஒரு பாடலைப் பாடி அமைதியைச்
சீர்க்குலைக்க வேண்டும்.
சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் சிறுநீர்க்குழாயை வெகுநேரம் பார்க்கக்கூடாது.
சிறுவர்களுக்கென குட்டையாக்கப்பட்டிருக்கும் தொட்டியை அசுத்தப்படுத்தக்கூடாது.
அமிழ்ந்து எரியும் பல்ப் பற்றி வெளியே சொல்லக்கூடாது.

மன்னிக்கவும்
கொடுத்த 30 காசுக்கான நேரம் முடிந்துவிட்டது.
இதற்கு மேலும் உள்ளே இருக்க அனுமதி இல்லை.

ஆண்களின் கழிப்பறையில் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை:
திசு காகிதங்களை உபயோகித்துவிட்டு தொட்டியில் போடுவது
சுவரில் தொங்கும் தொட்டிக்கு மேலே உள்ள விசையை அழுத்தாமல் விடுவது
தொட்டிக்கு வெளியே சிறுநீர் கழிப்பதைப் பெருமையாக நினைப்பது
முக்கியமாக மூக்கைப் பொத்தி கழிப்பறையை அவமானப்படுத்துவது.
இந்தக் கவிதையில் அப்படி என்னத்தான் இருக்கிறது எனக் கேட்டு மீண்டும் வாசிக்க முற்படுவது.

நீங்கள் செலுத்தியது வெறும் 30 சென் என்பதை மறக்க வேண்டாம்.
அதையும் மீறி கவிதைக்குள் எதையாவது தேடினால்
நீங்கள் எப்பொழுதோ கழிப்பறையில் கசக்கிப்போட்ட ஒரு திசு காகிதத்தைக்
கண்டடையக்கூடும்.

மொத்தச் சொற்கள்: 152
கழிப்பறை என்ற சொல் 4 முறை, வேண்டும் என்ற சொல் 3 முறை
கூடாது என்ற சொல் 4 முறை.

கே.பாலமுருகன்

No comments: