Monday, August 3, 2009

ஆழ்நதியை நோக்கிய ஒரு மீன் குஞ்சின் நீந்துதல்



வணக்கம். நான் "பாட்டனுக்குத் தப்பி பிறந்த கே.பாலமுருகன்" சொல்வது என்னவென்றால்:

அறிவியல் நிபுணர்களும் உலக ஆராய்ச்சியாளர்ககளும் தோற்றுப் போகும் அளவிற்கு ஒரு விந்தையான கண்டுபிடிப்பொன்று நிகழ்ந்துள்ளது. முதலில் ஏதார்த்தமாக அதைக் கண்ணூற்ற பொழுது உண்மையில் வியந்து போனேன் அதன் விந்தையைக் கண்டு.

நவீன இலக்கியம் + பாலியல் = எச் 1 என் 1 பன்றிக்காய்ச்சல்



என்ற கண்டுபிடிப்பின் மூலம் ஒருவர் எல்லோரையும் மிஞ்சிவிட்டார். இனி பன்றிகாய்ச்சலுக்கான நோய் தடுப்பு சக்தியை உலக மருத்துவர்கள் தேடி அலைய வேண்டாம். நேராக இங்கு வந்தால் மலேசிய வலைப்பூ ஒன்றில் அதன் தீர்வு அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் அந்தக் கண்டுபிடிப்பின் சூட்சமத்திற்குக் கீழே பன்றி இனத்தைக் கேலி செய்யும் வகையிலான ஒரு புகைப்படம் வேறு. பன்றிக்காய்ச்சல் பறவியதற்குக் கண்டிப்பாக பன்றி முழுக்காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லாதபோது, அந்த நபர் பன்றியை நவீன இலக்கியத்தோடு இணைத்து பன்றியையும் இலக்கியத்தையும் கேலி செய்து தனது வன்முறையான பார்வையை (மேடையில் கூச்சல்போடும் கூச்சல்காரர்களுக்கு நிகரான) வெளிப்படுத்தியிருக்கிறார். மெத்த படித்தவர்கள் இப்படி ஒரு மிருக இனத்தை சூட்சமத்திற்குள் சொருகி தனது அறிவியல் அறியாமையின் மூலம் மிருகவதை செய்ய முற்படுகிறார். ஒரு மிருகத்தை அவமானப்படுத்தும் ஒருவர் மிருகத்திற்கு நிகரானவர் என்று சொல்லலாமா? திருக்குறளில் எங்காவது இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

“தின்றுகொழுத்த அந்த அறிவுகெட்டப் பன்றிகள்தான் இதனை அறியுமா?” மலேசிய வலைப்பூ ஒன்றில், ஒரு பதிவர் சொன்னது.

பன்றியும் ஒரு மிருகம்தானே. அதை இப்படியொரு உவமைக்கு ஆளாக்கி தனது வெறித்தனத்தைக் காட்டியிருக்கும் இந்த நபரை என்ன செய்யலாம்? மதத்தைக் காட்டி ஒரு மிருகத்தை அரவனைப்பதும் இன்னொரு மிருகத்தை எட்டி உதைப்பதும், என்ன மனிதன் நீ? தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் நீ ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஒரு மரியாதையைக் கொடுக்க தெரியவில்லையா? பிறகென்ன தமிழ், தமிழ் கொடுத்த அறிவு? இதுதானய்யா தீண்டாமையின் முதல் படி. இந்தச் சிந்தனையை முதலில் நீக்க வேண்டும்.

“இது பின்நவீனத்துமல்ல”
என்கிற (http://bala-balamurugan.blogspot.com/2009/07/1_28.html) பகுதியில் ஒரு சமூகம் எப்படி அடக்குமுறை அரசியலின் மூலம் சிதைந்து பின்நவீனத்துவ வெளிப்பாடுகளை அடைந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அவர்களின் வாழ்வுக்கு அல்லது மேலாதிக்க சிந்தனாவாதிகளின் ஒடுக்குமுறையால் நம் தோட்டத்து மக்கள் அடைந்த எல்லைக்கு அவர்கள் எந்த மேற்கத்திய பின்நவீனத்துவத்தையும் நாடவில்லை. அப்படியிருக்க அந்தத் தோட்டத்து மக்களின் வாழ்வையும் நகர மனிதர்களின் இன்றைய வாழ்வையும் படைப்புகளில் கொண்டு வரும் எழுத்தாளன் மேற்கத்திய சிதைவிலிருந்து உருவான எந்த பின்நவீனத்துவத்தையும் மேற்கோளாகக் கொண்டு எழுத வேண்டிய அவசியம் இல்லாததால் இங்கு யாரும் பின்நவீனத்துவம் எழுதவில்லை என்று சொன்னேன்.

“எதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல், எல்லைக் கடந்து நாடு கடந்து- கண்டம் கடந்து- கடல் கடந்து- வெளி கடந்து நம் நாட்டிலுள்ள ஒரு சிற்றூரிலுள்ள தமிழ்ப்பள்ளியில் வகுப்பறையில் பயிலும் மாணவனுக்குப் பன்றிக்காய்ச்சல் ஏற்படுதைக் கண்டு என்ன ஒரு விந்தை, என்ன ஒரு வியப்பு” என்று சொல்லும் ஒருவருக்கு உலகமயமாதலின் தன்மைகள் பற்றியும் உலகம் சிறு கிராமமாக மாறிவிட்டதன் பாதிப்புகள் பற்றியும் விழிப்புணர்வே இல்லை என்பது தெரிகிறது. வகுப்பில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவனிடம் கேட்டால்கூட சொல்வான் இணையத்தின் பயன்பாடுகள் பற்றியும் அது உலகை எப்படி சுருக்கி ஒரு எலி நகர்த்தலில் நுழைந்து வெளியாகிவிடலாம் என்று. அப்படியிருக்க எங்கோ பரவும் ஒரு நோய் இங்கு வந்து அடைவதற்கான காரணத்தில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை விமானங்களே உருவாகாத ஒரு காலக்கட்டத்திலோ அல்லது உலக சந்தை விரிவாக்கமடையாத ஒரு பிற்காலத்திலோ இருக்க நேரும் மனிதனுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஐயா கொஞ்சம் வெளியில் வாருங்கள். வியந்தது போதும். உங்கள் ஒப்புவமையும் கண்டுபிடிப்பும். . . .

உங்களிடம் (மேடை கூச்சல்காரர்களிடம்) பேசியும் விவாதித்தும் எந்தப் பயனும் இல்லை – மேலும் நவீன இலக்கியத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று யார் வந்து அழுதது? மக்களிடம் என்னவேண்டுமானாலும் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் புரிய வைத்துக் கொள்ளுங்கள்- எல்லாம்வித முகத்திரைக் கிழித்தலுக்கும் விவாதங்களுக்கும் கடைசியில் காலமே பதில் சொல்லும்). ஒரு தனிமனிதனின் கருத்தும் பிரச்சாரமும் ஒப்புவமைகளும் சமூகத்திற்குள் பிரச்சாரமாக வரும்போது முதலில் பெரும் கவர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் பிறகு அதன் தோலை உறித்துப் போட்டுவிட்டு எங்கோ ஒரு புதருக்குள் போய் ஒளிந்துகொள்ளும் பாம்பு போல் நெளிந்துவிடும்.இதுதான் வெறும் கூச்சலுக்கும் பிரச்சாரங்களுக்கும் ஏற்படும் விளைவுகள்.

மரபிலக்கியங்களில் ஆபாசம் என்று எதுவுமே இல்லை, காரணம் ஒவ்வொரு பாலுறுப்பு பயன்பாடுகளையும் கடந்து அங்கு வந்து பதிவாகுவது வெவ்வேறு நிலப்பரப்பில் மதமின்றி வாழ்ந்த ஒரு சமூகத்தின் அன்பும் வாழ்வும்தான். ஆனால் பாலியல் சொற்களைக் கண்டாலே அலறும் சிலருக்காக, சங்க இலக்கியங்களிலும் பாலியல் சொல்லாடல்கள் பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக் காட்டினேன். எப்படி இளம் முலை என்கிற சொல்லைக் கடந்து போக உளவியல் அணுகுமுறை தேவைப்படுகிறதோ அதேபோல நம் நாட்டு நவீன இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சில பாலியல் சொல்லாடல்களையும் கடந்து போவதற்கு சமக்காலத்து பற்பல அச்சுறுத்தல்கள் தடையாக இருப்பதைக் காண முடிகிறது. காமக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்துக்கும் யதார்த்தவாத எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரந்துபட்ட வாசிப்பாளுமை இல்லாதவர்களுக்கு தவறான கடுமையான ஒப்புவமைகள்தான் மேற்கோளாக வந்து சேரும்.

“யதார்த்தவாதம்” என்பதும் “இயல்பியல்வாதம்” என்பதும் முரண்பாடானது கிடையாது. இலக்கியம் காலத்தையும் வாழ்வையும் பதிவு செய்யும் களம் என்பதால், அதில் சில புனைவுகளும் கற்பனைகளும் உவமைகளும் அழகியலுக்காகச் சேர்ந்தே வரும். அதனுடன் நன்னெறி கட்டமைப்புகள் பிரச்சாரத்தன்மைகள் என்றும் பிற்காலத்தில் சேர்ந்து கொண்டவை. பிரச்சாரத்தன்மைகளையும் வலிந்து வந்து புகுத்துவதும் அறம் சார்ந்த வாதங்களையும் நீக்கிவிட்டு சமூகத்தின் கண்ணாடியாக ஒரு சமூகத்தின் தோல்வியையும் வீழ்ச்சியையும்கூட பதிவாக்கும் தன்மையுடன் வெளிப்பட்டதுதான் யதார்த்தவாதம். பிறகு அதற்கு எதிராகவும் பல முரண்பாடுகள் உருவாகின. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எல்லாம்வகையான இலக்கிய வடிவங்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகள் எழுவதும் இயல்பு. அதையே ஒரு வன்முறையாகப் பாவித்து மொழி சார்ந்த பிரக்ஞையின் வெறி ஆட்டத்துடன் போர்க்கொடி தூக்குவதும் மரண அடியெல்லாம் கொடுப்பதும் வீண் கூச்சல்.

ஒரு நவீன எழுத்து வகைத்தான் இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கப் போகிறது என்று பயப்படும் ஒருவரின் விவாதம் சிறுப்பிள்ளைத்தனமாக உள்ளது. ஒரு எடுத்துக்காட்டுக்காக விஜயகாந்த் சொல்வது போல ஒரு கணக்கெடுப்பு. 100 சதவீத இளைஞர்களில், படித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 50 சதவீதம், அதில் தமிழ் படித்தவர்கள் ஒரு 25 சதவீதம் என்றாலும், அதில் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒரு 15 சதவீதம் என்றாலும், அதிலும் தீவிர வாசிப்புடையவர்கள் ஒரு 8 சதவீதம் என்றாலும் அதிலும் நவீன இலக்கியத்தைத் தேடி வாசிப்பவர்கள் ஒரு 5 சதவீதம் என்றாலும், இந்த 5 சதவீத இளைஞர்கள் என்ன முட்டாள்களா? இவ்வளவு தூரம் தனது வாசிப்பையும் தேடலையும் அகலப்படுத்தியவர்கள் என்ன மூளை இல்லாதவர்களா? நவீன இலக்கியத்தை வாசித்துச் சீரழிந்து போவதற்கு. புறஉலகின் பாதிப்புகள் எவ்வளவோ இருக்க இது என்ன சிறுபிள்ளைத்தனமான புரிதல் மற்றும் அளவுகோல்.

வகுப்பறையில், “கோழி குஞ்சு, மீன் குஞ்சு” என்று சொல்வதற்குக்கூட அஞ்சும் பயப்படும் அல்லது அதைச் சொல்லிவிட்டு சிரிக்கும் மாணவர்கள் இருப்பது இந்தச் சமூகம் எப்படி அவர்களை அடக்கி மதம் என்கிற பெயரின் புனித போர்வையால் போட்டு மறைத்து அச்சுறுத்தி வைத்துள்ளதைக் காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தலைநகரத்திற்குச் செல்ல நேர்ந்தபோது சினிமாத்தனமான ஆபாசங்களும் நிர்வாணப் புகைப்படங்களும் அச்சுறுத்தலாக இருந்த அதிர்வுகளை ஒரு இறுக்கமான கலாச்சார வெளிக்குள்ளிருந்து வியந்து பார்த்த ஒன்றைப் பதிவு செய்ய நேர்ந்தபோது பாலியல் சொல்லாடல்களும் அவசியமாகப்பட்டது. இதுவும் ஒரு உளவியல் பாதிப்பிலிருந்து வெளிவந்த உணர்வுகள்தான் என்று வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் நம் இளைஞர்களும் மாணவர்களும் மிக சர்வசாதரணமாக இணையத்தளங்களில் நிர்வாண காட்சிகளை 3.00 வெள்ளி கட்டி பார்க்கும் அளவிற்கு வந்துவிட்ட கலாச்சார அச்சுறுத்துதலின் விளிம்பில் நின்றுகொண்டு இன்னும் இலக்கிய படைப்புகளைக் குறை கூறிக் கொண்டிருந்தால் வேலி கடந்த ஆடுகள் மேய்ந்த விளைநிலத்தின் மீதங்கள்கூட கிடைக்காது.

அடுத்ததாக “பாட்டனுக்கு தப்பிப் பிறந்த கே.பாலமுருகன்” என்று மிகவும் வன்முறையாக தனது சங்க இலக்கிய ஆளுமையைக் காட்டுவதற்காக பதிவு போட்ட “தமிழரன்” என்பவர் பெயர் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாத கோழை. என் வலைப்பூவில் என்னைப் பற்றிய விவரங்கள் உண்டு, என் புகைப்படமும் உண்டு. தமிழரண் என்பவர் ஒரு ஆளா அல்லது அவரே பல பெயர்களின் அந்த வலைப்பூவிலேயே பின்னூட்டம் போட்டுக் கொண்டு கிளர்ச்சியடையும் ஒரு ஆசாமியா என்பது தெரியவில்லை. சங்க இலக்கியம் ஓர் ஆழ்நதியைப் போன்றது, அதில் இன்னமும் எனது சமக்காலத்தைத் தூக்கிக் கொண்டு நீந்தும் ஒரு மீன் குஞ்சுதான் நான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. திமிங்கிலம் போல ஆழ்நதியின் ஆழத்தில் நீந்தும் எல்லாவற்ரையும் கரைத்துக் குடித்துவிட்ட அவரின் சங்க இலக்கிய எதிர்க்கருத்துகளுக்கு விரைவில் பதிலிடுவேன்.

(பின்குறிப்பு: கமலின் தசாவதாரம் படம் பாகிஸ்த்தானிய இஸ்லாமியர்களின் வாழ்வையும் தெலுங்கு இனத்தவரின் மொழி உணர்வையும் கேலி செய்த ஒரு சினிமாவும்கூட, மேலும் பெரியாரிசத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் பழைய விவாதங்களைக் கொண்டு வந்தது. படம் முழுக்க துரத்துதலும் தப்பித்தலும் என (butterfly effect) என்கிற தியோரியைத் தவறாகப் பயன்படுத்திய சினிமா என்று பல திரை விமர்சகர்கள் விமர்சித்து பழைய கதையாகிவிட்ட ஒன்றை மலேசியாவின் ஒரு வலைப்பதிவாளர் மிகவும் புகழ்ந்து தனது விவாதங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் கூத்து சிரிக்க வைக்கிறது.)

கே.பாலமுருகன்

Sunday, August 2, 2009

யானைகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்- மிருகங்களின் மீதான மத அரசியல்

சற்றுமுன் சன் தொலைக்காட்சியில் “the tale of elephant” என்கிற நகைச்சுவை படம் ஒன்றை ஒளிப்பரப்பியிருந்தார்கள். தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அறையிலிருந்து கேட்கும்போது ஏதோ கீழ்த்தரமான நகைச்சுவை தமிழ் சினிமாவின் காட்சி ஓடிக் கொண்டிருப்பது போன்று தோன்றியது. கோயம்புத்தூர் வட்டார மொழியில் பலர் பேசிக் கொண்டும் திட்டிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருப்பது போன்ற ஒலிப்பதிவுகள்.

இதென்ன வட்டார வாழ்வை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் புது படமா என்று தொலைக்காட்சியை எட்டிப் பார்த்தபோது பயங்கர அதிர்ச்சி. (சன் தொலைக்காட்சி வந்தததிலிருந்து பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டுத்தான் உள்ளன. இனி சன் தொலைக்காட்சி இல்லாமல் போனால் நம் வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்களெல்லாம் இடிந்து வீழ்ந்து உருகிவிடுவார்கள் என்பதும் வேறு விஷயம்). யானை கூட்டம் ஒன்று ஆப்பிரிக்கா வனத்தின் அடர்த்தியைக் கடந்து வெட்டவெளி பிரதேசத்தில் நடந்துகொண்டிருக்கும் காட்சி. ஆமாம், யானைகள் அனைத்தும் “கோயம்புத்தூர் மொழியின் அசல் தொனியிலும் சினிமாத்தன வசனங்களுடனும் கிண்டலடித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்துகொண்டிருக்கின்றன.

“டே. . என்றா அங்குட்டு போய் மாட்டிக்காதே மச்சான்”
“டே இவரு பிளிறி காட்டறாருடா. . பயமா இருக்கு”
“நாங்களெல்லாம் வந்தாலே அதிரும்லே”

பெரியார் ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருந்தார், “அவ்வளவு பெரிய விநாயகருக்கு இவ்வளவு சின்ன எலி வாகனமா? இது மிருகவதை” என்று. பக்தி காலத்திற்குப் பிறகு எந்த மிருகத்தையெல்லாம் நாம் தெய்வமாக்கியிருக்கிறோம் என்று பார்த்தால், உலகில் உள்ள எல்லாம் மிருகங்களும் நம் இந்து கடவுள்களின் அப்பாவி வாகனங்களாக மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிய முடியும். பல மிருகங்கள் கோவில்களில் ஒரு குறியீடாக நிறுவப்பட்டு சிலை வடிவங்களாக மதவாதிகளால் சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அவைகள் அங்கிருந்து நகர முடியாமல் இந்துத்துவ பின்னனியில் வேத புராணக் கதைகளின் கட்டமைப்பில் தெய்வங்களின் அடிமைகளென சிக்கிக் கொண்டு காலத்திற்கும் அதன் குறியீடுகளாக கிடக்கின்றன.

முருகனுக்கு மயில் வாகனம், விநாயகருக்கு எலி வாகனம், எமனுக்கு எருமைமாடு வாகனம், முனியாண்டி சாமிக்கு குதிரை வாகனம், அம்மனுக்கு புலி வாகனம், பெருமாள் படுத்துக் கொள்ள பாம்பு படுக்கை, நம் இந்து கடவுள்கள் இந்த மிருகங்களெல்லாம் இல்லையென்றால் அநேகமாக தடுமாறி கையறு நிலையில் இருக்க வேண்டி வரும் போல.

“எமன் உயிரைப் பறிக்க எருமைமாட்டின் மீது வருகிறார்” இவர் செய்யும் தொழிலுக்கு எருமை மாட்டையும் உடந்தையாக்குகிறார். எருமைமாட்டில் வந்தால் கோரமாக அச்சுறுத்தலாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு “தெர்ரர்” போல தெரிய வேண்டும் என்பதற்காக இருக்கலாம். கிரெக்க நாகரிகத்தில் காளை சண்டை ஒரு மாவிரனுக்குறிய உயிர் பிரக்ஞையைத் துறந்த ஒருவனுக்கான வீர விளையாட்டு என்று தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அதே விளையாட்டு, “ஜல்லிக்கட்டு காளையென” இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து சந்தைக்குள் நுழைந்தது. சரி இது ஒரு மிருகவதை என்று எடுத்துக் கொண்டாலும், அவர்கள் காளையை வீரத்திற்கான கடைசி குறியீடாகப் பாவித்து அதனை அடக்குபவன் மாவீரன் என்று வரையறுத்தார்கள். ஆனால் நம்ப எமலோகம் மன்னன் எமதர்மன், வேத காலத்தின் மிகப் பயங்கரமான புனைவு, உலக மாவீரராகத்தான் இருக்க முடியும் போல.

“மொத்த குதிரைகளும் நம்ப முனியாண்டி சாமி எப்பொழுது குத்தகைக்கு எடுத்தார்” என்பதைச் சற்றுக் கூர்ந்து கவனித்து அவதானிக்க வேண்டும்” ஒருவேளை அந்தக் காலத்து ஜமிந்தார்களும் பணக்காரர்களும் காவல்காரர்களும் குதிரை சவாரியை ஒரு பொழுது போக்காக பின்பற்றியிருந்திருக்கலாம். அல்லது அவர்களின் காவல் தொழிலுக்கு அதைப் பயன்படுத்தியிருக்கலாம். அதே வழக்கமாக ஆகி, காவல் காப்பவர்கள் எல்லாம் குதிரையில்தான் வருவார்கள் என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். (தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்) கதாநாயகன் குதிரையில் வந்து கதாநாயகியைக் காதலிப்பது, காப்பாற்றுவது, கவர்வது போல.

அலெக்செண்டர் போர்க்களத்தில் வென்ற நாடுகளைவிட, இழந்த போர்வீரர்களைவிட, அவரின் படையில் மரணித்த குதிரைகள்தான் அதிகம் என்று ஒரு கட்டுரையில் படித்தேன். பாவத்திற்குரிய மிருகம் குதிரை. அதன் வேகமே அதற்கு பலவீனம்.

“குதிரை சத்தம் கேட்டால், சிலருக்குப் போர் ஞாபகம் வரலாம், அல்லது சிலருக்கு பந்தையம் ஞாபகத்திற்கு வரலாம், அல்லது சிலருக்கு பயண சவாரி ஞாபகத்திற்கு வரலாம் அல்லது சிலருக்கு, ஐய்யனார் குதிரைலே சவாரி செய்து காவல் காத்துக்கிட்டு இருக்காரு என்கிற ஞாபகம் வரலாம். ஆனால் எல்லாம் இடங்களிலும் குதிரை பரிதாபத்திற்குரிய பொருளாகவேப் பாவிக்கப்பட்டுள்ளது. நமது அதிர்ஸ்ட்டத்தை நிர்ணயம் செய்ய குதிரைகள் ஓடி தேய்கின்றன. சிறுதெய்வ கோட்பாடுகள் குதிரையை ஒரு காவல் தெய்வத்தின் அடிமையாக ஆக்கிவிட்டிருந்தது. எங்காவது சுற்றுத்தளங்களுக்குச் செல்ல நேரும்போது ஒரு குதிரைக்காரன் குதிரையின் வாயில் கயிரைக் கட்டி அதனை தனது கட்டுபாட்டிற்குள்ளே வைத்திருந்து வியாபாரம் செய்வதைப் பார்க்கக்கூடும் (சவாரி). மிருகங்களின் வாயை இப்படித்தான் கட்டிப்போட்டே நமது மதத்தையும், வயிறையும் நிரப்பிக் கொண்டோம்.

அடுத்ததாக யானை. பாரதி இறப்பதற்கு யானை ஒரு காரணம் என்று சிறுவயதில் தெரிந்தபோது அதன் மீது கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால் தைப்பிங் மிருகக்காட்சி சாலையில் அதன் மகா கம்பீரமான உருவத்தைப் பார்த்தபோது நான் பயந்து தோல்வியை ஒப்புக் கொண்டேன். பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்குச் சென்றபோது ஒரு சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஒரு வட்டத்திற்குள்ளே நகர்ந்துகொண்டு தனது கம்பீரத்தை இழந்த பல யானைகளை அங்கு பார்க்க முடிந்தது. சிறுவயதில் ஒரு பெரிய கம்பீரமான மிருகமாக தெரிந்த யானையை மீண்டும் பார்க்கும்போது அதன் தனிமையையும் அதை ஒரு பயங்கரமான ஆபத்தான மிருகம் என்பதன் புரிதலில் சிறைப்படுத்தி வைத்திருக்கும் அடக்குமுறையையும் அவதானிக்க முடிந்தது. யானை காட்டில் இருந்தால் அது நிதர்சனம் அதே நகருக்குள் புகுந்தால் மதம். நகருக்குள் யானைகள் கொண்டு வரப்படுவதன் காரணமே இரண்டுத்தான். ஒன்று மதம் மற்றொன்று வியாபாரம்.

நம்ப தமிழ் சினிமாவில் இயக்குனர் இராமநாராயனின் மீதுதான் முதலில் மிருகவதை சட்டத்திற்குக் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பாம்பு முதல் யானைவரை எல்லாம் மிருகங்களையும் வைத்து ஒரு இந்துத்துவா சினிமாவைக் கொடுத்து மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தார். அம்மனுக்குப் பாலிபிஷேகம் செய்யும் யானைகளைக் காட்டியது தமிழ் சினிமாதான். இதைவிட பெரிய அபத்தம் வேறெங்கிலும் நடந்திருக்காது. அதையும் கடந்து போய் யானைக்குச் சட்டை சிலுவார் தைத்து அதற்கு அணிவித்து சாலையில் உலா வர வைத்து சிரிப்புக் காட்டி பணம் பண்ணிய தமிழ் சினிமா இந்துத்துவா ஆசாமிகளை எப்படிக் கண்டிப்பது? மதம் நிறுவப்பட்ட பின் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஒரு புனைவாக அதற்குள் கொண்டு வந்து திணிக்கப்பட்டன.

இந்த இரண்டையும் முன் வைத்து யானையை ஒரு கேலி பொருளாக மாற்றும்போது அது உக்கிரம் கொள்வதை மதம் பிடித்தல் என்று சொல்லித் தொலைகிறார்கள். மனிதர்களின் நெருக்கமும் அவர்களின் தொல்லைகளின் மொத்த எதிர்ப்புணர்வுதான் யானையின் மதம். இதற்கு சில அறிவியல்/உயிரியல் காரணங்களும் இருக்கக்கூடும். இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு மாலைப் போட்டுக் கொண்டும் வருபவர் போவோர்களுக்கு பழங்களையும் பூவையும் கொடுத்து பணம் பண்ண பழக்கப்பட்டிருக்கும் பல கோவில் யானைகளைக் கதைகளிலும் கட்டுரைகளிலும் படித்தத்துண்டு. “யானையை விநாயகர் என்று சொல்லும் இந்து சமூகம்தான் அதைக் கோவில் வாசலில் பிச்சையெடுக்கவும் பழக்கப்படுத்திருக்கிறது” அப்படியொரு இருண்ட நாகரிகத்தின் வாசலிலிருந்துதான் தவழ்ந்து முட்டிப் போட்டு நடந்து வந்திருக்கிறோம்.

இப்பொழுது யானைகள் சினிமாத்தன நகைச்சுவைகளை பேசும் அளவிற்கு அதன் வாழ்க்கைக்குள் புகுந்து அதைக் காட்சி பொருளாக்கி “டப்பிங்” என்கிற பெயரில் சுரண்டி தள்ளுகிறார்கள். இவர்கள் டப்பிங் செய்து பிழைக்க யானைகளின் வாழ்வும் அதன் சரித்திரத்தின் களம்தான் கிடைத்ததா? “national geography” தவிர மற்றவர் எவரும் மிருகங்களின் வாழ்வையும் உலகத்தையும் ஆய்வு நோக்கோடும் பதிவிட வேண்டும் என்கிற அக்கறையுடன் அணுகினார்களா என்று தெரியவில்லை.

நமக்குத் தெரிந்ததெல்லாம் இராமன் என்கிற காப்பிய கதாநாயகனுக்கு கல் எடுத்து கொடுத்து இலங்கைக்கு பாலம் அமைத்த தெய்வ குரங்குகள்தான் அல்லது இராமரின் சிறந்த பக்தரான அனுமானுக்கு வால் இருப்பதாலும் வானர படைகளிலிருந்து வந்ததாலும், எல்லாம் குரங்குகளும் அனுமான் போலவே தெய்வத்தன்மை கொண்டது என்றுதான் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் பத்துமலை கோவில்களிலும் தண்ணீர்மலை கோவிகளிலும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏங்கி தவிக்கும், நம்மை இந்து பக்தர்கள் என்று பார்க்கத் தெரியாத, உங்களிடமிருந்து உணவை மட்டுமே எதிர்ப்பார்க்கும் இந்த இயற்கையின் ஒர் உயிரினமான குரங்குகள்தான் அதிகமாக அங்கு இருக்கின்றன.

என்றாவது ஒருநாள் மிருகங்களெல்லாம் அழிந்துவிட நேர்ந்தால் அன்று அனாதையாக நிற்கப் போவது இந்து கடவுள்கள்தான் போல. இது மதம் மிருகங்களின் மீது நிறுவிய அரசியல்.

ஆக்கம்
கே.பாலமுருகன்

மௌனத்தின் உரையாடல்கள்

தற்கால கவிதைக்கான சிற்றிதழாக மௌனம் தீவிர கவனத்தைப் பெற்று வெளிவந்துகொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மலாக்காவிலிருந்து வெளிவரும் மௌனம் இதழில் மலேசியாவின் முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்களின் சமக்காலக் கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

கவிதை குறித்த புரிதல்களும், கவிதைகளைப் பற்றிய உரையாடல்களும், கவிதை விமர்சனங்களும் மேலும் தரமான நவீன கவிதைகளும் மௌனம் இதழில் பிரசுரம் கண்டு சமக்காலத்து சூழலின் பிரதிபலிப்பாக ஒரு மாபெரும் களமாக மௌனத்தின் உரையாடல் நவீன இலக்கிய வெளியின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

நாட்டின் மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் அறிமுக எழுத்தாளர்களும் எழுதி வரும் மௌனம் இதழ் 160 பக்கங்களுடன் ஆகஸ்ட் மாத வெளியீடாக மலர்ந்துள்ளது. மேலும் 29 ஆகஸ்ட் நடக்கவிருக்கும் வல்லின விழாவை முன்னிட்டு எழுத்தாளர் தின சிறப்பிதழாக மௌனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதழைப் பெறும் விவரம் அறிய மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளவும்:
thevarajan : sathika2009@hotmail.com

கே.பாலமுருகன்

Friday, July 31, 2009

தமிழுக்குள் ஏற்பட்டிருக்கும் நவீன மாற்றங்களும் பேச்சு மொழியும்

//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவமா?.//

நவீன மொழி என்று சொல்லும்போது இது ஒரு சாராரோ அல்லது ஒரு கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்கள் பயன்படுத்திய மொழியோ என்றெல்லாம் கிடையாது. பொதுபுத்தி சார்ந்து சிந்திப்பவர்களுக்கு எளிமையாக இதன் அர்த்தம் புரிந்துவிடும்.


முதல் உலக நாடுகளின் வளர்ச்சியும் மேம்பாடுகளும் இரண்டாம் மூன்றாம் நாடுகளில் இறக்குமதி பொருளென வந்திறங்கி அதை ஒரு நுகர்வு பொருளாக சந்தைக்குள் விற்று, அதை ஒரு வசதியாக கருதி பயன்படுத்துவது நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் நவீனம். நமது மரபு வாழ்வில் உள்புகும் நவீனமென்று இதைக் குறிப்பிடலாம். இன்று எல்லாம் தமிழர்களின் வீட்டிலும் அதிநவீன வசதி கொண்ட ஏதாவது ஒர் இறக்குமதி பொருள் இயங்கிக் கொண்டிருக்கும்.

எனக்குத் தெரிந்து இன்னமும் தோட்டப்புற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பர்வர்களின் வீட்டில்கூட “ஆஸ்ட்ரோ – அரைக்கும் இயந்திரம்” என்று வந்துவிட்டன.

நவீன கருவிகள் என்று சொன்னால் அது என்ன துணி துவைக்கும் பொருளை மட்டுமா குறிப்பது? மொத்த அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் அந்த “நவீன கருவிகள்” என்பதில் அடங்கிவிடும்.

“நவீன மொழி” என்பது அது தமிழாகவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மலாய்மொழியாகவும் எடுத்துக் கொள்ளலாம், காரணம் காலத்திற்குக் காலம் எல்லாம் மொழிகளிலும் நவீனம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது நிதர்சனம். மொழியில் மட்டுமில்லாது எல்லாம்வகையான துறைகளிலும் வாழ்விலும் இந்த நவீன மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதைத் தடுப்பவர்களும் ஏற்காதவர்களும் நிராகரிப்பவர்களும் இருக்கவே செய்தாலும் அந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

“நவீன மொழி” என்று சொல்லும்போது அது மாற்றங்கள் அடைகிற மாற்றங்கள் அடைந்து தனக்கென ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிக் கொண்டு சமக்காலத்து பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் பொருள் கொள்ளலாம். நவீன கருவி என்றதும் அது யார் பயன்படுத்திய கருவி, அவர்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்றெல்லாம் கேட்பது அறியாமை.

தமிழில் – தமிழிலக்கியத்தில் ஏற்படாத மாற்றங்களா? பாரதி உரைநடையை அறிமுகப்படுத்தும்போது பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இப்பொழுது அது வழக்கத்தில் உள்ளன. இதுவும் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கே இப்பொழுது இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டுவிட்டன. மேலும் சிறுகதை- நாவல் போன்ற வடிவங்கள் தமிழுக்குள் புதிய வடிவத்தில் நுழைந்தவை. அதையும் காலம் ஏற்றுக் கொண்டு இப்பொழுது உலக அளவில் எழுதுகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.

புதுக்கவிதை உருவாகியபோதும் பல எதிர்ப்புகள் கிளம்பின. மரபு கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் சண்டைகள் நடந்தன. ஆனால் இன்றோ புதுக்கவிதைகள் தொகுப்புகள் அச்சிட்டு வெளியீடு செய்யும் அளவிற்கும் மேலும் நாளிதழ்களில் புதுக்கவிதை பிரசுரம் பெறும் அளவிற்கும் அங்கீகாரங்கள் பெற்றுவிட்டன. ஆகையால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மொழியில் (எந்த மொழியாக இருந்தாலும்) மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுத்தான் இருக்கின்றன.

குடும்ப உரையாடல்களைக் கூர்ந்து அவதானித்தால், எல்லோரும் அல்லது பெரும்பான்மையானவர்கள் தமிழைச் சிதைத்துத்தான் பேசுகிறார்கள். பேச்சு மொழி அல்லது வட்டார மொழியென புரிந்துகொள்ளப்படும் அவை, ஒவ்வொரு குடும்பங்களிலும் வட்டாரங்களுக்கும் மாறுபட்டே பேசப்படுகின்றன. தோட்டப்ப்ய்ற சமூகம் ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியைச் சிதைத்து வட்டார மொழியென சூழல் அரசியலுக்கேற்ப புரிந்துகொண்டு அதன் பிரக்ஞையுடன் பேசினார்கள். மேலும் அதை வெறுமனே சிதைந்துவிட்ட மொழி என்றும் குறிப்பிட முடியுமா என்பதும் கேள்வியே. ஆனால் இன்று நகரத்திற்குப் புலர்பெயர்ந்துவிட்ட தமிழர்களின் பேச்சு மொழி வேறு மாதிரியாக மாற்றம்கொண்டு விட்டது.

மாணவர்களுக்குப் போதிக்கப்படும் படைப்பிலக்கியத்தின் ஒரு வடிவமான சிறுகதைகளில் உரையாடல்களின்போது பேச்சு மொழிகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது. யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் பிரிவு சி-யில் படைப்பிலக்கிய பகுதியில் வரும் சிறுகதைகளில் பிறமொழி பயன்பாடுகளும் பேச்சு மொழியும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பேச்சு மொழியை வெறும் சிதைந்த மொழி என்றால் ஏன் சோதனைகளிலும் பாடங்களிலும் அதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாவிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றன? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தமிழில் நிகழ்ந்த மாற்றமென்றால் வட்டார வழக்கின் பயன்பாட்டையும் அங்கீகரிக்க முயல்வதற்கான ஒரு முயற்சிகள்தான் இது.

மேலும் இதையெல்லாம் அல்லது இப்படிச் சிதைந்துவிட்ட மொழியை “நவீன மொழி” என்று அடையாளப்படுத்த முடியாது. சிதைதல் என்பதிலிருந்து நவீனம் உருவாகவில்லை, மாற்றம் என்பதிலிருந்துதான் அதன் நுண்பயன்பாடுகள் பெறப்படுகின்றன.

//தமிழில் இரண்டே மொழித்தான் உண்டு, பேச்சு மொழி செந்தமிழ்// என்பது தவறான கூற்று. அப்படியென்றால் சமக்காலத்து பேச்சு மொழி எல்லாம் தமிழைச் சிதைத்துதான் பேசுகிறார்கள். மேலேயுள்ள கூற்றுபடி பார்த்தால், தமிழில் இரண்டு வகைத்தான் உண்டு ஒன்று செந்தமிழ் மற்றொன்று சிதைந்த மொழி (பேச்சு மொழி). இப்படிச் சொல்வதால் பேச்சு மொழியையும் (சிதைந்த மொழியையும்) அங்கீகரித்து தமிழில் ஒருவகையென சேர்ப்பது போலல்லவா உள்ளது சிலரின் வாதம்/கூற்று.

தற்பொழுது எழுதுபவர்கள், தூயத்தமிழில் அல்லது மனிதர்கள் உரையாடும் காட்சிகளில் வழக்குத் தமிழில் அல்லது புதிய சொற்பிரயோகங்களுடனும் அதன் கட்டமைப்புகளுடனும் எழுதப்படும் தமிழில் என்று வகைப்படும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள்.. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம். கண்களை இறுக மூடிக் கொண்டு இது இல்லை என்றால் தர்க்கமாகாது. இது தமிழில் ஏற்பட்ட மாற்றம் என்கிற நிதர்சனத்திலிருந்து விவாதத்தைத் தொடங்கினால் நலம்.

மேலும் துறை சார்ந்த சொல்லாடல்கள் தமிழுக்குள் நுழைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுஜாதா கணினி சார்ந்த சொல்லாடல்களைக் கதைகளின் மூலமும் கட்டுரைகளின் மூலமும் தமிழுக்குள் கொண்டு வந்தார். அறிவியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல பல தமிழ் சொற்கள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. உயிரியல் கூறுகளை விளக்கும் பல தமிழ் சொற்கள் தமிழ் எழுத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவெல்லாமும் தமிழில் நிகழ்ந்த நவீன மாற்றங்கள். இன்று இணையம் அல்லது கணினி என்று சொல்லும் நாம் சங்க இலக்கியங்களில் இதுபோன்ற வார்த்தைகள் உள்ளனவா என்று பார்த்துச் சொல்லவும். ஒரு மொழி எப்படியெல்லாம் மாற்றமடைகிறது என்பதற்குப் பல விளக்கங்கள் சான்றுகளுடன் சமக்காலத்து வளர்ச்சிகளை முன்னிறுத்தி சுட்டிக் காட்டலாம். சுட்டிக்காட்டியும் எழுதப்பட்டுள்ளன.

குறிப்பு: பாலியல் சொல்லாடல்களை அல்லது பாலியல் உறுப்புகளை எழுதிவிட்டால் காமம் கிளர்ந்துவிடும் பாலியல் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும் என்று சொல்பவர்களுக்குத்தான் மனோத்துவ அணுகுமுறைகளும் உளவியல் பயிற்சிகளும் மிக அவசியமாகத் தேவைபடுகின்றன.

இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களும் அவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஜெயந்தி சங்கர்: இவ்வாறான கேள்விகளுக்கு விடையென்று சொல்வதென்றால் பக்கம் பக்கமாக ஆய்ந்து எழுதலாம்/சொல்லாம். இருப்பினும், இப்போதைக்கு சுருக்கமாகவும் எளிமையாகவும் விடைகாண முயல்வோம்.


நவீனம் என்றால் புதுமை என்று சொல்லவே தேவையில்லை. குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த எவரும் நவீன தமிழைப் பேசவில்லை; எழுதவில்லை; உருவாக்கவுமில்லை. தமிழ் மொழிக்கு என்றில்லாமல் எந்தவொரு மொழிக்கும் நிகழ்வது தான் இந்த நவீனமடைதல். சமீபமாக எழுதப்படும் தமிழ் மற்றும் வேற்று மொழிப் படைப்புகளைப் பரிச்சயம் கொள்ளாதிருப்போர், தாம் அவ்வாறு பரிச்சயமற்று இருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருக்கும் போது இவ்வாறெல்லாம் கேட்பது இயல்பு தான். பிரக்ஞையோடு இருந்து கொண்டு வேண்டுமென்றே இவ்வாறான கேள்விகள் கேட்பவர்களை நாம் கணக்கிலெடுக்கத் தேவையில்லை.


பேச்சு மொழியும் எழுத்து மொழியும் முற்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரே மாதிரியாகவா இருந்து வருகிறது? கண்டிப்பாக இல்லை. பேச்சு மொழி மற்றும் எழுத்து மொழி என்றறியப்படும் செந்தமிழ் ஆகிய இரண்டையும் சொல்லும் போது நாம் ஒன்றைக் கவனித்தல் வேண்டும். லிபி என்றறியப்படும் எழுத்து முறையிலேயே பல மாற்றங்கள் காலந்தோறும் நிகழ்ந்து வந்துள்ளது ஒருபுறமிருக்க அந்தச் சங்ககாலத் தமிழைப் பதம் பிரித்துப் புரிந்து கொள்பவர்கள் கூட அம்மொழியில் தானா எழுதுகிறார்கள்? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழர்கள் பேசிய மொழியை நாம் இன்று பேசுகிறோமா? அதே போல சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாம் எழுதிய மொழியிலா இன்றும் நாம் எழுதுகிறோம்? எதில் எதுவுமே இல்லையே. சங்க காலத் தமிழைப் புரிந்து கொள்ள நம்மில் பெரும்பாலோர் பொழிப்புரையை இன்றைய தமிழில் தானே படிக்கிறோம்.


கலாசாரம் மாற்றமடைந்தோறும் தமிழென்று இல்லை, வேறு எந்தவொரு மொழியுமே மாறுகிறது. சமூகம், வாழ்வு, கலாசாரம் எல்லாம் தொடர்ச்சியாக ஒரு நிறுத்தலற்ற மாற்றங்கள்/வளர்ச்சிகள் கண்டு நவீனமடையும் போது புழக்கத்திலிருக்கும் எந்தவொரு மொழியும் மாற்றங்களடைந்து நவீனம் கொள்வது இயல்பு தான். தவிர்க்கவியலாததும் கூட. சிலர் அஞ்சுவது போல மொழிக்கு இதொன்றும் கெடுதலுமில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். முற்காலத்தில் 'நாற்றம்' என்றால் நறுமணம். இன்றோ நாற்றம் என்றால் மனதிற்கிசைவற்ற ஒரு மணம். எப்படி மாறியது இது? இன்றைக்கு நறுமணத்தைக் குறிக்க நாற்றம் என்ற சொல்லையா பாவிக்கிறார்கள்? கணிப்பொறியையும் கணினி என்ற சொல்லை எற்றுக் கொள்வில்லையா நாம்? அதுபோலத் தான் காலமாற்றத்துக்கேற்ப புதிய சொற்களும் பிரயோகங்களும் மாறிக் கொண்டே வருகின்றன.


எடுத்தாளப்படும் கருப்பொருளைப் பொருத்தும் பல வேளைகளில் மொழியானது தன்னியல்பில் நவீனம் கொள்ளும். தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு புனைவுகளின் மொழி மிகத் தெளிவாகவும் வேகமாகவும் மாற்றமடைந்தது என்றே சொல்ல வேண்டும். தமிழின் முதல் நாவல் என்றறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் க.நா.சுவின் 'பொய்த்தேவு'க்கும் மொழியிலுள்ள வேறுபாட்டையும் பிறகு வந்த சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், லா.ச.ரா போன்றவர்களைத் தொடர்ந்து எளிய எதார்த்த நடையில் பேசிய ஜெயகாந்தன், பாலகுமாரன் போன்றோரைச் சொல்லலாம். அடுத்த கட்ட நவீன மொழியைக் கையாண்ட சுந்தரராமசாமி, கோணங்கி மற்றும் பலரைச் சொல்ல முடியும். மொழியில் இவ்வாறு நிகழ்ந்த தொடர் மாற்றங்களை பரவலாக வாசித்தவர்களால் அனுமானிக்க முடியும். கவிதை என்றெடுத்துக் கொண்டாலும் வானம்பாடி காலந்தொட்டும் இன்றைய நவீன கவிதை காலகட்டம் வரை படிப்படியான மாற்றங்களை உணரலாம்.



ஆகவே, புதுமைப்பித்தன் காலத்துக்கு நவீன மொழி இன்றைக்கு பழைய மொழி. இன்றைய நவீன மொழி நாளைக்குப் பழையதாகத் தெரியும். இதான் நிதர்சனம். மு.வவை மட்டுமே வாசித்தவர்கள் புதுமைப்பித்தனை நவீனம் என்றே தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆகவே, அடுத்த அடுத்த கட்ட எழுத்துக்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு மட்டுமே மொழி கொள்ளும் நவீனம் குறித்து புரிந்து கொள்ள முடியும். சொல்லும் விஷயங்களிலும் சொல்லும் முறையிலும் தற்காலத்துக்கேற்ப எழுதுபவர்களில் சிலருக்கு தாம் நவீனமாக எழுதுவதே கூட அறியாமலிருக்கிறது. அவர்கள் அறியவில்லை என்பதால் அவர்கள் படைப்புகள் நவீனமில்லை என்றாகிவிடாது. சமீபத்திய போக்குகளை நன்றாகவே அவதானித்து வருவோரில் எல்லோருமே நவீனமாக எழுதுவார்களா என்றால் இல்லை.


பொதுவாகவே படைப்பாளி எல்லோருக்கும் புரியும் மொழியில் எழுதினால் நல்லதென்று நினைக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். பாத்திரங்களை இலட்சியவாதம் பேச வைத்தல், கதாப்பாத்திரங்களை விதந்தோதுதல், உணர்ச்சிகள் மற்றும் வர்ணனைகளை மிகைப்படுத்துதல், திரும்பத் திரும்ப கேட்டும் படித்தும் பழக்கப்பட்ட உவமைகள், சொல்லாடல்கள் போன்றவற்றையும் இவ்வகையான சராசரி வாசகன் எளிதில் ஏற்கிறான். கதாநாயகன் எதிர்மறையாகப் பேசினாலோ நடந்தாலோ அல்லது கதாசிரியர் கதை சொல்லலில் வெளிப்படையாக இருந்தாலோ ஏற்கும் பக்குவம் எல்லா வாசகனுக்கும் இருந்து விடுவதில்லை. அவரவர் வளர்ந்த சூழல் பார்க்கும் பார்வை போன்றவையும் ஒருவரது வாசகப் பார்வையைத் தீர்மானிக்கும் தான். எனினும், பலருக்கு தொடர்ந்த வாசிப்பின் வழி அந்தப் பக்குவம் வரக் கூடும். அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை வாசிக்கும் இவ்வாசகர்கள் மனம் குழம்புகிறது. இவ்வளவு வெளிப்படை அவசியந்தானா என்று? அவ்வாறானவற்றில் மொழிக்கும் சொற்களுக்கும் அதைத் தாண்டிய வேலையுமிருக்காது. பாலியல் மற்றும் பாலியல் சொற்களூடாக நல்லதொரு படைப்பாளி சொல்ல வருவது என்னென்ன என்று யோசிக்கும் முன்னரே பெரும்பான்மையான வாசகர்கள் அதிர்ச்சியோ கிளர்ச்சியோ அடைந்து விடுகிறார்கள். அதான் இங்கு பிரச்சனையே. பிரதியை வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. வகைப்படுத்தவும் தான். –ஜெயந்தி சங்கர்


ஆக்கம்
கே.பாலமுருகன்

Monday, July 27, 2009

யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை - அழகியலும் தீவிரமும் (1958 - 2009)



"யஸ்மின் அமாட் இறக்கவில்லை.
எங்கோ அவரின் நகைச்சுவை உடல்மொழியுடனும் தீராத தனது மலேசிய சமூகத்தின்
மீதான காதலுடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். "
-கே.பாலமுருகன்

மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும் வைத்து நுட்பமான வெளிப்பாடுகளாக ஆக்கப்படுத்தியுள்ளார் யஸ்மின் அமாட் என்கிற துணிகர மலேசிய சினிமாவின் மிகச் சிறந்த அடையாளம்.2003-இல் ராபுன் என்கிற திரைப்படத்துடன் மலேசிய சினிமா வெளியில் தீவிர பார்வையுடன் வந்தவர் யஸ்மின் அமாட். பிறகு சேபேட் என்கிற படத்தை 2004-இல் எழுதி இயக்கினார்.

கடந்த மாதம்(ஜூன்)-இல் இந்தியாவிலிருந்து வரும் தீவிர இலக்கிய இதழான தீராநதியில் யஸ்மின் அமாட் அவர்களைப் பற்றியும் அவரின் அன்மைய திரைப்படமான டேலண்ட் டைம், முஷ்கின் படங்களின் விமர்சனங்களையும் எழுதியிருந்தேன். 2 வருடங்களுக்கு முன்பிருந்தே அவரின் திரைப்படங்களைப் பார்த்து வந்தும் இந்த வருடன் ஜூன் மாதம்தான் அவரைப் பற்றி தமிழில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவர் இறந்த செய்தியைக் கேட்டது மனம் பதறிப் போனது. மீண்டும் அவரைப் பற்றிய அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் விரிவுப்படுத்தியிருக்கிறேன்.


அவரது திரைப்படங்கள் மலேசிய சமூகத்தின் மத்தியில் அவரின் இரண்டாவது படத்திலேயே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. தனது தொலைக்காட்சி நிகழ்வுகளின் மூலம் நகைச்சுவையாற்றலும், அன்பும், முற்போக்குச் சிந்தனையையும் கொண்ட மனிதராக அறியப்பட்டவர் யஸ்மின். ஜொகூரிலுள்ள முவார் கம்போங் திரேவில் 1 ஜூலை1958இல் பிறந்த யஸ்மின் அமாட், உளவியல் துறையிலும் அரசியல் துறையிலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து ஒரு கலை சார்ந்த பட்டதாரியாக இங்கிலாந்திலிருந்து மீண்டும் மலேசியாவிற்குத் திரும்பினார்.

யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் பலவகையான உலக விருதுகளையும் உலக சினிமா நிறுவனங்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. பெர்லீன் திரைப்பட விழாவிலும் சான் பிரான்ஸிஸ்க்கோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட ஒரே மலேசிய சினிமாவென்றால் அது யஸ்மின் அமாட் அவர்களின் சினிமாதான். அவரின் சினிமா வாழ்வின் நிதர்சனங்களுடன் தர்க்கங்களுடனும் மிக நெருக்கமானது என்றே சொல்லலாம்.

ஒரு சமூகத்தில் எழும் பெரும்பான்மை/சிறுபாண்மை இனத்தின் மதப் பண்பாட்டு இறுக்கங்கள் என்பது மதத்தின்பால் மதப் போதகர்களால் சமய பாரம்பரியத்தின் வரையறைகளையும் வேத பரிந்துரைகளையும் முன்னிறுத்தி உருவான ஒரு சார்பான நிருவுதல் என்று கருதலாம். ஈரான் போன்ற நாடுகளில் மத கோட்பாட்டு இறுக்கங்களின் காரணமாக பெண் என்பவள் நுகர்வின் பொருளாகவும் வீடு என்கிற எல்லையே அவளின் சுதந்திரத்தை வரையறுக்கக்கூடிய குறியீடாகவும் பாவிக்கப்பட்டுருக்கின்றன.

“ஓசாமா” என்ற ஈரான் படம் முழுக்க போருக்கு அப்பால் ஆண் சமூகத்தால் வன்கொடுமைக்கு உள்ளான ஈரான் பெண்களின் ஒடுங்கிய வாழ்வே முன்னிறுத்துப்படுகின்றன. கதையின் முக்கிய பாத்திரத்தில் வரும் பெண்ணைச் சுற்றி அலையும் திரை, இறுதியாக அவள் 8 மனைவிகளுக்குக் கணவனான ஒரு வயோதிக வணிகனுக்கு 9ஆவது மனைவியாக விற்றுவிடப்படுவதைக் காட்சிப்படுத்தி திவீரமடைகிறது.. அவளை ஒரு அறையில்(ஏற்கனவே மனைவிகளாலும் குழந்தைகளாலும் நிரம்பிய அறை) வைத்து பூட்டிவிட்டு தனது இச்சையைத் தீர்த்துக் கொண்டு சுடு நீரில் தன் உடலைக் கழுவிக் கொள்வதுடன் முடிவடையும் சினிமா, இறுக்கமான மதக் கற்பிதங்களைக் கொண்டு பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வரலாற்று வண்முறைகளைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு இனமும் சமூகமும் மதப்பிரச்சாரங்களால் மத போதனைகளால் கட்டமைக்கப்பட்டு, அதன்பால் உருவாகும் பற்பல மூட நம்பிக்கைகளையும் பின்பற்றுதல்களையும் சடங்குகளையும் கொண்டுருக்கின்றன. மதப்பின்பற்றுதல்களும் சமய போதனைகளும் ஒரு தனி மனிதனையும் நாட்டின் இறையாண்மையையும், குடும்பத்தையும் எப்படி உருவாக்கியிருக்கின்றன என்கிற வெளிப்பாடுகளை மிகக் கவனமாக அவதானிக்க வேண்டிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறோம். இதைக் கலாச்சாரங்களைக் கடந்த தொடர் மதிப்பீடுகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன சிந்தனையின் அளவுகோள்களைக் கொண்டு அல்லது மாற்றுச் சிந்தனையின் பின்புலத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமயத்தை அல்லது மதத்தை மீள்பார்வை செய்வது என்றும் சொல்லலாம்.

அப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டின் ஊடே ஒரு இனத்தின் அடையாளத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சினிமாதான் மலேசிய மலாய் இயக்குனரான யாஸ்மின் அமாட் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் “முஷ்கின்” மற்றும் “டேலண்ட் டைம்”. முஷ்கின் படத்தின் மூலம் யதார்த்தவாத குடும்ப உறவுகளினூடே மதத்தின் பின்னனியால் உருவாக்கப்பட்ட புனித எல்லைகளையும் பழக்கமாக்கப்பட்ட பல இறுக்கங்களையும் உடைத்து மிகவும் முற்போக்குத்தனமாக வெளிப்படுத்தியிருப்பது யஸ்மின் அமாட் அவர்களின் துணிவையும் மலேசிய சினிமா கலையை அவர் முன்னகர்த்தும் ஆளுமையும் வெளிப்படுகிறது.

முஷ்கின் படம் மலாய்க்கார கம்பத்தில் இரு பால்ய நண்பர்களின் இடையில் ஏற்படும் உறவை, பிறகு இளம் பருவத்தில் காதலாக மாறும் நுட்பத்தை அழகியலுடன் காட்சிப்படுத்தும் படம். மனித மனத்தின் உளவியல் மாற்றங்களையும் வாழ்வின் பரிணாமங்களின் உச்சங்களையும் அலசலாக மத கற்பிதங்களையும் கடந்து கலாச்சார சூழலில் நிகழும் ஒரு காதல் காவியம் போல எல்லாம் மனிதர்களுக்கும் தனது பால்ய காதலை நினைவுறுத்தும் படமாகவே யஸ்மின் அமாட் படைத்திருக்கிறார்.

ஒரு தேசிய பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கவிருக்கும் திறமைக்கான நேரம் என்ற நிகழ்வை முன் வைத்து நகர்த்தப்படும் “டேலண்ட் டைம்” மலேசிய சினிமா என்று விமர்சிக்கக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மலேசிய நாட்டின் மூன்று முக்கிய இனங்களையும் கதையோட்டத்தில் இணைத்து, மலேசியா யாரையும் புறக்கணிக்காத ஒரு தேசிய அடையாளமாக மலர வேண்டும் என்கிற பிரச்சாரமற்ற எதிர்ப்பார்ப்புகளையும் பரிந்துரைக்கின்றன. அந்தத் தேசிய பள்ளியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் யதார்த்தமான நகைச்சுவை உணர்வுகள், அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய பிர இனத்து மாணவர்களும் அவர்களின் நட்பும், அதில் வெளிப்படும் மனநிலைகளும் என்று அழகியல் சார்ந்து விரிகிறது படம்.

மேலும் தற்காலத்திலய மலேசிய சமூகத்தில் சிறுபாண்மை இனமான தமிழர்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக அவர்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக பயங்கர எதிர்வினைகள் கிளம்பின. அதன் மொத்த விழிப்புணர் வெளிப்பாடுகளாக நவம்பர் 25 2007-இல் இண்ட்ராப் பேரணியும் அதன்பின் கைதான இரத்துச் செய்யப்பட்ட இண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களும் செயலவையினர்களுமான 5 பேரின் இசா சட்ட நிபந்தனைக்குக் கீழ் கைதும் பெரும் புரட்சியை நிகழ்த்தியன. அதன் காரணிகளாக முன் வைக்கப்படும் ஒரு பிரச்சனையான இந்து கோவில் உடைப்புகளை யஸ்மின் அமாட் மிகவும் நியாயமான சமூகத்தின் குரலாக படத்தின் மூலம் முன் வைத்துள்ளார். அந்த இந்திய இளைஞனின் அம்மாவின் தம்பியை அவர் திருமணத்திற்கு முந்தைய நாளில் கோவில் தொடர்பான பிரச்சனையில் அடித்துக் கொன்றுவிடுகிறார்கள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மலாய்க்காரர்களின் மீது கடுமையான ஆவேசத்தைக் கொண்டிருக்கும் அவரின் குரலைப் பயன்படுத்தி, தன் சொந்த இனத்தின் பலவீனங்களை ஆராயும் விதமாக கேள்வியெழுப்புகிறார் இயக்குனர் யஸ்மின்.

கடந்த 23ஆம் திகதி மலேசிய பாடகி சித்தி நூராலீசாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது திடீரென்று பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மணி 11.25க்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவின் உக்கிரத்தால் யஸ்மின் அமாட் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார்.

கடைசிவரை தனது சினிமாவின் மூலம் இன ஒற்றுமையை வெளிப்படுத்திய மலேசிய சமூகத்தின் ஆளுமை யஸ்மின் அவர்கள். அவரின் நினைவாக மலேசிய நிலப்பரப்பின் சினிமா பெற்ற உலக விருதுகளும் உலக கவனமும் அங்கீகாரமும் என்றும் இந்த மண்ணின் ஆளுமையை அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கும். அவரின் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட என் போன்ற எத்தனையோ இரசிகர்கள் யஸ்மின் 6 படங்களோடு தன் வாழ்நாளின் சாதனைகளை முடித்துக் கொண்டதை நினைத்து வருத்தம் மேலிடுகிறது. என்றும் அவர் நினைவாக. . .


கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: தீராநதி இதழ்(இந்தியா) ஜூன்

Saturday, July 25, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது


சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கிருஷ்ண பிரபு,சென்னை.
மூலமாக எனக்கு கிடைத்துள்ளது.


சில சமயங்களில் என் நட்பு வட்டத்தைத் தவிர வேறு சிலரின் பதிவுகளை படிக்க நேரும். அந்தப் பதிவர்களுக்கே நான் விருது கொடுக்க நினைக்கிறேன்.

1.பால முருகன்
"இவர் மலேசியப் பதிவர். இவருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரியராக பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன். "மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார். சுவாரஸ்யமான பல பதிவுகளை இவருடைய வலைப்பூவில் காணலாம். இவருடன் எனக்கு முற்றிலும் தொடர்பு இல்லை"
- கிருஷ்ண பிரபு

Wednesday, July 22, 2009

ஒரு தமிழாசிரியரின் நாட்குறிப்புகள்-1 (பள்ளிக்கூடம் என்கிற மலர்வனம்)



குறிப்பு: மக்கள் ஓசை நாளிதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர் கட்டுரையின் முதல் பாகம் இது.

கல்லூரி படிப்பு முடிந்ததும் கெடா மாநிலத்திலேயே ஒரு தமிழ்ப்பள்ளியில் பணி அமர்வு கிடைத்தது. எங்கிருந்து பார்த்தாலும் கடப்பவர்களின் கண்களுக்குத் தெரியாமல் ஒரு செம்பனை காட்டின் நடுப்பகுதியில் சிக்கிய ஒரு தமிழ்ப்பள்ளிக்கு முதல்நாள் வேலைக்குச் சென்றபோது நகர பிராந்தியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட அதிருப்தியுடன் மனம் இறுகியபடியே இருந்தது. பெரிய சாலையிலிருந்து 1 கிலோ மீட்டர் பிரிந்து செம்பனை நடுவுகளின் இருளைக் கடந்து உள்ளே சென்றால் பள்ளியின் வாசல் வரவேற்றுக் கொண்டிருக்கும். எப்பொழுது வேண்டுமென்றாலும் பாதையின் குறுக்கே ஒரு நீளமான பாம்பு வெளிவரலாம், அல்லது செம்பனை காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகள் தேடி வந்து முட்டி வைக்கலாம். எல்லாம்விதமான தயார்நிலைகளுடனும் பாதுகாப்புடனும் நடக்க பழகும் குழந்தையைப் போல பள்ளிக்குச் சென்று வருகிறேன்.

கொஞ்ச நாட்களில் உட்புற பள்ளியின் சூழலையும் வாழ்வையும் பழகிக் கொண்டேன். மனிதனின் மகத்தான சாமர்த்தியம், எல்லாம் சூழல்களையும் பழகிக் கொள்ளும் ஒரு சமரசம்தானே. முதல்நாள் பள்ளியின் சுற்றுப்புறத்தை அவதானித்தபோது, எங்கும் அடர்த்தியான கிளைகளைத் தொங்கபோட்டுக் கொண்டு நிற்கும் செம்பனை மரங்களும் தூரத்தில் தெரியும் ஒரு முனியாண்டி சாமி கோவிலும், தவிர 2 கிலோ மீட்டருக்கு அப்பால் எங்கோ இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலையின் சத்தமும் அந்தச் சுற்றுச்சூழலை நிரப்பியிருந்ததை உணர முடிந்தது.

காலையில் பள்ளிக்குச் சென்றதும் முதல் பேருந்துக்குப் பள்ளி வந்து சேர்ந்துவிடும் மாணவர்கள் சிலர் அங்கும் இங்குமாக நடமாடிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் பள்ளியின் வாசலை வந்தடைந்ததும், யார் முதலில் காலை வணக்கம் சொல்லப் போகிறார்கள் என்கிற போட்டி உருவாகிவிடும். மோட்டாரிலிருந்து இறங்குவதற்கு முன்பே வரிசைக்கட்டிக் கொண்டு எங்கிருந்தோ என்னிடம் ஓடி வருவார்கள். காலை பனி அங்குள்ள பொருட்களிலெல்லாம் ஒழுகி கரைந்து கொண்டிருக்கும் தருணத்தின் முதல் தரிசனமே மாணவர்களின் அந்த, காலை வணக்கம் என்கிற மாபெரும் அதிசியம்தான்.

“காலை வணக்கம் ஐயா! ஏய் நாந்தான் முதல்லே சொன்னென். .”

“காலை வணக்கம் சார், காலை வணக்கம் சார். . நான் ரெண்டு வாட்டி சொல்லிட்டனே! இப்பெ என்னா பண்ணுவ?”

“சார். . நாளைக்கு நான் சொல்றெ வணக்கத்தைத்தான் நீங்க கேக்கனும் சொல்லிட்டேன்”

வாசலில் எனக்காகக் காத்திருக்கும் மாணவர்கள் இருக்கும் ஒரு பள்ளிக்குப் போவதென்பது கடவுளின் வீட்டிற்கு விருந்தாடியாகச் செல்வது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவர்களின் குதுகலத்தில் பங்குபெறும் எனது முதல் காலை பொழுதுகள் அன்று முழுவதும் என்னை இயக்கிக் கொண்டிருக்கும். மாணவர்கள் அவ்வளவு உரிமையுடன் உதிர்த்துவிடும் வணக்கங்கள் என்னை நெருங்கத் துடிக்கும் அவர்களின் போராட்டங்களை அல்லது பிரயத்தனங்களை அடையாளப்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்த இடத்தில் வணக்கமோ அல்லது காலை பொழுதோ அவசியம் இல்லை, அதைச் சொல்லத்துடிக்கும் அவர்களின் நெருக்கங்களைத்தான் ஒவ்வொரு ஆசிரியர்களும் கொண்டாடியாக வேண்டும்.

மறுநாள் எனக்காக அவர்கள் ஒரு மாபெரும் வணக்கத்தை மனதில் வைத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பனி கொட்டும் ஒரு காட்டில் காத்திருப்பார்கள். செம்பனை மரங்களிருந்து ஒழுகி சாலையில் இறங்கிக் கொண்டிருக்கும் கூட்டம் கூட்டமான பனி பொழுதை உடைத்துக் கொண்டு வரும் என் மோட்டார் வெளிச்சத்தில், மாணவர்களின் முதல் காலை பல நம்பிக்கைகளுடன் பிறக்கிறது. “வணக்கம் சார்” என்று தூரத்திலிருந்தே எனக்கான அவர்களின் நேசத்தை தூக்கி எறியும் போது, அதை மிக கவனமாகப் பிடித்துக் கொண்டு சிரித்து மகிழ்வதைத் தவிர வேறென்றும் எனக்குத் தெரியவில்லை.

அன்று முழுவதும் என்னைப் பார்க்கும் இடங்களில்லெல்லாம் ஒரு நட்பு பாராட்டும் சினேகம் மாணவர்களின் சொற்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு உட்புற பள்ளி எனக்கு முதலில் கற்றுக் கொடுத்த விஷயம் மாணவர்களுடன் எப்படி அன்பாகப் பழகுவது என்பதைப் பற்றித்தான். எல்லாம் நேரங்களிம் இறுக்கமான தோற்றத்துடனும் பரபரக்கும் ஆவேசத்துடனும் கோபத்தை மாணவர்களிடத்தில் வெளிப்படுத்தும் ஒரு ஆசிரியர் முதலில் தொலைப்பது மாணவர்களின் அன்பையும் நெருக்கத்தையும்தான். மாணவர்கள் அது போன்ற ஆசிரியரை அணுகுவது கிடையாது, அவர்கள் பயந்து நடுங்கி அந்த மாதிரியான ஆசிரியர்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கவே நினைக்கிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள் போல மாறிவிடக்கூடாது. அல்லது குழந்தைகளைக் கடத்தும் ஒற்றைக் கண் வில்லன் போல நடந்துகொள்ளக்கூடாது. மாணவர்கள் நம்மை வெறுப்பதோடு நாம் கற்பிக்கும் அந்தப் பாடத்தையும் வெறுத்துவிடுவார்கள் என்கிற நிதர்சனத்தையும் ஒப்பிட்டு அளவில் அந்தப் பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது.

“சார். . சாப்டீங்களா?”

“ஐயா. . எப்படி இருக்கீங்க?”

“ஐயா. . சார். . “ இப்படி ஒவ்வொரு சந்திப்பிலும் சிறுபள்ளியாக இருந்தபோதும் மாணவர்களின் அக்கறையான வார்த்தைகளில் சிக்கிக் கொள்கிறேன். அவர்களுடனான சினேகம் மாணவர்களை நம் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவும் அவர்களை அணுக்கமாக நெருங்கி அவர்களைப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. பள்ளிக்கூடம் என்பது காட்டுப் பகுதியில் அல்லது நகர் பகுதியில் அமைவது குறித்து ஆச்சர்யப்படுவதற்கோ கவலைப்படுவதற்கோ ஒன்றுமில்லை, நமக்காகக் காலையில் பள்ளியின் வாசலில் ஒரு ”வணக்கத்திற்காகக்” காத்திருக்கும் மாணவர்களின் அன்பும் அவர்களின் நெருக்கமுதான் உண்மையான திருப்தி என்பதை ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறேன். அந்த மலர்வனத்தில் ஒவ்வொரு காலை பனியிலும் பல பூக்கள் முளைத்து செம்பனை காடுகளின் இருளைத் தோற்கடிக்கிறது என்றே மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
-நாட்குறிப்புகள் தொடரும்-

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
நன்றி: மக்கள் ஓசை நாளிதழ் (11.07.2009)

Monday, July 20, 2009

தமிழ் மொழியின் சிதைவும் சிறு சிறு சமரசங்களும் அதனுள் ஒளிந்திருக்கும் துரோகங்களும்

செய்திகள் வாசிப்பது நவீன படைப்பாளி என்கிற பைத்தியக்காரன்.

வணக்கம். அன்மைய காலமாக தமிழுக்கு கேடு தமிழுக்கு கேடு என்று அலறுகின்ற ஒருசிலர் அவர்களை அறியாமலேயே சிறு சிறு சமரசங்களின் மூலம் தமிழுக்குச் சிதைவைக் கொண்டு வருவதாக “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” இரு புகார்கள் வந்திருக்கின்றன.

புகார் 1: அல்லது சிறு சமரசம் 1
தமிழ் மரபிலக்கணத்தைப் பற்றி ஆழமாக விவாதிக்கும் சிலர், தமிழின் தொன்மத்தை ஏன் சிதைக்கிறாய் என கேட்கும் சிலர், தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கொள்ள வேண்டி தமிழைச் சிதைத்துள்ளார்கள். எப்படி?

திருத்தமிழ் என்ற வலைப்பூவின் பெயரை “thirutamil.blogspot” அல்லது karutthumedai.blogspot என்றும் எழுதி தமிழைக் களங்கப்படுத்தியுள்ளார்கள்.

ஐயோ பதறுகிறது மனம். தமிழ் தொன்மத்தைக் கேலி செய்துள்ளார்கள். தமிழை மாற்று மொழியில் எழுதுவதா? அடப்பாவிகளே! தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக இப்படி ஒரு சமரசமா? வலைப்பூவை மலாயிலோ ஆங்கிலத்திலோ எழுதினால்தான் அனுமதி கிடைக்கும் என்பதற்காக தமிழ் பெயரை மாற்று மொழியில் எழுதிவிட்டு, பிறகு அதே வலைப்பூவில் தமிழ் தொன்மம், தமிழ் மரபு என்று வாய் கிழியும் துரோகிகளே உங்களை எப்படி மன்னிப்பது? என்று “தமிழ் நெறி மையக் பூலோக குழுமத்தின் தலைமைகத்திலிருந்து” தலைவர் தமிழரண் கண்ணன் அவர்கள் கோபத்தோடு கத்துகிறார்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து “தொழில்நுட்ப ஆசான் மகாலிங்க பூபதி: தமிழில் புளோக்கை வைத்துக் கொள்ள தமிழில் முகவரியை வைத்துக் கொள்வதில் சிரமம் உண்டு. கூகள் புளோக் வசதியைக் கொடுக்கிறது, ஆகையால் கூகளின் அதிகாரப்பூர்வ முகவரியைத் தமிழில் வைத்துக் கொள்வதால் கூகள் தேடலில் எல்லோரும் தமிழில் தட்டி தேடுவதென்பது சாத்தியம் குறைவு என்பதால், தொழில்நுட்பத்தைச் சரிகட்ட ஒருசிலர் தமிழை விட்டுக் கொடுத்துள்ளார்கள். இதில் தவறென்ன, தமிழை “thamilz” என்று எழுதுவதினால் என்ன தப்பு என்று மானமிக்க தமிழ் பற்றாளர்கள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டு சிறு சமரசத்தில் தமிழைத் தொழில்நுட்ப வசதிக்காக விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

புகார் 2: சமரசம் 2

தமிழில் வைத்த பெயரை, மதிவாணன் என்கிற பெயரை “mathivaanan” என்றும் வேறு மொழியில் எழுதுகிறார்கள். ஐயகோ! மனம் பதைக்கிறதே! அது என்ன மொழி? புரியவில்லையே. ஏன் தமிழ் என்கிற மரபின் தொன்மத்தைப் பழிக்கிறார்கள். கலப்படத்தை வெறுக்கும் இவர்களா தனது தமிழ்ப்பெயரை இப்படிக் கொச்சைப்படுத்தி வேறு மொழியில் எழுதுகிறார்கள்?

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து சுகுமாறன்: எங்கெல்லாம் இவர்கள் இப்படித் தமிழ்ப்பெயர்களை வேறு மொழியில் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரியுமா?
1. தனக்கான தேசிய அடையாள அட்டையில்
2. வங்கியில் கடன் பெறும் பாரத்தில்
3. வீட்டில் ஆஸ்ட்ரோ விண்ணப்பப்பாரத்தில்
4. தொலைப்பேசி அழைப்பு கணக்கின் பாரத்தில்


ஐயையோ போய்விட்டதே மானம். சோற்றுக்காகவும் பணத்திற்காகவும் வசதிக்காகவும் தமிழை விற்றுவிட்டானே வேறு மொழிக்கு, இந்த மரபு தமிழன். என்று அழுது கொண்டிருந்தார் தமிழ் நெறி தொன்ம கழகத்தின் செயலாளர்.

நேரடி ஒலிப்பரப்பிலிருந்து வியாழக்கிழமை குமாரசாமி: தேசிய அடையாள அட்டையில் எங்கள் பெயர் வேறு மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. அதனால் என்ன, நாங்கள் இந்த நாட்டுப் பிரஜை அதனால் தேசிய மொழியான அந்த மொழியில்தான் எழுத வேண்டியுள்ளது. யாருக்கு என்ன சிரமம்? தமிழ் மரபு தமிழ் இலக்கணம் என்றெல்லாம் நாங்கள் நவீன படைப்பாளிகளின் ஆபாசங்களைப் பார்த்துதான் கத்துவோம் ஆனால் நாங்கள் ஏற்றுக் கொள்ளும் அடையாளங்களில் எங்களுக்கு தமிழ் முக்கியமல்ல. நாங்களாம் வாய் சொல்லில் வீரரடி பாப்பா!

தமிழ் நெறி தொன்ம கழகத்திலிருந்து தலைவர் அறைக்கூவல்:

தமிழ் பாவிகளே, நவீன படைப்பாளிகளை முட்டாள்கள் எனவும் பைத்தியம் என்றும் கதைக்கும் நீங்கள் இப்படிச் சிறு சிறு சமரசத்தில் தமிழ் துரோகிகளாக இருந்துள்ளதை இதுவரை யாரும் வெளிச்சத்திற்குக் காட்டவில்லையே! மொழிக்கு இழிவு என்று கத்திவிட்டு நீங்களே மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக சுயலாபத்திற்காக விற்றுவிட்டிர்களே! என்ன ஒரு கொடுமை.

நவீன படைப்பாளி 1: உங்களுக்கு தேவையென்றால் எதையும் செய்வீர்களா? நாங்கள் மொழியைச் சிதைக்கவில்லை, எங்கள் வாழ்வையும் எங்கள் மனிதர்களையும் எங்களுக்கான நவீன தமிழ் மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம். உலக இலக்கியங்களையும் தமிழில் மொழிப்பெயர்த்து தமிழுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழை இறுக்கமாக்கவில்லை. ஆனால் நீங்கள், படைப்பிலும் இல்லை, தமிழையும் உலக அளவிற்குக் கொண்டு செல்லவில்லை.

தைரியமிருந்தால், தமிழ் மொழியின் தனித்துவத்தைக் காப்பது உண்மையென்றால், உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் தமிழ் மானம் உண்மையென்றால், முதலில் நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் மாற்றான் மொழியை முற்றிலுமாக துறந்து பாருங்கள். முடியுமா? என்ன முடியாதா? நாட்டிலிருந்து துரட்டியடிக்கப்படுவீர்களா?
அப்படியென்றால் சமரசம் நியாயமானதா? என்ன? தொழில்நுட்பத்தைப் பழகவும், தொழில்நுட்பத்தில் ஈடுபடவும் ஆங்கிலம் ஒரு துணையாகியிருப்பதால் “உஷ் ! உஷ்! சத்தம் போடாதே” என்று கிசுகிசுக்கிறீர்களா? ஐயையோ. . அப்ப கதைப்பதை நிறுத்திவிட்டு தகுதி பெற்றதும் வாருங்கள். எப்படியெல்லாம் தமிழைத் தளர்த்தி மாற்றான் மொழியில் மொழிப்பெயர்த்து தள்ளுகிறீர்கள். எத்துனைப் பெரிய முரண்பாடுகளில் இருந்துகொண்டு அறியாமைகளுடன் பேசி வந்துள்ளீர்கள்?

இன்னும் புகார்கள் நிரம்பிக் கொண்டே இருக்கின்றன.

பின்குறிப்பு: இது ஒரு கற்பனை கதை: உயிருடன் வாழும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல.

Tuesday, July 14, 2009

எழுத்தாளர் சண்முகசிவாவுடன் ஒரு கோப்பைத் தேநீர் – 2

அநங்கம் இதழ் குழு சார்பில் இளைஞர்களுக்கான “ஒரு கோப்பைத் தேநீர் இரண்டாம் கலந்துரையாடல் சந்திப்பாக கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் சண்முகசிவா ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு எளிமையான மனிதர். சிறந்த எழுத்தாளரும்கூட. கலந்துரையாடலைப் பற்றி சொன்னதும், உடனே ஆதரவைத் தெரிவித்தவர், “ஒரு கோப்பைத் தேநீர்” எனக்கு பிடித்தமான பெயராக உள்ளது என்றார்.


ஒரு கோப்பைத் தேநீர் என்ற புத்தகத்தை ஓஷோ எழுதியுள்ளார். ஆங்கிலத்தின் (cup of tea) தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட பரவலான வாசிப்புக்குச் சென்ற முக்கியமான புத்தகம். இருத்தலியலின் மகத்துவத்தையும் நுட்பத்தையும் எளிமையான உரையாடலாக அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித உறவுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழலையெல்லாம், உடைத்து எறியக்கூடியது இருத்தலியல் பண்பு. இப்பொழுது நீ இருக்கிறாய் என்பார் ஓஷோ.


ஆதலால், மூத்த எழுத்தாளர்களுடனான இந்தச் சந்திப்பும் கலந்துரையாடலும் பெரியவர் இளையவர் என்கிற வயது வித்தியாசங்களையும் சமூகப் பிம்பங்களையும் தகர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கட்டும் என்றுதான் “ஒரு கோப்பைத் தேநீரை” அவர்களுக்கு மத்தியில் வைத்துள்ளேன். நட்புணர்வுடன் இலக்கியம் பேசுவதில்தான் முறையான பகிர்தல் நடைபெறும். கொள்கை இறுக்கம், கருத்துமுரண்பாடு, அவதூறுகளுக்கு மத்தியில் நடைபெறும் உரையாடலும் பகிர்தலும் தலைகணத்தையும் ஆளுமை ஆக்கிரப்பையும்தான் வெளிப்படுத்தும்.



ஆகையால் நட்போடு ஒரு கோப்பைத் தேநீருடன் பேசலாம் வாங்க.
கலந்துரையாடல் சந்திப்பில் யாருக்கும் பொன்னாடையோ மாலையோ போர்த்தப்படாது. துதி பாடி பிரசங்கமும் நடத்தப்படாது, மிகவும் எளிமையான உரையாடல், சந்திப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒஷோ தன் சீடனுடன் தேநீர் அருந்தி கொண்டே ஒரு கேள்வியைக் கேட்பார்.

“உலகத்திலேயே மிக அதிசயமான நிகழ்வு எது?”


)சீடன் பல உலக நிகழ்வுகளைக் கூறினான்.


“அதெல்லாம் எதுவும் இல்லை, இப்பொழுது நீயும் நானும் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருப்பதுதான் உலகிலேயே அதிசயமான நிகழ்வு”

கலந்துரையாடலின் விவரங்கள்:

திகதி: 19.07.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை மணி 9.00க்கு
இடம்: Petaling Jaya Perpustakaan Konumiti

மேல் விவரங்களுக்கு: கே.பாலமுருகன் (+6016-4806241)

Monday, July 13, 2009

பாகம் 2 - மரபொழுங்குடன் மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளி (மற்றவன் பைத்தியம்) – மறைமலை இலக்குவனர்

நவீன இலக்கியம் குறித்த தனது கல்வியின் தேடலில் கிடைத்த கல்வியறிவுடன் இலக்கியத்தை அணுகிவிடலாம் என்று பேராசியர் பெருந்தகை மறைமலை அவர்கள் தனது நவீனத்துவம் சார்ந்த கருத்துகளை முன்மொழிந்தார். கீழே சந்தை, அறைக்கு வெளியே தண்ணீர் தேங்கிக் கிடக்க, படிகளில் சந்தையின் சாயல், என ஒரு இறுக்கமான சூழலில் இப்படியொரு பாடத்தைக் கறக வேண்டுமா என்று தோன்றியது. இருந்தும் கல்வி சார்ந்தவர்கள், பின்நவீனத்துவம் மற்றும் பல இசங்களை இரசங்களாகவும் பாடமாகவும் கரைத்து குடித்து நவீன இலக்கியவாதிகளின் மீது வாந்தி எடுக்கும் இவர்களைப் போன்றவர்களின் கருத்துகள் எப்படி உள்ளன என்பதையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.

1. “மரபைக் கற்றவன் மட்டுமே தமிழ் படைப்பாளியாக இருக்க முடியும், மரபு தெரியாதவன் எப்படியொரு தமிழ்ப் படைப்பாளியாக இருக்க முடியும்” என்ற முதல் கருத்தை அவர் முன்வைத்தார். இதையே நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் மிகவும் நட்புணர்வுடன் கூறினார், “செவ்வியல் இலக்கியங்களைப் படித்துவிட்டு எழுத வருவது உங்களுக்கு தமிழ் எழுத்தை/படைப்பை மேலும் ஆழமாக விமர்சிக்கவும் படைக்கவும் முடியும்” என்று.

பேராசிரியர் கடுமையாக ஒரு வரையறையாக முன்வைத்த ஒரு கருத்தை எஸ்.ரா மிகவும் எளிமையான தொனியில் நட்புடன் முன்வைத்தார். மரபைக் கற்பது நல்ல விஷயமாகும், நமது பாரம்பரியத்தையும் தொன்ம இலக்கியங்களையும் கற்றுக் கொள்வது, சரித்திரத்தைக் கற்றறிந்து கொள்வதற்கு சமானம். ஆரம்பபள்ளி முதலே “வரலாறு” அல்லது “சரித்திரம்” பாடம் தொடங்கிவிடுகிறதே. ஆனால் மரபைக் கற்றவன் மட்டும்தான் படைக்க முடியும் என்பது மேல்தட்டுக் கல்வியாளர்கள்/விமர்சகர்களின் அழுத்தமான ஒரு கட்டளையாகத் தெரிகிறது. மெத்த படித்தவர்கள், தன் உயர்கல்விக்காக செவ்வியல் இலக்கியங்களோடு மன்றாடிவிட்டு வந்தவர்களெல்லாம் தனது கல்வியறிவை வைத்துக் கொண்டு வாழ்வின் அசல் படைப்பாளியைக் கூறு போட நினைப்பதோ அல்லது வரையறை அளித்து அவனை நிராகரிக்க நினைப்பதோ அபத்தம்.

2. மரபைக் கற்று, மரபோடு தேய்ந்து மரபோடு தொய்ந்து, மரபு ஒழுங்குடன் அளிக்கப்படும் புதிய முயற்சிகள்தான் “மோடர்னிஷம்” என்று அவர் கருத்தை முன் வைத்தார். ஆனால் மரபு கொடுக்கும் இறுக்கமான வடிவங்களைத்தான் உடைத்து எளிமையாக்கி மனிதனோடு நெருங்க வைக்கிறார்கள் நவீன படைப்பாளிகள். பாமரனும் கவிபாட வேண்டும் என்பதற்காகத்தான் புதுகவிதை வடிவம் மரபு வடிவத்திலிருந்து உடைந்து வந்தது. மரபு தவறென்று யாரும் சொல்ல கிடையாது, மரபின் வடிவம்தான், தற்காலத்து சிந்தனை வெளிப்பாடுகளுக்கு சரியான இருப்பைக் கொடுப்பதில் தோல்வி அடைகிறது என்று சொல்லப்பட்டது. அதன் மறு உருவாக்கமே நவீன படைப்புகள்.

பேராசிரியர் சொல்வதைப் பார்த்தால், மணிமேகலை, சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகநாணுறு, புறநாணுறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்கப் பாடல்கள், இப்படியாக எல்லாவற்றையும் நாம் பாடமாக எடுக்க வேண்டும். வாழ்நாளில் பாதி வயதைத் தாராளமாக செலவழித்து இதையெல்லாம் படித்துக் கரைத்து குடித்துவிட்டு வெளியே வரும்போது நாம் படைப்பதற்கோ எழுதுவதற்கோ எதுவும் இல்லாமல், நடைமுறை சார்ந்த எல்லாவற்றிலிருந்தும் பல வருடங்களுக்குப் பின் துண்டிக்கப்பட்ட ஜடமாக வந்து விழ வேண்டியதுதான்.

மரபைக் கற்பதில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. என்னால் முடிந்த மட்டும் அகநாணுறூ / புறநாணுறு பாடல்களை விரும்பி வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரத்தைக் கல்லூரி காலத்தில் பாடமாகப் படித்தேன். நம் மூதாதையர்களின் வாழ்வு அது. அதைக் கற்று தெரிந்துகொண்ட பின் அதை வேண்டாம் என்று நீக்குவதற்கும் நமக்கு உரிமை உண்டு. பேராசிரியர் சொன்னார், “பிடிக்கிறதோ இல்லையோ அது இரண்டாம் பட்சம் ஆனால் மரபைக் கற்பது ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படை தகுதியாகும். அப்படியென்றால் எழுத்தாளனாக ஆக வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் சமூகத்தில் வாழ்ந்து நடைமுறையின் அக புற கட்டமைப்புகளை உள்வாங்கிக் கொண்டு எழுத வேண்டியதில்லை, மணிமேகலையைப் படித்து அதை தாளம் தப்பாமல் ஒப்புவிக்க தெரிந்தாலே போதும், எழுத்தாளராகிவிடலாம். ஆஹா நல்ல பள்ளிப் படிப்பு.

-தொடரும்- மூன்றாம் பாகம்

கே.பாலமுருகன்
மலேசியா