Friday, May 16, 2014

துரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காது

3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது பட்டம் விடுவதில் பைத்தியக்காரத்தனமான வெறி உருவாகியிருந்தது. எல்லாம் நண்பர்களும் எப்பொழுதும் ஒரு பட்டத்துடனே இருந்தார்கள். மாலையில் எல்லோரும் பட்டத்தை எடுத்துக் கொண்டு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அது பறந்ததா என்பதைப் பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. கையில் ஒரு பட்டம் வைத்திருப்பதையே பெருமையாகக் கருதினார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு விளையாட்டுத் தனக்கும் தெரியும் எனக் காட்டிக்கொள்வதற்காகவே ஆப்பே கடையில் விற்கும் சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் படங்களுள்ள பட்டங்களை வாங்கிக் கொண்டு திரிவார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டம் விடும் விளையாட்டின் மீது ஆசை கூடியிருந்த காலத்தில் பள்ளிக்கே மாணவர்கள் புத்தகைப்பையில் பட்டத்தை ஒளித்துக் கொண்டு வரத் துவங்கினார்கள். ஓய்வு நேரத்தில் திடலில் அதுதான் எங்களுக்கு விளையாட்டு. அந்தப் பட்டம் பறக்காது. எங்களின் தலைக்கு மேலாகத்தான் பறக்கும். அதனை ஒருவன் பிடித்துக் கொண்டு ஓடுவான். நாங்களெல்லாம் பின்னாடியே ஓடுவோம். அதுதான் பட்டம் விளையாட்டு.

Monday, May 5, 2014

சிறுகதை: வேட்டை நாய்

சரசு அக்கா தலையை ஒருபக்கமாகச் சாய்த்து முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைப் பார்த்தாள். அதுவொரு இரக்கமற்ற பார்வை. சதையைத் தின்னத் துடிக்கும் பசி மிகுந்த வேட்டை நாயின் பார்வையை ஒத்திருந்தது. கண்களை நாலாதிசையிலும் உருட்டியப் பிறகு தொண்டை கிழியக் கத்தினாள். ஒருவாரத்திற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் சரசு அக்காவிற்குப் பேய் பிடித்திருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வேனிற்குள்ளேயே அலறினாள். அநேகமாக அருகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நகக்கீறல் சதையைப் பதம் பார்த்திருக்கக்கூடும். காயூ பாலாக் பாதையைக் கடந்துபோகும்வரை பீதி அனைவரின் முகத்திலும் உறைந்திருந்தது. சரசு அக்கா நாற்காலி மெத்தையை அழுத்திப்பிடித்து தன் உடலை மேலே தூக்க முயன்றாள். கால்கள் இரண்டையும் முடிந்தவரை பரப்பிப் பார்த்த பிறகு அது முடியாதபோது பாதி நாக்கு பல்லுக்கிடையில் சிக்கித் திணறியது. தொண்டைக்குள்ளிருந்து அலறியபோது அவளுடைய குரல் ஆணினுடையதாக மாறியிருந்தது. உச்சத்தை அடைந்து அடைப்பட்டு குமுறியது.

அவர்களுக்கு அது வாடிக்கையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன் இப்படிப் பேய்ப்பிடித்த சுகுனா அக்கா பிறகு தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனது பெரும் மிரட்டலாக எல்லோர் மனத்திலும் அப்பிக் கொண்டது. சுகுனா அக்காவின் கணவன் ஓடிப்போனதிலிருந்து அவள் பித்துப் பிடித்துதான் இருந்தாள். பிறகு பலகை தொழிற்சாலையில் லைனில் வேலைச் செய்யும் குமாருடன் தொடர்பு இருந்து அதுவும் 2-3 மாதத்தில் பிரச்சனையாகிப் போனதால் அவள் மனம் உடைந்துதான் இருந்தாள். குமாருடன் உறவில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக அவளுக்குப் பேய்ப்பிடிப்பதும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு அடிக்கடி பேய்ப்பிடித்து அலற ஆரம்பித்திருந்தாள். அவளுடைய பழைய காதலன் தான் செய்வினை செய்துவிட்டான் என்றும் அதனால்தான் அவளைப் பேய்ப்பிடித்து ஆட்டுகிறது என்றும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள். பேய்ப்பிடிப்பது முதலில் ஒரு அதிர்ச்சியாக இருந்து பிறகு ஒரு வாடிக்கையான சடங்காக மாறியிருந்த காலக்கட்டம் அது. அதைப் புரட்டிப்போட்டது சுகுனா அக்காவின் மரணம்தான்.

Friday, April 18, 2014

சிறுகதை: வேட்டை நாய்

மலைகள்.காம் இணைய இதழில் என் சமீபத்திய சிறுகதையான 'வேட்டை நாய்' பிரசுரமாகியுள்ளது. நண்பர்கள் வாசகர்கள் வாசிக்கவும்:


http://malaigal.com/?p=4633

நன்றி: மலைகள் இதழ் ஆசிரியர் சிபிசெல்வன்(சேலம்)

Thursday, April 10, 2014

பத்தி: குழந்தைகளின் துப்பாக்கிகள்

நாம் குழந்தைகளிடம் விளையாட கொடுப்பது ஒரு குட்டி வன்முறையின் துவக்கத்தையே. விளையாட்டுத் துப்பாக்கி, விளையாட்டு ஆயுதங்கள், விளையாட்டு இராணுவப்படை என அரசுக்கு உகந்த சாதகமான ஒரு போர் மனநிலையே குழந்தைகளிடம் விதைக்கப்படுகிறது.

5 வயதில் விளையாட்டுத் துப்பாக்கியை நம் வீட்டுப் பிள்ளை எடுத்துச் சுடும்போது கைத்தட்டுக்கிறோம். அதே பையன் தனது 20ஆவது வயதில் துப்பாக்கியை எடுக்கும்போது நடுங்குகின்றோம். மிகப்பெரிய உடல் வதையை நகைச்சுவையாகக் காட்டக்கூடிய 'Tom and Jerry' கார்ட்டூனைத்தான் பார்த்துப் பார்த்து நம் வீட்டுக் குழந்தைகள் வளர்கிறார்கள். டோம் நாயிடமும் பிறரிடமும் சிக்கி உடல் சிதையும் காட்சிகளையே நம் குழந்தைகள் தீவிரமாக இரசிக்கத் துவங்குகிறார்கள். அவர்களின் இரசனை மிகவும் விளையாட்டாக வன்முறையை நோக்கியே வளர்க்கப்படுகின்றது.

Monday, March 31, 2014

சிறுகதை: பேபி குட்டி



கடைசியாகத்தான் பெரிய மாமா வந்தார். அதுவரை வீடு ஒரு கனத்த துயரத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்து இப்பொழுது தளரவிட்டதைப் போல உடைந்தது. அப்பா கதறி அழும்போது உடன் யாராலும் அழாமல் இருக்க முடியவில்லை. இதுவரை எதற்குமே சட்டென அழாத ஒருவர். அப்படி அழுது கதறும்போது உடல் சிறுத்துக் குழந்தையாகி எல்லோரின் மடியிலும் விழுகிறார்.

மாணிக்கம் பக்கத்து வீட்டு ஆள். அப்பாவின் நெருங்கிய உலகமே அவர்தான். அவருக்குச் சொல்லும்படியாக நண்பர்கள் இல்லை. ஒரு வீடு தள்ளிக்கூட யார் இருக்கிறார்கள் என அப்பாவிற்குத் தெரியாது. மாணிக்கம் அப்பாவைப் பிடித்து ஓர் இடத்தில் உட்கார வைக்கும்போது அவர் வேட்டி கழன்றுவதைப் போல இருந்தது.

“யப்பா...தலைய வடக்காலே வைக்கனும்...தூக்குங்க,” என நெற்றி நிறைய திருநீர் பூசி முகத்தை மறைத்திருந்தவர் கூறினார். அவர்தான் பெரியசாமி.

இரண்டு வயது குழந்தையின் மரணம் யாரையும் சமாதானப்படுத்தக்கூடியதில்லை. வருவோர் போவோர் அனைவரும் புலம்பியபடியே இருந்தனர். ஆகக் கடைசி வார்த்தையாக ஒரு புலம்பலையே விட்டுப் போய்க்கொண்டிருந்தனர். வீட்டில் அவன் கடைசி பையன். பின்கட்டிலிருந்து முன்வாசலுக்கு ஓடிவரும் சிறிய இடைவெளியில் சட்டென முடிந்துவிட்ட வாழ்க்கை. இத்துனை அவரசமான முடிவு.

Tuesday, March 25, 2014

எழுத்தாளர் ஜெயமோகனுடன் மூன்று நாள் இலக்கிய முகாம்- பினாங்கு கொடி மலை

கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களம் ஏற்பாட்டில் கடந்த 16ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்கள் மலேசியாவிற்கு வருகையளித்து 25ஆம் திகதிவரை பல இலக்கிய நிலக்ழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். 16ஆம் திகதி புத்தகச் சிறகுகள் ஏற்பாட்டில் நடந்த கவிதை மாலையில் 'காலம்தோறும் கவிதைகள்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதன் பிறகு 18ஆம் திகதி விரிவுரையாளர் குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் பினாங்கு ஆசிரியர் பயிற்றகத்தில் பயிற்சி ஆசிரியர்களிடம் உரையாற்றினார். அம்மாணவர்கள் ஜெயமோகனின் /வெண்முரசு' நாவலின் ஒரு காட்சியை நாடகமாக நடித்திருந்தார்கள். மேலும் அவருடைய சிறுகதைகள் நாவல்களை வாசித்திருந்ததும் மகிழ்ச்சியளித்தது.

அடுத்ததாக 19ஆம்திகதி ஜெயமோகன் அவர்கள் சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் வளாகத்தில் 'இலக்கிய வகைகளையும் அது வழங்கக்கூடிய பேரனுபவம் தொடர்பாகவும்' உரையாற்றினார். விரிவுரையாளர் திரு.தமிழ் மாறன் அவர்களின் ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

வியாழக்கிழமை 20ஆம் திகதி அன்று ஜெயமோகன் அவர்கள் பிரமானந்த சரஸ்வது அவர்களின் ஆசிரமத்தில் உரையாற்றினார். கூலிம் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று ஜெயமோகன் அவர்கள் கூலிம் நவீன இலக்கிய சிந்தனைக்களத்தைச் சேர்ந்த நண்பர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மணிஜெகதீசன், குமாரசாமி, பாண்டியன், கே.பாலமுருகன், தினகரன், தமிழ்மாறன், கோ.புண்ணியவான் எனப் பலர் அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

மறுநாள் 22ஆம் திகதி முதல் ஜெயமோகன் அவர்களுடன் மூன்று நாள் இலக்கிய முகாம் பினாங்கு கொடி மலையில் நடைபெற்றது. சனிக்கிழமை தொடங்கி திங்கள்வரை அந்த முகாம் பற்பல தலைப்புகளில் முன்னெடுக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த ம.நவீன் மலேசிய நாவல்களையும், கோ.புண்ணியவான் மலேசியச் சிறுகதைகளையும், சு.யுவராஜன் மலேசியக் கவிதைகளையும் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அந்த மூன்று நாள் இலக்கிய முகாமையும் எழுத்தாளர் ஜெயமோகன் மிகச் சிறப்பாக வழிநடத்தினர். அவருடன் நண்பர்கள் ராஜமாணிக்கம் மற்றும் கிருஷ்ணன் அவர்களும் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தனர்.

- எழுத்து & புகைப்படங்கள்: கே.பாலமுருகன்




Tuesday, March 4, 2014

மலேசியத் திரைவிமர்சனம்: மெல்லத் திறந்தது கதவு

இப்படத்தின் வியாபாரம் மலேசிய சூழலில் கொஞ்சம் வித்தியாசமானவை. கார்த்திக் ஷாமலன் என்கிற மலேசிய இளைஞரால் இயக்கப்பட்டு டீவிடியின் மூலம் இப்படம் வெளியாகியுள்ளது. நண்பர்கள், முகநூல் மூலம் இப்படம் தொடர்பான பகிர்வுகள், விமர்சனங்கள் பரவியப்படியே உள்ளன. இன்று பதாகைகளோ அல்லது பத்திரிகைகளோ அவையனைத்தையும்விட முகநூல், தகவல்களைச் சேர்ப்பதிலும் மக்களை இணைப்பதிலும் முதன்மை வகித்து வருகின்றது. கார்த்திக் ஷாமலனால் முகநூலில் இப்படம் குறித்து பெரிய அலையை உருவாக்க முடிந்துள்ளது. அடுத்து வரும் இளம்தலைமுறை படைப்பாளர்கள் பத்திரிகைகளில் காலில் விழாமலும் விளம்பர நிறுவனங்களுடன் சமரசம் செய்துகொள்ளாமலும் மக்களை அடைய இதுபோன்ற முயற்சிகள் அவசியம் என்றே கருத முடிகிறது.

கதை

படித்த மேல்தட்டு பெண்ணொருவரின் (ஸ்வஸ்னா) வாழ்வில் நிகழும் ஒரு துர்சம்பவத்தைச் சுற்றிய கதை இது. புகைப்பழக்கமுள்ள ஒரு துணிச்சலான பெண்ணாகக் காட்டப்படும் அவர் ஒரு நாள் வேலை முடிந்து வரும் வழியில் லோரோங் சந்தில் இன்னொரு பெண் ஒரு ஆசாமியால் பாலியல் வல்லுறவு செய்யப்படுவதை நேரில் பார்த்துவிடுகிறார். அங்கிருந்து அவர் மிகப்பெரிய பாதிப்பிற்க்குள்ளாகுவதாக மீதிப்படம் நகர்கிறது. அதாவது இப்படத்தை இரண்டு விதமாகப் பிரித்துணர முடிகிறது. ஒன்று கற்பழிப்பு சம்பவத்திற்கு முன்பான அவருடைய வாழ்க்கை அடுத்ததாக அந்தக் கற்பழிப்புச் சம்பவத்திற்குப் பிறகான அப்பெண்ணின் வாழ்க்கை. ஒரு கற்பழிப்புச் சம்பவம் கதையின் மையமாக இருந்து கதையின் இருவழி பாதையைத் தீர்மானிக்க உதவுகிறது.

Sunday, February 2, 2014

விடியும் முன் : தீமையின் ருசி

கடந்த வருடம் வெளியானதில் மிகச் சிறந்த திரைக்கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை, நடிப்பு எனத் தாராளமாகக் குறிப்பிடலாம். காட்சியமைப்பு - திரைக்கதையில் 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தையும் 'விடியும் முன்' படத்தையும் முக்கியமான படமாகச் சொல்லலாம். ஆனால், விடியும் முன் 'London to Brigton' எனும் 2006ஆம் ஆண்டில் வெளிவந்த பிரிட்டிஸ் படத்தின் தழுவல் என்றும் சொல்லப்படுகிறது. அப்படித் தழுவலாக இருந்தால் ஒரிஜினால்ட்டி இல்லாததால் படத்தின் கதையையும் திரைக்கதையையும் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் இப்படத்தில் பூஜாவின் நடிப்பும் கதாபாத்திரமும் தமிழ் சினிமா பொருட்படுத்த வேண்டிய விமர்சிக்க வேண்டிய 2013ஆம் ஆண்டின் வெளிப்பாடாகும். சமூகத்திடமிருந்து எந்தக் கழிவிரக்கத்தையும் எதிர்ப்பார்க்காத ஒரு பாலியல் தொழிலாளி கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

பாலியல் தொழிலாளியின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தின் பற்பல கிளைகள்தான் இப்படம். மற்றபடி அவர்களின் வாழ்வை நோக்கிக் கதறி அழுது சோகப்படும் எந்தத் தருணமும் காட்சியும் படத்தில் இல்லை. எல்லாமும் இன்னொரு காட்சிகளாக எந்த அலட்டலும் மிகையும் இல்லாமல் நகர்கின்றன. இப்படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரமும் புரட்சியோ, இலட்சியவாதம் கொண்டவர்களோ அல்ல.

படத்தின் கடைசி கட்டம்வரை நமக்குள் இருக்கும் தீமையின் ருசி எத்தனை வன்மமானது என நமையே உணரச் செய்கின்றது. ஒரு 12 வயது சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாகுவது பொதுப்புத்தியில் நாம் யாரும் விரும்பாத ஒரு விசயமே. ஆனாலும் ஒரு பெரிய பணக்காரனால் அந்தச் சிறுமி பாலியல் ரீதியில் என்னவோ செய்யப்படுகிறாள்; அதைப் படத்தின் இறுதிவரை சொல்லப்படவில்லை; இருப்பினும் அது என்னவாக இருக்கும் எனும் நுகர்வு வெறிக்கு ஆளாகி படம் முழுக்க அலைந்து கொண்டிருக்கும் மனப்பாண்மைக்கு ஆளாகியிருப்போம். அதைத் தெரிந்துகொண்ட அடுத்த கணமே 'இவனுக்கெல்லாம் இந்தத் தண்டனைக்கூட பத்தாது' எனச் சட்டென நியாயம் தீர்ப்பு வழங்கும் பொதுப்புத்திற்குத் திரும்பிவிடுவோம். நாம் எப்படிப்பட்ட வேடந்தாரிகள்?

Friday, January 31, 2014

மலேசிய சீனத்திரை விமர்சனம்: The Journey

A Malaysian Chinese Director Chiu's 'The Journey' , wonderful performance. Came out with the tears.....its realy the journey of the past life with 'pokok pondan, Uncle si Lembu, Hot Balloon, shangai Hotel, SJKC San Beng Baling and Fatimah'.

The great day படத்தின் இயக்குனர் Chiu அவர்களின் இவ்வருடத்தின் சீனப்படம்தான் 'the journey'. இங்கிலாந்தில் படிக்கும் தன் மகள் அவளுடைய காதலான வெள்ளைக்காரர்(பெஞ்சி)-யை அழைத்துக் கொண்டு கேமரன் மலையில் வசிக்கும் தன் 

அப்பாவைக் காண சீனப்பெருநாளுக்கு முந்தைய நாள் வந்து சேர்கிறாள். கதை இங்கிருந்துதான் துவங்குகிறது.

சீனக் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத ஒருவரைத் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லாத வயதான அப்பா, வேறுவழியின்றி அந்த வெள்ளைக்காரருடன் தன் மகளின் திருமண விருந்து அழைப்பிதழை எடுத்துக் கொண்டு தன் பால்ய சிநேகிதர்களைத் தேடிச் செல்வதுதான் கதையின் மையம். சீனர்களின் மத நம்பிக்கைப்படி மாப்பிள்ளையுடன் விருந்து அழைப்பிதழைக் கொடுக்கச் செல்வது அவசியமாகும். அதன்படி பெஞ்சியும் அங்கிள் லீயும் மோட்டாரில் கேமரனிலிருந்து பாலிங் கெடாவரை பயணம் செய்கிறார்கள். பால்ய காலத்தில் பாலிங் தேசிய சீனப்பள்ளியில் தன்னுடன் படித்த வகுப்பு நண்பர்களைக் காணச் செல்வதாகப் படம் அழகியலுடன் நீள்கிறது.

Tuesday, January 14, 2014

ஜில்லா - வீரம் : மசாலா தடவிய சமூகக் கருத்து



சமூகப் பிரச்சனைகளுக்குப் பின்னணியில் அரசியல், கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் எனப் பல அரிய விரிவான தாக்கங்கள் உண்டு. அவையனைத்தையும் எந்த அறிவுசார் புரட்சியும் மெனக்கெடலும் இல்லாமல் ஒரு மாஸ் கதாநாயகனை வைத்துத் தீர்க்க முடியும் என மீண்டும் மீண்டும் இந்த வகை தமிழ்சினிமா நம்மிடம் அம்புலிமாமா கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கின்றன.

ஜில்லா - வீரம் இரண்டுமே பொங்கல் வெளியீடு. சாமர்த்தியமாக இரு படங்களுக்கும் ஒரே மதிப்பெண்ணை வழங்கித் தப்பித்துவிடும் சில அக்கறையற்ற வலைப்பதிவாளர்களும் தனித்தனியே இரு படங்களையும் உயர்த்திக் கொண்டாடும் இரசிகர்களும் இப்படங்களின் மீது நிஜமான விமர்சனங்களை வைப்பதில்லை. எல்லாம் மசாலாவையும் கலந்து தடவி கோழியைப் பொறிச்சி அதில் அம்மாவிற்கு ஒரு துண்டு , தங்கைக்கு ஒரு துண்டு, அப்பாவிற்கு ஒரு துண்டு, மிச்ச எலும்பை காதலிக்கு, எனப் பகிர்ந்தளிக்கும் வழக்கமான மசாலாத்தான் 'ஜில்லா'.

தொட்டுக்கொள்ள கொஞ்சம் சமூக அக்கறை மற்றும் சமூகப் பிரச்சனை. சமூகத்தில் நடக்கும் எல்லாம் பிரச்சனைகளையும்(அதன் தனித்தனியான அரசியல் அறியாமல்) தீர்ப்பதற்கு ஒரு மாஸ் கதாநாயகன் வேண்டும். (ஒரு சூப்பர்மேனைப் போல). 'இவன் வேற மாதிரி' படம்கூட அந்த வகையைச் சேர்ந்தது என்றாலும் பாண்டிய நாடு என்பதும் சமூகக் கதை என்றாலும் அவை இரண்டிலும் கதைக்கான கச்சிதம் இருக்கும்.