தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியால் உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில் இந்த வாரத்தின் நட்சத்திரமாக தமிழ்மணம் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில சர்ச்சையில் சிக்கிக் கொண்ட பிறகே என் வலைப்பூ பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதால் நன்மையும் இருக்கிறது போல.
http://www.tamilmanam.net/index.html
http://www.tamilmanam.net/index.html
படைப்பிலக்கியம் – நவீனத்துவம் – மதிப்பீடுகள் எனும் தலைப்பில் என் வலைப்பூ “கே.பாலமுருகன்” இயங்கிக் கொண்டிருக்கிறது. என் படைப்புகள் குறித்த எனது பார்வை, மதிப்பீடுகள், கட்டுரைகள், அனுபவ பகிர்வுகள், எதிர்வினை கட்டுரைகள், வம்புச் சண்டை என இந்த வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் அறிமுகம் மூலம் வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவரைப் பற்றியும் புதிதாக பலரும் அறிந்துகொள்ள, அதன் மூலம் தகுந்த ஊக்கம் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. தற்கால சூழலில் இணையத்தளமும், இணையத்தள வாசிப்பும், வலைப்பதிவாளர்களின் பங்களிப்பும் அதீதமான அளவில் வளர்ச்சிப் பெற்று வருகின்றன.
உண்மை மிக கசப்பானது. உண்மையை விட்டு எவரும் ஓடவும் முடியாது என்று நம்புகிறவன் என்பதால், இந்தப் புரிதல் அன்மையில் ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கக்கூடும். சில சமயங்களில் உண்மையைப் பூடகமாகவோ படைப்பாகவோ சொல்ல நேர்ந்துவிடுவதால், அந்த உண்மையைவிட்டு பலர் தப்பிக்க நினைக்கிறார்கள். பொய்யான பிம்பங்களுடன் உண்மைக்கு எதிராக வசைப்பாடுகிறார்கள், எல்லாம் நித்யம் என்கிற மாயையில், மொழி சார்ந்து மட்டும் இறுக்கமான தர்க்கங்களுடன், அரசியல் நெருக்கடி, வாழ்வின் பயங்கர பக்கங்களை, வாழ்வனுபவனுவத்தின் நிதர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு பரிபூரண கதாநாயகன் போல வலம் வர துடிக்கும் முயற்சிகளுடன் முன்னெடுக்கும் சிலரின் மனோபாவங்களுக்கு எதிரானதுதான் என் எழுத்து.
எனது பலவீனங்களை ஒப்புக் கொள்பவன் நான், ஆனால் என் பலவீனங்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் எனக்கு எதிரானவர்கள். தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பேசியவர்தான் என்னை உடல் வலிமையற்றவன் என்று எனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து கேலி செய்தவர். மனிதனாக வாழ முடியாதவனுக்கு மொழி எதற்கு? மொழியின் நாகரிகம் எதற்கு? உண்மையை மறைத்துவிட்டு ஏதும் நடக்காததைப் போல உயர்ந்த இலக்கை வகுத்துக் கொண்டு என்ன இலக்கியம் படைக்கப் போகிறோம்? இலக்கியம் வாழ்வின் கசப்புகளையும், வலியையும், கொண்டாட்டங்களையும், மனித நுகர்வையும், வாழ்பனுபவங்களையும், முன்னோர்களின் பதிவுகளையும், அடிமைப்பட்ட கணங்களையும், நம் வாழ்வின் தரங்களைத் தாழ்த்திய அதிகாரங்களையும் சொல்வதாக, உண்மையுடன் சொலவதாக இருக்க வேண்டும். சொகுசான ஒரு நண்ணெறிப் பண்பை வகுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதல்ல இலக்கியம். (ஓவ்வொரு படைப்பிற்குப் பின்னனியிலும் வாழ்விற்குத் தேவையான பலவித கூறுகளும், உண்மைகளாக அதன் அடுக்குகளில் புதைந்திருக்கும். வாழ்வும் அப்படித்தான் வாழ்ந்து கழிகிறது, அதைத் தேடி கண்டடையும் அனுபவம் வாசகனைச் சார்ந்தது, எல்லாவற்றையும் பிரச்சாரம் செய்து வாழ்வை விற்பனை செய்ய அது என்ன நாடகமா?)
இன்று நாட்டிற்கு நாடு இலக்கியம் வேறுபடுவது எதனால்? ஈழத்து இலக்கியம் போல தமிழ்நாட்டு இலக்கியம் காத்திரம் கொண்டிருக்கவில்லையே ஏன்? லத்தீன் அமெரிக்க இலக்கியம் போல அமெரிக்க இலக்கியம் காத்திரம் கொள்ளவில்லையே எதனால்? ஆப்ரிக்கா பூர்வக்குடியின் காலனித்துவ வாழ்வு அடிமட்ட அடிமைத்தனத்தில் புரண்டி கசிந்ததே, அதை எந்த உயர்ந்த இலக்குடன் சொல்லப் போகிறோம்? ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்ற நீதி கதையுடனா? உண்மை சுடும். அதிலிருந்து தப்பிக்க, இலக்கியம் என்றால் இலக்கு இருக்க வேண்டும், நோக்கம் இருக்க வேண்டும், இலக்கணம் இருக்க வேண்டும், தொடக்கம் முடிவு என்று பாடம் கற்பித்துக் கொள்ளத் துவங்குகிறார்கள். அவர்களின் தப்பித்தல் இங்கிருந்து துவங்குகிறது.
ஆகையால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் வாழ்பனுவம் வெவ்வேறு பின்னனியால், வெவ்வேறு வாழ்க்கை தரத்தால், வெவ்வேறு அதிகார நெருக்குதலால் மாறுப்பட்டு அதன் தளத்தில் அதன் உக்கிரத்தில், அதன் நிலைத்தன்மையுடன் தனது எல்லையை நுட்பத்துடன் ஒரு கதைச் சொல்லியாக விரித்துக் கொள்கிறது. இலக்கியம் அந்த வாழ்வின் நிசங்களை, யதார்த்தங்களை, உண்மையைச் சொல்லும் களமாகவே உலக நாடுகளில், ஈழத்து மண்ணில், புலம் பெயர் நாட்டின் நிலப்பரப்பில் பாவிக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் வெறும் புனைவு என்று பிறருக்குப் புத்திச் சொல்லி திரிவதல்ல இலக்கியம்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கம்: படைப்பு என்பது ஆமையின் குஞ்சுகள் போல, ஆமை முட்டையிட்டு, மணலில் தோண்டி முட்டைகளைப் புதைத்துவிட்டு வந்துவிடும். முட்டைகள் சொந்தமாகப் பொறிந்து, அதன் நுகர்வுத்தன்மைக்கேற்ப, கடலின் நெடியை உள்வாங்கிக் கொண்டு சுயமாகக் கடலை வந்து சேரும். அது போல் என் படைப்பு அதற்கான களத்தை சேர்ந்துவிடும், என் நுகர்வைக் கொண்டிருப்போர், என் படைப்பை வந்து அடைக்கிறார்கள்.
சுந்தர ராமசாமி: என் படைப்பு ஒரு சாவி. எல்லாம் பூட்டுகளையும் திறக்க முடியாவிட்டாலும், என் சாவி சில பூட்டுகளைத் திறந்துவிடும்போது, என் வாசகர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.
பொது நுகர்விற்காகவும், பிறர் விருப்பத்திற்கும் இலக்கியம் படைக்க துவங்கினால், அது போல ஒரு வியாபாரம் கிடையாது என்றே சொல்லலாம். அதற்குப் பதில் சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம். நீ வகுக்கும் இலக்கிற்காக என்னால் வாழ முடியாது, அப்படியிருக்க நீ நினைப்பது போல பிறர் இலக்கியம் படைக்க, இலக்கியம் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா? அல்லது இலக்கிய உரிமையை நீ வாங்கி விட்டாயா? படைப்புலகம் எழுத்துக்கு எழுத்து எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் மாறுப்படும். மற்றுமொரு மாற்றுச் சிந்தனையுடன் இலக்கியத்தை அணுகும் ஒரு உலகலாவிய சூழல் இருக்க, இன்னும் பழமைப்பேசிகள் போல நம் இலக்கியத்தை பின்னுக்கு இழுக்கும் உத்திகளுக்குப் பலர் தயாராகவே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நொடியும் வாசிப்பாலும் தெளிவாலும் நம்மை நாம் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. பழமை பேசிகளுக்கு வேண்டுமானால் அவர்கள் அறிவாளியாகவும், அவர்களின் உன்னத வடிவத்தை ஏற்காதவன் முட்டாளாகவும் தெரியக்கூடும். உண்மையை விட்டு நெடுந்தூரம் ஒரு கானல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் அந்த ஆன்மாக்களுக்காக வருந்துவதைத் தவிர கொஞ்சம் விவாதமும் செய்து பார்க்கலாம். ஆனால் அதிலேயே நமது சக்திகளை விரையமாக்குவது வீண் என நினைக்கிறேன். Ignore and go. அவர்களை நிராகரித்துவிட்டு நமது புரிதலுடன் பயணிப்பதுதான் சாமர்த்தியம் என நண்பர் ஒருவர் கூறினார். உண்மை.
மீண்டும் வருவேன்
கே.பாலமுருகன்





