Monday, March 25, 2013

கமலின் நினைவுகள்

கதாநாயக வழிபாட்டின் கீழ் புதைந்துபோன சினிமா சமூகத்தின் மனநிலையில் வளர்க்கப்பட்ட என்னிடமிருந்து கமல் என்கிற பிம்பத்தைப் பிரித்தெடுக்கவே முடிந்ததில்லை. முதன் முதலாக திரையரங்கில் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது 'கட்டை' கமலஹாசன் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டினேன். அப்பொழுது எனக்கு வயது 7. வீடு திரும்பியதும் அதே போல காலை மடக்கிக் கட்டி கமலைப் போல செய்து எல்லோரின் கைத்தட்டலையும் பெற்றேன். வெறும் சிறுவனாக இருந்த காலங்களில் என்னை முற்றிலும் கவர்ந்தவர் கமல்.

இன்று ஒரு சினிமா விமர்சகனாக கமல் என்கிற தனிமனிதனின் சில வரலாற்று அரசியல் கருத்துகளின் மீது எதிர்வினையாற்றும்போது அவ்வப்போது அந்தச் சிறுவன் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றான். தமிழ் சினிமாவின் மோசமான கதாநாயகப் பிம்பங்களிலேயே காலத்திற்கும் தன்னை சினிமாவிற்காக மாற்றி மாற்றி தொய்ந்துபோன கமலின் மீது கூடுதல் மரியாதை உருவாகின்றது. சினிமாவிலும் நடிப்பிலும் கமல் என்றுமே நம் காலத்து கலைஞன்தான். 

Saturday, March 16, 2013

பரதேசி திரைவிமர்சனம் :கவனிக்கப்படாத ஒரு துயரவெளி


'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

பாலாவின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் இது. 1939ஆம் ஆண்டில் சாலூர் கிராமத்திலிருந்து பச்சை மலைக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தேயிலை வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தமிழர்களின் கதை இது. புலம்பெயர்ந்த ஓர் இனத்தின் வரலாற்று படமாக இதை அடையாளப்படுத்தலாம். இன்று இந்தியாவைத் தவிர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களே. கூலி வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து உழைப்புச் சுரண்டப்பட்டு உறிஞ்சி சக்கையாக வெளியே வீசப்பட்டவர்களின் அவலக் குரலைப் பாலா எவ்வித அதிகார நெடியும் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 19ஆம் ஆண்டின் தொடக்கம்தான் தமிழர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்ட காலக்கட்டம். அவர்கள் எப்படிக் கொத்தடிமைகளாக்கப்பட்டு பின்னர் சிறுக சிறுக முதலாளிய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வரலாற்று பிழையில்லாமல் பாலா தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர்வு சமூகம்

இப்படம் சாலூர் கிராமத்தில் தொடங்கி பச்சைமலையில் முடிகிறது.1939ஆம் ஆண்டின் பின்னணி என்பதே அதிக உழைப்பிற்குரியது. நிஜமான கிராம சூழலையும், பேச்சு வழக்கையும் கவனமாகக் கையாண்டுள்ளார்கள். வழக்கமான பாலா படத்தில் வரும் எந்தவித திரட்சியான மிரட்டலான கதாநாயகப் பிம்பங்கள் மிகைப்படுத்தப்பட்ட முயற்சிகள் இல்லாமல் சர்வதேச புலம்பெயர் சமூகத்தின் வலியை வரலாற்றை பதிவு செய்துள்ளார். (இந்தப் பாராட்டுக்குரிய படம் இது).

Friday, February 15, 2013

பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி - கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 2 -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் கடந்த வருடம் இயக்கப்பட்டு வெளிவந்து தமிழில் திரைக்கதை சார்ந்து பெரும் சலனத்தை உருவாக்கிய படம் பீட்சா. இப்படத்தை ஒரு மர்ம படம் என்றும் பேய் படம் என்றும் பரவலாக விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துப்போய் இதுவரை தமிழ் சினிமா வெளி தடுமாறிக்கிடந்த திரைக்கதை அமைப்பில் மாபெரும் முயற்சியைத் துவக்கி வைத்திருப்பதே கவனத்திற்குரியது.

விஜய சேதுபதி மிக இயல்பான தான் செய்யும் வேலையும் பொருந்தி வெளிப்படக்கூடிய கதாபாத்திரம். ஆயிரம் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாகவே நடித்திருக்கிறார். இதுபோன்ற நடிப்போ அல்லது வெளிப்பாடோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் அதிகமான பிரேம்கள் இல்லை. குறிப்பிட்ட களங்களுக்கிடையே படத்தின் காட்சிகள் எவ்வித சோர்வுமின்றி நகர்வதே பெரிய வெற்றி.

பேய்களும் தேவதைகளும்

இப்படத்தின் மையச்சரடை பேய்களுக்கும் அது குறித்த திகைப்புகளுக்கும் மத்தியிலேயே வைத்து முன்னெடுத்திருக்கிறார்கள். பேய்க்கதை என்றல்ல ஆனால் பேய் குறித்த நம்பிக்கைகளை மையப்படுத்திய கதை எனப் புரிந்துகொள்வதன் மூலமே பீட்சா படம் சாதாரண வணிக எல்லைகளைக் கடந்து செல்கிறது. திரைக்கதையின் வாயிலாக பேய்ப்படம் எனப் கதையோட்டத்தின் உச்சம்வரை தடுமாறாமல் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் மனிதனின் மூலதனமான பயம், பேய்கள் போன்ற விசயங்களைத் தழுவி மீட்படைகிறது. எப்படி மீட்படைகிறது?

Friday, February 8, 2013

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து


விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு சினிமாவை நோக்கி கலைத்தனமிக்க மதிப்பீடுகளை வைத்திருந்தால், ஒருவேளை கலை மக்களின் மனத்தைப் பாதிக்கும் என்றும், சமூகத்தைக் கூர்போடும் வேலையையும் செய்யும் எனப் பயப்படுவதில் அர்த்தமுண்டு. நமிதா உதட்டைக் கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆண்கள் அதிகமான கற்பழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பும் அரசு கமல் என்கிற தனிமனிதனின் அரசியல் பிழைகள் சமூகத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பகையையும் சேகரித்துவிடும் எனப் பயப்படுவதற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றால் நம்புவதற்கில்லை.

அப்படித் தடை என்று வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் எத்தனையோ காட்சிகளையும் வசனங்களையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? இரட்டை அர்த்தமிக்க ஆபாச வசனங்களே சினிமாவில் கூடாது என்ற தணிக்கைவிதி இருக்கிறது. அப்படியானால் முதலில் நகைச்சுவை நடிகர் சந்தானத்தையே தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கும் பின்னோக்கி போனால் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் இரட்டை அர்த்தமிக்க வசனங்களிலேயே பேசி வாழ்ந்தவர்கள் அல்லவா?

Monday, February 4, 2013

டேவிட்: திரைவிமர்சனம் - முன்முடிவுகளும் கலையும்


டேவிட் திரைப்பார்வை: அநேகமாகப் பல வலைத்தல விமர்சகர்களும் முகநூல் நண்பர்களும் அதிகமாக வெறுத்தொதுக்கிக் கொண்டிருக்கும் படமாக டேவிட் இருக்கக்கூடும். முதலில் நாம் சினிமா குறித்த முன்முடிவுகளை மேலும் விரிவாக ஆராய வேண்டும். சினிமாவை நோக்கிய ஒரு சாமான்யனின் எதிர்பார்ப்புகள் என்ன?

 1. படம் அவனை மகிழ்ச்சிப்படுத்தவதாகவே இருக்க வேண்டும். சோகமும் சோம்பலும் மற்ற மனித உணர்வுகளின் உச்சங்களும் அவனுக்கு அநாவசியம்.
 2. பொழுதைக் கழிக்க மட்டுமே அவன் சினிமாவைத் தேடி வருகிறான்.
3. சினிமா மிக எளிமையானதாக இருக்க வேண்டும். அதிகம் மூளை உழைப்பைப் பார்வையாளனிடமிருந்து கோராத சினிமாவே வேண்டும். இவையனைத்தும் சினிமாவை கலை என்பதிலிருந்து நகர்த்திக் கொண்டு போய்விட்டது.

இப்பொழுது சினிமா என்பது நிச்சயம் கலை இல்லை எனும் முன்முடிவுகளை அழுத்தமாக நம்புகிறவர்களிடம் இப்படம் குறித்து நான் விமர்சிக்கவே தேவையில்லை. அவர்களுக்குரிய படமே இல்லை.

Sunday, February 3, 2013

Life of Pi - பசியும் வாழ்தலும்


“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’

அங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.

கதைச்சுருக்கம் / கதைக்களம்

பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.

Saturday, January 26, 2013

Mama- ஆங்கிலப் படம்



மனநோய் கொண்டவர்களை எப்படி எதிர்க்கொள்வது என்பதே இச்சமூகம் இன்றளவும் கற்றுக்கொள்ளாத ஒரு விசயமாகும். உடலால் துவண்டவர்களைப் பராமரிப்பதிலேயே அதிகபட்சம் வெறுப்படையும் நம் மனோநிலை, மனம் சிதைந்தவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆகையால்தான் அவர்கள், சாலையில் பித்துப் பிடித்துக் கவனிப்பாரின்றி திரிகிறார்கள். உடலுக்கு ஏற்படும் பிரச்சனையைப் போன்று ஒத்திருப்பதுதான் மனத்திற்குள் ஏற்படும் சிக்கலும்.

அப்படி மனநோய்க்கு ஆளான ஒரு பெண்ணின் கதைத்தான் ‘mama’. தேவாலையத்தால் மனநோய்க்கு ஆளான அவளுடைய குழந்தை பறிக்கப்பட்டு தனியாக வைத்து வளர்க்கபடுகிறது. தன் குழந்தையின் மீது அபிரித அன்பு கொண்ட அந்தத் தாய் குழந்தையை அங்கிருந்து தூக்கிக் கொண்டு மலை உச்சியிலிருந்து குதித்து விடுகிறாள். குழந்தை மட்டும் ஒரு கற்கிளையில் சிக்கி அங்கேயே இறந்துவிடுகிறது. அவளும் தண்ணீரில் மூழ்கி இறக்கிறாள். பல வருடங்களுக்குப் பிறகு அதே பள்ளத்தாக்கின் அருகாமையில் காருடன் மூவர் வந்து வீழ்கிறார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு இரு பெண் பிள்ளைகளுடனும் அங்குத் தப்பி வரும் தந்தை ஒரு பாழடைந்த வீட்டில் நுழைகிறார். அங்கு வைத்துத் தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகத் திட்டம். ஆனால், தன் மூத்தப் பெண் பிள்ளையைக் கொல்ல முயலும் அச்சமயத்தில்தான் அவ்வீட்டில் ஆவியாக வாழும் ‘mama’ தோன்றி அவனைக் கொன்றுவிடுகிறார்.

Monday, January 14, 2013

2012ஆம் ஆண்டின் மறக்க இயலாத நிகழ்ச்சிகள்


கடந்துபோகும் ஒவ்வொரு வருடத்தையும் அதன் இறுதி எல்லையில் இருந்துகொண்டு மீட்டுண்ர்வதென்பது எழுதி வைத்த டைரியை வெகுநாள் கழித்துப் படித்துப் பார்ப்பதை போன்ற உணர்வைக் கொடுக்கும். 2012ஆம் ஆண்டு மறக்க முடியாத பல சந்தர்ப்பங்களையும் மறக்க நினைக்கும் பல கணங்களையும் கொடுத்திருக்கின்றன.

கோப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கும் சில புகைப்படங்களின் வழியே கடந்தாண்டு நிகழ்வுகளை நினைவுக்கூற முடிகின்றது. அவற்றுள் சில:

அ. மலாக்கா மாநில தமிழ் ஆசிரியர்களுடன் சந்திப்பு- 16.09.2012

முகநூல் நண்பர் திரு.ராஜா அவர்களின் மூலம் தமிழ் மொழி பட்டறை நடத்த முதன்முதலாக வெளிமாநிலம் சென்ற அனுபவம் மறக்க முடியாதது. முதலில் ராஜா அவர்கள் பணிப்புரியும் பாத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளிக்குச் சென்று அங்குள்ள ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பட்டறை நடத்தினேன். மாணவர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். சிறப்பாகப் பங்கெடுத்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாகக் கொடுத்தேன். பிறகு மதியம் அலோர் காஜா தமிழ்ப்பள்ளிக்கு என்னை அழைத்துச் சென்றார். அனுபவமிக்க மூத்த ஆசிரியர்கள் பலர் இருந்தனர். மலாக்கா மாநிலத்தின் ஆறாம் ஆண்டு தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 4 மணி நேரம் பட்டறையை வழிநடத்தினேன்.

ஆ. புத்தாக்க ஆசிரியர் விருது- 25 ஜூன் 2012

மாவட்ட ரீதியில் கல்வி இலாகாவின் முதல்வர் அவர்களால் இந்தப் புத்தாக்க ஆசிரியர் விருது 2012-ஐ வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த விருது எனக்களிக்கப்படுகிறது. எங்கள் மாவட்டத்தில் இந்தப் புத்தாக்க விருதை இரண்டு முறையும் பெற்றது நானே.

Saturday, January 12, 2013

2012 ஆம் ஆண்டின் சிறந்த கதாநாயகன் : அப்புகுட்டி



நடிகர் அப்புகுட்டி பற்றி எழுதியே ஆக வேண்டும். ஏறக்குறைய அழகர்சாமியின் குதிரை மூலம் கதாநாயக வழிப்பாட்டு உணர்வைக் கொஞ்சமாய் அசைத்துப் பார்த்திருக்கும் கதாபாத்திரம் அப்புகுட்டி. குள்ளநரிக்கூட்டம், வெண்ணிலாகபடி குழு, சுந்தரப் பாண்டியன் போன்ற படங்களில் துணைக்கதாப்பாத்திர வேடங்களில் நடித்த அப்புகுட்டி இப்பொழுது மன்னாரு என்ற படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடித்திருக்கிறார். 'அழகர்சாமி குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்று சாதித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா ஹீரோ என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறதோ அதற்கு முரணான ஓர் உடலமைப்புத்தான் அப்புகுட்டியினது தோற்றமும் முகமும்.

Friday, January 11, 2013

கவிதை: ஆதாரமற்ற இரவொன்றின் கனவு


1
கனவுக்கும் நிசத்திற்கும் மத்தியில்
எத்தனை முறை திரும்புவது?
ஒவ்வொரு கணமும் ஆயிரம் கைகள்,
ஆயிரம் குரல்கள்.
தப்பித்து மீள்கையில்
பலநெடுங்காலத்தின் நோய்படுக்கை.

2
ஆதாரமற்ற இரவொன்றில்
எந்த அறிவிப்புமின்றி 
நிகழ்ந்துவிடுகிறது.

2
நிர்வாணமாய் அவிழ்ந்துகிடக்கின்றன
கடைசி நிமிடங்கள்.