Tuesday, July 5, 2011

Part 2 - நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி : போர்சூழலில் வாழும் குழந்தைகளின் உலகை இன்றைய உலக சினிமாக்கள் தீவிரமான கலைத்தன்மையுடன் காட்டி வருகிறார்கள். இது போன்ற இலங்கை போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வைப் பற்றி ஆவணப்படமோ அல்லது குறும்படமோ செய்யப்பட்டுள்ளதா? உங்களின் ஆவணப்படங்கள் எதைப் பற்றியது?

பதில் : ஈழத்துச் சூழலில் குழந்தைகளின் ஏக்கங்களை பதிவாக்கிற ஒரு புகைப்படமும்கூட சிறந்த ஆவணம்தான். உலக சினிமா அளவுக்கு தொழிநுட்பங்கள் சார்ந்த படங்கள் எங்களிடம் இல்லாத பொழுதும் விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்' என்கிற திரைப்படப் படைப்பாக்க பிரிவு முக்கிமான பல குறும்படங்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் படங்கள் குழந்தைகளின் போர்க்கால ஏக்கங்களை நெருக்கடிகளை மிக இயல்பாக யதார்த்தமாக பதிவாக்கியுள்ளன.

தினமும் விமானத்தாக்குதலை கண்டு அஞ்சி ஒழியும் ஒரு குழந்தை ஒரு முறை விமானம் தாக்குதல் நடத்த வந்த பொழுது விமானத்தை நோக்கி தடியால் சுடுகிறது. சமநேரத்தில் போராளிகள் அந்த விமானத்தை தாக்க விமானம் வீழ்ந்து போகிறது. அதைப் பார்த்த குழந்தை தானே விமானத்தைத் தாக்கியதாக ஆறுதல் படுகிறது. இது மறைந்த இயக்குனர் பொ.தாசனின் படம். இன்னொரு குறும்படத்தில் பழங்களைப் பொறுக்கிற இடத்தில் விமானம் தாக்கியதால் தங்கையை இழந்த அண்ணனான சிறுவன் ஒருவன் விமானங்களை நோக்கி கல்லை எறிகிறான். ‘1996’ என்ற இந்தப் படத்திலும் இடம்பெயர்ந்த சூழலில் குழந்தை பாத்திரத்தின் உணர்வலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்குனர் மகேந்திரனும் முல்லை யேசுதாசனும் எடுத்திருந்தார்கள்.


இந்தக் குறும்படங்களின் வீடியோப் பிரதிகள் பல இன்று கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஈழப் போரின் இறுதிநாட்கள் வரை இந்தப் படப்பிரதிகள் சேகரிப்பட்டிருந்தன. திரைப்படம் மற்றும் தொலைக்காடசித் துறையில் அதன் ஆவணத்தன்மை கருதி விடுதலைப் புலிகள் முக்கியமான கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள். சில படங்களை இணையங்களில் இப்பொழுது பார்க்கலாம். பெரும்பாலான ஆவணப்படங்களிலும் விவரணப்படங்களிலும் குறும்படங்களிலும் முழுநீளப்படங்களிலும் குழந்தைகளின் சூழல்கள் மனநிலைகள் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தம் பற்றிய சோமிதரனின் முல்லைத்தீவு சகா என்ற ஆவணப்படம் ஈழம் பற்றிய முக்கிமான பதிவு எனக் கருதுகிறேன்.

நான் வன்னியில் உள்ள பாடசாலைகள் அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நெருக்கடிகள் பற்றி பல விவரணப் படங்களை எடுத்திருந்தேன். முக்கியமாகப் போர்ச் சூழலில் பாடசாலைகளும் மாணவர்களும்தான் அந்தப்படங்களின் விடயங்களாக இருந்தன. ‘செஞ்சோலை’ ஆவணப்படம் 25 நிமிடத்தை கொண்டது. செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் தொடர்பான ஆவணப்படம் ஒரு முக்கிமான பதிவு என்று நினைக்கிறேன். வசதிகள் வளங்கள் போதாத போர்ச்சூழலில் அந்தப் படத்தை ஒரு நாளிலேயே படப்பிடிப்பு செய்திருந்தேன். வயது குறைந்த கலைஞர்களும் போராளிக் கலைஞர்களும் அதில் பங்களித்திருக்கிறார்கள். தற்போது ‘அக்கராயன்’ என்று ஒரு விவரணப்படத்தை மீள்குடியேற்ற சூழல் பற்றி செய்திருந்தேன். வளங்கள் வசதிகள் அற்ற சூழலில் அந்தப் பதிவு செய்யப்பட்டது.

கேள்வி: ஊடக சுதந்திரமற்ற இலங்கையின் ஆக்கிரமிப்பு சூழலில், சொந்த ஊடகவியாளர்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசின் பாசிச அணுகுமுறைக்கு முன், புகைப்படங்கள், நேரடியாகக் களத்தில் இறங்கி தரவுகளைத் திரட்டி பதிவுகளை எழுதுதல் என இலங்கையின் பிந்தைய போர்ச்சூழல் நிலமையை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக இயங்கி வரும் நீங்கள், களத்தில் இருக்கும்போது எதிர்நோக்கும் ஆபத்துகள், பிரச்சனைகள், சவால்களைப் பற்றி சொல்லுங்கள்.

பதில் : நாங்கள் எதை விரும்புகிறோமோ அதைப் பேசமுடியாத சூழலை உருவாக்குவதன் மூலம் நாங்கள் விரும்புவதை மறுக்கிறார்கள். மக்களின் உண்மை வாழ்க்கை நெருக்கடிகளை மறைத்து அதை அரசியலாக்கி தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். என்னுடைய பெரும்பாலான பதிவுகள் மக்கள் சொன்ன கதைகளை அப்படியே ஊடகங்களுக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனது அனுபவங்களையும் நான் பார்த்த வாழ்வுக் காட்சிகளையும் எனது அபிப்பிராயங்களையும் தவிர முக்கியமாகக் குரலை எழுப்பி நிற்கும் கருத்துக்கள் மக்களினுடைய வாக்குமூலங்கள்தான். மக்கள் எப்படி வாழ்கிறார்கள், மக்கள் எதைக் கோருகிறார்கள் என்பதைதான் நான் எழுதியிருக்கிறேன்.

முக்கியமாக நிலப்பிரச்சினை சார்ந்த பதிவுகளை அறிக்கையிடும் பொழுது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பொன்னகார் கிராமத்தில் உள்ள காணி நிலங்களை அபகரிக்க நின்ற பொழுது அதைக்குறித்து ‘நிலத்திற்காய் போராடும் பொன்னகர் மக்கள்’ என்றும் ‘எங்கள் பிள்ளைகளுக்கு நிலத்திற்கு எங்கே சொல்வோம்’ என்றும் மக்களின் வார்த்தைகளைத் தலைப்பிட்டும் பதிவுகளை எழுதியிருந்தேன். நன்கு திட்டமிட்ட வகையில் பொன்னகர் நிலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்த பொழுது என்னைப் போன்ற ஊடகவியலாளர்கள் மிகவும் கவனிக்கப்பட்டார்கள்.

பொன்னகர் மக்களின் தொடர்ச்சியான அவலத்தை வெளிக் கொணர்ந்ததிற்காக ஆளுநரின் ஆட்கள் என்னை வந்து தேடுகிறார்கள் என மக்கள் சொன்னார்கள். என்னை எங்கே சந்திக்கலாம் என்றும் எனது தொலைபேசி இலக்கம் முகவரி போன்றவற்றை தரவேண்டும்; என்றும் கேட்டிருக்கிறார்கள். ஒரு சில மாதங்களாக என்னை அந்தக் கிராமத்திற்கு வராதீர்கள் ஆபத்து உள்ளது என்று மக்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அந்த மக்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து ஏதாவது ஒரு வழியில் சென்று வெளிக் கொணர்ந்திருந்தேன்.

அதைப்போல இரத்தினபுரம் என்ற எனது கிராமத்தில் நிலப்பிரச்சினை வந்த பொழுது அதைக் குறித்து செய்திகளைப் படங்களை வெளியிட்டமைக்காக என்னை வந்து தேடினார்கள். ‘மழையும் வெயிலும் கொல்லும் மக்கள்’ என்று மக்களின் உண்மையான அவலத்தைத் தொடர்ந்தும் எழுதினேன். அதனால் சில நாட்கள் வீட்டுக்குச் செல்ல முடியாதிருந்தது. ஒழிந்து மறைந்துத்தான் வீட்டுக்குப் போனேன். அரசு நிலப் பிரச்சினைகளை உருவாக்கியவுடன் அது பலரின் அரசியல் வியாபாரத் தளமாகிறது. அதனால் மக்களின் குரல்களைப் பதிவாக்கி வெளியிடும் குற்றங்களுக்காக அரசு, இராணுவம், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என்று பலரால் அச்சுறுத்தல்களும் விசாரிப்புக்களும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்றன.

கேள்வி : பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள் என குழந்தைகளின் துயரங்கள் ஒரு பக்கமும், கிணற்றினுள் இறங்கிய கிராமம், ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் எனத் தனிமையைத் தின்று தீர்க்கும் போரின் உக்கிரம் ஒரு பக்கமும் உங்கள் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுவதைக் கவனித்து வருகிறேன். குழந்தைகள் வதை செய்யப்படும் இடத்தில்தான் அடர்த்தியான ஒரு தனிமையும் போரின் உக்கிரமும் தொடங்குவதாகப் புரிந்துகொள்கிறேன். இந்தக் கவிதைகள் எழுத நேர்ந்த தருணங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில் : போர் குழந்தைகளைத்தான் உக்கிரமான சூழலுக்குள் தள்ளுகிறது. பொதிகளைச் சுமந்து கொண்டு பதுங்கு குழிகளின்வழி நகர்ந்து கொண்டு காடு மேடுகளெல்லாம் அலைகிறார்கள். இரத்தத்தையும் சதைகளையும் மிதித்துக் கொண்டு காயம் பட்ட பிஞ்சு மனதைச் சுமந்து கொண்டு போகிறார்கள். குழந்தைகளைப் பாம்புகள் இழுத்துச் செல்கின்றன என்ற படிமம் யுத்தத்திற்கும் படையெடுப்புக்களுக்கும் அஞ்சிக் கிடக்கும் குழந்தைகளின் பொழுதுகளினால் தாக்கத்தால் எழுதப்பட்டது. இந்த யுத்தத்தில் 13 வயதுச் சிறுமியான என் தங்கை இந்த உக்கிரத்தை எப்படித் தாங்குவாள் என்ற அச்சம் எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கிணற்றுக்குள் இறங்கிய கிராமம் என்கிற கவிதையின் படிமம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினால் எழுதப்பட்டது. ஒருநாள் கிளிநொச்சி நகரத்தில் நின்று கொண்டிருந்த பொழுது யுத்த விமானங்கள் சூழ்ந்து தாக்குதலை நடத்திய பொழுது பாதுகாப்பிற்காக அதற்கு முன்பு இடம்பெற்ற யுத்ததால் இடிந்த கிணற்றுக்குள் குதித்துப் பதுங்கினேன். எப்பொழுது யுத்த விமானங்கள் வந்து தாக்குதல்களில் ஈடுபடும் என்று தெரியாத பொழுதில் விமானங்கள் முற்றுகையிடுகையில் தெருக்களில் உள்ள கழிவு வாய்க்கால்களில் எல்லாம் மக்கள் பதுங்கிக்கிடப்பார்கள். சிலவேளை தாக்குதல்களில் கிணறுகளே மூடுண்டு போயிருக்கின்றன.

ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் என்கிற கவிதை புதுக்குடியிருப்பு நகரம் இராணுவத்திடம் வீழந்த பொழுது எழுதப்பட்டது. புதுக்குடியிருப்புக்காய் இலங்கைப் படைகள் பல தடவைகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்தியிருந்தது. பேரழிவுக்கு உள்ளான அந்த நகரத்தை இறுதியில் இலங்கை இராணுவம் கைப்பற்றிய பொழுது ஏற்பட்ட தாக்கத்தால் எழுதப்பட்டது. இராணுவம் ஆட்கள் வெளியேறி நகரங்களை மிகவும் கொடுமையாகத் தின்று நாசப்படுத்தியிருக்கின்றன. அந்த அழிவுகள் புதுக்குடியிருப்பின் அழகைச் சிதைத்து உயிரைக் கொன்றிருக்கிறது. இப்பொழுதும் மக்களற்ற அழிவு நகரமாகப் புதுக்குடியிருப்பு கிடக்கிறது.

எல்லா நகரங்கள் வீழும் பொழுதும் எல்லாக் கிராமங்கள் வீழும் பொழுதும் அந்த நிலங்களின் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனங்கள் இடிகிற அளவில் தொடுக்கப்படுகிற யுத்தம் அவர்களைக் கடுமையாக வதைக்கிறது. இந்த உக்கிரங்களில் வாழும் குழந்தைகளின் மனவெளிகளை அதிகம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் என்ன செய்தார்கள்? என்ற கேள்வியும் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்! என்ற சுய பதிலளிப்பும் எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது.

குழந்தைகளைப் பற்றிய எனது ஏக்கங்கள் என்பது அவர்களுக்குள் இருக்கிற வாழ்வு பற்றிய ஏக்கமாகவே உணருகிறேன். யுத்தத்தின் காயங்கள், எச்சங்கள், அதன் தாக்கங்கள் என்று முற்றிலும் அழிவாலும் ஒடுக்குமுறைகளாலும் குழந்தைகளின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது. நிகழும் யுத்தம் ஒன்றின் எதிர்கால வடுக்களையும் விளைவுகளையும் அவர்கள்தான் சுமக்கப் போகிறார்கள் என்ற ஏக்கமும் கவிதைகளை எழுத உந்தியிருக்கின்றன. தலைமுறைகள் தவிக்கப் போகும் ஈழம் என்கிற பெரும் தவிப்புத்தான் இங்கு மிகவும் பெரிய தாக்கமாக இருக்கிறது.

யுத்தக் கவிதைகளில் குழந்தைகளின் மரணமும் அவர்களுக்கு ஏற்படும் காயங்களும் அவர்கள் இழக்கிற உலகமும் பதிவு செய்யப்படவேண்டும் என்று நினைக்கிறேன். பதுங்குகுழிகளில், மரணங்களில், இடப்பெயர்வுகளில், சமர்களில், காயங்களில், இழப்புக்களில், அச்சங்களில், பயங்கரங்களில் அவர்கள் எப்படித் தவிக்கிறார்கள் அல்லது கடக்கிறார்கள் என்பதைக் கவிதைகளில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கான உலகத்தையும் அவர்களின் உரிமைகளையும் அவர்கள் கோருவதை உணர்த்த முடியும் என நினைக்கிறேன்.

கேள்வி: சமீபத்தில் மலேசியாவிற்கு வந்த பழ. நெடுமாறன் அவர்கள் 'பிரபாகரன் இன்னும் சாகவில்லை' என்பதை உறுதியாகக் கூறும்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 2000க்கும் மேற்பட்டோர் ஆக்ரோசமாகக் கத்தினர், சிலர் அழவும் செய்தனர். எங்கோ தூரத்துப் பிரதேசத்தில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை அழிக்கும்பொருட்டு ஒரு இயக்கமாக செயல்பட்ட ஒரு காரணத்தினால் மட்டும்தான் கடல் கடந்து வாழும் தமிழர்களும் பிரபாகரன் மீது இத்துணைப் பற்றுக்கொண்டுள்ளார்கள். இன்று சர்வதேச அளவில் பிரகாரனின் போராட்டத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் உருவாகியிருக்கும் அடையாளத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் தலைவர் பிரபாகரன் போராடியவர். தமிழ் மக்களின் போராட்டத்தின் அடையாளமும் பிரபாகரனின் அடையாளமும் இனத்தை ஒடுக்குபவர்களால் தவறாக ஒரு பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படடிருந்தது. அப்படியொரு சித்திரிப்பின் பின்னணியில்தான் ஈழம்மீது போர் தொடுக்கப்பட்டது. போரைத் தொடுக்கவே அப்படிச் சித்திரித்தார்கள். விடுதலைப் பெற வேண்டிப் போராடிய ஒடுக்கப்பட்ட இனத்தின் கனவைச் சிதைக்கவும் அதற்கான அடிப்படைகளை அழிக்கவும் இப்படித்தான் காரணம் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இனத்தினதும் வாழ்வினதும் விடுதலை கனவை அவர்கள் வேண்டுமென்றே நிராகரித்திருக்கிறார்கள்.

ஈழத்தில் மட்டுமன்றி ஈழத்து மக்கள் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமன்றி தாய்த் தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா போலத் தமிழர்கள் வாழுகிற நாட்டிலும் தலைவர் பிரபாகரனதும் ஈழப்போராட்டத்தினதும் நடவடிக்கைகளும் எழுச்சிகளும் கவனத்தை ஈர்த்திருந்தன. தமிழர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளத்தைப் பாதுகாக்க தவிப்பவர்களாகவும் இருக்கிறபடியால் தமிழ் இனத்தின் அடையாளத்திற்காகப் போராடிய தலைவரையும் ஈழத்து மக்களின் போராட்டத்தையும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் நேசிக்கிறார்கள். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு போராட்டமாக இருந்த பொழுதும் அந்தப் போராட்டத்தின் அடிப்படைகளை மிகத் தெளிவாக அறிந்திருந்த பொழுதும் அந்தப் போராட்டத்தில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்

கேள்வி: இலங்கையும் இந்தியாவும், மலேசியாவும்கூட பிரபாகரனின் போராட்டத்தைத் தீவிரவாதத்துடன்தான் ஒப்பிட்டு கவனப்படுத்துகிறார்கள். இன்று உலகம் முழுக்க விடுதலை புலிகளின் மீதான பார்வை ஒற்றை அடையாளப்படுத்துதலைப் பெற்றிருப்பது போன்ற ஓர் உணர்வு இருக்கிறதா? உங்களுக்கு விடுதலை இயக்கம் மீதும் பிரபாகரன் மீதும் என்ன மனப்பதிவுகள் உள்ளன?

பதில் : ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் துயரங்களையும் கண்டு உலகத் தமிழர்கள் தாங்க முடியாதிருக்கிறார்கள். போராட்டம் இன்று பெற்றிருக்கிற தேக்கமான அல்லது துயரமான நிலை குறித்தே அனைவரும் சதா பேசிக் கொள்கிறார்கள். விடுதலைக்காக வாழ்வுக்காகப் போராடிய இனம் இன்று ஆக்கிரமிப்பிலும் தோல்வியிலும் இருக்கும் பொழுது அதைக்குறித்து உலகத் தமிழர்கள் பேசுகிறார்கள். ஒரு இனத்தின் கனவு, இருப்பு, விடுதலை எல்லாம் படிந்திருக்கும் ஒரு போராட்டத்தை அதன் தலைமையை சதித்தனத்துடன் உலகம் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தியது. உரிமையை மறுக்கவும் அதிகாரத்தை விரிக்கவும் இத்தகைய அடையாளப்படுத்தல்கள் அதிகாரங்களால் மிக எளிதாகத் திணிக்கப்பட்டு, போராட்டங்கள் சிதைக்கப்படுகின்றன.

இதைப் பற்றி நான் முதல் கேள்வியிலும் பேசியிருக்கிறேன். இனத்தின் உரிமையை மறுப்பவர்கள், ஒரு இனத்தை ஒடுக்கிறவர்கள் இப்படித்தான் காரணங்களைச் சொல்லி தீவிரவாதத்துடன் ஒப்பிட்டார்கள். அவர்களிடம் தீவிரவாதம்! தீவிரவாதம்! என்ற கோஷசங்கள் இருந்ததே தவிர ஏன் இந்த இனம் போராடுகிறது? ஏன் இந்த இனம் குண்டுகளைக் கட்டி வெடிக்கிறது? என்றெல்லாம் புரிந்து கொண்டு ஏற்க முடியவில்லையா? வரலாற்று பூர்வமான வாழக்கையை ஈழத் தமிழ் மக்கள் கோரினார்கள். அடையாள பூர்வமான வாழ்க்கையைக் கோரினார்கள்.

நான் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மிகவும் நேசிக்கிறேன். எனது சிறுவயது முதல் விடுதலைப் புலிகளின் சூழலில், தொடர்ச்சியான போராட்ட சூழலின் மத்தியில் வாழ்ந்து வருகிறேன். யுத்தம் திணிக்கப்பட்ட மக்களிலிருந்தே ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்தே போராளிகள் உருவாகினார்கள். இயக்கத்திற்கும் மக்கள் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பிருந்தது. மக்களும் விடுதலைப் புலிப் போராளிகளும் நெருக்கடிகளுடன் போராட்டத்தைச் சுமந்து பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்திய காலம் எனது மனநிலையை நிரப்பியிருக்கிறது. ஒரு மக்கள் போராட்டத்திற்கான அத்தனை அடையாளங்களையும் பெற்றுச் சாத்தியமடைந்த 1990கள் காலப்பகுதிதான் ஈழப் போராட்டம் தொடர்பில் எனக்கு அதிக மனப் பதிவுகளை உருவாக்கிய காலமாக இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துகிற வகையில் உலக அரங்கில் கொண்டு சென்றவர். விடுதலை அமைப்பை அதற்குரிய அத்தனை அடையாளங்களுடனும் உருவாக்கி நிமிரச் செய்தவர். ஒரு நிழல் நாட்டை, நிழல் அரசை உருவாக்கி ஈழத்து ஆட்சியின் அடையாளங்களையும் அவசியத்தையும் சாத்தியப்படுத்தியவர். தமிழ் மக்களின் கனவைச் சுமந்து போராட்டத்தைக் கட்டி எழுப்பியவர். தமிழ் மக்கள் அனைவரும் அவர்மீது கொண்டுள்ள குளிர்ந்த அபிமானமும் நேசிப்பும் எனக்கும் இருக்கிறது.

நான் உயர்தரத்தில் தகுதியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய பொழுது நான் வழங்கிய நேர்காணல் ஒன்றை பார்த்த பொழுது என்னை ஒரு நல்ல மாணவன் என்று தலைவர் குறிப்பட்டிருந்தார். நான் படித்து சித்தயடைந்த எனது வறுமையான வாழக்கைச் சூழலைப் பற்றி நான் பேசியதை அவர் கவனித்துக் குறிப்பிட்டார்.

நேர்காணல்: கே.பாலமுருகன்
Thanks for vallinam.com (june issue)

No comments: