Wednesday, December 8, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை -2 Karuna (தமிழில் கே.பாலமுருகன்)

உன்னைப்போல உருவெடுத்த
இந்தப் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்
ஓர் அமைதியான இரவில்
நான் மாறியிருந்தேன்.

இல்லாமலிருக்கும் நிலையிலேயே
நம் இல்லாமல் போகும் நாட்களை நோக்கி
தவம் கிடக்கிறேன்.
உன் வருகையைப் போல
உன் விடைப்பெறுதலும்
அதிசயமாக நிகழ்கிறது எனக்குள்.

எரிந்துவிட்ட உன் புகைப்படத்தின்
சாம்பல்களில்
உன் பொய்யான முகமும்
நான் எதிர்பார்க்கும் ஒரு செய்தியும்
ஒட்டிக்கிடக்கின்றன.

காலம் நகர்த்த முடியாத
ஒரு கெட்டியான இருளில்
கருகி விழுகின்றன
என் சிறகுகளும்
இந்தப் பட்டாம்பூச்சியும்.
இதுவும் ஒரு அதிசயம் போல.

மலாயில்: Karuna
தமிழில்: கே.பாலமுருகன்

Monday, December 6, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை: H.Hisham (தமிழில்: கே.பாலமுருகன்)

தெரியப்படுத்துங்கள் எல்லோரிடமும்
நான் ஓர் அடிமையென
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வருவது போல
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சென்றும் விடுகிறேன்
நான் அழைக்கப்படவும் இல்லை
சென்றபோது தடுக்கப்படவுமில்லை
எனக்கு அளிக்கப்பட்ட வாழ்வுடன்
என் அடிமைப்பாதையைத் தேடி நகர்வதற்கு
விடப்பட்டேன்.

என் அன்பை
அனைவரிடமும் தெரியப்படுத்துங்கள்
என் வேண்டுதல்களும் என் ஞாபகங்களும்
நாம் கைக்குலுக்கிக்கொண்ட குறிப்புகளும்
நாம் சகோதரர்களாக இருந்த தருணங்களும்
இவையனைத்தும் தங்கிச் செல்லும் நினைவுகளாக
தேவையும் பயணமும் வெவ்வேறாக இருந்தபோதும்
இன்றைய பயனத்தில் தொடர்கிறது.

நாம் எதிர்பார்த்திராத ஒரு நாளில்
மீண்டும் சகோதரர்களாக ஒரே பயணத்தில்
சந்தித்துக் கொள்வோம்.
நம் வேட்கையும் நம் போராட்டமும்
நம் தேடலும் நம் இலட்சியமும்
ஒன்றுசேர நம் இலக்கை
உறுதிப்படுத்தி பயணத்தின்
எல்லையை வந்தடையும்.

Thursday, December 2, 2010

கேலி சித்திரங்களும் கல்வி உலகமும்: கார்ட்டூனிஸ்ட் காஷிம்

2006 ஆம் ஆண்டு சிறந்த கார்ட்டூனிஸ்டாகத் தேர்வாகி, 1998 ஆம் ஆண்டு சிறந்த தேசிய தினத்திற்கான சின்னம் வரைந்ததற்கான விருதும் கிடைத்த காஷிம், 1970இல் பேரா மாநிலத்திலுள்ள தாப்பா எனும் இடத்தில் பிறந்தவர் ஆகும். நாட்டிலுள்ள பல இதழ்களிலும் பத்திரிக்கைகளிலும் கார்ட்டூன் வரைபவராகப் பணியாற்றி ஆழமான அனுபவம் திறமையும் உடையவர் இவர்.

உத்துசான் மெலாயு எனும் மலாய்ப் பத்திரிக்கையின் கல்வி பிரிவில் கார்ட்டூனிஸ்டாகப் பணிப்புரிந்து வரும் இவர், தனது “usik usik” எனும் வாசகத்தின் மூலம் உத்துசான் நாளிதழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். கல்வியும் பள்ளிச்சூழல் சார்ந்தும் வேடிக்கையான கார்ட்டூன்கள் வரைந்து கடுமையான பிரச்சனைகளைக்கூட நகைச்சுவையாக்கி சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தவர்.

கல்வி அமைச்சு புதியதாக அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எப்படி ஆசிரியர்களையும் கற்றல் சூழலையும் பாதிக்கிறது என்பதன் இன்னொரு பகுதியைத் துணிச்சலாகத் தன் கேலி சித்திரங்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். குறிப்பாக அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்க வேண்டும் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு எப்படி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் பெரும் தடுமாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அதிகமாகத் தன் சித்திரங்களில் மூலம் விமர்சனம் செய்திருக்கிறார். (அவர் குறிப்பிட்ட மொழி தடுமாற்றம் நம் சமூகத்து கல்வியாளர்களின் ஒருவகையான போதமை எனவே குறிப்பிடலாம்)

தமிழில் ஓவியர் சந்துருவின் சித்திரங்கள் முக்கியமானவையாகும். கோடுகளின் வழியாகவே கோட்டோவியங்களைப் படைத்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ஒரு சிறுகதையின்/கவிதையின் ஆழ்மனதைத் தொடக்கூடிய சாத்தியப்பாடுகளை தன் ஓவியங்களின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் சந்துரு. சித்திரங்களில் ஒரு நகைச்சுவை பாங்கை இடைப்பகுதியாகக் கொடுத்து மையப்பிரச்சனையையும் தொட்டுவிடச் செய்தார். குறிப்பாக செம்மொழி மாநாடு குறித்தான கார்ட்டூன்கள் இரசிக்க வைத்தன. கார்ட்டூனிஸ்ட் என்பவர்கள் வெறும் நகைச்சுவை சித்திரங்களை வரைந்துகொண்டு ஊடகத்தோடு தன்னைச் சுருக்கிக் கொண்டவர்கள் அல்லர் என்பதை காஷிம் சந்துரு போன்றவர்களின் துணிச்சலான செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு சொல்ல முடிகிறது. சமூக நிகழ்வுகளின் மீதான தனது பரிச்சியத்தை வளர்த்துக்கொண்டு அதனைச் சார்ந்த புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து தன் ஓவியத்தின் நகைச்சுவைக்குள் தனது கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத் தெரிந்த ஆற்றலுடையவர்கள் சமீபத்திய ஓவியவர்கள்.

கீழ்க்காணும் காஷிம் அவர்களின் கார்ட்டூன் ஓவியங்களை மாதிரிக்காக அளித்துள்ளேன். இதுவரைக்கும் 1000க்கும் மேற்பட்ட கேளிக்கை சித்திரங்களை வரைந்துள்ளார்.

படம் 1:
சோதனையை முன்வைத்து இங்கு உருவாகியிருக்கும் போராட்டம் என்கிற உணர்வை வெளிப்படுத்துவதாக இந்தக் கேலி சித்திரம் அமைந்துள்ளது. சோதனையை எழுதுவதற்கு மண்டபத்தினுள் செல்லும் மாணவர்களைப் பார்த்து, “சிறப்பாகப் போராடுங்கள்” என ஆசிரியர் சொல்வது போல சோதனை மாணவர்களுக்குப் பெரும் சோதனைக் கொடுக்கக்கூடியதாகவே முன்வைக்கப்படுவதை காஷிம் இதில் வரையறுக்கிறார். சோதனையாலும் சோதனைகளின் முடிவாலும் மாணவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சியும் பிடுங்கப்பட்டு, அவர்களின் உளவியல் பெரும் மாற்றத்திற்குள்ளாகுவதைத்தான் இங்கு நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. 

படம் 2:
முதலாம் ஆண்டிற்குப் பல கற்பனைகளுடன் நுழையும் மாணவர்களின் எண்ணங்கள் பிறகொரு சமயத்தில் அவர்களின் மீது சுமத்தப்படும் பலவகையிலான சுமையால் சிதைந்து போவதை இந்தச் சித்திரத்தின் வழி விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார் ஓவியர். முதலில் இந்தச் சுமையின் வடிவம் புத்தகப்பையின் மூலமாகவே அவர்களுக்குள் ஆழ்ந்து படிகிறது. அவர்களின் உயரத்திற்கும் உடல் அளவிற்கும் சற்றும் பொருந்தாத பெரிய புத்தகப்பையை முதுகில் சுமந்துகொண்டு சிரமப்பட்டுப் பள்ளிக்கு வந்து சேர்வதைப் பார்த்த என் அனுபவத்தைத் தொடக்கூடியதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது.

படம் 3:
முன்பொரு சமயத்தில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்ட கணினி கட்டிடங்கள் சரிவு சார்ந்த தன் விமர்சனத்தையும் கேலியையும் இந்தச் சித்திரத்தின் மூலம் மீட்டுக்கொண்டு வருகிறார் காஷிம். மாணவர்கள் எல்லோரும் தலையில் பாதுகாப்பு தொப்பியை அணிந்துகொண்டு கணினி வகுப்பிற்குள் நுழைகிறார்கள். ஆசிரியர் ‘கணினி கூடம் தயாராகிவிட்டது, கணினிகளும் கிடைத்துவிட்டன், பிறகேன் தொப்பி அணிந்துள்ளீர்கள்?”எனக் கேட்க, அதற்கு மாணவர்கள் வேடிக்கையாக, “ இடிந்துவிழும் கிருமியிலிருந்து எங்களைத் தற்காத்துக்கொள்ள’ எனப் பதிலளிக்கிறார்கள்.
இப்படி மேலும் கல்வி உலகில் நிகழும் பல சர்ச்சைகள்/பிரச்சனைகள்/ குறைபாடுகள் என அனைத்தையும் தொட்டுப் பேசக்கூடிய கேலி சித்திரங்களை ஓவியர் காஷிம் தொடர்ந்து படைத்துக் கொண்டு வருவது ஆரோக்கியமான விசயமாகும்.

குறிப்பு: மேற்கண்ட காஷிம் அவர்களின் கேலி சித்திரங்கள் ஏற்கனவே வெவ்வேறு காலக்கட்டங்களில் உத்துசான் நாளிதழில் பிரசுரமானவையாகும். கூடிய விரைவில் கார்ட்டூனிஸ்ட் காஷிம் அவர்களை வல்லின இணைய இதழுக்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில்.

நன்றி: உத்துசான் நாளிதழ்
ஓவியர் காஷிம்
கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, November 30, 2010

டிசம்பர் வல்லினம் இணைய இதழில்- என் படைப்புகள்

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்படப் போட்டி 2010 தேர்வான பத்து மலேசிய குறும்படங்களின் விமர்சனம்
"பெருங்கதையாடல் நிகழ்த்த வேண்டிய அத்துனை சந்தர்ப்பங்களையும் சாமர்த்தியங்களையும் தருணங்களையும் குறைந்த நிமிடங்களிலேயே குறும்படம் மூலம் நிகழ்த்த வேண்டிய சவால் குறும்பட இயக்குனர்களுக்கு உண்டு."



சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும் (மார்கரேட் செல்லதுறையின் சிறுகதை விமர்சனம்)
"அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள்."


மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியருக்கு ஒரு கடிதம்
"மலேசியப் பத்திரிக்கைகளுக்கு எழுதக்கூடாது என்கிற என்னுடைய கடந்த வருடத் தீர்மானத்தை, ஒருநாளில் பொய்யாக்கிவிட்டீர்களே என நினைக்கும்போது, உங்களுடைய பின்நவீனத்துவக் குழாயில் சிக்கிக் கொண்ட என் மலர்கொடியை ஏக்கமாக மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது."
கே. பாலமுருகன்

Saturday, November 27, 2010

சிறுகதை: தனசேகர் தாத்தா மற்றும் அவரின் 3 வகையான தொல்லையும்

தனசேகர் தாத்தாவிற்கு மாதம் மாதம் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதால், அவருக்கென்ன கவலை. காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டு வீட்டுக்கு வெளியில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்துகொள்வார். நாள் முழுக்க அந்த நாற்காலி அவருக்கு மிகவும் வசதியாக இருந்துவிடுகிறது. மதியத்தில் சோறும் மாலையில் ஒரு குவளை காப்பியும் அவர் இருக்கும் இடத்திற்கே தேடி வந்துவிடும். அவருக்கு முன் விரிந்து வளரும் பகலின் ஒவ்வொரு கணத்தையும் அசைபோட்டே களைத்துவிடும் பொழுதுகள்.

“குமாரு. . என்ன வேலைக்கா?”

குமார். பக்கத்து வீட்டு வாலிபன். அடிக்கடி தனசேகர் தாத்தாவிற்கு அடிமையாகிவிடும் ரொம்ப நல்ல பையன். தொடக்கத்தில் அவருடன் வேடிக்கையாகக் கழிந்த தருணங்கள் மெல்ல மெல்ல துன்புறுத்தலாக மாறிவிட்டது. எப்படியாவது தனசேகர் தாத்தாவின் வாயில் விழாமல் ஓடிவிடுவதே அவனுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது.

“இல்லெ. . சுத்தி பாக்க”

“சுத்தி பாக்கெ எதுக்குடா டைலாம் கட்டி அழகா உடுத்திக்கிட்டு வெளியில போற? வீட்டுலெ இருந்துகிட்டெ சுத்தி பாரேன் படவா”

“உங்ககிட்ட மனுசன் பேச முடியுமா?”

“அப்பெ நீ என்ன நாயா? டேய் ஆளை ஏய்க்காதெ”

குமாருக்குக் காலையிலேயே கண் கலங்கிவிடும். அவரிடம் கோபப்பட்டாலும் அவனுக்கு எந்த நன்மையும் இல்லை. யாருடைய கோபத்தையும் அவர் மிகத் தந்திரமாக அலட்சியப்படுத்திவிடுவார். படியில் இறங்கி ஓடிவிட முயற்சித்தான் குமார்.

Wednesday, November 24, 2010

சந்திப்புக் கூட்டம்: கெடா மாநில தமிழ் ஆசிரியர்களும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும்

நேற்று சிங்கப்பூரிலுள்ள உமருபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர் குழுவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. 3 மணி நேரச் சந்திப்பில் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆண்டியப்பன் உரையாற்றினார். பிறகு கெடா மாநில கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் திரு.தமிழ்செல்வன் உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு படைப்பாளனுக்குப் பின்னனியிலும் ஓர் ஆசிரியர் கட்டாயம் இருப்பார் எனவும் அவருடைய பாதிப்பு ஏதாவது ஒருவகையில் அவனை ஆட்கொண்டிருக்கும் எனவும் ஆசிரியரின் முக்கியத்துவத்தைக் கூறினார்.

தொடர்ந்து, கூலிம் பண்டார்பாரு மாவட்டத்தில் ஆசிரியரராகப் பணியாற்றும் திருமதி.உதயகுமாரி அவர்கள் கெடா மாநிலத்தின் தமிழாசிரியர்களின் இலக்கியப் பணி எனும் தலைப்பில் கட்டுரையைப் படைத்தார். அதற்குப் பிறகு எனக்கும் பேசுவதற்கு வாய்ப்பளித்துவிட்டார்கள். அது ஒரு விபத்து போல சில உண்மைகளைப் பேசுவதற்குக் காரணமாகிவிட்டது. அந்தச் சந்திப்புக்கூட்டத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கம் சார்பாக 3 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். கெடா மாநில ஆசிரியர்கள் 40க்கும் மேற்பட்டோர். இதைச் சந்திப்புக்கூட்டம் எனச் சொல்வதற்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்ததால் தவறுதலாக அதை மேடையில் அப்படியே சொல்லிவிட்டேன்.

கெடா மாநிலத்திலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் சிங்கப்பூரில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களையும் உரையாடச் செய்வதன் மூலம் ஒரு பயனுள்ள களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அதைச் செய்யத் தவறியதற்கு 25 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு எழுத்தாளர் சங்கம் கொடுக்கும் காரணங்கள் என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. இந்த முக்கியமான நிகழ்வுக்காகச் சிரமம்பாராமல் வருவதற்குக் கட்டாயம் அங்குள்ள எழுத்தாளர்கள் தயாராகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். குறிப்பாக நான் அறிந்த வரையில் இப்பொழுது மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் ஷானவாஷ், ஜெயந்தி சங்கர், மூத்த எழுத்தாளர் கண்ணபிரான் போன்றவர்களுக்கு இந்த நிகழ்வு குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை என்பதை நேரடியாகக் கேட்டறிந்தேன். அதை இங்குக் குறிப்பிடவும் கடமைப்பட்டுள்ளேன்.

ஆகையால் அடுத்தமுறை இம்மாதிரியான சந்திப்பின்போது கூடுதலான சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் திரட்டுவதற்கான சக்தியாகச் சங்கம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து 3 வருடத்திற்கும் மேலாகச் சிங்கப்பூர் எழுத்தாளர்களுடன் நட்புடன் பழகுவதன் மூலம் அங்குள்ள சில கட்டுப்பாடுகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து அவதானித்து வருகிறேன். யாரிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டும் என்கிற சமயோசிதம் இருக்கப்பெறுவது ஒரு படைப்பாளனுக்கு மிக அவசியம்.

அதனைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு எதைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற திட்டம் முறையாகச் செய்யப்படாததைப் போல தோன்றியது. ஆகையால் என்னுடைய உரையில் சிங்கப்பூரில் வாசிப்பு சார்ந்து நடத்தப்படும் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ எனும் நிகழ்வைப் பற்றியும் அங்குள்ள நூலகத்தின் சிறப்பு பற்றியும் கூறினேன். வாசிப்பின் மூலம் தன் நாட்டு மக்களை மேம்படுத்த வேண்டும் என்கிற அக்கறையை இங்குள்ள 22 நூலகங்களும் வெளிப்படுத்துகின்றன. கவனிக்கத்தக்க ஒரு முயற்சி ஆகும். ஆயிரம் குழுமங்கள் நூலகம் சார்ந்து உருவாகிவிட்டதாகக் கருத்துரைக்கப்பட்டாலும், நூலகம் என்பது பொதுவான ஓர் இடம். அதனை முழுமையாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உண்டு.

இனி இது போன்ற சந்திப்புகளை நடத்த நேர்ந்தால், மேற்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் தவிர்க்கப்படும் என்கிற நம்பிக்கையை அங்கு வந்த தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். நல்லது.

கே.பாலமுருகன்
மலேசியா

Sunday, November 21, 2010

சிங்கப்பூரில் முதல் நாள்

இரவுவரை மின்சார இரயிலின் இரைச்சலிலேயே இன்றைய முதல் நாள் கடந்து சென்றது. அர்ஜுனைட் என்கிற இடத்தில் சொந்தமாக உணவு கடை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்தி வரும் எழுத்தாளர் ஷானவாஸ் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. இரண்டு மணி நேரம் அவர் கடையிலேயே இருந்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஷானவாஸ் அவர்களின் பத்தி தொடர்ந்து உயிரோசை இணைய இதழில் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. 34 வாரங்களையும் கடந்து உற்சாகமாக அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மலேசியாவில் மஹாத்மன் அவர்களின் அனுபவத் தளம் வித்தியாசமானது என்றால் சிங்கப்பூரில் ஷானவாஸ் அவர்களின் அனுபவம் அத்தகைய வித்தியாசத்தையே கொண்டிருக்கிறது. உணவும் அதன் சார்ந்தும் வாழ்வையும் தனது கட்டுரைகளில் சொல்லக்கூடிய மொழியையும் அனுபவத்தையும் அவர் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் அவரது அந்தப் பத்திகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வரவிருக்கிறது.

அந்த நூல் புதிய தளத்தைப் பற்றி பேசக்கூடிய முக்கியமான நூலாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஷானவாஸ் அவர்களுடன் தொடர்ந்து பல சமயங்களில் தொலைப்பேசியில் உரையாடியிருக்கிறேன். சிங்கப்பூர் சென்றிருந்த சமயங்களில் சில வேளைகளில் குறைவான அளவில் நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன். இன்று ஓரளவிற்கு அவருடன் நெருங்கி உரையாட வாய்ப்புக் கிடைத்தது. 20 வருடத்திற்கும் மேலாக இந்த உணவகத் தொழிலில் பற்பல மனிதர்களையும் சவால்களையும் வித்தியாசமான அனுபவங்களையும் சந்தித்த அவருடன் பேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

பிறகு மாலையில் ஒரு இசைத்தட்டு வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். பாண்டித்துரையின் நண்பர் ஒருவரின் சொந்த உழைப்பில் தெம்மாங்கு பாடல்களில் ஒலிவடிவத்தின் வெளியீட்டு நிகழ்வு. பாடல்களில் ஒலித்த அவரது குரலில் எப்பொழுதோ கேட்ட கானா பாடல்களின் எதிரொலி கேட்டது. தெம்மாங்கு பாட்டிற்கும் அதன் இசைக்கும் மத்தியில் எப்பொழுதும் ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக அந்த இசையிலிருந்து வெளியே வந்து விழக்கூடிய கிராமியச் சாயலைக் கொண்டிருக்கும் குரல் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. ஒரு பாடல் மட்டுமே கேட்டேன். அவரது குரல் வலம் பாராட்டுதலுக்குரியது.

மீண்டும் மாலையில்  நானும் பாண்டித்துரையும் பழைய பொருள்களை குறைந்த விலையில் விற்கும் தெருவோர சந்தைக்குச் சென்றிருந்தோம். நாலாப்பக்கம் பிரிந்து மிக நீளமாகச் செல்லக்கூடிய ஒரு சந்தை அது. ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாமும் முன்பொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பொருள்கள். 1980களில் சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் முதல் அதற்கு முந்தைய காலத்திலும் உபயோகிக்கப்பட்ட பொருள்களும் விற்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் மூர்ச்சையாகிவிடும் அளவிற்கு கூட்ட நெரிசல். பெரும்பாலும் அயல் நாட்டுக்காரர்கள். அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அடர்ந்த கூட்டம்.

இரவு வீடு திரும்பியதும் பாண்டித்துரையும் நானும் லதாமகன் எழுதிய ஒரு கவிதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வெகுநாட்களுக்குப் பிறகு மனதிற்குப் பிடித்தமான ஒரு கவிதையை வாசித்தது போல இருந்தது. இராம கண்ணபிரான் எழுதிய ‘ நவீனவாதம் ஓர் அறிமுகம்’ கட்டுரையை வாசித்தேன். நாளை அவரைச் சந்தித்து சில விசயங்கள் குறித்துப் பேசவிருக்கிறேன்.

தொடரும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

 

சிங்கப்பூர் பயணம்

இன்று மதியம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். நண்பர் பாண்டித்துரை அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். மூன்று நாள் இங்குள்ள இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதாகத் திட்டம்.

ஒரு சில நண்பர்களைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை. மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புக் கொள்ளலாம். bala_barathi@hotmail.com

23 ஆம் திகதி கடாரத்திலிருந்து ஆசிரியர் குழு ஒன்று சிங்கப்பூருக்கு வருகிறார்கள். தலைமை ஆசிரியர் தேவராஜன் அவர்களின் தலைமையில் கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் அவர்களும் இந்தக் குழுவில் இணைந்து இங்கு வருகிறார். அவர்கள் அனைவரையும் 23ஆம் திகதி உமர் புழவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.30க்கு சந்திக்கின்றேன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடாரத்திலிருந்து வரும் தமிழாசிரியர்கள் குழு சிஙக்ப்பூர் எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்வு அங்கு நடைப்பெறுகிறது.

மேலும் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர்கள் சிலரைச் சந்தித்து கேள்வி பதில் அங்கத்தையும் உரையாடலையும் நிகழ்த்தவும் திட்டமுண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா.

Friday, November 19, 2010

பென்சிலும் அழிப்பானும்- ஒரு வரலாறும் முரணான நமது வன்முறையும்

முதல் புரிதல்: பென்சில் ஆக்கங்கள் உருவாவதற்கான குறியீடு என்றால் அழிப்பான் சுய ஒழிப்புக்குரிய குறியீடாகும். இவை இரண்டும் ஒன்றை ஒன்று மிக நெருக்கமாகச் சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஆக்கங்களுக்குப் பிண்ணனியில் எத்தனையோ சுய ஒழிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகப் பென்சிலும் அழிப்பானும் அதனுடைய செயல்பாடுகள் சார்ந்து தன்னை இருத்திக் கொண்டிருப்பது ஒருவகையான ஆச்சர்யம் என எல்லோரும் நினைக்கக்கூடும்.

அழிப்பான் இல்லாத பென்சிலின் உழைப்பில் சில தடுமாற்றங்களும் கோளாறுகளும் பிழைகளும் திருத்தப்படாத விடப்பட்ட பகுதிகளும் நிறைந்து அந்தப் படைப்பை அரைகுறையானதாக மாற்றிவிடும் சாத்தியம் உண்டு. பென்சிலின் இருப்பிற்கு மிகச் சிறந்த அர்த்தத்தை ஏற்படுத்துவது அழிப்பான். பென்சிலின் ஒவ்வொரு பிழைகளையும் அழிப்பான் உடனுக்குடன் சரி செய்து அதனை நேர்த்தியாக்கி அழகு சேர்க்கிறது.

கவிதை: துறவு

1
எனக்கு முன்
மௌனத்திருந்த காலம்
முதன் முதலாய்
நீண்டகால இருப்பை
தொலைத்துக் கொண்டிருந்தது.

2
சன்னலுக்கு வெளியே
நான் காத்திருந்த ஒரு காலம்
எங்கேயோ சென்றுவிட்டிருந்தது.

3
தனது பருவத்தை
முடித்துக்கொண்ட
காலம்
வெறுமையுற்று
திரும்புதலுக்காக அலைந்து திரிந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா