Monday, November 4, 2013

மூடர் கூடம்: கஞ்சா விற்பனின் அபத்தமான கம்யூனிச உணர்வு


கதைச்சுருக்கம்: மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு இரகசியமாக ஓடத் திட்டமிட்டிருக்கும் ஒரு பணக்காரனின் வீட்டில் திருடுவதற்காக நுழையும் நான்கு அடித்தட்டு இளைஞர்கள், எப்படி இறுதியில் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளாக மாறி எல்லோரையும் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதே. வர்க்க ரீதியில் பிரிந்து சிதைந்து கிடக்கும் சமூகத்திடம் ஒரு பொதுவான அற உணர்வையும் நியாத்தையும் நிறுவ முயன்று படம் விழிப் பிதுங்கி நிற்கின்றது. 


கடவுள் என நாம் சொல்லக்கூடிய ஒன்று முழுக்க கம்யூனிசம்தான். இந்த நிலம், இந்தக் காற்று, இந்த ஆகாயம், இந்த நிலத்தில் விளையும் அனைத்துமே எல்லோருக்குமானது. ஆனால் கடவுள் வழிபாட்டை/ கடவுள் நம்பிக்கையை முன்னெடுக்கும் சில நாடுகளில் 'கம்யூனிசம்' தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயமாகும். மூடர் கூடம் படமும் முழுக்க கம்யூனிசத்தைத்தான் கொஞ்சம் காலாவதியான முறையில் பேசுகிறது.

Friday, September 13, 2013

கலை இலக்கிய விழா- 5 - என் சிறுகதை தொகுப்பு வெளியீடு- என் நேர்காணலும்

எதிர்வரும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை கலை இலக்கிய விழா - 5இல் என் சிறுகதை தொகுப்பு வெளியிடு செய்யப்படவுள்ளது. மொத்தம் 12 சிறுகதைகள்.


செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
k.balamuruganகேள்வி : உங்களுடைய தனி அடையாளமே சிறுகதைகள் என்று சொல்லலாமா?

கே.பாலமுருகன்: ஓர் எழுத்தாளர் மீது உருவாகும் இலக்கிய அடையாளங்கள் என்பது அவரின் ஆரம்பக்கால ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து மதிப்பிடப்படுகின்றன. அதுவே நிலையான அடையாளமாகவும் போய்விடக்கூடாது. அவ்வகையில் நான் முதலில் எழுதியதே சிறுகதைகள்தான். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளிலும் உலகலாவிய தமிழ் இலக்கிய இணையத்தலங்களிலும் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியே இலக்கிய சூழலில் அறிமுகம் பெற்றேன். வல்லினம் இதழுக்கு முதலில் அனுப்பிய படைப்பும் சிறுகதைத்தான். இன்றளவும் வல்லினத்தில் என்னுடைய சிறுகதைகள் அதிகமாகப் பிரசுரம் கண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை ‘வல்லினம்’ இதழில் பிரசுரமானவையே. ‘வல்லினம்’ எனக்கு அளித்த பயிற்சியும் களமும் மிக முக்கியமானவை. என்னிடமிருந்த அலட்சியப்போக்கை அகற்றவும் இலக்கியம் சார்ந்து கூடுதல் கவனம் பெறவும் வாய்ப்பாக இருந்த காலக்கட்டம் அது. மேலும் படைப்பு என்பது எங்குமே தேக்கமடைந்துவிடக்கூடாது. அது நகரும் தன்மையுடையது.

Tuesday, September 3, 2013

ஓர் எழுத்தாளனின் நியாயமான கோரிக்கையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கமும்

உடனடியான கவனத்திற்கு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சர்ச்சையும் மலேசியப் படைப்பாளர்களும்.

மக்கள் ஓசை ஞாயிறு பத்திரிகைகளில் தொடர்ந்து 'தயாஜி' எனும் எழுத்தாளரின் மீது அடிப்படை நியாயமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. (வாசிக்க Makkal Osai, 01.09.2013). ஒரு சங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினைக்குப் பொறுப்பு வகித்து பதிலளிக்காமல் தயாஜி எனும் தனிநபர் உரிமை குறித்துக் கேட்டதற்காக எல்லோரும் ஒன்று திரண்டு பத்திரிகையில் அவருக்கு எதிராக அவதூறுகள் கிளப்புகிறார்கள். மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் சேகரிக்கப்பட்டு அதிலுள்ள தனிமனிதர் அவதூறுகள் தொடர்பான வரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.(இந்த வரிசையில் நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்களும் அடங்குவார்).

இந்த விவாதம் தொடங்கப்பட்டது: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.ராஜெந்திரன் அவர்கள் கோலாலம்பூரில் நிகழ்ந்த பெண்ணிய இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சியின் மேடையில் இலக்கியத்திற்கு எதிரான கண்டனத்திற்குரிய கருத்துகளைச் சொல்லியிருந்தார். யோகியின் மூலம் அவர் ஆற்றிய உரை முகநூல் பார்வைக்கு வந்ததை அனைவரும் அறிவர். வீடியோ பதிவைக் காண: ( http://www.facebook.com/photo.php?v=549519475112486&set=vb.100001633141369&type=3&theater) ஆனால் இதுநாள் வரை தனக்கு எதிராக வந்த அந்தக் கண்டனம் குறித்து அவர் பொதுவில் கருத்துரைக்காதது வருத்தத்தை அளிக்கின்றது. ஆகையால், அதனைக் கண்டித்துத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பரிசளிப்பும் தொகுப்பு வெளியீடும் விழாவில் மூன்று எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்து முகநூலில் தெரிவித்திருந்தனர். (கே.பாலமுருகன், அ.பாண்டியன், தயாஜி).

Sunday, September 1, 2013

மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய எனது நேர்காணல்


இன்று - 01.09.2013-இல் மலேசிய மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய என்னுடைய சிறு நேர்காணலில் கானொலி தொகுப்பு இது. எதிர்வரும் 15.09.2013ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் என் சிறுகதை தொகுப்பு வெளியீடு தொடர்பாக இந்த நேர்காணல் அமைந்திருந்தது. நேர்காணல் செய்தவர் எழுத்தாளரும் மின்னல் வானொலியின் அறிவிப்பாளருமான தயாஜி.





Friday, August 23, 2013

Elysium - 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய மிகைக்கற்பனை சினிமா

Neill Blomkamp என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் புனைவு ' Elysium'. இவர் ஏற்கனவே 'district 9 ' என்கிற படத்தை இயக்கியவர். 21ஆம் நூற்றாண்டில் பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. அப்பொழுது இரண்டு வகையான சூழல் உருவாகின்றது. ஒன்று இந்தச் சிதைவிலேயே வாழ்ந்து சாகும் எளிய மனிதர்கள், இன்னொன்று பூமியைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் செயற்கை விண்வெளி உலகத்தில் வாழும் உயர்தர மேல்வர்க்கத்து மக்கள். சக்கர வடிவில் இருக்கும். பூமி அந்த மேட்டுக்குடி வர்க்கத்தால் கண்கானிக்கப்படுகின்றன. அவர்களின் சட்டத்திட்டங்களுக்கேற்ப உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விண்வெளி உலகத்திலிருந்து வரும் முதலாளிமார்களின் தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் பதிலாகத் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு வருடக் கணக்கில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

பூமியில் வாழும் எளிய மக்களின் கனவே அந்த விண்வெளி உலகத்தில் எப்படியாவது ஒருநாள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அங்குள்ளவர்களுக்கு வயதாகுவதில்லை, எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை. பூமியிலிருந்து கள்ளத்தனமாக அந்த விண்வெளி உலகத்திற்குள் நுழைய நினைக்கும் விமானங்கள் தகர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய கள்ளக்கூடியேறிகளின் மீது ஒரு நாடு விதிக்கும் அத்தனை தடைகளையும் பூமியில் வாழ்பவர்களின் மீது விதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாக இந்தப் படத்தைக் காண்கிறேன்.

Monday, July 8, 2013

சிறுகதை: புத்தகப்பை

பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.

எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.

கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.

Saturday, July 6, 2013

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்



தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

 rநிலாந்தன்  rசோலைக்கிளி  rயோ. கர்ணன்  rஅ.முத்துலிங்கம்  rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன்  rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன்  rஸர்மிளா ஸெய்யித்  rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ்   rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  rகற்சுறா  rசெல்வம் அருளானந்தம்  rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா  rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத்  rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன்   rமா. சண்முகசிவா  rகறுப்பி  rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன்  rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன்  rஇராகவன்  rலீனா மணிமேகலை rராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்

Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.

Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்



2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.

Thursday, June 6, 2013

After earth: திரைவிமர்சனம்

After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.

'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.