Wednesday, November 12, 2014

இது சுங்கைப்பட்டாணியின் கதைகள் : பன்றி பாலம்

இதற்கு முன் சுங்கை பட்டாணியில் அதாவது 2013 ஆம் ஆண்டு வரை வசித்தவர்களுக்கு நிச்சயம் பன்றி பாலம் எனச் சொன்னதும் தைப்பூசக் கோவிலுக்குப் பின்னால் இருந்த ஒற்றை பாலம் ஞாபகத்திற்கு வரும். இப்பொழுது அந்தப் பாலம் அங்கு இல்லை. இடித்துப் பெரிதாக்கி பெரிய சாலையை உருவாக்கிவிட்டார்கள். அப்பாதைப் பத்தானி ஜெயா/பெர்ஜாயா வசிப்பிடப் பகுதியையும் சுங்கை பட்டாணி நகரத்தையும் இணைக்கும்வகையில் கொஞ்சம் பரப்பரப்பாகவும் ஆகிவிட்டது.

பாலம் என்றால் எதோ போக்குவரத்துக்கு இக்கறையிலிருந்து அக்கறைக்குத் தாவ உதவும் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. பாலம் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கைக்குள் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது. பல நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ஒரு காலக்கட்டத்தை எப்பொழுதுமே நினைவுப்படுத்தக்கூடியவை.

என் அம்மா கடந்த 1990களில் அந்தப் பாலத்தில்தான் தனது மினி சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குச் செல்வார். சீனர் வீட்டில் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வெள்ளிக்கிழமை நானும் அம்மாவுடன் சென்று ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுதெல்லாம் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அம்மா என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடந்துதான் பொருள்கள் வாங்க சுங்கை பட்டாணிக்குச் செல்வார்.

ஈரம் சொட்டும் கைலியுடன் அம்மா சைக்கிளை மிதிக்க, என்னைச் சமாதானம் செய்யக் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளைக் கையில் கடவுளை ஏந்திக் கொண்டு வருவதைப் போல பயப்பக்தியுடன் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க, இருவரும் அந்தப் பன்றி பாலத்தைக் கடப்போம். ஏதோ படகில் உல்லாசமாக ஆற்றைக் கடப்பதைப் போன்று பிரமையாக இருக்கும்.

பன்றி பாலம் உருவான கதை

சுங்கை பட்டாணி பொது பேருந்து நிருத்தம் பக்கமாக வந்தீர்கள் என்றால் ஒரு கறுப்பு ஆறு குறுக்காக ஓடுவதைப் பார்க்கலாம். குப்பைகள் மிதந்து செல்லும். ஒருவர்கூட அந்த ஆற்றை ஆயாசமாகப் பார்த்து இரசிக்கும் எந்தக் காட்சியையும் பார்க்க முடியாது. நம்முடைய அனைத்து அலட்சியங்களையும் ஒன்று சேர்த்தால் அது நிச்சயம் அந்தக் கறுப்பு ஆறாக இருக்கும்.

அந்த ஆற்றிற்கு மேலே குறுக்காக இரயில் தண்டவாளம் உண்டு. கரும்புகையுடன் இரயில் அவ்விடத்தைக் கடக்கும் காட்சியை அந்தக் கருப்பாறோடு சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் மலேசியாவிலேயே காற்றுத்தூய்மைக்கேட்டில் சுங்கைப்பட்டாணி பட்டணம் இரண்டோ மூன்றாவது இடத்தையோ பெற்றிருக்கும் தகவல். அந்தக் கருப்பாறின் ஒரு பகுதியைக் கடக்கத்தான் 1900களின் ஆரம்பத்தில் அந்தப் பன்றி பாலம் கட்டப்பட்டது என ஒரு செய்தி உண்டு.

Saturday, November 8, 2014

Interstellar: காலமும் புவி ஈர்ப்புச் சக்தியும்: ஒரு கற்பனை அறிவியல்

Chiristhoper Nolan அநேகமான இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளனாக இருக்கக்கூடும் என்கிற ஒரு மனநிலை அவருடைய ஐந்தாவது படத்திற்குப் பிறகு உறுதியாகிறது. நான்காவது படமான inception ஒரு பின்நவீனத்துவ சினிமா என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அப்படம் ஆழ்மனம் பற்றிய ஒரு தத்துவப்பார்வையைக் கொண்டிருந்தது என்பதை யாரும் உணரவில்லை.

நாம் காணும் உலகத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அறிவியலைத்தான் கிரிஸ்தப்பர் புனைவாக்குகிறார். அதில் ஒரு தத்துவப்பார்வையையும் விதைக்கவே செய்கிறார். ஓரளவிற்காகவாவது அறிவியல் தெரியாதவர்கள் நிச்சயம் இந்தப் படத்தை இரசிக்க முடியாது. காலம் குறித்த ஒரு அபாரமான சிந்தனையைப் படம் ஏற்படுத்துகிறது.

நாம் அறிந்திருக்கும் பால் வீதியைத் தாண்டும் ஒரு கற்பனையாகப் படம் மாற்று அறிவியலைச் சித்தரிக்கிறது. முன்பு பகவத் கீதையில் படித்துள்ளேன், இந்த ஒரு பால் வீதி மட்டும் மல்ல இந்தப் பிரபஞ்சத்தில் எண்ணற்ற பால் வீதிகள் இருக்கின்றன. இது போல் இன்னும் எத்தனையோ சூரியன்களும் பூமிகளும் இருக்கின்றன எனப் பகவத் கீதை அழுத்தமாகச் சொன்னதை, இப்படம் ஒரு புனைவாகச் சொல்கிறது.

இரண்டு மிக முக்கியமான கட்டங்கள் என்னை உலுக்கியது என்றே சொல்லலாம். ஒன்று கதாநாயகனும் அவனுடன் இன்னொரு விஞ்ஞானியும் ஏதோ ஒரு கிரகத்தில் தரையிறங்குகிறார்கள். அந்தக் கிரகத்தில் அவர்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம் உலகக் கணக்குப்படி அது 7 வருடங்கள் ஆகும். ஒருவேளை அவர்கள் அந்தக் கிரகத்தில் 10 மணி நேரம் சிக்கிக்கொண்டால், அந்தக் கதாநாயகன் பூமியில் விட்டுவந்த தன் பத்து வயது மகளுக்கு 80 வயதாகிவிடும்.

அடுத்து, கதாநாயகன் பால் விதியைக் கடந்து பெருவெளிக்குள் நுழைந்து இறுதியாக மாபெரும் காலம் என்கிற சக்திக்குள் மாட்டிக்கொள்ளும் கட்டம் அபாரமானவை.

பூமி இனி வாழ்வதற்கு ஆபத்தான பகுதியாக மாறத் துவங்குகிறது. ஆகையால் இந்தப் பால் வீதியைத் தாண்டி அடுத்த பால் வீதிக்குள் இருக்கும் கிரகங்களில் எது மனிதர்கள் வாழத்தகுதியானவை என்பதைக் கண்டறிய 4 பேர் கொண்ட குழு நம் பால் வீதியைக் கடப்பதுதான் படத்தின் கதை. இதை மையமாகக் கொண்டு படத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

எனக்கும் இப்படம் எந்த அளவிற்கு விளங்கியுள்ளது என்று தெரியவில்லை. நான் 4 வருடம் அறிவியல் வகுப்பில்தான் படித்தேன். இயற்பியல், இராசாயணவியல் என அனைத்திலும் நல்ல தேர்ச்சிப்பெற்ற மாணவன் என்பதால் அறிவியல் ஓரளவிற்குத் தெரியும். இருப்பினும் இவர்கள் பேசும் அறிவியல் நம் பாடத்திட்டங்களைத் தாண்டியவையாகும்.

படத்தைத் திரையரங்கில் பார்க்கத் தவறினால் உங்களுக்கான ஒரு பேரனுபவத்தை நீங்கள் இழக்கக்கூடும். படம் முதல் ஒரு மணி நேரம் ரொம்பவும் அமைதியாகப் பரப்பரப்பின்றி நகர்வதால் விஜய் அஜித் இரசிகர்கள் தயவு செய்து இப்படத்திற்குப் போய்விடாதீர்கள். மேலும் அறிவியல் தர்க்கங்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இப்படம் சலிப்பைக் கொடுக்கலாம். ஒரு மிகப்பெரிய புரிதல் சிக்கல் வரக்கூடும். படம் கணமான ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறது. கற்பனையான பயணமான இருந்தாலும் அடுத்தக்கட்ட மானுடப் பரிணாமத்திற்குரியதாக இயக்குநர் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்.

- கே.பாலமுருகன்

Wednesday, November 5, 2014

சிறுகதை: காண்டாமணியம் தயாரிப்பில் மூன்று உலகத்தர சினிமா

       
2007-இல் எழுதிய சிறுகதை ,  மறுபிரசுரம்:

வணக்கம். நான்தான் இயக்குனர் பாராங்மணியம், சார் இருக்காங்களா?”

ஒகே. .  உள்ள வாங்க, சார் உக்கார சொன்னாரு

   
உள்ளே நுழைந்ததும் அலுவலகத்தின் வரவேற்பறையில் மரக்கட்டையினால் தயாரிக்கப்பட்ட இருக்கைகள் இருந்தன. தயாரிப்பு நிறுவனம் என்று சொல்வதைவிட அதிகமான சவர்க்காரம், பல் துலக்கும் பிரஸ், முகக் கண்ணாடி, போன்ற பொருட்களின் விளம்பரத் தயாரிப்புகள்தான் நடந்துள்ளன. அதனால் அந்த இடத்தை குளியலறை விளம்பரக் கம்பெனி என்றுகூட சொல்லலாம். அதன் தயாரிப்பாளர் திறந்த மனப்பான்மையுடையவர். ஒரு தடவை துண்டு விளம்பரத்தை தயாரித்திருந்தார். மோடல்? அவரே நடிக்கத் தயாரானார். விளம்பரம் இப்படித்தான் இருந்தது:

காராவாடை பளபள துண்டு-விளம்பரம்

வெகுநேரம் பின்புறம் மட்டும் காட்டப்படும் ஓர் உருவம் தெரிகிறது. கால்களில் அடர்த்தியான சுருள் முடிகள் குளோசாப்பில் காட்டப்பட்டு, காமிரா மேலே ஏறுகிறது. கலர் துண்டின் முழு வடிவம் தெரிகிறது. துண்டு கட்டியிருப்பவர் இலகுவாக நடந்து குளியலறையிலிருந்து வெளியேறுகிறார். இப்பொழுது முகம் மட்டும் காமிராவில் தெரிகிறது. காமிராவில் நம் தயாரிப்பாளர் காண்டாமணி. சிரித்துக் கொண்டே சொல்கிறார், “ ஆ! ஆ! என்ன குளுமை...கதகதப்பு...  உடலில் இருக்கும் நீரை வழித்து எடுத்துவிடும்...வாங்கிப் பயன்படுத்துங்கள், காராவாடை பளபள துண்டு! துண்டு ! துண்டு!

துண்டு ஒரு வாரத்திலே கலர் மங்கிவிடும் என்பதைப் பற்றி காண்டாமணி தந்திரமாக மறைத்ததுதான் விளம்பரத்தின் வெற்றி.

2

வாங்க! வாங்க! மணியம். எப்படி இருக்கிங்க?”

நல்லாருக்கன் சார்.

நான் சொன்ன மாதிரி 3 படத்துக்கான கதைகளைத் தயார் பண்ணிட்டிங்களா? அவசரம் மணியம். காசு கையிலே இருக்கும் போதே எடுத்தறணும்... 2 படமாவது ஆஸ்காருக்குப் போகணும் மணியம். நம்ப நாட்டுலே தமிழ்ப்படங்கள் பெறும்பாலும் பேய்படங்கள் மட்டும்தான் வருது. நல்ல படங்கள் இல்லை. இந்தியா அளவுக்கு நம்பளும் படம் எடுத்து முன்னேற இதான் வாய்ப்பு

எல்லாம் கதையும் ரெடி சார்! ரெண்டு வாரமா தூக்கம் இல்லாமே கதைங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டேன் சார்

வேரி கூட். இப்படித்தான் இருக்கனும். . சரி ஒன்னு ஒன்னா சொல்லுங்க மணியம்

முதல் படம்: கார் வருது மோட்டார் போகுது

சார் இந்தப் படத்துலே மொத்த நடிகர்களே 4 பேர்தான்...ரெண்டு காதல் ஜோடிகள். படம் முழுக்க ரோட்டுலதான்

ஏன்பா ரோட்டுல?”

கடசியா அங்கத்தானே வரப் போறிங்க

Monday, October 27, 2014

Small Town stories : Poem collection 1

கவிதை: ஒரு சிறுநகர் கதையிலிருந்து 1

எனது பூட்டியிருந்த அறையில்
எப்பொழுதும் புதியதாக ஒன்று இருப்பதேயில்லை.
அசையாமல் கிடக்கும் கட்டிலும், 
வெளுத்த போர்வையும்
பொம்மைப்படங்கள் ஒட்டிய அலமாரியும்
ஒரு கால் ஆட்டம்கண்ட நாற்காலியும்
தலைத்தொங்கிய ஒரு மேஜை விளக்கும்
சுவரில் தொங்கும் அப்பாவின் புகைப்படமும்.

எனது பூட்டியிருக்கும் அறையை
நான் இரகசியமாகப் பார்த்ததேயில்லை.
எனது கட்டில் சட்டென ஒரு பெண்ணாகிவிடக்கூடும்
எனது மேஜை விளக்குக் கைகளாகிவிடக்கூடும்
என் நாற்காலி ஒரு வயது முதிர்ந்த ஆணாகிவிடக்கூடும்.

எனது பூட்டியிருக்கும் அறைக்கதவை
நான் தட்டுவதேயில்லை.
சடாரென எனக்கு நானே உள்ளிருந்து
கதவைத் திறக்க நேரலாம்.

Sunday, October 26, 2014

வெண்ணிற இரவுகள் ஒரு பார்வை: மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம்



கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து உலக சினிமாக்களையும் மலேசிய சினிமாக்களையும் பார்த்துக் கவனித்தும் வருகிறேன் என்பதைவிட இப்படங்களை விமர்சிப்பதற்கு வேறேதும் விஷேசமான தகுதிகள் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தை விமர்சிக்க திரைப்படத்தை இயக்கியவரால்தான் முடியும் என்றால் உலகில் அகிரா குரோசாவா தன் சக இயக்குனர்களின் திரைப்படங்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும் அல்லது வங் கார் வாய் தன் சக ஹங் காங் சினிமாக்களுக்குச் சினிமா விமர்சனம் எழுதியிருக்கக்கூடும். ஆனால் உலக அளவிலேயே அப்படி நடக்காதபோது, கலையை விமர்சிக்க அதன் தீவிரமான இரசிகனாக இருப்பதே சிறப்பு எனத் தோன்றுகிறது.

மலேசிய மலாய் சினிமா, சீன சினிமாவோடு தமிழ்ச்சினிமாவின் வருகையையும் அடைவையும் ஒப்பிட்டே பேச வேண்டியுள்ளது. ஒரு நிலத்தின் வெவ்வேறு படைப்பு வெளிப்பாடுகளை விமர்சனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. யஸ்மின் அமாட், அமீர் போன்றவர்கள் மலாய் சினிமாவின் ஆளுமைகளாக அறியப்பட்டதோடு அவர்களின் படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கவனமும் பெற்றுள்ளன. யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படமான செப்பேட் 2009ஆம் ஆண்டிலேயே உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது சினிமா அரசியல் ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட புனிதங்களை உடைத்து மீண்டும் அதையே இன்னொரு புனித செயல்பாடாக மாற்றுவதால் தீவிர விமர்சனத்திற்கும் உள்ளாகின்றது.

அதே போல சீன சினிமாக்களும் தொழில்நுட்ப ரீதியிலும் கதைத் தேர்வுகளிலும் பல மாற்றங்களை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளிவந்த ‘The journey’ திரைப்படம் மலேசிய சினிமா வசூலை முறியடித்திருக்கிறது. பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததோடு வெற்றியும் அடைந்திருக்கிறது. சீனக் கலாச்சார வாழ்வைக் காட்டியிருப்பதோடு அதனை உடைத்து மீறி வெளிப்பட முடியும் என்ற சாத்தியத்தையும் படம் பேசுகிறது. யஸ்மின் அமாட் உருவாக்கி வைத்திருக்கும் கலைப்படம் என்கிற மாயையை இப்படம் தன்னுடைய நுண்ணரசியலால் மிஞ்சி நிற்கிறது என்றே சொல்ல முடிகிறது.

மூன்று வகையில் மலேசிய சினிமாவை புரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். முதலாவதாக அம்மொழியில் இதற்கு முன் வந்த திரைப்படங்களை அப்படம் அரசியல் ரீதியிலும் கதை ரீதியிலும் மிஞ்சுவது, அடுத்ததாக தமிழ்நாட்டு சாயலைக் கொண்டிருப்பது மற்றும் கலைப்படம் என்கிற மாயையில் சிக்கிக்கொண்டு வெளிப்படுவது. இந்த மூன்றும் மலேசிய சினிமாவை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவக்கூடும். முதலில் இந்த மூன்றைப் பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.


அரசியல் / கதை

மலேசியாவின் நிலத்தையும் வாழ்வியலையும் கூர்மையாகப் பார்க்கும் ஒரு விமர்சனப் பார்வை எல்லாம் படைப்பாளிகளுக்கும் இருக்கின்றதா? மலேசிய வாழ்வின் ஆழத்தைக் கவனிக்கும் விமர்சன அணுகுமுறை இருக்கும் படைப்பாளிகளால்தான் மலேசியத்தனமிக்க படைப்பைக் கொடுக்க முடியும். மலேசியாவில் எடுக்கப்படும் ஒரு தமிழ்ச்சினிமாவில் தமிழ் வாழ்க்கையையும் தமிழர்களையும் மட்டும் காட்டுவது போலித்தனமானதுதான். நம் அன்றாட வாழ்வில் ஒரு மலாய்க்காரரோ ஒரு சீனரோ கட்டாயம் இடம் பெற்றிருப்பர். ஒரு பன்முக கலச்சார சூழலோடு பிணைந்திருக்கும் மலேசிய வாழ்வு இப்படியாகத்தான் அமைந்திருக்கிறது.