Friday, July 27, 2012

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்

கதை, கவிதை, கட்டுரைகள் என ஆயிரம் ஆயிரமாக எழுதித் தள்ளிய பிறகும் ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வாலைப் பிடித்துக்கொண்டு அவனைக் கொண்டாடித் திரிவதுதான் இலக்கியத்தின் மூலம் ஒருவன் ஆகக் கடைசியாகக் கற்றுக்கொள்ளும் பாடமா? அப்படியானால் வாலைப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதியின் நிலைப்பாடுத்தான் என்ன? ஒரு பிம்பத்தின் மீது மிகையான பற்று வைத்துக்கொண்டு அவனுக்காகச் சேவையாற்றுவது, பிரச்சாரம் செய்வது, அவனுக்காக விவாதிப்பது, எல்லாவற்றுக்கும் அவனை மட்டுமே பரிந்துரைப்பது என ஒரு தனி மனிதனின் அத்துனைச் சக்தியும் அறிவும் சுரண்டப்பட்டு எவனோ ஒருவனின் காலடியில் அடமானம் வைக்கப்படுகின்றன. இதைப் பலவேளைகளில் நான் உணர்ந்து அதிலிருந்து மீண்டிருக்கின்றேன்.

Saturday, July 14, 2012

பில்லா 2 – அறத்திற்கு வெளியே



அஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளத்தைத் தேடிக்கொண்ட நடிகர் அஜித். சினிமா துறையில் எந்தச் சிபாரிசும் இன்றி பின்னணியும் இன்றி கதாநாயகத்துவத்தை உருவாக்கிக்கொண்டவர். பில்லா படமும் அவருடைய கதாநாயகத்துவத்தை வழிப்படும் ஒரு படைப்புத்தான். கமல் எப்படித் தன் ஆற்றலை, தன் அறிவை தானே கொண்டாடிக்கொள்ள படம் எடுப்பாரோ அதே போல பில்லாவும் அஜித்தின் பிம்பத்தை உயர்த்திக் காட்டப்படும் தருணங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பில்லா படத்தின் நேர்மை மிக முக்கியமான விவாதிக்க வேண்டிய விசயமாகும். எந்த இடத்திலும் ‘பில்லா’ தான் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ நியாயப்படுத்தவில்லை.

Thursday, July 12, 2012

சிறுகதை: வீட்டைத் தொலைத்தவர்கள்


நான் மணியத்தின் மகன் சிவா

அப்பா பெயர் மணியம். அப்படிச் சொன்னால் சிலருக்கு மட்டுமே தெரியும். வழக்கமாக அவரைக் ‘கட்டை மணியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். வழியில் சந்தித்தத் தெரிந்தவர்களிடம் ‘கட்ட மணியத்தெ பாத்தீங்களா?” எனக் கேட்டேன். தெரியாதவர்களிடம், “ தலை சொட்டெ, இலேசா கூன் வலைஞ்சிருக்கும், கட்டையா இருப்பாரு... சொந்தமா பேசிக்கிட்டு இருப்பாரு..அவரெ எங்காவது பாத்தீங்களா?” எனக் கேட்டேன். அங்கு யாரும் யாரையும் தேடுபவர்கள் கிடையாது. அதிர்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் சந்திக்கத் தயாரில்லை. அதிர்ச்சியான விசயங்கள் அவர்களின் நேரத்தில் சிலவற்றை பிடுங்கிக்கொள்ளும் என்கிற அச்சம். சாரை சாரையாகக் கடந்து போகும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் கட்டை மணியம் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்குத் தேடியும் அப்பா கிடைக்கவில்லை. வெகுநேரம் மங்கிய வெளிச்சத்துக்கு மத்தியில் நகரம் முழுக்கவும் தேடி அலைந்துவிட்டு சீன ஆப்பே கடையில் வந்து அமர்ந்துவிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் விட்டுவிட்டு மின்னும் வெளிச்சமும் இருளும்தான். சாலைகள் பாம்பு போல பளபளவென நெளிந்தன. வெள்ளை காற்சட்டை, கோடு போட்ட நீல சட்டை. அப்பா வீட்டிலிருந்து வெளியேறும்போது அணிந்திருந்த உடையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திவிட்டு வருவோர் போவோரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, July 4, 2012

தினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்


“படைப்பிலக்கியத்தின் குரல் கூர்மையானது”

1.   உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா?

பதில்: என்னுடைய இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின் வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும் நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன் அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.

2.   உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா?

Friday, June 15, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 4 - எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி

இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர் ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும் யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர் எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.

எம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்

ஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும் வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச் சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர முடிகிறது.

Wednesday, May 30, 2012

2010க்குப் பிறகு அறிமுகமான படைப்பாளர்கள் - வாசகர்கள்



சமீபத்திய மலேசிய இலக்கியச் சூழலில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் ஒரு சிலர் அடையாளம்காணப்பட்டே வருகிறார்கள். மரபார்ந்த சிந்தனை அமைப்புமுறையிலிருந்து மாறுப்பட்டு சிந்திக்க இளைஞர்களின் வருகை மிக அவசியமானது. இலக்கியம் சார்ந்து தன் இயங்குத்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்வதோடு அதனை எந்த அதிகார சக்தியிடமும் ஒப்படைக்காமல் தனித்துவமாக செயல்படுவதும் முக்கியமானவையாகும். அதனைப் பற்றியே தொடர்ந்து முன்வைக்கவும்படுகிறது.

கவிஞர் பொன்வாசுதேவன் மூலம் எனக்கு அறிமுகமானவர் நித்தியா வீரரகு. முகநூலில் என்னுடன் கவிதைகள் தொடர்பாக உரையாடத் துவங்கினார். அதன் பின் சிவா, நவீன் என அவருடைய அறிமுகம் விசாலமடைந்ததும் வல்லினத்தைக் கண்டடைந்தார். வல்லினத்தின் மூலம் தன் இலக்கிய வாசிப்பை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டவர், வல்லினத்தில் இயக்கவூட்ட சினிமா தொடர்பான தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வல்லினம் நடத்திய சந்திப்பில் டாக்டர் சண்முகசிவா நித்தியாவின் மொழிவளத்தைப் பாராட்டியிருந்தார். நித்தியா மிக முக்கியமான கவிஞராக மீட்டெடுக்கப்படுவார் என்றே கருதுகிறேன்.

Sunday, May 27, 2012

திரை விவாதம்: கவனிக்கத்தக்க தமிழ் சினிமா: ஆண்மையும் அதிகாரமும்

தமிழ் சூழலுக்குள் மலிவான வியாபாரத்திற்குள்ளான பல விசயங்களில் சினிமாவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் சினிமா சார்ந்து ஒரு பெரும் முதலீட்டு களமாகச் தமிழ்நாடு ஆகிவிட்டதன் மூலம் அங்கு உருவான வெகுஜன இரசனை என்பது ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு வளரவே இல்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் உருவான தயாரிப்பாளர்கள் ஒரு சங்கமாகவும் அல்லது ஒரு குடும்பப் பெரும் நிறுவனமாகவும் வளர்ந்து வெகுஜன இரசனையை விலைக்கொடுத்து வாங்கிக் கோலோட்சி நடத்தி வருகின்றனர். அவர்களால் தொடர்ந்து தருவிக்கப்படும் படம் என்பது பொதுமக்களின் இரசனையை மலிவான தளத்திலேயே வைத்து வியாபாரம் நடத்தி இலாபம் சம்பாரிக்க உதவ வேண்டும் என்பதே. அத்துடன் சினிமாவுக்கான தேடலும் பங்களிப்பும் முடிந்துவிடுகின்றன. கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல வாழ்க்கை ஒரு பண்ட மாற்று தொழில்நுட்பமாக ஆகிவிட்ட பிறகு சினிமா உட்பட அனைத்துக் கலைகளுமே இலாபத்துக்காக மட்டுமே விற்கப்படத் தொடங்கிவிட்டன.

இதையெல்லாம் மீறி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல சினிமாக்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அவை சிலசமயங்களில் கவனிக்கப்படாமலும் வணிக ரீதியில் தோல்வியுற்றும் போய்விடுவதால், அதனைப் பற்றி மீண்டும் உரையாட வேண்டியிருக்கிறது. நல்ல சினிமா முயற்சிக்கு நாம் தரும் அடையாளம் அது. இங்கு நான் குறிப்பிடும் சினிமாகள் தர வரிசை அடிப்படையில் அல்ல.

1. யுத்தம் செய் – மிஷ்கின்

கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த மிக முக்கியமான மர்மப்படம். கலை அமைதியுடன் மர்மத்தை ஒரு கருப்பொருளாக வளர்த்துக் காட்டக்கூடிய சாத்தியங்களை இரசிக்கும் வகையில் தந்த படம். சேரன் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக இருந்தது. வழக்கமாக மிக நல்லவராக மட்டும் வந்துவிட்டுப் போகும் சேரனின் மாறுப்பட்ட நடிப்பாற்றலை இப்படத்தில் பார்க்க முடிந்தது.

இப்படத்தின் ஒளிப்பதிவு தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது. காமிரா கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மர்மத்தைப் பெரிதுப்படுத்தி அதனை நோக்கி நம்மை ஈர்க்கக்கூடிய வகையில்

Thursday, May 10, 2012

கவிதை: பொம்மைகளின் உரையாடல்


வட்டத்திற்குள்ளேயே சுழலும்
கரடி பொம்மையும்
கைத்தட்டினால் கூவும் பொம்மை குருவியும்
உதறினால் வெளிச்சம் கக்கும்
நெகிழி உருண்டையும்
கலர் கலர் நீர்த்துப்பாக்கிகளும்
கடைக்கு வெளியே நின்று

Tuesday, May 1, 2012

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)

இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள்தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

Monday, April 16, 2012

எதிர்வினை: நடிகர் சேரனின் விலை ஒரு லட்சம்?


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தமிழ் நாவல் எழுதும் போட்டி-3 கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக பிரபல நடிகர் சேரன் அவர்கள் வந்திருந்தார். வழக்கமாக இது போன்ற இலக்கியம் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பே இல்லாத பிரமுகர்கள் வந்து தலைமை தாங்குவது சர்வதேச நோயாக நிறுவப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் வரவழைத்து தங்களின் நிகழ்ச்சிக்கு ஒரு புகழ்ச்சியைத் தேடிக்கொண்ட அதே போன்ற முயற்சிகள்தான் மலேசியாவிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற பொது அமைப்புகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால், சமூகப் பிரதிநிதியாகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு